விளிம்புநிலை மக்களுக்காக ஓயாது ஒலித்த குரல்
அஞ்சலி: எஸ். விஸ்வநாதன் (12.6.1939 - 5.11.2019)
விளிம்புநிலை மக்களுக்காக ஓயாது ஒலித்த குரல்
பொன். தனசேகரன்
தமிழ்நாட்டில் தலித்துகளுக்கெதிரான வன்முறைகள், காவல்துறை அத்துமீறல்கள் குறித்த செய்திகளைக் களத்துக்கு நேரடியாகச் சென்று பார்த்துப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி, ஆய்வுபூர்வமாக அலசி ஆராய்ந்து செய்திக் கட்டுரைகளை எழுதிய பத்திரிகையாளர்கள் மிகவும் குறைவு. விளிம்புநிலையிலுள்ள, ஒடுக்குமுறைக்கு ஆளாகும் தலித் மக்களுக்கெதிரான நிகழ்வுகள் குறித்து ஆழமான கட்டுரைகளை தி ஹிந்து நாளிதழ் குழுமத்தின் ப்ரண்ட்லைன் இதழில் தொடர்ந்து எழுதியவர், அண்மையில் காலமான எஸ்வி என்று அன்போடு அழைக்கப்படும் மூத்த பத்திரிகையாளர் எஸ். விஸ்வநாதன்.
இலங்கையின் கண்டியில் 1939இல் பிறந்தவர், தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரத்தில் எம்ஏ பட்டம் பெற்றார். குடும்பத்தில் அவர்தான் முதல் தலைமுறைப் பட்டதாரி. பத்திரிகைத் துறை ஆர்வம் காரணமாக ஆங்கிலப் பத்திரிகைகளில் வேலை தேடினார். மும்பை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சப் எடிட்டர் வேலை கிடைத்தது. அவ்வளவு தூரம் சென்று வேலை பார்க்க வேண்டுமா என்ற அவரது தந்தை சண்முகத்தின் கருத்துக்கு மதிப்பளித்து அந்த வேலையில் சேராமல், மதுரையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கிடைத்த சப் எடிட்டர் வேலையில் 1963இல் சேர்ந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா வேலையை ஏற்றுக்கொள்ளாமல் விட்டது, அவரது பணியில் தொய்வானதைப் பின்னர்தான் புரிந்துகொண்டார். அதே காலத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மற்றொருவர் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு, சென்னை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் சீனியர் சப் எடிட்டரானார். ஆனால் விஸ்வநாதன் அதே பதவியிலேயே நீடிக்க நேர்ந்தது அவரே எதிர்பாராதது.
மதுரையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தொடர்ந்து பணியாற்றிய அவர், பின்னர் சீஃப் சப் எடிட்டராக இருந்துவந்தார். 1980களின் தொடக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகம், விஜயநகரத்தில் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புதிய பதிப்பைத் தொடங்க முயற்சிகளை மேற்கொண்டபோது, அதன் முதல் செய்தி ஆசிரியராய் இருந்து அந்தப் பதிப்பைத் தொடங்கி நடத்துவதற்காக ஆறுமாத காலம் அங்கு பணியாற்றினார். பின்னர், மதுரைப் பதிப்புக்கே மீண்டும் சீஃப் சப் எடிட்டராகப் பணியமர்த்தப்பட்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் எடிட்டோரியல் பகுதியில் பணியாற்றி வந்ததால், நிருபர்கள் தரும் செய்திகளைத் திருத்தித் தகுந்த தலைப்பிட்டு வெளியிடுவதுடன் ஏஜென்ஸி செய்திகளையும் தேர்வுசெய்து அதையும் எடிட் செய்து வெளியிட வேண்டும். எடிட்டிங் திறமை அவருக்குக் கை வந்தது. எந்தப் பக்கத்தில் எந்தச் செய்தி வர வேண்டும், எது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அதைத் தேர்வு செய்வதிலும் அவருக்கு நீண்ட அனுபவம் உண்டு. சிறப்புச் செய்திகள் தினமணியில் வந்தால் கேட்டு வாங்கி எக்ஸ்பிரஸிலும் வெளியிடுவார். எந்தப் பத்திரிகையில் எந்தச் செய்தி வெளிவந்துள்ளது, அது எப்படி வெளியிடப்பட்டுள்ளது, எந்தப் பத்திரிகையில் எந்தச் செய்தி நன்றாக வெளிவந்துள்ளது, எந்தப் பத்திரிகையில் செய்திகள் தவறாக அல்லது திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன, எந்தச் செய்தியை வெளியிடத் தவறிவிட்டோம் என்பனவற்றையெல்லாம் தொடர்ந்து துல்லியமாகக் கவனித்து வந்தார்.
இடதுசாரிச் சிந்தனைகள் மனத்தில்கொண்டவர்; விளிம்புநிலை மக்களின்மீது கரிசனத்துடன் எழுதியவர். அவரின் கட்டுரைகள் மத அடிப்படைவாதத்துக்கு எதிரானவை. சமூக, மத நல்லிணக்க அவசியத்தை வலியுறுத்துபவை. ப்ரண்ட்லைன் பத்திரிகையில் சிறப்பு நிருபராக அவர் எழுதிய செய்திக் கட்டுரைகள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்தியன் எக்ஸ்பிரஸில் பணிபுரிந்த காலத்திலேயே இதுபற்றிய செய்திகளை எழுதத் தொடங்கிவிட்டார்.
அந்நேரத்தில் களத்துக்குச் சென்று செய்தி சேகரிப்பது அவரது அன்றாடப் பணியன்று. நிருபர்கள் இல்லாத நேரங்களில் சிறிய நிகழ்ச்சிகளுக்குச் செய்தி சேகரிக்கச் சென்றிருக்கிறார். எழுத்தாளர்களைப் பேட்டி கண்டு செய்திகளை வெளியிட்டதும் உண்டு. 1980களின் தொடக்க ஆண்டுகளில், புளியங்குடியில் இந்து முஸ்லிம் கலவரத்தின்போது செய்தி சேகரிக்க அவர் அனுப்பிவைக்கப்பட்டார். அதுபற்றி தலித் முரசு இதழுக்கு அளித்த நேர்காணலில் (2008) நினைவுகூர்ந்திருக்கிறார்:
“அங்கே போனபிறகு ஒரு செய்தியைப் புரிந்துகொண்டேன். உண்மையில் அங்கு நடந்தது இந்து - முஸ்லிம் கலவரமன்று. மாறாக, தலித்துகளின் மதமாற்றத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கலவரங்கள் அவை. நான் பார்த்தபோது அங்கு தலித்துகள் பாதுகாப்பில்லாமல் இருந்தார்கள். தலித்துகளின் துன்பங்களை நேரடியாகப் பார்க்க நேரிட்டது.
வெளிப்படையாகப் பார்த்தால், கலவரம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகளே. அப்போது தலித் என்ற பெயர்கூட பெரிய அளவில் வெளிவரவில்லை. புளியங்குடிப் பக்கத்தில் தென்காசியைத் தாண்டித்தான் மீனாட்சிபுரம். அங்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர்தான் கணிசமான அளவில் தலித்துகள் இஸ்லாத்திற்கு மாறியிருந்தனர். அவ்வூரைப் போய்ப் பார்த்தேன். அந்த மக்களிடையே பேசினேன். அவர்கள் நிறைய செய்திகளைக் கூறினார்கள். ஏன் நீங்கள் மதம் மாறினீர்கள் என்று கேட்டதற்குப் பல காரணங்களைச் சொன்னார்கள். அதைப் பற்றிக்கூட எழுத வேண்டும் என்று நினைத்தேன்” என விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
1987ஆம் ஆண்டின் கடைசியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகம், எக்ஸ்பிரஸ் வீக் எண்ட் என்ற வார இணைப்பைச் சனிக்கிழமைதோறும் வெளியிட முடிவெடுத்தது. அதன் பொறுப்பாளராகச் சென்னைக்கு அழைக்கப்பட்டார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் பணியனுபவம் பெற்ற அவர் செய்தி ஆசிரியராகப் பதவி உயர்த்தப்படவில்லை. ஆனால் தனிப் பொறுப்பு வழங்கப்பட்டது. சென்னையில் இருப்பது நல்லதென்று நினைத்துப் பணியை ஏற்றுக்கொண்டார்.
வீக் எண்ட் இதழில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் முக்கிய பிரச்சனைகள் அல்லது முக்கிய விஷயங்கள் கவர் ஸ்டோரியாக இருக்கும். அத்துடன் முக்கிய தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரை, தமிழ் எழுத்தாளர்களின் நேர்காணல், புத்தக விமர்சனம் என்று அந்த இணைப்பில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றன. வீக் எண்ட், எக்ஸ்பிரஸ் நாளிதழின் இணைப்பிதழாக வந்தபோதும்கூட, தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக, அது தமிழ் எழுத்தாளர்களிடமும் தீவிரத் தமிழ் இலக்கிய வாசகர்களிடமும் பிரபலமாக இருந்தது.
தமிழ் இலக்கியவாதிகளின் கதைகளும் பேட்டிகளும் ஆங்கில இதழில் வந்தது அவர்களைப் பெருமைப்படுத்துவதாக இருந்தது. கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து அவரது பேட்டியை வெளியிட்டார். இந்த நேர்காணல்தான் ஆங்கிலத்தில் வெளியான அவரது முதல் பேட்டி. எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் பேட்டிகள் வீக் எண்ட் இதழில் வெளிவந்தன. தமிழ் இலக்கியம், இலக்கிய முன்னோடிகள், தமிழ் இலக்கிய இதழ்கள் குறித்து க.நா.சு., சிட்டி. சிவபாதசுந்தரம் போன்ற பல எழுத்தாளர்களின் ஆங்கிலக் கட்டுரைகளும் அதில் வெளிவந்தன.
வீக் எண்ட் இதழின் கடைசிப் பக்கத்தில் ‘போகஸ்’ என்ற தலைப்பில் ஒரு பத்தியைத் தொடர்ந்து எழுதிவந்தார். ‘எஸ்வி’ என்ற பெயரில் வந்த அந்தப் பத்தியில் நடப்பு நிகழ்வுகள், பல்வேறு விஷயங்கள் குறித்த அவரது அலசல் கட்டுரைக்குப் பல அறிவார்ந்த வாசகர்கள் இருந்தார்கள்.
சிறிதுகாலம் கழித்து வீக் எண்ட் இணைப்பிதழ் நிறுத்தப்பட்டதையடுத்து சென்னையிலேயே எக்ஸ்பிரஸ் இதழில் எடிட்டோரியலில் சீஃப் சப் எடிட்டராகப் பணியாற்றும்படி சொன்னார்கள். சுமார் முப்பதாண்டுப் பத்திரிகை அனுபவம் கொண்ட அவருக்கு எக்ஸ்பிரஸ் இதழில் என்ன எதிர்காலம் என்ற கேள்வி அவரது மனத்தை உறுத்தியது. அந்த நிலையில், 1993இல் ஹிந்து குழுமத்தின் ஃப்ரண்ட்லைன் மாதம் இருமுறை இதழில் சிறப்பு நிருபராகச் சேர்ந்தார். இதுவரை எடிட்டோரியலில் பணி செய்த அவருக்குச் சிறப்பு நிருபராகச் செய்தி சேகரிக்கும் பணி. அந்த நிலையிலும் தனக்கான களம் எது என்று முடிவுசெய்து கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகச் செய்ய முயன்றார்.
1993இல் சேலம் பகுதியில் பள்ளிக்கூடத்தில் மேல் சாதியினருக்கான பானையிலிருந்து தனம் என்ற சிறுமி தண்ணீர் குடித்ததால் தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளான செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, சாதி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படுகிற தீண்டாமை முறைகளைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தலித் மக்களின் வாழ்நிலைமைகளை ஆய்வு செய்யவும் ஃப்ரண்ட்லைன் அனுப்பிய மூன்று செய்தியாளர்களில் விஸ்வநாதனும் ஒருவர். அந்த ஆய்வுக்காகத் தென் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பல்வேறு தரப்பினரைச் சந்தித்து உண்மை நிலவரங்களைக் கண்டறிந்தார்.
1995ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் தலித்துகளுக்கெதிரான வன்முறை குறித்து ஃப்ரண்ட்லைன் இதழில் அவர் எழுதிய ஐம்பத்திரண்டு கட்டுரைகள் ‘நவயானா’ பதிப்பகத்தின் மூலம் 2005ஆம் ஆண்டில் ‘Dalits in Dravidian Land’ என்ற தலைப்பில் ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் என். ராம் அணிந்துரையுடன் புத்தகமாக வெளிவந்தது. இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேராசிரியர் சி.டி. குரியன் விமர்சனம் எழுதினார். அவரது இந்தப் புத்தகம் தமிழ்நாட்டில் தலித் நிலை குறித்து ஆய்வுசெய்யும் இந்திய, வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. சமூகச் செயல்பாட்டாளர் ஆஸி பெர்ணாண்டஸ் முன்முயற்சியால் இந்தப் புத்தகத்தின் தமிழாக்கம் த. நீதிராஜன் மொழிபெயர்ப்பில் ‘சவுத் விஷன் புக்ஸ்’ வெளியீடாக வெளிவந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துருவின் அமர்வில் ஆஜரான முன்னாள் அட்வகேட் ஜெனரலும் மூத்த வழக்கறிஞருமான ஆர். கிருஷ்ணமூர்த்தி (ஆர்.கே.), “தலித்துகள் மீதான கொடுமைகள் என்பனவெல்லாம் அந்தக்காலம். இப்போது மாறிவரும் சூழ்நிலையில் அவை மறைந்துவிட்டன” எனக் கூறினார். அவரது வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி சந்துரு, லேண்ட் மார்க் புத்தகக் கடைக்குச் சென்று எஸ்.வி.யின் ‘Dalits in Dravidian Land’ புத்தகத்தை வாங்கி, “நீதிமன்றத்தில் தாங்கள் கூறிய கருத்துகள் தொடர்பாக நான் அனுப்பியுள்ள இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும். அதன் பின் நாம் தமிழகத்தில் தலித்துகள் நிலை பற்றிய விவாதத்தை மீண்டும் தொடரலாம்,” என்ற குறிப்புடன் அனுப்பினார். புத்தகத்தைப் படித்த ஆர்.கே. என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு “என்னை மன்னிக்கவும். இன்றும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடப்பதை இப்புத்தகம் வெளிச்சம்போட்டுக் காட்டியது. இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு வருந்துகிறேன். நான் காலையில் கோர்ட்டில் சொன்ன கருத்துகளெல்லாம் வாபஸ்” என்று சொன்னார். ஆர்.கே.யின் மனமாற்றம் எஸ்.வி. அவர்களின் புத்தகம் செய்த மகிமை என்று நீதிபதி சந்துரு அந்தப் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பின் முன்னுரையில் மனதாரப் பாராட்டியுள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கும் அந்நாளைய ஆளுநர் சென்னாரெட்டிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துமோதல் சம்பவங்களையடுத்து ஃப்ரண்ட்லைன் இதழுக்காக சென்னாரெட்டியிடம் சிறப்பு நேர்காணல் செய்து அவர் வெளியிட்டது போன்று தனித்துவம் வாய்ந்த கட்டுரைகள் பல உள்ளன.
வேலைவாய்ப்புக் கொடுத்து, தான் எழுதுவதற்குத் தொடர்ந்து ஊக்கமளித்ததுடன் தன் உடல் நலனிலும் அக்கறை காட்டி வந்ததற்காக ஃப்ரண்ட்லைன் ஆசிரியராக இருந்த என். ராமை அவர் எப்போதும் நன்றியுடன் நினைவுகூர்வார். அவர் பணிக்காலம் முடிந்தும்கூட, ஒன்பதாண்டுக் காலம் பணி நீட்டிப்பு தந்தவர் என். ராம். அதன் பிறகு, 2009இல் ஹிந்து நாளிதழின் கௌரவம் மிக்க பணியான ரீடர்ஸ் எடிட்டராகவும் ஆக்கினார். 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பணிபுரிந்த அந்தக் காலகட்டத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் எழுதும் பத்தியில், செய்திகள் குறித்து வாசகர்களின் கருத்துகளும் அதற்கான விளக்கமும் என்று மட்டுமில்லாமல் அந்த நிகழ்வுகளின் செய்தி குறித்த அலசலும் பத்திரிகை அறம் குறித்த அவரது சிந்தனைகளும் வெளிப்படும். 72 வயதுவரை அவரது பத்திரிகைப் பணி நீடித்தது.
தமிழ் இலக்கியத்தில் ஆர்வம்கொண்ட அவர், அனைத்துத் தரப்புத் தமிழ் எழுத்தாளர்களுடனும் நல்ல தொடர்பில் இருந்தார். சாகித்திய அகாதெமியின் தமிழ் தேர்வுக் குழுவிலும் ஒருமுறை உறுப்பினராக இடம்பெற்றவர்.
அரைநூற்றாண்டுக் காலம் ஆங்கிலப் பத்திரிகைகளில் பணிபுரிந்தாலும்கூட, தமிழில் எழுத வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர் தமிழில் எழுதத் தவறியதில்லை. கட்டுரைகளுக்கு அவர் கொடுத்துள்ள தலைப்புகளும் வார்த்தைப் பிரயோகங்களும் தமிழ் மொழியாற்றலையும் விளிம்புநிலை மக்களின் மீதான கரிசனத்தையும் வெளிப்படுத்துவன.
விஸ்வநாதனின் நெருங்கிய நண்பரான கவிஞர் மீரா வெளியிட்டு எண்பதுகளில் வந்த அன்னம் விடு தூது இதழில் சசிகுமார் என்ற புனைபெயரில் அரசியல் விமர்சனங்களை எழுதியுள்ளார். இதேபோல, இளைஞர் முழக்கம் இதழிலும் தொடர்ந்து எழுதியுள்ளார். மாநில, தேசிய அரசியல், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் குறித்தெல்லாம் அவரது பார்வை விரிந்து செல்கிறது. அவை மத அடிப்படைவாதத்துக்கு எதிரானவை; சமூக, மத நல்லிணக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துபவை. ‘தலித் அமைப்புகள் எங்கே செல்கின்றன?’ முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை. 2005இல் எழுதப்பட்டாலும்கூட இன்றைக்கும் கவனிக்கப்பட வேண்டியது. இடதுசாரிச் சிந்தனைகளில் ஆழ்ந்த பற்றுகொண்ட அவர், வர்க்க ரீதியான போராட்டமும் சாதி மேலாதிக்க ஒழிப்புப் போராட்டமும் இணைந்து நடைபெற வேண்டும், அப்படி இணைந்து நடக்கும்போது சாதி ஒழியலாம் என்று கூறுகிறார். தஞ்சாவூரில் சீனிவாசராவ் தனது தோழர்களைக் கொண்டு சாதி ஒழிப்புப்போரையும் வர்க்கப் போரையும் இணைத்தே நடத்தியிருக்கிறார் எனவும் சுட்டிக்காட்டுகிறார். அவரது புத்தகத் தொகுப்பில் வராத ஃப்ரண்ட்லைன் கட்டுரைகள் உள்ளிட்டவை புத்தகமாக வெளிவர வேண்டும். இளைஞர் முழக்கத்துக்கு விஸ்வநாதன் அளித்த நேர்காணல் பிரதி காணாமல்போய்விட்டது. அதையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
விஸ்வநாதனின் மறைவு குறித்துத் தகவல் அறிந்ததும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட வயதுகளிலிருக்கும் சங்கரய்யாவும் நல்லகண்ணுவும் நேரில் அஞ்சலி செலுத்த வந்திருந்தது அவரது எழுத்துக்குக் கிடைத்த மரியாதை.
அன்பினால் அனைவரையும் அரவணைத்தவர். அனைவரிடம் மென்மையானவர். தனது கருத்துகளில் உறுதியுடன் இருந்தவர். விஸ்வநாதன் மதுரையில் பணியாற்றிக்கொண்டிருந்த போதிருந்தே எனக்குத் தெரியும். சென்னைக்கு பணிமாறுதலாகி வந்தபோது எனது அறையில் ஓரிரு வாரங்கள் தங்கியிருக்கிறார். அவரது குடும்பம் சென்னைக்கு வந்தபோது அவர்களை அழைத்துவர ரயில் நிலையத்துக்கு சென்றவன். பின்னர் அவரது வீட்டுக்கு எதிரேயுள்ள குடியிருப்பில் நான் எனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தேன். இரவுப் பணி முடித்தும் அவரும் நானும் ஒன்றாக வாடகை சைக்கிள்களில் வந்திருக்கிறோம். பின்னர் ஸ்கூட்டரில் வந்திருக்கிறோம். விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது காலைவேளைகளில் மருத்துவமனையில் சிலமணி நேரம் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறேன். தனது குடும்ப விஷயங்கள் குறித்தும் என்னுடன் தனித்துப் பகிர்ந்துகொள்வார். தொடர்புகொள்ள நான் மறந்தாலும்கூட போன் மூலம் அல்லது நேரில் பார்த்துப் பல விஷயங்களைச் சொல்வார். தான் எடுத்த முடிவுகள் சரிதானா என்று கருத்துக் கேட்பார்; பிறகு, அவர் எடுத்துள்ள முடிவுகளைச் சொல்வார்.
எப்போது சந்தித்தாலும் என்னிடம் சொல்வதற்கு ஏதாவது இருக்கும். அவர் மறைந்ததும் நேரில் அஞ்சலி செலுத்த அவரது வீட்டுக்குச் சென்றேன். அப்போதும் என்னிடம் சொல்வதற்கு அவரிடம் ஏதாவது விஷயம் இருந்திருக்கும். ஆனால் சொல்வதற்கு அவர்தான் இல்லை.
மின்னஞ்சல்: pondhanasekaran@yahoo.com