கடிதங்கள்
கடிதங்கள்
சிவராஜ் பாரதியின் கட்டுரை, இளங்கோ டிசேவின் கதை ஆகியன முறையே காஷ்மீரின் துயரத்தையும் இலங்கை அவலத்தையும் எடுத்துக்காட்டின.
‘பொருநை பக்கங்கள்’ வெகு சிறப்பு. அரை நூற்றாண்டு வாழ்நாள்கூட கொண்டிராத கு.ப.ரா காலத்தால் அழியாத இலக்கியங்கள் படைத்தமையும் தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு போன்ற படைப்பாளிகள் தோன்றக் காரணமாக இருந்தமையும் தமிழ் இலக்கியத்தின் நல்லூழ். அங்கதமும் அவலமும் இணைந்த கரிச்சான் குஞ்சுவின் ‘ஒட்டாத செருப்பு’ கதையும் ‘நடுப்போரில் தீவைப்பவர்’ என்ற கல்யாணராமனின் கட்டுரையும் சிறப்பானவை.
அசோகமித்திரன் சுராவுக்கு எழுதிய கடிதங்கள் நெகிழ்ச்சியூட்டின. தீப. நடராஜனின் ‘சென்ற தடத்தில் செல்லாத கதை’ என்ற கட்டுரை ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலை அழகாக நினைவூட்டியது.
சலபதியின் கட்டுரை விளம்பரங்களின் தோற்றுவாயையும் வளர்ச்சியையும் ஆழமாக விளக்கி எடுத்தியம்பியது.
சரவணன்
மதுராந்தகம்
தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் ஓரினச் சேர்க்கை குறித்தான கதையாடலைப் பேசியவர் கரிச்சான் குஞ்சுதான். பாலியலைக் கலை நேர்த்தியாகப் படைப்புகளில் காட்சிப்படுத்த நினைக்கும் எழுத்தாளர்களுக்கு இவருடைய படைப்பாளுமை ஒரு பாடமாகும். க.கு.வுடன் பழகிய தருணங்களை நினைத்துக் கொரித்திட ரவிசுப்பிரமணியனுக்கு இவ்விதழ் வடிகாலாகிறது. கல்யாணராமன் தன் கட்டுரையில் கும்பகோண எழுத்தாளர்களை வரிசையாக நிறுத்துகிறார். ‘கும்பகோண எழுத்துப் பரம்பரை’ என்று யாரேனும் உருவாக்கினால் க.கு.வின் ஆளுமைத்தடம் அதில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். நாடகங்கள், நடப்பியல் உலகிற்குத் தேவைப்பட வேண்டிய ஒன்று. தமிழகம் கொடுத்த பற்சிறப்பு கண்ட, எழுத்தாளுமை என்ற ஓடங்களைப் ‘பொருநை’ சுழிக்காமல் ஓடவைக்க வேண்டும்.
சதீஷ்குமார்
உடுமலைப்பேட்டை
அக்டோபர் இதழில் வெளிவந்தவற்றில் ‘உயிர் பெறும் சிலைகள்’, ‘காலனியமும் காதலும்: விறலிவிடு தூது’, ‘செட்டியார் மிடுக்கும் சரக்கு மிடுக்கும்’ போன்றவை கவனத்தை ஈர்த்தன.
தி. பரமேசுவரியின் ‘வண்ணம் பூசிய கயிறுகள்’, கட்டுரை சமகாலச் சாதிய அரசியலை வெளிச்சமிட்டுக் காட்டியது. அரசு பள்ளிகள் சாதியப் பிடியில் இறுகிச் சிக்கியுள்ளதை நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் வட, தென் பகுதிகளில் சாதி குறித்தான போக்குகள் விரிவான ஆய்வுக்கு வித்திடுகின்றன. அதே சமயத்தில் அரசும் கல்வித்துறையும் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றிய கருத்துகள் முக்கியமானவை. ஓர் ஆசிரியரின் கண்டனக் குரலாக ஒரு பக்கமும் சமூக அக்கறையுள்ள பெற்றோரின் குரலாக மறுபக்கமும் ஒலித்திருக்கிறார்.
‘காலனியமும் காதலும்: விறலிவிடு தூது’ - சௌ. குணசேகரனின் கட்டுரை ‘விறலிவிடு தூது’ நூல் பதிப்பில் நிகழ்ந்த அரசியல் குறித்துத் தெளிவாக்குகிறது. அத்தோடு தமிழ் அறிஞர்களின் முன்னெடுப்புகள், பிரபந்த இலக்கியங்களின் அரசியல் போன்றவை கவனிக்கவைத்தன. ‘கிறுத்துவ’ (பக்.18), ‘கிறித்துவ’ (பக்.19) போன்ற சொல்லாடல்களைக் கவனிக்க வேண்டுகிறேன். அறிஞர் பலரும் ‘கிறித்தவம்’ என்றே பயன்படுத்துகின்றனர். பொருள் அறிக.
ஆ.இரா. வேங்கடாசலபதியின் கட்டுரையான, ‘செட்டியார் மிடுக்கும் சரக்கு மிடுக்கும்’, தமிழ் இதழியல் உலகில் விளம்பரம் குறித்த ஆழமான பார்வையை முன்வைத்தது. தமிழ் அச்சு ஊடகங்களில் ஏற்பட்ட விளம்பரங்கள் அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், வி.பி.பி.யின் வருகை, அதனூடான அரசியல் போன்ற பல்வேறு புதிய செய்திகளைச் சுருக்கமாக விளக்கியிருக்கிறார். அவர் சொன்னதுபோலவே, தமிழில் விளம்பர வரலாற்றுக்கான முன்வரைவான இப்புள்ளிகள் விரித்து நூலாக்கப்பட வேண்டும்.
அனிச்சம்
மின்னஞ்சல் வழி
கரிச்சான்குஞ்சு நூற்றாண்டையொட்டி எண்பத்தேழாம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆதாரமற்ற கற்பனை குற்றச்சாட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அத்தகைய கட்டுரைகள் தங்கள் பத்திரிகையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தங்களின் அரசியல் சார்புத்தன்மையைப் பட்டவர்த்தனமாக்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் காரர்களின் இ.எம்.எஸ் வெறுப்பு ஊரறிந்ததே. அதனையே விடிவு அந்தப் பதிவின் அறிமுகத்தில் வெளிப்படுத்தியுள்ளது. உறுதி செய்யப்படாத ஒரு விஷயத்தை, சம்பந்தப்பட்டவர் இல்லாதபோது வெளியிடுவது, தங்களின் பத்திரிகை ‘தர்மம்’போலிருக்கிறது. இ.எம்.எஸ் எழுத்துகள் ‘கதையல்ல’, மாறாக ஆழமான தேடல்களும் முடிவுகளும்! ஆகவே இத்தகைய அல்ப விஷயங்களைப் பிரசுரிப்பதைக் கைவிட்டுவிட்டுத் தங்கள் பத்திரிகையின் பக்கங்களை உண்மையான விஷயங்களுக்குப் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
க. ஆனந்தன்
மீனாட்சிபுரம்
‘‘ஒன்று என்பது ஒன்று மட்டுமல்ல’’ தலையங்கம் பிரச்சினையை மிக விரிவாக ஆராய்ந்துள்ளது.
இந்தியாவின் பெருமையே அதன் பன்முகத் தன்மை. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், பண்பாட்டுமுறைகளைக் கொண்ட கதம்ப மாலையாக விளங்கிவந்த இந்தியா இன்று மாலையின் அருமை தெரியாத மனித குல முன்னோர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராணுவம், நாணயம், வெளியுறவு ஆகியவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக்கொண்டு ஏனைய அதிகாரங்களை மாநிலங்களிடமே விட்டுவைக்க அண்ணா கோரினார். பிரிவினைத் தடைச் சட்டம் வந்தபோது பிரிவினையைக் கைவிடுவதாகவும் ஆனால் பிரிவினைக் காரணங்கள் அப்படியே உள்ளனவென்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றப் பெரும்பான்மை நிரந்தரமன்று; வந்த வேகத்திலேயே அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மோடியின் முட்டாள்தனத்திற்கும் அமித் ஷாவின் முரட்டுத்தனத்திற்கும் சான்று பகர்கின்றன. காஷ்மீரில் இன்று என்ன நிகழ்கிறதென்பதை இங்கிருந்தே நம்மால் கூறிவிட முடியும்.
மனித உரிமைகள் ஈவிரக்கமின்றி நசுக்கப்படுகின்றன. தனிக் கொடி, தனி அரசியலமைப்புச் சட்டம் கொண்ட மாநிலத்துக்கே இந்த நிலைமையென்றால் ஏனைய மாநில மக்களின் நிலை என்னாவது?
வேற்று நாட்டுப் படையெடுப்பிலிருந்து நாட்டைக் காக்கவே ராணுவம்; சொந்த நாட்டு மக்களைக் கொல்வதற்கல்ல. 1965இல் மாணவர் திரள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழ்நாட்டுக்கு ராணுவம் வந்தது. விளைவு என்னவென்பதை மோடி அறியாரா?
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு
அசோகமித்திரன் சு.ராவுக்கு எழுதிய கடிதங்கள் அன்பையும் பரிவையும் அறிவார்ந்த தேடலையும் பதிவுசெய்கின்றன. இன்னலுற்ற சமயத்திலும் அவரிடம் மெல்லிய நகைச்சுவை உணர்வை உணரமுடிகிறது. இளங்கோ டிசேவின் லியனகே கதையை வாசிக்கையில் இந்திய அரசியலின் திசைவழி நினைவுக்குவந்து கவலையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை.
வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் ரிச்சர்ட் மேத்திசன் கதை அமெரிக்க மத்தியதர வர்க்கத்தின் அவலத்தை மட்டும் சொல்லவில்லை. உலகு தழுவிய வக்கிரத்தையும் வலியையும் உணர்த்துகிறது.
கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு விழா சிறப்புப்பகுதியில் அவரின் சிறுகதையும் கவிதையும் அன்னாரின் ஆளுமையை எடுத்துரைக்கின்றன. ரவி சுப்ரமணியனின் கட்டுரை நெகிழ்ச்சியாக இருந்தது. கல்யாணராமனின் கட்டுரை கரிச்சான்குஞ்சுவின் நாடக ஆளுமையையும் அவரின் கூர்நோக்கையும் எடுத்துரைக்கின்றன.
ஜனநேசன்
மின்னஞ்சல் வழி
நடப்பு அரசியல், சிறுபான்மை இனத்தவரை அச்சுறுத்திப் பிழைப்பு நடத்துவதை மிகவும் ஆழமாக உணர்த்திய ஆகச்சிறந்த கட்டுரையாக சிவராஜ் பாரதியின் “ஜாஃபாவைப் பார்த்தபோது..” அமைந்திருந்தது.
ஒரு மாநிலம், பொதுசுயம் பேணிகளால் வழிநடத்தப்படும்போதே நல்லாட்சி நடப்பது அரிதாக இருக்கையில் பல்வேறு நிலைப்பாட்டிற்காகச் சிறப்பு அந்தஸ்தை நீக்குதல் எத்தகைய வீழ்ச்சிக்கு அடிகோலும் என்பதை ஆசிரியர் மிகச்சிறப்பாக விளக்கியிருந்தார். மேலும் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கும் பார்வையை எதிர்மறையாக அணுகியவிதமும் புதியமுயற்சி. பிறநாடுகளில் இதுபோன்ற அணுகுமுறை எத்தகு அழிவை ஏற்படுத்தியதென்ற விசாரணை நிச்சயமாக வியக்கத்தக்கது.
உண்மைகள் பலவிதம் என்ற உண்மையை விளக்கியதில் சமகாலச் சமூகத்தில் உண்மையாக வாழ்வதைக் காட்டிலும் கொடியது வேறு இல்லையென்று நறுக்கென வெட்டிச் சுட்டியது. சிவராஜ் கட்டுரையின் நடை பன்னெடுங்காலமாக வழங்கிவரும் கட்டுரையின் வடிவமைப்பைக் கட்டுடைத்துச் சிறந்த கதைசொல்லி வடிவில் அமைந்திருப்பதும் சிறப்பாக அமைந்துள்ளது.
வீ. பூமிநாதன்
செங்கம்
சென்ற இதழில் மறுபிரசுரமான தீப. நடராஜனின் ‘சென்ற தடத்தில் செல்லாத கதை’ கட்டுரையைத் தந்து உதவியவர்கள் தனசேகர், கல்யாணராமன். இருவருக்கும் எமது நன்றி.