கலையும் கவலையும்
அறிமுகம்
கலையும் கவலையும்
யுவன் சந்திரசேகர்
மொழிபெயர்த்து முடித்த நாவலை, செம்மைப் படுத்துவதற்காக மீண்டுமொரு முறை வாசித்து முடித்தபோது தோன்றியது: கூட்டுவிழிகள் கொண்ட மனிதர் இந்த நாவலின் ஆசிரியரேதான். உலகளாவியக் கரிசனமும் கவலையும் மாத்திரமன்றி, உலகளாவிய காட்சிப்புலங்களும் விரவியிருக்கும் நாவல் இது. தைவான் தீவும் நார்வேயின் மீன்பிடிப் பிராந்தியமும் கனடா மற்றும் துருவப் பிரதேசங்களும் ஒருபுறமென்றால், தைவானின் மலைசார்ந்த பழங்குடி, கடல் சார்ந்த பழங்குடி வாழ்வியல் தொடர்பான தகவல்கள் இன்னொரு புறம். இவற்றுக்கு மறுதரப்பாகப் புனைவா நிஜமா என்று நிர்ணயிக்க முடியாத, பிரத்தியேகமான சடங்குகளும் நம்பிக்கைகளும் வாழ்முறையும்கொண்ட வயோ வயோ தீவும் அதன் மனிதர்களும் சமபங்கு வகிக்கும் நாவல் இது.
மாயப் புனைவுலகும் யதார்த்தச் சூழ்நிலையும் அடுத்தடுத்துப் பொருத்தப்பட்டு, ஒன்றுடன் ஒன்று ஊடாடி ஒருங்கே இசையும் புனைவுகள் அபூர்வம். ஏதோவொரு தரப்பைச் சார்ந்து விரிவதும், உச்சத்தை எட்டும்போது அதுகாறும் முறுக்கிவந்த கயிற்றைப் படீரென அறுந்துவிட அனுமதிப்பதுமாகவே பெரும்பான்மை நாவல்கள் அமையும். கூட்டுவிழிகள் கொண்ட மனிதன் நாவல், சிறுபான்மையான எதிர்த்தரப்பைச் சேர்ந்தது.
அறிவியல் வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பற்றிய உலகப் பொதுமனத்தின் அக்கறையின்மையும் வறட்டுக் கருத்துருவமாகவோ தகவல் குவிப்பாகவோ இன்றி, வாசக சுவாரசியத்தைக் கொஞ்சமும் குறைக்காத புனைகதையாக முன்வைக்கப்பட முடியும் என்று நிறுவியிருக்கிறது.
முழுமையான தனித்தனிப் பகுதிகள் அடுத்தடுத்த அத்தியாயங்களாக விரிவடையும் நாவலின் ஒருபாகத்தில் நவீன
உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தும் அபாயகரமான பின்விளைவுகள், இன்னொரு பாகத்தில் சுற்றுச்சூழலைக் கொஞ்சமும் சேதப்படுத்தாமலே வாழ்வை நடத்திச் செல்லும் பழங்குடி ஜனங்களின் வாழ்முறை என்று மாறிமாறிப் பேசுவது சுவாரசியமான கதைசொல்லும் முறை என்பதோடு, மனிதகுலம் வளர்ச்சி என்ற பெயரில் எதை விலையாய்க் கொடுத்து எந்த சௌகரியத்தைப் பெற முயல்கிறது, இழப்பின் நிரந்தரத்தன்மையும் பெறுமானமும் என்னவென்ற ஆழ்ந்த கரிசனமாகவும் இருக்கிறது. கனிவற்ற அறிவியல் மனோபாவம் எந்த அளவுக்கு மானுட விரோதமாக இருக்கிறதென்பதையும் நிறுவ முயல்கிறார் ஆசிரியர்.
ஆலிஸ், ஹஃபே போன்ற தனிநபர்களின் இழப்பும், ஒட்டுமொத்த கடற்கரையோரச் சமூகங்களின் இழப்பும் மாற்றிமாற்றிச் சொல்லப்படும்போது, இழப்பு உண்டாக்கும் கையறுநிலை பூதாகாரமாய் எழுந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. நகரமயமாதலின் துர்விளைவுகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் பக்கவிளைவுகள், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையின்மை மானுடப் பிரக்ஞைக்கு வெளியே தன்னிச்சையாக அதிகரித்து வருதல், அரசாங்கம் உள்ளிட்ட அதிகார நிறுவனங்களின் பரிவின்மை, தொலைநோக்குப் பார்வையின்மை போன்றவை நேரடியாகவும் மறைமுகமாகவும் நாவல் நெடுகிலும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது.
ஒட்டுமொத்தமாகவே, மனிதமைய உலகத்தின் மீது ஆறாத ஆதங்கம் கொண்ட நாவல் இது.
நாவலைப் படித்து முடிக்கும் ஒருவருக்கு, மாயப் புனைவுலகமும் மண்ணும் சதையுமான நடைமுறை உலகமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையல்ல என்ற உணர்வே எஞ்சும். நடைமுறை உலகின் நடைமுறை நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் மாயக்கரங்களும் நடைமுறை உலகின் பகுதியாக இருந்தே செயல்படுபவை. அரசியல், பொருளாதார, சமூக
நிலைகளை விரல்களாய்க் கொண்ட, தாட்சண்யமற்ற கரங்கள் அவை மாறாக, மாயப் புனைவுலகில் செயல்படும் காரணிகள் முழுக்க முழுக்க மாயப் புலம் சார்ந்தவை அல்ல. நடைமுறை உலகத்தின்மீது ஒவ்வாமையோ,
இதன் நியதிகள், நியமங்களின்மீது ஆழ்ந்த அதிருப்தியோ கொண்ட நடைமுறை மனங்களே மாயக்களத்துக்குள் நடமாட விரைகின்றன.
தர்க்கபூர்வமான, யதார்த்த உலகத்தின் நியாய அநியாயங்களை எதிரொலிக்கும் தொன்மங்களும், நியாய உணர்வோ தர்க்க அடிப்படையோ அற்று இயற்கை மூலகங்களை நிரந்தர சேதத்துக்கு ஆளாக்கும் நவீனத் தொழில்நுட்பங்களும் சமஅளவில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
வு மிங்-யி கைக்கொள்ளும் உத்தி தனித்துவம் வாய்ந்தது. ஜெர்மனியில் பிறந்த டெட்லெஃபும், நார்வீஜிய சாராவும் தைவானியப் பூர்வகுடியான டாஹுவிடம் அறிமுகம் ஆவதற்குள் கதை எங்கெல்லாம் நகர்ந்துவிடுகிறது! ஒன்றுக்கொன்று தொடர்பற்றவைபோலத் தோன்றும், தன்னளவில் முழுமையாக இருக்கும் அத்தியாயங்கள், ஓரிடத்தில் வந்து குவியும்போது ஏற்படும் கிளர்ச்சி, வாசகரைப் பரவசத்தில் ஆழ்த்தக்கூடியது. ஒரே பொம்மையின் வெவ்வேறு அங்கங்களை இரண்டு கைவிரல்களில் மாட்டிய கயிற்றினால் இயக்கும் பொம்மலாட்டக் கலைஞரின் திறமையை ஒத்தது.
தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த, உயிர்வாழும் எண்ணத்தை மீட்டெடுக்க ஒரு பூனையே போதுமானதாய் இருக்கும் அபலைக்கு, முழு மனிதன் ஒருவன் கிடைப்பது எப்பேர்ப்பட்ட நம்பிக்கையையும் ஆறுதலையும் எதிர்பார்ப்பையும் அளித்திருக்கும்!
மறுபுறம் தனது சமூகம், வசிப்பிடம், வாழ்முறை என்று சகலத்திலும் வெளியேற்றப்பட்டு நிர்க்கதியான ஒருவனுக்கு, அந்நியப் பெண்ணொருத்தி வழங்கும் ஆதுரம் எவ்வளவு பெறுமதி கொண்டது!
இதில் சுவாரசியமான முரண் ஒன்று இருக்கிறது. ஒருவன், மரபும் நம்பிக்கைகளும் காட்டிய கடுமையால் வெளியேற்றப்பட்டவன்; மற்றவள் நவீனயுகம் நோக்கிப் பாயும் மானுட அமைப்புகளின் விட்டேற்றித் தன்மையால்
தன் வசிப்பிடத்தை, வாழ்க்கைச் சூழலின் சுமுகத்தை இழக்க நேர்ந்தவள்.
இழப்பின், கையறுநிலையின் முன்னிலையில் அவர்கள் பரஸ்பரம் உறவினர்களாகிறார்கள். ஆமாம், நாவல் முழுவதிலுமே வாழ்வை ஓர் ஆனந்தமாக, கொண்டாட்டமாக நிறைவோடு அனுபவிக்கும் ஒரு கதாபாத்திரம்கூட இல்லை. திமிங்கில வேட்டையாடும் தீரரான அமண்ட்ஸனும் இறுதியில் நிம்மதியற்றுத் தவிப்பவராகிறார்.
பங்க்கா, புனூன் என்ற இரண்டு பூர்வகுடிகள். கடல் சார்ந்த முன்னது, மலைசார்ந்த பின்னது இரண்டுமே கற்பனைத் தீவாகிய வயோ வயோவின் மரபுகளையும் நம்பிக்கைகளையும் ஒத்த நடைமுறைகளைக் கடைப்பிடித்திருப்பது சுவாரசியமானது. மூன்று இனங்களுக்குமே மாயமும் கற்பனாதீதமும் கலந்த வரலாறுகள் உள்ளன. கவனிக்க வேண்டிய விஷயம், மூன்று குடிகளிலுமே தீயவை, அல்லது பொதுவாழ்வுக்குத் தீங்கு விளைவிப்பவை என்று சொல்லத்தக்க ஒரேயொரு அம்சம்கூட இல்லை. அவர்களுடைய நீதியும் நியாயமுறையும் நேரடியானவை.
மூன்று பழங்குடிகளிலும் சரி, நகர்வாசியான ஆலிஸின் வாழ்விலும் சரி, காதல் தோல்வி முக்கியமான அம்சமாய் இருக்கிறது - மனித உறவுகள் பற்றி ஆசிரியரின் உலகப் பார்வையோ இது என்ற ஐயம் உதிக்கிறது!
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது. அந்தந்தப் பாத்திரங்கள் சார்ந்து மொழியமைப்பு மாறிக்கொண்டே போகிறது. அட்டிலெ’ய்யின் பூர்வகுடிப் பார்வையும் தகவல்களும், ஆலிஸின் நகர்ப்புறப் பார்வை, டெட்லெஃப், சாரா இவர்களின் அறிவியல் தொழில்நுட்பக் கண்ணோட்டத்தின் மொழி, ஹஃபேயின் பாமர மொழிதல் (பறக்கவிருப்பவன் மாதிரி, பறக்கப் போகிற பறவை மாதிரி . . . அவர்கள் பேசுவதைக் கேட்டேன், எதைப்பற்றியோ பேசுகிறார்கள் என்று பட்டது...
(அத்.09) என்று பலவிதமாக.
அதிலும், அட்டிலெ’ய் பேசும் இடத்திலெல்லாம், கடல்சார்ந்த உவமைகள் மட்டுமே வந்துகொண்டிருக்கும். தூண்டில் இரை இல்லாத கொக்கியை எதிர்கொள்ளும் மீன் போல (அத்.5) கவானாவில் அகப்பட்ட நீர்ப்பறவைபோல நிராசையுற்றவனாக (அத்.15) என அவனைப் பற்றிய விவரிப்பிலும்கூட இதே பாங்கு தொடர்கிறது. தூண்டிமுள்ளில் சிக்குவதற்கு மீனுக்கு எடுக்கும் நேரம்தான் (அத் 14) ஆகிறது அவனுக்கு - மண்சரிவில் சிக்குவதற்கு!
கதை சொல்லும் நுட்பத்துக்குச் சான்றாக அநேக இடங்கள் இருக்கின்றன. கதைசொல்லியின் மொழி நேரடியாக இல்லாமல் போகும்போது, அர்த்தபூர்வமான செறிவு எத்தனை மடங்கு அதிகரித்துவிடுகிறது என்று காட்டும் இடங்கள். ஒருவருக்கொருவர் சம்பந்தமோ, சமாந்தரமோ இல்லாத இருவர், அவரவர் துயரங்களின் முன்னிலையில் இருவராக இல்லாமல் போகும் இடம். ஒரே துக்கத்தின் இரண்டு முகங்களாக ஆகிவிடும் இடம்.
“இப்போது போலக் கடுமையாய் மழை பெய்யும்போது கூட அதேவிதமாகத்தான் பதில் சொல்ல வேண்டுமோ?”
“ஆமாம்.”
“உனக்குப் பதில் சொல்ல விருப்பமில்லாவிட்டாலும்கூட?”
“ஆமாம்.”
மெல்லமெல்ல மழையைக் கொண்டுவருவதுபோல இருந்த கடலை நாங்கள் இருவரும் வெறித்துப் பார்த்தோம். அடிக்கடி அலைகள் உருண்டுவந்துகொண்டிருந்தன. பத்து அலைகள் வரும்வரை மௌனம் காத்த அட்டிலெ’ய், இன்னொரு தடவை கேட்டான்: “இன்று கடலில் வானிலை இதமாக இருக்கிறதா?”
“மிக மிக” என்று பதிலளித்தேன். முதன்முறையாக, நானுமே அவனைத் திருப்பிக் கேட்க முடியுமே என்று உணர்ந்தேன். “இன்றைக்கு உன்னுடைய கடலில் வானிலை சுமுகமாக இருக்கிறதா?”
“ஆமாம். அதீத இதம்,” என்று பதிலளித்தான்.
ஏனென்று எனக்குத் தெரியவில்லை, ஒரே சமயத்தில் இருவருமே அழ ஆரம்பித்தோம். (அத்.18)
கவித்துவமான விவரிப்புகளுக்கும் குறைவில்லாத நடைகொண்டது இந்த நாவல்.
ஆனால் இந்த முறை, மழையாக மாறி ஆற்றினுள் வீழ்ந்த மேகங்களைத் தேடிப்போகிற மாதிரி ஆகிவிட்டது; அடையாளம் காணவோ, தடயத்தைத் தேடவோ முற்றிலும் இயலாததாக. (அத்.10)
அமைதியாக அதே இடத்தில் படுத்திருந்தாள் ஆலிஸ். நிலவொளியைத் தன் இமைகளில் உணர்ந்தவண்ணம். செவிப்பறைகளில் அலையோசை மோதிக்கொண்டிருந்தது - எங்கோ தொலைவில் நொறுங்கும் கண்ணாடிபோல. வெளியே, விண்மீன்கள் அளவு பெரிய மழைத்துளிகள் வீழ்ந்துகொண்டிருந்தன - பூமிக்கு மேலங்கியாகப் புழுக்கமான, நிம்மதியற்ற, பொங்கிப் பெருகும் காற்றை அணிவித்தவாறு. (அத்.5)
மழையின் ஒவ்வொரு திரியும் ஒளிர்ந்தது - நிலவே மழையாகிப் பொழிவதுபோல (அத்.10)
தங்களை அறியாத ஒருவனை மலைகள் பாதுகாப்பதில்லை. (அத்.19)
இதுபோன்ற உவமைகளும் பார்வையும் பத்திகளும் சமகால வாழ்வை விவரிக்கும் பகுதிகளில் அதிகம் இல்லையென்பதையும் குறிப்பிட வேண்டும்.
வூ மிங்-யி இந்த நாவலில் படைப்புச் சத்தை எட்டும் இடம் என்று சொல்லத் தோன்றும் சந்தர்ப்பம், கூட்டுவிழிகள் கொண்ட மனிதன் தாம்முடன் நிகழ்த்தும் உரையாடல். முகட்டில் தனியாக இருக்கும் மகனைப் பற்றிய பதற்றத்துடன் மரணத்தை எதிர்கொள்பவனிடம் அவர் விளக்கும்போதுதான் வாசிப்பவருக்கும் தெரிகிறது. டோட்டோ என்ற சிறுவன் நிகழ்காலத்தில் உயிருடன் இருப்பவன் அல்லன் என்பது. அதுவரை அவனுடைய இன்மை, பூடகமான விதத்தில் எத்தனை இடங்களில் எத்தனைவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது; காணாமல் போன மகனைப் பற்றி மீட்புக்குழுவிலிருந்த நண்பனான டாஹு எதுவுமே சொல்லவில்லை; அந்த மகனின் முதுகுப் பையைக்கூட மீட்க முடியவில்லை; முகட்டில் சற்றுமுன் விட்டுவந்த மகனை அவன் அங்கே இல்லை என்று கூட்டுவிழிகள் கொண்ட மனிதன் திரும்பத் திரும்ப சாதிப்பது என மலைப்பை ஏற்படுத்துகிறது.
இறந்துகொண்டிருக்கும் ஒருவனிடம் இப்படியா ஞாபகங்கள் பற்றிய கோட்பாட்டு உரையாடல் நடக்கும் என்று மெல்ல எழும் தர்க்கபூர்வமான எரிச்சலின்மீது நீரூற்றிச் சட்டென அணைத்துவிடுகிறது அந்த உரையாடல் வந்து சேரும் இடம்.
ஒட்டுமொத்த மனிதகுலமுமே கூட்டுக் கண்கள் கொண்ட ஒற்றை மனிதனாகத் திரண்டு காட்சியளிக்கும் சந்தர்ப்பம் அது; அல்லது அதன் கூட்டு நனவிலியே ஒற்றை மனிதனாகத் திரண்ட சந்தர்ப்பம்.
அப்படியானால், டோட்டோ முகட்டில் தனித்திருக்கும்போது நிகழ்வதாக விவரிக்கப்படுபவை யாருடைய ஞாபகத்தில் நிகழ்கின்றன?
தவிர, ஒருவருக்கொருவர் ஒத்துப்போகாத கணவனும் மனைவியும் முன்னமே இறந்துவிட்ட அருமை மகனின் ஒரேவிதமான உருவெளித்தோற்றத்தை அல்லது பிரமையை அவரவர் மனத்தில் அடைகாப்பது நூதனமான துயரநிலை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது - நாவல் முழுவதுமே அவர்களுக்குள் இந்த மகனைப் பற்றியோ அவனை இழக்க நேர்ந்தது பற்றியோ உரையாடல் ஏதும் நிகழ்வதாகத் தெரியவில்லை.
கூட்டுவிழிகள்கொண்ட மனிதன் கடவுளோ அல்லது, மனிதகுலத்தின் கூட்டு மனசாட்சியோ அல்லது, தவிர்க்கமுடியாதவகையில் நிகழ்ந்தேறும் அழிவுப்பாதையைக் கையாலாகாமல் நின்று வேடிக்கை பார்க்கும் மானுடப் பிரக்ஞையோ?
மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது எனக்கென்று சில நடைமுறைகள் வைத்திருக்கிறேன். முதற்படியை உருவாக்கும்போது, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்து விடுவேன். இரண்டாம் முறை திருத்தி எழுதும்போது, வாசிப்பின் சரளம் வேண்டி, வாக்கியங்களை முன்பின்னாக இடம் மாற்றுவது, மூலச் சொல்லுக்கு இன்னமும் நெருக்கமானதாய்த் தோன்றுகிற சொல்லைத் தேடிப் பொருத்துவது என்று சில மாற்றங்களைச் செய்வேன். இதற்கெல்லாம் துல்லியமான கச்சிதமான அளவுகோல்கள் எவையும் இருக்க முடியுமா என்ன! ஒரு வாசகனாக என் விழைவும் கணிப்பும் சார்ந்த மாற்றங்கள் இவை. பெருமளவும் உணர்வு சார்ந்தவை; தர்க்கபூர்வமாக விளக்க இயலாதவை.
தமிழ் வாசகருக்கு உதவிகரமாய் இருக்கும் என்று நான் உத்தேசித்த விதமாக, பெரிய பத்திகளைப் பல இடங்களில் உடைத்திருக்கிறேன். ஆங்கிலப் பெரிய எழுத்துடன் தொடங்கும் சொற்களைத் தடித்த எழுத்திலும், சிறிய ஆனால் சாய்வெழுத்துக்களில் உள்ள வயோ வயோ மொழியின் பிரத்தியேகச் சொற்களைத் தடித்த மற்றும் சாய்ந்த எழுத்திலும் கொடுத்திருக்கிறேன்.
இந்நாவலை மொழிபெயர்க்கும் பணி பெரும்பாலும் எளிதாகவும் சரளமாகவுமே இருந்தது. மிகச் சில இடங்கள் மட்டும் கடினமாக இருந்தன. பேசப்படும் கலாசாரம் - பூர்வகுடிகள் பற்றி ஆழமான பரிச்சயம் இல்லாதது மட்டுமல்ல, நவீனகால உபகரணங்கள் தொடர்பான கலைச்சொற்களுக்குத் தமிழில் இருக்கும் தட்டுப்பாடும்தான் காரணம். சில கருவிகளைப் பற்றிச் சித்திரத்தோடு விளக்கிவிடும் அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் இணையத்தில் எத்தனைதான் கிடைத்தாலும், தமிழில் அக் கருவிகளையும் சந்தர்ப்பங்களையும் விவரிப்பது ஆங்கிலத்தில் வாசித்து அறிந்துகொள்ளும் அளவுக்கு லகுவாக இல்லை. சிலவேளை, ஒரேயொரு சொல்லாக ஆங்கிலத்தில் குறிக்கப்படும் பொருளை, நாலைந்து வரிகளில் விவரித்தாலும் போதாமையே நிரம்புகிறது மனத்தில். பிரச்சனை சொல் அல்ல, அந்தக் கருத்துரு நடப்புக்காலத் தமிழ்க் களத்தில் புழங்கக்கூடியதாய் இல்லையென்பதுதான் காரணம்.
அதேபோல பறவைகள், கடலுயிரிகள், தாவரங்களின் பெயர்கள் தொடர்பாகவும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவை தைவானுக்கேயுரியவையாக, சிலவேளைகளில் சீனாவுக்கோ ஜப்பானுக்கோ சொந்தமானவையாக இருந்ததால், நேரடியான தமிழ்ப்பெயர்களைக் கண்டறிவது கடினமாக இருந்தது. முடிந்தவரை தமிழ்ப் படுத்தியும் சில இடங்களை அதே சொற்களாலும், கொண்டுவர முயன்றிருக்கிறேன். விடுதல்கள் அநேகமாக இல்லையென்றே சொல்லலாம். சில பெயர்ச்சொற்களை என் பொதுப் புத்திக்கு எட்டிய அளவுக்குத் தமிழாக்கியிருக்கிறேன். அவற்றில் பிழைகள் இருப்பதை யாராவது தெரியப்படுத்தினால், அடுத்த பதிப்பில் உரியவிதத்தில் திருத்திவிடச் சித்தமாயிருக்கிறேன்.
மேலே சொன்னபடி, சில கருவிகள், உயிரினங்களின் பெயர்களை இணைய ஒலி அகராதிகளின் துணையுடன் தோராயமாகத்தான் தமிழில் எழுத முடிந்தது. தமிழ் வாசகருக்கு அந்தப் பெயர்களின் சரியான உச்சரிப்பு அல்ல, அந்தச் சொற்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்கள் தெரியவருவதே போதுமானது என்று படுகிறது. உதாரணமாக டோட்டோ என்ற பெயர் டொட்டோ அல்லது டொட்டொ என்று எழுதப்பட்டாலும், அது ஒரு சிறுவனின் பெயர் என்ற அளவில் புரிந்துகொண்டால் போதுமானதுதானே. கலைமான் வண்டு இன்னொரு உதாரணம்.
மில்லட், ப்ளாக் பியர், சன், மூன் என்பதுபோல இடம்பெறும் பெயர்களை, அவை பெயர்கள் என்பதாலேயே தமிழ்ப்படுத்தவில்லை.
பெயர்களின் ஊடே மேற்காற்புள்ளிகள் இருப்பதையும் அப்படியே பேணியிருக்கிறேன். உமாவ், தாம் போன்ற பெயர்கள் வரும் இடத்தில் ஒற்று மிகுமாறு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஆங்கிலம் என் தாய்மொழி அல்ல, நான் அதில் நிரம்பிய பாண்டித்தியம் உள்ளவனும் அல்லன் என்பதால், ஒவ்வொரு நூலை மொழிபெயர்த்து முடித்ததும் என்னையுமறியாமல் இதில் ஏதோ தவறு செய்திருக்கிறேன், எனது பலவீனமான மொழியறிவு அதைக் கவனிக்கவிடவில்லை என்று தோன்றிக்கொண்டே இருக்கும். நுட்பமான வாசகர்கள், ஆங்கில மொழிப்புலமை மிக்கவர்கள், அவர்களுக்கு ஏதேனும் தட்டுப்படும் பட்சத்தில்,
எனக்குச் சுட்டிக்காட்டி உதவினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
- காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் ‘கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்’ (தைவானிய மொழி) நாவலுக்கு அதன் மொழிபெயர்ப்பாளர் யுவன் சந்திரசேகர் எழுதிய பின்னுரை.
வு மிங் - யி
தைவானில் பிறந்தவர்.
எழுத்தாளர், ஓவியர், பேராசிரியர், சூழலியலாளர்.
இயற்கையியல் பற்றிய இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார்.
இவருடைய நூல்களில், முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் இது. இன்டெர்நேஷனல் ‘மான் புக்கர்’ பரிசு நெடும்பட்டியலில் இடம்பெற்றது.