மெய்யும் பொய்யும்
EPW பக்கங்கள்
மெய்யும் பொய்யும்
நல்லுறுதிமிக்க நேர்மையான ஜனநாயக வாழ்வில், போலிச் செய்திகள் இருப்பது அநேகமாக முரண்பாடான ஒன்று. ஜனநாயகத்தின் இத்தகைய வடிவங்களில் எதார்த்தம் என்பது எவ்வளவுதான் அசௌகரியமானதாக இருந்தபோதிலும்கூட, அரசியல் தலைவர்களின் பேச்சுகளின் மூலமாகவும் பல்வேறு வடிவங்களின் மூலமாகவும் ஜனநாயகம் வெளிப்படுத்தப்படுகிறது. உண்மை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஊடகங்கள் இவற்றைச் சுற்றுக்கு விடுவதன் மூலமாகவும், ஆழ்ந்து ஆராயும் ஜனநாயகத்தில் தெளிவாக மேற்கோள்ளப்படும் விவாதங்கள் மூலமாகவும் இந்த வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
உண்மை உளதாம் தன்மையானது, சுற்றுக்கு விடுவதன் மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் மட்டுமல்ல, ஆழ்ந்து ஆராயும் ஜனநாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தெளிவுபடுத்தும் விவாதங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
ஓர் ஒழுங்கும் பொறுப்புமுள்ள ஊடகங்கள் தம் தகவல் தொடர்புகளின் மூலமாக எவ்விதத் திரிபுகளுமின்றி எதார்த்த நிலைமைகளைச் சுற்றுக்கு விடும் பொறுப்பைப் பெற்றிருக்கிறது. ஊடகங்கள் எதார்த்தத்தின் விளைவுகளுடன் சமூகப் பொறுப்புணர்வையும் இணைப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சமூகத்தின் உண்மை நிலையைக் கண்டறிந்து அதனைச் சுற்றி ஜனநாயகப் பிரசங்கங்களைக் கட்டியெழுப்புவதில் மிகப்பெரிய பொறுப்பு அதற்கு இருக்கிறது. இந்தப் பின்னணியில் போலிச் செய்திகள் ஜனநாயகத்தின் கருத்தியலுக்கு முரணாகத் தோன்றுகின்றன. எனினும் மேற்கத்திய நாடுகளிலும் இந்தியாவிலும் போலிச் செய்திகளின் நூதனக் காட்சிகள் ஜனநாயகத்தை அரித்துக்கொண்டிருக்கின்றன.
எனினும் போலிச் செய்திகள் உண்மையற்ற சிதைக்கப்பட்ட அல்லது உருக்குலைக்கப்பட்ட தவறான விவரங்களைச் சுற்றுக்கு விடுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. பொய் வாக்குறுதிகளை, குறிப்பாகத் தேர்தல் பிரச்சாரங்களின்போது அவிழ்த்துவிடப்படும் சரடுகளை, அல்லது படுதோல்வி அடைந்த அம்சங்களைக்கூட பிரமிக்கத்தக்க வெற்றி போன்று சித்திரிக்கின்ற வடிவங்களிலும் போலிச் செய்திகள் அடங்கும். எதிர்க்கட்சிகளால் வழக்கமாகச் சொல்லப்படும் புகார்களை ஆராய்கையில் அவை உண்மையானவையாகத்தான் இருந்திருக்கின்றன. பொதுவாக, ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்கள் அல்லது தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் இத்தகைய போலிச் செய்திகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு, ஆட்சியைக் கைப்பற்றவோ அல்லது பின்னர் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவோ பொய்த் தகவல்கள் அல்லது செய்திகள் ஏன் தேவைப்படுகின்றன?
இது சம்பந்தமாக அளிக்கப்படும் எளிதான விடைகளில் ஒன்றாக, தேர்தல் போட்டிகளைக் கூற முடியும். அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி இதுதான் காரணம் எனக் கூற முடியும். அதிகாரத்திற்கான போட்டியில் அரசியல்வாதிகள், தங்களுக்கு எதிராகப் போட்டியிடுவோரைவிட உடனடி அனுகூலங்களைப் பெறுவதற்காகவே பொய்ச் செய்திகளைப் பயன்படுத்திக்கொள்வதாகத் தோன்றுகிறது. ஆளும் கட்சி தன்னைப் பீடத்தில் தக்கவைத்துக்கொள்வதற்காக முழுமையற்ற தரவுகளையும் மோசடித்தனமாக ஏமாற்றுகின்ற பொய்த்தகவல்களையும் பயன்படுத்திக்கொள்கின்றன.
ஆளும் கட்சிகள், அதிகாரத்தின் பலாபலனைக் கோருவதற்குத் தாம் மேற்கொண்ட முன்மாதிரியான நடவடிக்கைகள் அல்லது நிறைவேற்றிய உறுதிமொழிகள் எதுவும் இல்லாதிருப்பதே ஆளும்கட்சி போலிச் செய்திகளை நாடுவதன் வெளிப்படையான பொருளாகும்.
வேறுவிதமாகச் சொல்வதென்றால் மக்களின் வாழ்நிலைச் சீர்கேடுகள், அதிகரிக்கும் சமூகப் பதற்றங்கள், சந்தை மாற்றங்கள், பலர் வாழ்வை அழிக்கின்ற நிதி நிறுவனங்கள் போன்ற ‘மோசமான முன்மாதிரிகளை’ ஆட்சியிலிருப்பவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள்.
ஆளும் கட்சிகள், மக்களின் செல்வாக்கை இழக்கக்கூடிய விதத்திலும், எதிர்க்கட்சிகளைப் புண்படுத்தும் விதத்தில் தாக்குதல் தொடுப்பதற்கான காரணிகளை அளிப்பதன் மூலமும் மிகப்பெரிய அளவில் இடரினை எதிர்கொள்ளும் சமயத்தில் மட்டுமே, இத்தகைய மோசமான முன்மாதிரிகளில் நேரடியாக இறங்க முடியும். மேலோட்டமாகப் பார்க்கும்போது, பொய்ச் செய்திகளின் இலக்கு, எதிர்க்கட்சிகளின் குரலை அடைக்கச்செய்வதே. எனினும் ஆளும் கட்சியின் நோக்கங்களுக்குள் ஆழமாகச் செல்லும்போது, அது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளைக்கூட இரண்டாம்பட்சமாகவே கருதுகிறது; பொய்ச் செய்திகளின் பிரதான நோக்கம், வாக்காளர்களை ஈர்ப்பதும் என்று விளங்கும். இதுதான் மிகச் சரியான காரணமுமாகும். ‘என்ன நடந்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் தமக்கு வாக்களிப்பார்கள்’ என்று ஆட்சியாளர்களால் எடுத்துக்கொள்ள முடியாது. சாமானிய மக்களை நெருக்கமாகப் பாதிக்கக்கூடிய பல அடிப்படைப் பிரச்சனைகள்மீது ஆட்சியாளர்கள் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் வாக்காளர்கள் அவர்களுக்கு எதிராகலாம். எனவே, வாக்காளர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. தங்களைப்பற்றிய பொய்ச் செய்திகளைப் பரப்பி எப்போதும் வாக்காளர்களைத் தம் பக்கம் நிறுத்திவைத்துக்கொள்வது அவர்களின் தேவை. இவ்வாறு, பொய்ச் செய்திகள் என்பவை உண்மைகள் பற்றியதானது அல்ல, மாறாக அவற்றின் மூலமாக மக்களை உண்மையிலிருந்து தொலைவிற்குத் தள்ளி வைக்கக் கூடியனவாகும். ஆட்சி அதிகாரத்திற்காகத் தீராப் பசி கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்குப் பொய்ச் செய்திகள் எப்போதும் தேவைப்படுகின்றன. அவை இத்தகைய கட்சிகளின் சூழ்ச்சித் திறன்களாகும். ஒருவரை அறிவாற்றலுடன் அரித்துத் தின்ன வைக்கக்கூடிய வல்லமை படைத்தவையுமாகும்.
பொய்ச் செய்திகளின் விளைவால் அதன் கருவியாக மாறும் நபர், உண்மையிலிருந்து பொய்யைப் பிரிப்பதற்கான காரணத்தையோ அல்லது பொய்யிலிருந்து உண்மையை வடித்தெடுப்பதற்கான காரணத்தையோ பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வார். பொய்ச் செய்திகளின் வெற்றி, ஜோடனை செய்யப்பட்டவற்றையும் சிதைக்கப்பட்ட உண்மை வடிவத்தையும் அல்லது ஆட்சியில் உள்ளவர்களின் உண்மையான செயல்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தைச் சார்ந்திருக்கிறது. பொய்ச் செய்திகளுக்கு மக்களைக் கட்டமைப்பது அம்மக்களின் சுய உடைமை அல்லது சுயநிர்ணய சுதந்திரத்திற்கான உரிமைகளை மீறுவதற்கு வழிகோலுகிறது. உண்மையில் அலசி ஆராய்ந்து சுயமாக முடிவெடுக்கும் மக்களின் வல்லமையை இது பழுதாக்குகிறது. சாமானிய மக்களும் அவர்களின் வல்லமையும் ஆளும் கட்சியினரின் மறைமுக சூழ்ச்சித்திட்டங்களுக்கு எதிராகப் போகலாம்.
ஜனநாயகத்தில் இத்தகைய செய்திகளின் விளைவுகள் என்னவாக இருக்கின்றன? அவை ஜனநாயகத்தில் ஓர் ஆழமான நெருக்கடி இருப்பதன் அறிகுறியாகும். ஆளும் கட்சிகள் இச் செய்திகளை மக்களை ஏமாற்றுவதற்கு மிகையாகப் பயன்படுத்தினால், அது ஜனநாயகத்தின் நெருக்கடிக்கு இட்டுச் செல்வது மட்டுமல்லாமல், ஜனநாயக அமைப்பு முறையிலேயே மேலும் அதிக ஆழமான நெருக்கடியை ஏற்படுத்திவிடும். மக்களைச் சமூக ரீதியாகப் பிளவுபடுத்துவதும் பொருளாதார வீழ்ச்சியும் இத்தகைய நெருக்கடியின் நிச்சயமான அறிகுறிகளாகும். எந்த நடவடிக்கையும் அதன் இயல்பான தன்மையுடனும் பலாபலனுடனும் மற்றவர்களின் அறியாமை, அதிகாரமின்மையை விரிவாக்குவதன்மீதும் சார்ந்திருக்குமானால், கடைசியில் தோல்வியை அது சந்திக்கும் என்பதே உண்மை.
கோபால் குரு
தலையங்கம், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, அக்டோபர் 19, 2019