இம்மை, இச்சுவை
கவிதைகள்
நந்தாகுமாரன்
ஓவியம்: ஆதிமூலம்
இம்மை
இச்சைக்கும் இயல்புக்கும்
இடையே
பறந்துகொண்டிருக்கிறது
சிறகின் பெண்டுலம்
குறட்டைக்கும் இருட்டுக்கும்
இடையே
மறந்துகொண்டிருக்கிறது
நாதனின் நாமம்
சரீரத்திற்கும் சர்வ-ரோகத்திற்கும்
இடையே
நிறைந்துகொண்டிருக்கிறது
குருதியின் சுருதி
பொறுமைக்கும் சிறுமைக்கும்
இடையே
குறைந்துகொண்டிருக்கிறது
தூரத்தின் மில்லிமீட்டர்
சொல்லுக்கும் பகுப்புக்கும்
இடையே
திரிந்துகொண்டிருக்கிறது
மந்திரத்தின் வாதம்
சித்தனுக்கும் சிவனுக்கும்
இடையே
விரிந்துகொண்டிருக்கிறது
மாயத்தின் எதார்த்தம்.
இச்சுவை
மதுவின் கசப்பேறிய
இந்த நாவில் இருந்துதான்
இந்த இன்சொல்லும் பிறக்கிறது
அநாமதேயத்தின் புதிர்ப் பின்னல் கூடிய
இந்தப் பொழுதில் இருந்துதான்
இந்தத் தற்காலமும் தோன்றுகிறது
அடியின் புழுதிபடிந்த
இந்தத் தடத்தில் இருந்துதான்
இந்தத் தடயமும் மறைந்து புதைகிறது
மலரின் மணம் மாறிய
இந்த நவில்தலில் இருந்துதான்
இந்த அஸ்தமனத்தின் ஆனந்தம் மலர்கிறது
பல்லியின் பாதம் அளந்த
இந்த பாத்ரூம் சுவரின் பெயிண்டில் இருந்துதான்
இந்தச் சிதைவின் அரூபம் தீட்டப்படுகிறது
அக்கரையின் பசுஞ்சுமையின்
இந்தப் பாழ் வட்டத்தில் இருந்துதான்
இந்தத் தொன்மத்தின் சலனம் பாத்தி கட்டுகிறது
தேடலின் அறியாமையில் திளைக்கும்
இந்தப் பாடலில் இருந்துதான்
இந்த வாழ்வுக்கும் பொருள் கூடுகிறது.
மின்னஞ்சல்: nundhaa@gmail.com