குதிரைவீரன் வருகை
கட்டுரை
குதிரைவீரன் வருகை
சிவராஜ் பாரதி
அனைத்து மதங்களும் உலகத் தோற்றம் குறித்தும் உயிரினங்களின் உருவாக்கம் குறித்தும் தம்முடைய வேதங்களில் பதிவுசெய்திருக்கின்றன. அந்தந்த மதங்களின் கருத்துகளை அந்தந்த மதத்தினர் உண்மையென நம்புகின்றனர். கால வரலாற்றின்படி பழைய மதம், புதிய மதம் என்ற பாகுபாடெல்லாம் இந்த நம்பிக்கைகளுக்குக் கிடையாது.
***
‘கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி!’
இவ்வரிகளை அனைவரும் அறிவர். கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுப்போல தெரியும் இவ்வரிகளுக்குத் தமிழறிஞர்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கத்தை அளித்துள்ளனர். கல் என்பது குறிஞ்சி நிலத்தைக் குறிப்பதாகவும், மண் என்பது மருத நிலத்தைக் குறிப்பதாகவும் கருதும¢அவர்கள் காடுகளில் சுற்றித்திரிந்த ஆதி மனிதர்கள் நாகரிகமடைந்து உழவைக் கண்டறியும் முன்னரே பேசிய மொழிதான் தமிழ் என்று அவர்கள் விளக்குகிறார்கள். இந்த இரண்டு வரிகளை மட்டும் கருத்தில்கொண்டு அதற்கெனச் சொல்லப்பட்ட விளக்கம்தான் இது. அவ்வரிகளுக்கு முந்திய வரிகளையும் சேர்த்துப் படித்தால் வேறுசில பரிமாணங்கள் கிடைக்கும்.
‘வையகம் போர்த்த, வயங்கொலி நீர் -கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றிய மூத்த குடி!’
உலகம் உருவான சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஊழிப் பெருவெள்ளம் நிலங்களைப் பிரித்ததை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது; மதங்களும் நம்புகின்றன. அந்தக் காலகட்டத்தில் நூஹ் நபி ஒரு பெரிய கப்பலைக் கட்டுகிறார். அதில் ஒவ்வோர் உயிரினத்திலிருந்தும் ஓர் இணையையும் தன் குடும்பத்தாரில் சிலரையும் ஏற்றிக்கொள்கிறார். பெருமழை பெய்து உலகமே வெள்ளக்காடாய் மாறியது. ஒருமாத காலத்திற்குப் பிறகு நீர் வற்றுகிறது. அப்போது கப்பல் ஒருமலைமீது மோதி நிற்க, நூஹ் நபி தம் குடும்பத்தினருடன் வெளியே வருகிறார். அவர்கள் கைகளில் வாள் இருக்கிறது. இக்காட்சியை மேற்சொன்ன பாடலோடு இணைத்துப் பாருங்கள். மேலும் கப்பலுக்கு நாவாய் என்றொரு பெயரும் உண்டு. நூஹ் நபியை நோவா என்றும் அழைப்பார்கள், மரக்கலத்தில் வந்தவரை மரைக்காயர் என்றழைப்பது போல.
கூடுதல் தகவல்: அந்தக் கப்பல் மலைமீது மோதி நூஹ் நபி இறங்கிய இடம் இலங்கை என்ற நம்பிக்கையும் உண்டு.
***
மாமனு மருகனும் போலு மன்பின
காமனுஞ் சாமனுங் கலந்த காட்சிய
பூமனு மரிசிப்புல் லார்ந்த மோட்டின
‘சீவகசிந்தாமணி’, நாமகள் இலம்பகத்தில் வரும் இந்த வரிகளுக்கு உரை எழுதும்போது உ. வே. சாவே தடுமாறினாராம். ‘காமனும் சாமனும்‘ என்ற சொற்றொடரை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லையாம். கருப்பாகவும் வெள்ளையாகவும் இருந்த காளைகளை ஏரில் பூட்டும் காட்சியை விவரிக்கும்போது அவற்றைக் காமன், சாமன் இருவருடனும் ஒப்பிடுகிறார் திருத்தக்கத் தேவர். கருப்பை காமனுடனும் சிவப்பை சாமனுடனும் ஏன் ஒப்பிட வேண்டும்? அதற்கும் மேற்சொன்ன நூஹ் நபி வரலாற்றிலேயே பதிலுண்டு.
நூஹ் நபிக்கு இரு மகன்கள். ஒருவன் ஹாம் (காமன்), மற்றவன் ஷேம் (சாமன்). இருவரும் நூஹ் நபியோடு கப்பலில் வரும்போது அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டுமென்று கட்டளையிடப்படுகின்றார்கள். ஆனால் ஹாம் தன் மனைவியோடு உடலுறவு கொள்கிறான். இதனால் கோபமடைந்த நூஹ் நபி அவனது சந்ததிகளைக் கருப்பாகப் பிறக்கவும், சிவப்பாக இருக்கும் ஷேம் சந்ததியினருக்கு அவர்களை அடிமையாக இருக்கவும் சபித்துவிடுகிறார். அளவுகடந்த காதல் உறவிற்கு காமன் (மன்மதன்) தான் நம் மரபிலும் பயன்படுத்தப்படுகிறான்.
***
“ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத”
தம் ஆதர்ச நாயகர்களின் மறுவருகையைப் பெரும்பாலான மதங்கள் தம் வேதங்களில் பதிவுசெய்திருக்கின்றன. நம்நாட்டில் ‘கல்கி’ அவதாரம் அத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கிறது. ஆனால் இந்தக் கல்கி அவதாரம் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது; அது தன் மார்க்கத்தை உலகெங்கும் பரப்பிவிட்டதென்பது சிலரது நம்பிக்கை. அதை ஆய்வுக்குட்படுத்தும் சான்றுகளில் ஒன்றுதான் மேற்குறிப்பிட்ட சமஸ்கிருத பாடல் (பவிஷ்ய புராணம்). இதன் பொருள், “அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிகக் குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்),” என்று ஒரு தரப்பும், அதில் வரும் ‘மிலேச்சர்’, ‘மஹாமத்’ ஆகியவற்றைக் குறிப்பிட்டு மஹாமத் கீழான, பசு இறைச்சி தின்னும் பாவி என்பதுதான் பொருள் என்று எதிர்த்தரப்பும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றன (புத்த மத எழுச்சியிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளவே மாட்டிறைச்சி உண்பதைப் பிராமணர்கள் கைவிட்டனரென்பது அம்பேத்கரின் கருத்து).
மேலும் கல்கி குதிரையில் வீற்றிருக்கிறார், ஆகவே அது முஹம்மதுதான் என்ற கருத்துக்கு எதிர்வினையாகப் போரில் ஈடுபடுபவர்கள் குதிரையில் வீற்றிருப்பது இயல்பு. அதைவைத்து அது முஹம்மது என்று சொல்லிவிட முடியாது என்கிறார்கள். என்னுடைய சந்தேகம்: பரசுராமர், ராமர், கிருஷ்ணர் மூவரும் போரில் ஈடுபட்டவர்கள்தானே. அவர்களைக் குதிரையில் வீற்றிருக்குமாறு சித்திரிக்காமல், ஏன் கல்கியை மட்டும் சித்திரித்தீர்கள் என்பதுதான்.
இந்த விவாதத்திற்கு அடித்தளமிட்டவர் ஆய்வாளர் வேத் பிரகாஷ் உபத்யாய். அவர் எழுதிய ‘Kalki Avatar and Muhammed Saheb’ புத்தகத்தில் கல்கி அவதாரத்தின் பிறப்பு, பெற்றோர் பெயர், அவதார நோக்கத்தின் தொடக்கம் ஆகியவற்றைக் குறித்த தரவுகள் யாவும் முஹம்மது நபிகளின் வரலாற்றோடு பொருந்திப்போகிறதென்று தெரிவித்துள்ளார். இதன் உண்மைத்தன்மையை ஆய்வாளர்கள் முடிவுசெய்துகொள்ளட்டும். எனக்குத் தேவை உண்மைகளல்ல, கதைகள்; நம்பிக்கைகளாகக்கூடிய கதைகள்.
***
உலகின் முதல் மனிதன் தங்கள் மதத்தைச் சேர்ந்தவன்தான் என்று எல்லா மதங்களும் (கடவுள் மறுப்பு மதங்களைத் தவிர) சொல்கின்றன.
“நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலுள்ள சத்தினால் படைத்தோம்”
(குர்ஆன் 23: 12)
அதேபோல் ஓரிறைக் கொள்கையும் உருவமற்ற வழிபாடும் வரலாற்றின் தொடக்கக் காலகட்டத்திலிருந்து வழக்கத்திலுள்ளவைதாம். எந்தக் கருத்தும் இங்கு புதிதல்ல; ஒன்றை எதிர்த்தும் விமர்சித்தும் ஆதரித்தும் கட்டுடைத்தும் எழுந்தவையே. ஆனால் நாங்கள் அவர்களைப்போல் எங்கள் மதத்தைப் பரப்புவதில்லையே, அவர்கள் உலகமெல்லாம் இருக்கிறார்கள், நாங்கள் எங்கள் நாட்டுக்குள் மட்டுமேயிருக்கிறோம் என்கிறார்கள். இந்து மதத்தில் ஒருவரது நிலை தகுதியால் நிர்ணயிக்கப்படுவதல்ல, பிறப்பாலென்பதை அறிந்தே பரப்பாமல் இருக்கிறீர்கள். எனவே தவறு அவர்களுடையதல்ல.
எழுதப்படும் வரலாற்றைவிடச் சொல்லப்படும் தொன்மங்கள் ஆழமானவை, நல்லிணக்கத்துக்குரியவை. முருகனின் மனைவிகளான வள்ளி, தெய்வானை குறித்த வட்டாரக் கதையொன்று உண்டு. வள்ளி குறிஞ்சி நிலப் பெண், தெய்வானை நெய்தல் நிலத்துப் பெண். ஒருநாள் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி ‘மரமேறித் தேனெடுத்துத் திங்கற குடும்பம்தான நீங்க’ என்று தெய்வானையும், ‘கருவாட்டத் திங்கற குடும்பம்தான நீங்க’ என்று வள்ளியும் ஒருவரையொருவர் திட்டிக்கொள்வார்களாம். ஷாஜகான் - மும்தாஜ் பற்றியும் இவ்வாறான நாட்டார் கதை உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட வேம்படிப் பள்ளிவாசல் வேப்பமரத்தடியில் முஹம்மது நபி தோன்றிய கதை தெரியுமா! நூஹ் நபியின் கப்பலில் பயணித்த காக்கையொன்று இங்கேதான் ஆலிஃப் புலவருக்கு முஹம்மது நபி காட்சிதருவாரென்று போட்ட எச்சத்தில் முளைத்தது அந்த வேப்பமரம்.
***
இவையெல்லாவற்றையும் இப்போது ஏன் சொல்கிறேன் என்று புரிந்துகொள்ள முடியாதவர்கள் கடைந்தெடுத்த ‘பக்கிசவாதிகள்’ என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.
மின்னஞ்சல்: sivaraj53.sb@gmail.com