கவிதைகள்
கவிதைகள்
வே.நி. சூர்யா
Courtesy: The Reader , Anju Dodiya
அலைகளை எண்ணுபவன்
உப்புக்காற்றின் கண்காணாத் தோரணங்களினூடே
கடற்கரைக்கு வருகிறான்.
கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும் தேயிலைப் பையென
தொலைவில் மூழ்கிக்கொண்டிருக்கிறது
சுடரும் ரத்தப்பந்து.
அலைகளின் சப்தத்தை மட்டும் விட்டுவிட்டு
எங்கேயோ சென்றுவிட்டன
மற்றெல்லா சப்தங்களும்.
ஈரமணலில் அமர்ந்து
அலைகளையும் நுரைகளையும் வெறிக்கிறான்.
பின்னர் எண்ணத் தொடங்குகிறான்.
ஒன்று.. இரண்டு.. தனிமை.. மூன்று.. நான்கு..
வந்துகொண்டே இருக்கின்றன அலைகள்
மிகத் தனிமையான அலைகள்.
கறுப்புக் காகிதம்
நீளக்காகிதங்களை நிறையவே தீர்த்திருக்கிறேன்.
நீங்களும் பயன்படுத்தி இருப்பீர்கள்.
சோவென வெய்யில் பெய்கிறது.
வெறுமையை மூக்குக் கண்ணாடிபோல அணிந்தபடி
பரபரப்பான மேம்பாலத்தில் நிற்கிறேன்.
கீழேயும் ஒரு காகிதம் இருக்கிறது.
கறுப்புக்காகிதம்..
எவரென்று தெரியவில்லை,
வாகனங்களையும் மனிதர்களையும் விலங்குகளையும் எழுத்துருவாக்கித்
தாறுமாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்.
அடுத்த பக்கத்தில் என்ன எழுதுவார்
எனக்கு ஆர்வம் பொறுக்கவில்லை.
அந்தமற்ற நீலவதனம்
கட்டடங்கள் அண்ணாந்து பார்த்தபடி நிற்கின்றன
ஈஸ்டர் தீவத்து ராட்சதர்கள்போல.
கான்கிரீட் கழுத்துகளுக்கு வலியே கிடையாதா...
அப்படி என்னதான் இருக்கிறது நீல விசும்பில்,
அதுவுமிந்தப் பட்டப்பகலில்.
ஜன நெரிசல் வீதியில் நானும் நடக்கிறேன் அண்ணாந்து பார்த்தபடி.
இன்னும் இன்னும் என நீளும்
ஒரு பார்வையின் உதரக்கொதிதான் இப்பொருள் வெளியா...
எனைப் பார்த்து இன்னொருவர்
அவரை நினைத்துப் பிறிதொருத்தி
கண்டவர் எவரும் கூறக்கூடும்,
இப்பொழுது இவ்வீதியே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது என்று.
ஒரு கணம் எமக்குத் தோன்றிற்று:
கும்பலாய் இப்படி வெறித்துப் பார்த்தால்
நம்மைக் குறித்து அவ்வானம்தான் என்ன நினைக்கும்
இல்லை கூச்சத்தில் நீலவதனம்தனைப் பொத்திக்கொண்டால்
நாம்தான் என்ன செய்வோம்.
மின்னஞ்சல்: suryavn3@gmail.com