கவிதைகள்
கவிதைகள்
ந. ஜயபாஸ்கரன்
Courtesy: Pinterest
கடவுளின் கொட்டாவி
ஒடுக்கு எடுக்கும் கரவையையும் குண்டையும் வைத்துப் பித்தளைப் பாத்திரங்களின் நெளிவை எடுத்துக்கொண்டிருக்கிறார் அழகிரிப் பத்தர், கடையின் வெளிமேடையில் விரித்துப்போட்ட போரா சாக்கில் உட்கார்ந்துகொண்டு. சற்றுத் தள்ளிப் பழைய எண்ணெய்ப் பிசுக்குப் பித்தளைச் சொம்பில் பெயர்வெட்ட உளி பழகிக் கொண்டிருக்கிறான் திரைப்படக் கனவுகளுடன் குருசாமி ஆசாரியின் கடைக்குட்டி மகன். காற்றில் அலைந்துகொண்டிருக்கும் பித்தளைத் தராசுத் தட்டுகளை ஏறக்கட்டித் தராசின் முள்துடிப்பை நிறுத்துகிறார், ‘கனமான பேரேடுகளுக்கு இடையே விதை நசுங்கிப் போன’ பெட்டியடிக் கணக்குப்பிள்ளை. அருந்தலும் பொருந்தலும் அற்றுப்போன வணிக வாழ்க்கை முதலாளி, முட்டுச்சந்தில் கிடைக்காத முத்தத்தின் துவர்ப்பை ருசித்துக்கொண்டிருக்கிறான் அக நாக்கில். பிற்பகல் சூரியனின் ஆலிங்கனத்தை மறுத்தவாறு காக்கிப் படுதாவைக் கடைமுகப்பில் தொங்கவிடுகிறான் வாழைத்தோப்பு விடலைப் பையன். கடவுளின் கொட்டாவி நீண்டுகொண்டிருக்கிறது காலம், கடைவெளியில்.
நாச்சியார்கோவில் மண்
ஊனப்பட்ட விளக்கின் தனிமை பிரத்தியேகமானது. ஊனமான குத்துவிளக்கை, விரிசல் விழுந்த கண்ணாடியைப் போல, வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்கிறார்கள். விளக்குத் தண்டு, கீழே விழுந்தால் கண்ணாடி போலத்தான் உடைந்து போய்விடுகிறது. கை தவறியது என்பதற்குப் பதிலாக, எண்ணெய்த் துணியை இழுத்த எலி அல்லது அதைத் துரத்திய பூனை என்று பழியை வேறு இடத்தில் வைக்கிறார்கள் பெண்கள். செவ்வாய் வெள்ளியில் லெச்சுமியை, எலும்பு முறிந்தாலும், வீட்டிலிருந்து வெளிக்கொண்டுவருவதற்கில்லை என்று கறாராய்ச் சொல்கிறார்கள் மஞ்சள் காப்புக் கையை அசைத்துப் பேசும் பெண்கள். அதே சமயம் விளக்குத் தகழியில் திரண்டிருக்கும் கரிய எண்ணெய்ப் பிசுக்கும், திரிநூல் கசடும் நீர் காணாத மஞ்சள் குங்குமத் திட்டுகளும் இதுவரை அலட்சியத்தில் எரிந்த அக வாழ்க்கையை விற்பனைக்குக் கொண்டுவருகின்றன. உடைந்த விளக்கை விற்பனைக்குப் போடும்போது, விளக்குத் தண்டில் இருக்கும் கருமண்ணுக்கான எடையைக் கழிக்கையில், புதிதாக வாங்கும்போது மண்ணுக்கும் சேர்த்துத்தானே வெண்கல விலை வைக்கிறீர்கள் என்கிறார்கள். ஆனால் அது பழக்கத்தின் உப்பு சேராத நாச்சியார்கோவில் மண் இல்லையா?