விருது காணா வித்தகர்கள்
கட்டுரை
விருது காணா வித்தகர்கள்
அ.கா. பெருமாள்
முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு - 1984ஆக இருக்கலாம், சென்னை பெரியார் திடலில் தமிழகக் கிராமியக் கலைஞர்களின் மாநில மாநாடு நடந்தது. என் நண்பர் உளுந்தூர்பேட்டை அமலதாஸ் அந்த மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் மூன்று நாட்களிலும் கலந்துகொண்டு பேசினேன்; சில தீர்மானங்களும் கொண்டுவந்தேன்.
குன்னக்குடி வைத்தியநாதன் தலைமை தாங்கிய அந்த விழாவில் சிவகாமி இ.ஆ.ப, பரீக்ஷா ஞாநி, நடிகர் நாசர் எனப் பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். எழுபதுவகையான கலைகளை நிகழ்த்த நான்காயிரம் கலைஞர்கள் கலந்துகொண்டனர். அன்று கலைஞர்கள் சார்பாகப் பேசியவர்கள் எல்லாருமே, “எங்களுக்கு அங்கீகாரம் இல்லை; மரியாதை இல்லை,” என்று வெளிப்படுத்தினார்கள்.
தமிழக நாட்டார் கலைஞர்களின் பிரச்சனையை வறுமை என்ற ஒற்றைச் சொல்லால் கூறுவது முழுமையற்றதாகும்.