அயோத்தி தீர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
EPW பக்கங்கள்
அயோத்தி தீர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
நீதிமன்றப் பாகுபாடும் அதன் விளைவான வழிகாட்டுதல்களும் முழுமையான நீதியை உத்தரவாதப்படுத்துகின்றனவா?
பாபர் மசூதியின் மூலப் பத்திரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், அதன் மௌனம் அதன் பேச்சைப் போலவே உரக்கப் பேசுகிறது. தீர்ப்பின் சாராம்சமாக நீதிமன்றம் உண்மையில் என்ன கூறியுள்ளதென்று புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அது எதனைக் கூற வேண்டாமென்று தேர்ந்தெடுத்துள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் சொத்தைக் கடவுள் ‘பகவான் ஸ்ரீராம் விராஜ்மா’னுக்கும் அவரது பாதுகாவலர்களுக்கும் வழங்கிய உச்சநீதிமன்றம் எட்டு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதற்கான தேவை என்னவென்று ஒருவர் வியக்கலாம். பாபர் மசூதி இருந்த இடத்திற்கான உரிமையைக் கோரும் இந்து, முஸ்லிம் தரப்பினரின் நிலப்பிரச்சினைதான் (1949ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ளது) இது. இந்தச் சொத்துப் பத்திரம் கடவுளுக்குரியதென்று நீதிமன்றம் உறுதியாயிருந்தால், அந்தச் சொத்திற்கு அதற்குப் பின் என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்றம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று நாம் கேட்க வேண்டியுள்ளது.
“1993ஆம் ஆண்டு அயோத்தியில் சில பகுதிகளைக் கையகப்படுத்தும் சட்டம்” என்று ஒரு சட்டம் உள்ளது. இந்தச் சட்டமானது, 1993ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்ச்சைக்குரிய இந்த இடத்தை மத்திய அரசு கைப்பற்றி அதனை ஏதாவது ஓர் அறக்கட்டளைக்கோ அல்லது ஏதேனும் அதிகார அமைப்பிற்கோ சில நிபந்தனைகளின் அடிப்படையில் அளிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. அயோத்தி தீர்ப்பின் விளைவாக, மத்திய அரசு எந்தவிதத்தில் சிந்திக்கிறதோ அதே விதத்தில் தனது அதிகாரத்தை அயோத்தி சட்டத்தின் கீழ் அது பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் மத்திய அரசை விட்டிருக்கலாம். ஆனால் அரசு எவ்வாறு செயற்பட வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நீதிமன்றம் விரும்பும்போது மத்திய அரசு அப்படியே ஒப்புக்கொண்டு செயல்பட்டால், ஏன் இதற்கான தேவையுள்ளது என்று நீதிமன்றம் கருதியிருக்க வேண்டாமா?
இத்தகைய விதிமுறைகளை நீதிமன்றம் விதிப்பதற்கான ஆதாரம் அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின் கீழுள்ளது. “இரண்டு தரப்புகளுக்குள் முழுமையான நீதி தேவைப்படும் தருணங்களில் நீதிமன்றம் இதனைப் பயன்படுத்துவது அவசியம்” என்று அந்தப் பிரிவு கூறுகிறது. இந்த நிபந்தனைகள் வெறும் காற்றிலிருந்து தோன்றவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு இதனை விரிவாக அலசி ஆராய்கிறது. இந்த அதிகாரம் ஏன் தேவைப்படுகிறது, எதனால் இது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தொடர்பாக, ஆக்கப்பூர்வமாய்ச் சிந்திப்பவர்களின் ‘மௌனங்களை’ச் சில சமயம் வெல்வதற்கு இது தேவைப்படுகிறது என்று நீதிமன்றம் தன் தீர்ப்பில் விரிவாக விளக்கியுள்ளது. ‘மனிதகுல வரலாற்றையும் அதன் செயல்பாட்டின் சிக்கல்களையும்’ தீர்ப்பதற்கான கட்டமைப்புச் சட்டம் இது.
இந்த வழியில் பார்த்தால், மிகவும் நியாயமான முடிவை ஒருவர் பெறமுடியும். இந்த சர்ச்சைக்குரிய நிலத்தைச் சட்டரீதியாக வழக்கு நடத்தி இந்தக் கட்சிகள் பெற்றிருப்பது ஒருபுறம். சில வழிகளில் முஸ்லிம் தரப்பினரும் தேவைப்பட்ட சமமான பலன் உறுதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தி சட்டத்தின் கீழ் மத்திய அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும், மசூதி கட்டப்படுவதற்கான இடத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு மானியமாகவே வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
ஆனாலும் ‘இது நீதியா?’ என்ற கேள்வி எழுகிறது. சட்டத்தின்படி இந்துக்களின் வழக்கு நிறுவப்பட்டாலும், “மனிதகுல வரலாறு, செயல்பாட்டின்” எந்த அம்சம் நீதிமன்றத்தைத் தூண்டிவிட்டு, சன்னி வக்ஃபு வாரியத்திற்கு மத்திய அரசும் உத்தரப்பிரதேச அரசும் நிலம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க வைத்துள்ளது?
இதற்கான பதிலை அறிவது கடினமல்ல. நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது: “பாபர் மசூதி இரண்டு முறை இடிக்கப்பட்டுள்ளது, முதலாவதாக 1949ஆம் ஆண்டு. அப்போது இருள் சூழ்ந்த நள்ளிரவில் அந்த மசூதி இடிக்கப்பட்டு அதன் மைய மாடத்தின் கீழ் சிலைகள் வைக்கப்பட்டன. இரண்டாவதாக 1992ஆம் ஆண்டு பொதுமக்கள் முன்னிலையில் கர சேவகர்களின் கூட்டம் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. இருப்பினும் இந்த இரண்டு சம்பவங்களை இந்துக்கள் நடத்தியிருந்தாலும் சொத்திற்கு அவர்கள் சட்டபூர்வமாக உரிமை கோருவதை நீதிமன்றம் மறுக்கவில்லை. பாபர் மசூதியின் மைய மாடத்தின் கீழ்தான் இராமரின் பிறந்த இடம் (இராம ஜென்மபூமி) உள்ளதென்ற இந்துக்களின் நம்பிக்கை, மதப்பிடிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. 1857ஆம் ஆண்டுக்குப் பிறகும் இந்த மசூதியை, மசூதியாகத் தாங்கள் பயன்படுத்தியுள்ளோம் என்ற முஸ்லிம்களின் கோரிக்கைக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை.
எதைச் சொல்ல வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவெடுத்திருக்கிறதென்றால்: “இந்துக் கட்சிகளின் வழக்கு அவர்களது சட்டத்திற்குப் புறம்பான 1949, 1992 நடவடிக்கைகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும் அவற்றை அவர்கள் பலனுக்காகவே பயன்படுத்திக்கொள்ள நாங்கள் அனுமதிக்கிறோம். 1949, 1992இல் ஏற்பட்ட சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்காக நாங்கள் முஸ்லிம்களுக்கு நீதி வழங்க இயலாது. எனவே நாங்கள் கொடுத்ததை வைத்து முஸ்லிம் கட்சிகள் திருப்தி அடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”
இதைத் தொடர்ந்து நீதிமன்றம் அளித்த நிபந்தனைகளை நீதிமன்றத்தின் கொடை சார்ந்த விஷயங்களாகக் காண வேண்டும். முழுமையான நீதியை இந்த மூலப்பத்திரம் குறித்த முடிவுகளை வைத்து மட்டும் நாம் கருதக்கூடாது. 1992ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகளின்போது ஏற்பட்ட முழுமையான அநீதிகளுக்கு உண்மையான அர்த்தமுள்ள மாற்றுப் பலனை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த விஷயம் குறித்த நீதிமன்றத்தின் வரலாறு தெளிவாக உள்ளது. நீதிமன்றம் உத்தரவு அளித்தபோதும் பாபர் மசூதியைப் பாதுகாக்கத் தவறிய அப்போதைய உத்தரப்பிரதேச முதலமைச்சர்மீது நீதிமன்றம் எந்த தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த மசூதியை இடித்ததில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கு நத்தை வேகத்தில் செல்கிறது. இதற்கு விதிக்கப்பட்ட காலக்கெடு, அதற்கு விதித்த காலக்கெடு என்று எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
பாபர் மசூதியின் மூலப் பத்திரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘முழுமையான தீர்ப்பு’ என்று சொல்ல முடியாது. ஏனெனில் அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின் கீழுள்ள அதிகாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இதனைச் சிறப்பாகக் கூற வேண்டுமென்றால் ‘முழுமையற்ற நீதி’ என்று கூறலாம். இல்லை அதற்கு மாற்றாகக் கூற வேண்டுமென்றால் ‘முழுமையான அநீதி’ என்றும் கூறலாம்.
கோபால்குரு
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, நவம்பர் 16, 2019