கடிதங்கள்
கடிதங்கள்
காத்திரமான இலக்கியங்களை முழுமையாகத் திரைமொழியில் கூற முடியாவிட்டாலும் கதைக் கருவைக் கொண்டு, சினிமாவின் வணிக ரீதியான அழுத்தங்களைச் சுமந்துகொண்டு, படைப்புகள் வெளியாவது நல்ல மாற்றம் என்றுதான் தோன்றுகிறது. அந்த அளவில் ‘அசுரன்’ வரவேற்கப்பட வேண்டியவன்.
கீழடி ஆய்வு குறித்த இரு கட்டுரைகளும் வாதப் பிரதிவாதங்கள் போன்றிருந்தன. எல்லா இன மொழி மக்களுக்கும் தொன்மை இருக்கத்தான் செய்கிறது. தமிழர்களாகத் தமிழின் தொன்மை குறித்துப் பெருமைகொள்ள கீழடியும் இணைந்துள்ளது.
உமாதேவியின் ‘கமலா’ கதை பேச்சுமொழியை ஆங்காங்கே கொண்டுள்ள சிறப்பான படைப்பு. சாமானியர்களின் துயர் மட்டுமே முடிவற்றதாகவும் தாள முடியாததாகவும் உள்ளது. அவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகையாக இருப்பதன் காரணத்தாலேயே அத் துயர நிலை மாறாததாக உள்ளது. ‘கூட்டு விழிகள் கொண்ட மனிதன்’ மொழியாக்க நூலுக்கான யுவன் சந்திரசேகரின் பின்னுரை நாவலின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மு. நித்தியானந்தனின் ‘யாழ்ப்பாணத்தின் மெய்யுரு’, ஒரேயொரு ஓவியம் குறித்து இவ்வளவு நீண்ட விவரணை மிகுந்த கட்டுரையைப் படைக்க முடிவது குறித்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் கட்டுரையில் மிகுந்திருக்கும் எள்ளல்கள் சிந்திக்கத்தக்கன. இரு வெவ்வேறு நிலைப்பாடுகள்கொண்ட குழுக்களை எதிர்நிலையில் இட்டுச்செல்லும் ‘புத்த பதம்’ கதை மிகையின்றி எழுதப்பட்டிருக்கிறது.
முழு நூலாகக் கவிதை வாசிப்பு குறைவாக உள்ள போதிலும் காலச்சுவடில் வெளியாகும் கவிதைகளை வாசிக்காமல் கடந்ததில்லை. வண்ணநிலவனின் கவிதைகள் வெகுசிறப்பு.
உத்திர நல்லூர் நங்கையை அறியச் செய்த வெ. முருகன், அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்திய ‘வனமேவும் ராஜகுமாரி’, ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘தெய்வநிலையும் மனிதநிலையும்’, அ.கா பெருமாளின் ‘விருது காணா வித்தகர்கள்’ (உண்மையில் அவர்கள் விருதுக்கான வித்தகர்கள்) என அனைத்தும் நல்ல வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தின.
சரவணன்
மதுராந்தகம்
‘வரும் ஒரு நூற்றாண்டு’ தலையங்கம் நூறு விழுக்காடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தனியார் உடைமையை ரஷியாவாலோ சீனாவாலோ மறுதலிக்க இயலவில்லை என்பதுதான் எதார்த்தம். சீனாவிலுள்ள கோடீசுவரர்கள் குறித்த கணக்கெடுப்பு அண்மையில் வெளிவந்ததை மறக்க முடியாது.
தனியார் உடைமையை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பரவலாக்கிவந்த முதலாளித்துவம், இன்று ஒவ்வொரு நாட்டிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரிடம் மட்டுமே செல்வத்தைக் குவிக்கும் அபாய எல்லையைத் தொட்டுவிட்டது. இதையே, “உலகமயம் இப்போது கார்ப்பொரேட்மயமாக மறுவடிவம் எடுத்திருக்கிறது” என்கிறது தலையங்கம்.
முதலாளித்துவத்தின் கோர முகமே கார்ப்பொரேட் எனும் ஈவிரக்கமற்றப் பொருளாதார வக்கிரம். கட்டுப்படுத்தப்படாத, வரைமுறையற்ற முதலாளித்துவம் நாட்டின் செல்வம் முழுவதையும், அல்லது அதில் தொண்ணூறு விழுக்காட்டையும் நான்கைந்துபேரின் காலடியில் கொண்டுபோய்ச் சமர்ப்பித்துவிடும். அதையடுத்து, அந்த நான்கைந்து பணமுதலைகளின் வலையில் நாட்டின் பொருளாதாரமே சிக்கிச் சின்னாபின்னமாகும். தேசத்தின் ஆட்சியதிகாரம், இயற்கைவளம், கல்வி, வேலைவாய்ப்பு, உணவு, போக்குவரத்து என எல்லாவற்றையும் தீர்மானிக்கின்ற உயரத்தில் அந்த நால்வரை உட்காரவைத்துவிடும்.
இதற்கு மாற்றாக, மார்க்சீயம் மட்டும் தன் பழைய - கதைக்கு ஆகாத - சித்தாந்தத்திலிருந்து சற்று இறங்கிவந்து, வரையறைக்குட்பட்ட தனியார் உடைமைத்துவத்தை வரவேற்க முன்வந்து, வலதுசாரி எதிர்ப்பு என்ற பெயரில் சமய நம்பிக்கைகளில் குறுக்கிடாமல், மிதமான தனியார் உடைமை, மிகையான பொதுவுடைமை எனும் சிறந்த கோட்பாட்டிற்கு இணங்கிவிடுமானால், அதனை மக்கள் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடுவார்கள்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில், இன்றைய அவசர - அவசியத் தேவை யாதெனில், அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை, மொழிச்சார்பின்மை, இனச்சார்பின்மை, வட்டாரச்சார்பின்மை, பரவலான பணப் பரிமாற்றம், அனைவருக்குமான வாய்ப்புகள் முதலியவைதான்.
இவை யாவும் மார்க்சீயத்திற்கு நெருக்கமான கொள்கைகளே. இவற்றை மையப்படுத்திக் கிளைப் பிரச்சினைகளில் முளைத்துவிட்ட பிரிவினையைக் களையெடுத்துவிட்டு, கம்யூனிஸ்டுகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியிலிருக்கும் அவர்களுக்குத் தவிர்க்க முடியாத தீர்வாகவும் அமையும்.
ஆக, தேசிய அளவில் அதிகம் பேசப்படும் எல்லையற்ற தனியார் உடைமைத்துவம், எல்லையற்ற பொதுவுடைமைத்துவம் ஆகிய இரண்டுக்கும் நடுவே, மிதமான தனியார் உடைமைத்துவக் கொள்கையால்தான் நாட்டையும் வீட்டையும் காக்க இயலும்.
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை
‘வரும் ஒரு நூற்றாண்டு’ தலையங்கம் ஆழம். மார்க்சியச் சிந்தனையாளர்களின் மனப்போக்கு மாறியிருப்பதையும் சிதறுண்டு போயிருப்பதையும் சுட்டி மண்ணுக்கேற்ற மார்க்சீயத்தை முன்னெடுத்தால் வெற்றி நிச்சயம். புத்துரு பெற்று மீண்டும் எழுச்சியோடு தன் பயணத்தைத் தொடர்வது மார்க்சீயத்தின் தேவையன்று; நாட்டு மக்களின் தேவை என்று ஆசிரியர் அறிவுறுத்தியிருப்பது சிந்திக்கத்தக்கது.
‘கீழடி - தென்னிந்திய வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று’ கட்டுரை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு மிகச்சிறப்பாகப் பதிவாகியிருக்கிறது. கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கையில் தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமுதாயமாக, பண்பட்ட நிலையில் தமிழர்கள் வாழ்ந்து வந்திருப்பதை நினைக்க நெஞ்சம் இறும்பூதெய்துகிறது.
தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் முற்பட்டவையாக இருக்கலாமென்றும் தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். கீழடி புதிய நம்பிக்கைகளை அளிக்கிறது. வருங்காலத்தில் தென்னிந்திய அகழாய்வுகளின் பரப்புகள் விரிவடைவதற்கான சூழல்களை நடுவண் அரசு உருவாக்கித் தருவதுடன், உரிய நிதி ஒதுக்கீடு அளிக்கவும் முன்வருதல் காலத்தின் கட்டாயம்.
நவீன் குமார்
நடுவிக்கோட்டை
நவம்பர் 2019 இதழ்க் கட்டுரைகளைக் காணும்போது பல்கலைக்கழக ஆய்விதழைப் படித்த மனநிலைதான் தோன்றியது. ‘கீழடி ஆய்வுகள்’, ‘பழங்காலப் பனையோடுகள் மற்றும் கல்வெட்டுக்களின் கதை’, ‘யாழ்ப்பாணத்தின் மெய்யுரு’ போன்ற கட்டுரைகள் இந்த எண்ணத்தைத்தான் மனத்தில் விதைத்தன. பல்வேறு தளங்களில் வாசகர்கள் உள்ளபோது ஆழமான கட்டுரைகள் தேவைதானா என ஆசிரியர் குழு விவாதிக்க வேண்டும். அதுபோல் வெ. முருகன் எழுதிய உத்திர நல்லூர் நங்கை கட்டுரையும். ‘பாய்ச்சலூர் பதிகம் வரலாறு’ என்றே தலைப்பு கொடுத்திருக்கலாம். எண்பதுகளில் வெளியான திரைப்படங்களின் உள்ளீடுகளை ஆய்வு செய்து வெளியிடக் காரணம் என்னவென்று தாங்கள்தான் விளக்க வேண்டும். கூவி விற்கப்படும் கலைமாமணி விருதுகளை நெஞ்சில் உரமுள்ள எவனும் மேடையேறி வாங்க விரும்பமாட்டான். சோதனைக் காலம் என்ற கட்டுரையும் வாசகர்களுக்கு என்ன சொல்ல வருகிறது எனத் தெரியவில்லை.
மூன்று சிறுகதைகளும் வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும் உமாதேவியின் ‘கமலா’ என்ற சிறுகதை கிராமிய உணர்வுகளையும் ‘வனமேவும் ராஜகுமாரி’ கதை மக்களின் மனத்தில் இன்னும் உள்ள பேய் போன்ற நம்பிக்கைகளையும் கூறும் வகையில் உள்ளன. வண்ணநிலவனின் கவிதைகள் புரிதலுடன் கவித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன. அவரிடமிருந்து இன்னும் சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம்.
ஆறு. கணேசன்
திருச்செந்தூர்
உள்நாட்டுச் சூழல்களுடன், பிற உலக நாடுகளின் அன்றைய, இன்றையச் சூழல்களை ஒப்பிட்டுக்காட்டி, ‘இந்தச் சூழலின்தான் மார்க்சியச் சிந்தனைகளின் தேவையை உலகம் உணர்கிறது’ என்று உணர்த்தியுள்ளதில் தலையங்கத்தின் சாரம் மிளிர்கிறது.
வரலாறு காணாத வகையில் இந்தியப் பொருளாதாரச் சரிவையும் வேலை இழப்புகளையும் தொழில் முடக்கங்களையும் கண்கூடாகக் காணக்கூடிய இந்தக் காலக்கட்டத்திலும், ‘வர்ண சமய வேறுபாடுகளோடு முட்டிமோதும்’ ஒரு அவலச்சூழலை, தேசநலனில் உள்ளார்ந்த ஈடுபாடுடைய கம்யூனிஸ்டுகளால் எப்படி தமது ஒருங்கிணைந்த வலிமையை முன்னிருத்தி எதிர்கொள்ள முயலாமல் இருக்க முடிகிறது? கம்யூனிஸ்டுகள் சோதனைகளைச் சந்திக்காதவர்கள் அல்லர். எழுச்சியோடு தன் பயணத்தைத் தொடர்வது மார்க்சியத்தின் தேவையன்று, நாட்டு மக்களின் தேவை’ என்ற தலையங்க வாசகத்தின் உட்பொருளை உள்வாங்கிச் செயல்படும் கடமை தோழர்களுக்கு என்றும் உண்டு.
சி. பாலையா
புதுக்கோட்டை