நீதி எனும் பாவனை
தலையங்கம்
நீதி எனும் பாவனை
அண்மைக் காலத்தில் நீதிமன்றம் உள்ளிட்ட அரசியல் சாசன அமைப்புகள் செயல்பட்டுவரும் விதத்தைக் கவனித்தால் நாட்டின் அறவுணர்வுகள் காவுகொள்ளப்படும் காட்சிகளைக் காண முடியும். எல்லாம் பழுதுற்றாலும் பழுதுபடாமல் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றிக் கைகொடுக்கும் என்று நீதித்துறையின் மீது வைத்த நம்பிக்கைகளும் இன்று நழுவிவிட்டன. பல்லாண்டுகாலச் சிக்கல்களைத் தீர்த்து ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதில் உச்சநீதிமன்றம் அக்கறை காட்டுவது அவசியமே. அதற்காகச் சட்டரீதியான தீர்வைக் கண்டிருக்க வேண்டும். காய்கறிகளைக் கூறுபோடுவதுபோலச் சிக்கலான அம்சங்களை முன்வைத்து அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தள்ளுபடி செய்ததில் நீதியையும் தள்ளுபடி செய்வதைப்போல் ஆகிவிட்டது. ஐந்து நீதிபதிகளும் ஒன்றுகூடிச் சிந்தித்திருக்கிறார்கள்; ஆனால் தீர்ப்பை மாயக் கரங்கள் எழுதிவிட்டன.
இத் தீர்ப்பிற்காக உச்சநீதிமன்றம் தன்னைத் தானே நிர்க்கதிக்குக் கொண்டுசென்றிருக்கிறது. இந்தியாவுக்கு வெளியேயும் இந்நாட்டின் நீதி பரிபாலனம் பேசுபொருளாகுமென்ற கவலையை அது கொண்டிருக்கவில்லை. மதவாத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட குடிமைச் சமூகத்தையே நீதிமன்றம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
2010இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதே அது ‘இடிக்கப்பட்ட நிலத்தின் மீதான’ தீர்ப்பாக அமைந்திருந்தது, முழுக்கோளாறு. ஏனெனில் வழக்கு, மசூதி இடிப்புக்கு முன்னரே தொடுக்கப்பட்டிருந்தது. அப்படியிருக்க அது டிச. 6, 1992க்கு முன்னிருந்த நிலைகுறித்துத்தான் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். அடிப்படையிலேயே தவறாக அமைந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு போயிருக்கையில், அதுவும் அதற்கு முன்னரான நிகழ்வுப் போக்குகளிலிருந்துதான் தன் தீர்ப்புக்கான தேடலைத் தொடங்கியிருக்க வேண்டும்.
பாபர் மசூதியைக் கையகப்படுத்த இந்துத்துவச் சக்திகள் மிக நீண்டகாலத் திட்டங்களைப் படிப்படியாகவே செயல்படுத்தின. இந்தக் குயுக்தியைக் கணக்கிலெடுக்க சன்னி வக்ஃப் வாரியம் தவறியது. குவிமாடத்தின் கீழே இராமர் சிலையைக் கொண்டுவைத்தவுடன் மசூதியைக் கைவிட்டது வாரியம். தொடர்ந்து தொழுகையை நடத்தவும் அதற்கான சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அது முயன்றிருக்க வேண்டும். சிலைவைக்கப்பட்டவுடன் அது தொழுகை நடத்துவதற்கு ஏற்ற இடமல்ல என்று எண்ணியதும் தவறு. பொதுவாகவே வரலாற்றுக் காலம் தொட்டு ஒவ்வொரு மதத்தின் வழிபாட்டுத் தலங்களும் அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவை சமூக நடவடிக்கைகளின் மையமாகவும் இருந்துவந்துள்ளன. சன்னி வக்ஃப் வாரியமும் இந்தத் திசையில் செயல்பட்டிருந்தால் மசூதியைப் பாழடைய விடாமலும் காத்திருக்கலாம். இந்நிலையில் முஸ்லிம்கள் அங்கே வழிபாடுசெய்யவும் சட்டவிரோதமாகத் தடுக்கப்பட்டது விந்தையான செயல்தான். இருப்பினும் ஒரு சிறுபான்மைச் சமூகமாக இந்நாட்டின் அரசியல் சாசன அமைப்புகளின் மீதும் கட்சிகளின் மீதும் நம்பிக்கைவைத்து இடைவிடாமல் போராடி வந்தன முஸ்லிம் அமைப்புகள்.
உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோவிலைக் கட்ட அனுமதிக்கும்போது அதற்கான சமாதானங்களை முன்வைக்கத் தவறிவிட்டது. சாதாரணப் பாமரர்களின் மனக்கணக்கில் அது கோவிலுக்கும் இல்லாமல், மசூதிக்கும் இல்லாமல் பொதுப்பயன்பாட்டுக்குரிய மையமாக அமைத்திருக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. நாட்டின் உயர் அதிகாரம்படைத்த உச்சநீதிமன்றம் அப்படியொரு தீர்ப்பை வழங்கியிருந்தால் ஓரளவேனும் மரியாதை கிடைத்திருக்கும். ஆனால் ராமர்கோயில் தரப்பினர் ஆட்சிப் பீடத்திலிருக்கிறார்கள்; ஒருவேளை அவர்களுக்கெதிரான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருந்தால் மத்திய ஆட்சியாளர்கள் உலகச் சமூகத்தின் முன் தம்மை அடக்கிவாசிக்க வேண்டிய நிலைக்கு வந்திருப்பார்கள்; நீதியரசர்கள் அந்த அளவுக்குத் தீக்குளிக்கத் தயாராக இல்லை.
தீர்ப்பின் மொத்த நகர்வுகளையும் ஒரு கதையாக்க முயன்றால்கூட அந்தக் கற்பனையில் இவ்வளவு அதர்க்கங்களை முன்வைத்திருக்க முடியாது. ஏற்கெனவே சொல்லப்பட்டிருப்பதுபோல இப்பிரச்சனை பீதியூட்டும் சூழலிலேயே இருந்துவந்தது. ஆட்சியாளர்களின் வெளிப்பேச்சுக்கு மாற்றான உள்நடவடிக்கைகள் இரகசியமானவையல்ல. எல்லாவற்றையும் வளைக்க முடியும் என ஆட்சியாளர்கள் கருதியதைப் போலவே தங்களையும் ஆட்சியாளர்கள் வளைத்துவிடுவார்களென்று மாண்பமை நீதியரசர்கள் கருதியிருக்கலாம். அவர்கள் இத் தீர்ப்புக்கு முன்னதாகவே குறிப்பிடத்தகுந்த பல வழக்குகளில் தம் செங்கோல்களை நிமிர்த்த முடியாமல் வளைந்துகொடுத்திருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் அலசப்படாத வகைகளிலெல்லாம் பல அம்சங்களையும் இப்போது அலசியது. வரலாற்றுக்கு நியாயம் செய்வதற்குப் பதிலாக ஆட்சியாளர்களுக்கு நியாயத்தைத் தெண்டனிட்டுச் செய்தது. மசூதி இருந்த இடத்தை வக்ஃப் வாரியம் நிரூபிக்கவில்லையென்று சொன்னதிலிருந்து கற்பனை ராம்லல்லாவைச் சட்டபூர்வ நபராகக் கருதும் இடத்திற்கு வந்துசேர்ந்தது. ராம் லல்லா சட்டபூர்வ நபராக இருந்தாலும் அவரின் சார்பான குரல் அசரீரியாகவேனும் வந்துசேர்ந்திருக்குமென்ற கவலையை நீதிமன்றம் கொள்ளவில்லை. காந்தியும் சுதந்திர இந்தியாவை ‘ராம ராஜ்யம்’ என்று வர்ணித்தார். உலகிற்கு முன்மாதிரியான ஓர் அஹிம்சைப் போரைத் தன்நாட்டின் விடுதலைக்காக முன்னெடுத்த காந்தியின் மனத்திலிருந்த அந்த ராம்லல்லாவை நீதியரசர்கள் கவனம் கொண்டார்களா? சீதையின் நாயகனான இராமனே காவிய நாயகனாக மாற முடியுமெனில், அவன் ராம்லல்லா என்ற குழந்தையாக இருந்தபோது எவ்வளவு கருணையும் அன்பும் மனவிரிவும் கொண்டவனாக இருந்திருப்பான்? அந்த ராம்லல்லாவா காலம்காலமாக வழிபாடு நடத்திய பிறிதொரு சமூகத்தின் இடத்திற்கு உரிமை கொண்டாடுவான்? ஒரு தீர்ப்பையெழுத சகல பரிமாணங்களையும் தேடும் உச்சநீதிமன்றம் அப்படியே இலக்கியத்தில் பதிவாகியிருக்கின்ற இராமனையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டுமல்லவா? மாறாகத் தம் சுட்டுவிரல் தீர்ப்புக்குப் பணிந்தாக வேண்டிய ஆட்சியாளர்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்திருக்கிறது. சாசனம் வழங்கியிருந்த அதிகாரத்தை ஆட்சியாளர்களின் பலிபீடத்தில் கிடத்திவிட்டிருக்கிறது.
ஒருவேளை இது தீர்க்கமான, சகல தரப்பினரின் நலனையும் கவனத்தில்கொண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பென்று உச்சநீதிமன்றம் தனக்குத்தானே சமாதானம் கொண்டிருந்தால் இதே நீட்சியாக அது ஏன் சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை வழங்கவில்லை? பல தலைமுறைகளின் காலத்தை உள்வாங்கிய பாபர் மசூதி வழக்கிற்கே அவ்வளவு சர்வசாதாரணமான தீர்ப்பை வழங்க முடிந்த உச்சநீதிமன்றத்திற்குச் சபரிமலைப் பிரச்சனையெல்லாம் ஒரு பொருட்டாகுமா? பாபர் மசூதியைவிடவும் சபரிமலையில் பெண்களின் நுழைவு சிக்கலான பரிமாணங்களைக் கொண்டதா? நவீனமான உலகில் இருந்துகொண்டு அதற்கேற்ற நடை, உடை, பாவனைகளைக் கொண்ட நீதியரசர்கள் நவீனமான கருத்தியலுக்குள் வாராதிருந்த மர்மம்தானென்ன? மேலும் அதுவும் ஒரு சீராய்வு மனுதானே - தன் தீர்ப்பைத் தானே உறுதிப்படுத்த முடியாத அளவிற்கு நீதியரசர்களுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடிகளை இந்தியக் குடிமைச் சமூகம் கவனத்தில் கொள்ளுமென்று நம்புகிறோம்.
பாபர்மசூதி ஒருநாளும் சர்ச்சைக்குரியதாக இருக்கவில்லை. இந்துத்துவர்களின் மன உலைச்சலைப் பொது வார்த்தையாக்கியதில் ஊடக உலகம் ஆரம்பத்திலேயே தன் அறநெறியை இழந்துவிட்டது. விடுதலையடைந்த இந்தியாவை இந்திய அரசியல் நிர்ணய சபை அரவணைத்துக்கொண்டிருந்தபோது என்னென்ன நிலையில் நாடு இருந்ததோ அந்த நிலையில்தான் அனைத்தும் இருந்திருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் ஒரு கனிமரத்தை அபகரிக்க நினைத்தவனுக்கு அதனை வழங்கிவிட்டு அதிலுள்ள ஒரேயொரு கனியை மாத்திரம் அதன் உடைமையாளனுக்கு வழங்க சிபாரிசு செய்வதைப்போல வேடிக்கை செய்திருக்கிறது.
தீர்ப்பை அனைவரும் மனமுவந்து வரவேற்பதாக ஊடக உலகம் கூறுகின்றது. இதில் முஸ்லிம்களுக்கும் நியாயம் செய்யப்பட்டுள்ளதாக வலிந்து பொய்யுரைக்கின்றது. முஸ்லிம்களுக்கு நியாயம் அருளப்பட்டதெனில் அதனை எப்படி இந்துத்துவர்கள் சகித்துக்கொள்வார்கள், மகிழ்ச்சியடைவார்கள்? பாபர்மசூதியின் நிலத்திற்குக் கீழே கட்டடத்தின் இடிபாடுகள் இருப்பதாகத் தொல்பொருள் ஆய்வுத் துறை கூறும் கருத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறும் உச்சநீதிமன்றம், ஆனால் அது கோயிலல்ல என்றும் சொல்கிறது. ஆனால் தீர்ப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் இந்துத்துவச் சக்திகளோ தீர்ப்புக்குப் பின்னரும் அந்த இடிபாடுகள் ராமர்கோயிலின் சிதிலங்கள்தாம் என்று பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன; அதனை ஒரு முஸ்லிம் தொல்பொருள் ஆய்வாளரே கூறுவதாகச் சொல்லி மீண்டும் தேவையற்ற சிக்கல்களை உருவாக்குகின்றன. அப்படியானால் இது உச்சநீதிமன்றத்திற்கு இந்துத்துவர்கள் இழைக்கும் அநீதிதான். தீர்ப்பின் பிரகாரம் கோயில் வேண்டுமெனில், அதே தீர்ப்பினடிப்படையில் புதைந்திருந்த கட்டடம் கோயிலன்று எனவும் அது ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் தெரியும் இந்துத்துவ மனநிலையானது ஒருநாளும் அமைதியை, வரலாற்றை ஏற்க மறுப்பதன் அடையாளமாகவே இருக்கும்.
உச்சநீதிமன்றம் கோயில் கட்டுவதற்கான அறங்காவலர் குழுவை மூன்றுமாதங்களுக்குள் உருவாக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தீர்ப்பை ஆய்வுசெய்யக் கோரி சீராய்வுமனுவைத் தாக்கல்செய்ய முஸ்லிம் அமைப்புகள் தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தீர்ப்பு மாறாதென்றாலும் அதன் வாசகங்கள், கருத்துகளை மாற்றக்கூடிய நல்வாய்ப்பாக அது இருக்க வேண்டும். இத் தீர்ப்பை நிலைக்கவிட்டால் அது முஸ்லிம் சமூகத்தின் வருங்கால வாழ்வுக்கும் அதன் அந்தஸ்துக்கும் கௌரவம் சேர்க்காது என்று அமைப்புகள் கருதுவதில் நியாயமிருக்கிறது. அதே சமயத்தில் மாற்று இடம் வழங்க உச்சநீதிமன்றம் சிபாரிசு செய்திருப்பதை ஒட்டுமொத்த முஸ்லிம் உலகமும் நிராகரிக்கிறது. சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யும்போது இந்த ஏகமனதான எண்ணத்தை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமோ சன்னி வக்ஃப் வாரியமோ கவனத்தில் கொள்வது அவசியம்.
தீர்ப்பை அமைதியுடன் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருப்பது முஸ்லிம் சமூகத்தின் மாண்பை உறுதிசெய்கிறது. சமூகத்தின் மீது களங்கம் கற்பிக்கக் காத்திருந்தோருக்கெல்லாம் கடுமையான ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. தீர்ப்பின் வாசகங்கள் நழுவியிருக்குமானால் என்ன சூழல் ஏற்பட்டிருக்குமென்று எல்லாருக்கும் தெரியும். தீர்ப்பில் அதிருப்திகொண்ட பல நடுநிலையாளர்களும் இந்துத்துவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்திருக்குமெனில் இங்கே கட்டுக்கடங்காத வன்முறைகள் நிகழ்ந்திருக்குமென்று கருதுகிறார்கள்.
கோர்ட் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு விசாரணைத் தீர்ப்பாயம் என்றோ வழக்குமன்றம் என்றோதான் மொழிபெயர்ப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த மூலச் சொல்லுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத வகையில் அதற்கு ‘நீதிமன்றம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். அநீதிகளே தீர்ப்பாக அமையும்போதும் அந்தப் பெயராலேயே அதனை அழைப்பது எப்படி சரியாகும்?