அதிரவைக்கும் வரலாறு
மதிப்புரை
அதிரவைக்கும் வரலாறு
சா. தேவதாஸ்
பெருமகிழ்வின் பேரவை
(நாவல்)
அருந்ததி ராய்
தமிழில்: ஜி. குப்புசாமி
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை
நாகர்கோவில் - 1
பக். 448
ரூ. 550
இப்போது அருந்ததி ராயின் இரு நாவல்களும் தமிழுக்கு வந்துசேர்ந்துள்ளன - மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி வாயிலாக. ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ கேரளப் பின்புலத்தில் ஒரு காதல் கதையை மையமாக வைத்துப் பண்பாட்டு நெருக்கடிகளை விவரித்தது. இந்த இரண்டாவது நாவல், பாலினச் சிக்கல்கள், காஷ்மீர் பிரச்சினை, 1984 சீக்கியர் படுகொலை, தண்டகாரண்யத்தின் மாவோயிஸ எதிர்ப்புப் போராட்டம் எனப் பல தளங்களில் தீவிரச் சொல்லாடல்களை முன்வைக்கிறது. இவற்றைப் பேசிட சட்டகக் கதையாக, மயானத்தில் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் அஞ்சும் என்னும் இருபாலினப் பாத்திரத்தின் வாழ்க்கையை எடுத்துக்கொள்கிறார் நாவலாசிரியர் .
குடும்பத்தால், சமூகத்தால் ஓரங்கட்டப்படுபவர்கள் திருநங்கையர். அவமானத்தில் கூனிக் குறுகி ஒடுங்கிப் போனவர்கள், பிழைப்புக்காகப் பசப்பிப் பிச்சையெடுக்கும் அவலம். அதனின்றும் வெளியேறிவிடுகிறாள் அஞ்சும். இருபாலின அம்சங்கள் சேர்ந்து ஆணாகத் தோன்றியிருந்த அஃப்தாபின் இன்னோர் அடையாளமே திருநங்கை அஞ்சும். ஹிஜ்ரா எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் அஞ்சும் போன்றவர்கள் வரலாற்றில் பெரிதும் காயடிக்கப்பட்ட ஆண்களே. ஆனால் ஹிஜ்ரா என்ற பதத்தின் நேர்பொருள் ‘புனித ஆன்மா குடியிருக்கும் உடல்’ எவ்வளவு முரண்நகை ஒரு சொல்லிலும் அது தரும் பொருளிலும்!
அஞ்சும் வழிபடும் தர்கா, ஹஸ்ரத் ஸர்மத்தினுடையது. ஈரானிலிருந்து இந்தியா வந்து வணிகம்புரிந்த யூதர். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாததால் ஔரங்கசீப்பினால் மரணதண்டனைக்குள்ளானவர். அவரே இப்போது ஆறுதல் அளித்துக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் .
அஞ்சும்முக்கு உறுதுணையாகப் பார்வையிழந்த இமாம் ஜியாவுதீன்; இசையில் தன்னிலை இழந்துபோன ஒருவன். இவனோடு ஜைனாப் போன்றவர்கள் அடுத்தடுத்து வந்து சேர அஞ்சும்மின் ஊழியம் முழுநேரச் சேவைத் தொழிலாகிறது - ஆதரவற்ற பிணங்களை நல்லடக்கம் செய்வதும் வேறு புகலிடம் அற்றவர்களுக்குத் தங்குமிடம் அளிப்பதுமாக. அஞ்சும் சந்திக்க நேர்பவர்கள் சமூகத்தில், அரசியல் தளத்தில் கடும் அதிருப்தியாளர்களாக, போராளிகளாக, பத்திரிக்கையாளர்களாக உள்ளனர் .
இதனால் போபால் விஷவாயுக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இன்னும் மீள முடியாதவர்களின் தவிப்பு, 1984இல் இந்திரா படுகொலை செய்யப்பட்டதால் நிகழ்ந்த சீக்கியப் படுகொலையில் பலியானவர்களின் குடும்பத்தினர் சிதறியோடியது - புலம்பெயர்ந்தது, காஷ்மீரின் விடுதலைக்குப் போரிடும் இஸ்லாமிய இளைஞர்களின் பதற்றம் என வரலாறாகவும் இன்றைய நடப்பாகவும் உள்ள அதன் அதிர்வுகளால் வாசகரின் இருதயங்களைக் கனக்கச் செய்கிறது நாவல்.
காஷ்மீர் பிரச்சினை இஸ்லாமியரால் ஏற்பட்டது / இந்துக்களால் ஏற்பட்டது என்று மேம்போக்காகச் சொல்லிவிடாமல், ஓர் எழுத்தாளரின் பொறுப்புணர்வுடன் அருந்ததிராய், “ஒருவருக்கொருவர் கொடூரமான விஷயங்களைச் செய்துகொள்கிறோம். எங்களைக் காயப்படுத்திக் கொண்டு, துரோகம் இழைத்துக்கொண்டு, ஒருவரையொருவர் சாகடித்துக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறோம்” ( பக். 203 ) என்று பேசவைக்கிறார்.
இதனை உணர்த்தும்விதமாக, அம்ரிக் சிங் தம்பதிகளுக்கும் குடும்பத்தினருக்கும் அமெரிக்காவில் புகலிடம் கிடைக்கவிருக்கும் வேளையில், அம்ரிக் சிங் தன்னைச் சுட்டுக்கொள்வதுடன், குடும்பத்தினரையும் கொன்று தீர்க்கிறான்.
குற்றவுணர்வையும் குற்றமின்மையையும் ஏற்படுத்துபவர்களுக்கிடையே வேறுபாடுகள் அவ்வளவு புலப்படும் படியானதாக இல்லாது போகிறது. மேலும் காஷ்மீரின் அபத்தநிலை ‘உயிரோடு இருப்பதற்காகவே ஒருவர் கொல்லப்படலாம்’ என்றளவுக்குப் போயிருக்கிறது.
“உண்மையாக இருந்தவையெல்லாம் இப்போது பொய்யான தேவதைக் கதைகளைப் போலத் தெரிகின்றன – நான் உன்னிடம் வழக்கமாகச் சொல்கிற, உன்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்த கதைகள். எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது இது மட்டும்தான்: நமது காஷ்மீரில் இறந்துபோனவர்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்; உயிரோடு இருப்பவர்களெல்லாம் அவ்வாறு நடித்துக்கொண்டிருக்கும் இறந்தவர்கள்தாம்” (பக். 344).
ஒருபுறம் தீவிர விஷயங்கள் அபத்தநிலையை எட்ட மறுபுறம் சின்னஞ்சிறு விஷயங்கள் உன்னதமாகின்றன. அஞ்சும்முடன் சேர்ந்துகொள்ளும் ஜைனாப், மயானத்தை மிருகக்காட்சிச் சாலையாக்கிவிடுகிறாள். பறக்க முடியாத ஆனால் ஒன்றிடமிருந்து இன்னொன்று பிரிய இயலாத ஜோடி மயில்கள், பலியாக இருந்து மீட்கப்பட்ட வண்ணப்பறவைகள், தனித்து விடப்பட்டிருந்த ஆமை, முடமான கழுதை என அங்கே புதிய புகலிடத்தில் ஆறுதல் கொள்கின்றன – இப்படியான மானுடரைப் போன்றே.
அருந்ததிராயின் கதையாடலில் வசைகள் இடம் பெறுவது உறுத்துகின்றதாக, நிரடுகின்றதாக முதலில் தெரிகின்றது. அதிகாரப் பிரயோகம், பொறுப்புணர்வு இழந்துவிடும் வேளையில், எவ்வளவு பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்களைச் சிதறடித்து உடல் அங்கங்களைக் குவித்துக் கண்ணீரை வற்றவைத்து நிலமும் வாழ்வும் வேட்டையாடப்பட்டு விட்டால், என்ன சொல்ல முடியும்? ஒன்று, தமிழ்மரபிலான புலவனென்றால் அறம்பாடலாம் – அவனிடம் தமிழ் இருப்பதால்; தார்மீகச் சீற்றம் மிகுந்தால் காறி உமிழலாம் – அவனிடம் கண்ணியம் தலைதூக்குவதால்; பழிவாங்கலும் வெறுப்பும் திரண்டால் வசைபாடுகின்றனர் இங்கே – நாசக்காரர்களை வேறெப்படி அவர்களால் எதிர்கொள்வது என்பதால்.
நாவலை வாசிக்கின்ற வேளையில் நினைவூட்டப் படுகின்றவர்கள், ஆஹா சாகித் அலி என்னும் காஷ்மீரிக் கவிஞர், பிரெஞ்சு எழுத்தாளரும் திருடருமான ஜெனே, பத்திரிகையாளரின் அவச நிலையில் மனநிலை பிசகிய நெவாடியா, பழங்குடியினர் – அடித்தள மக்கள் விடுதலைக்காக உயிர்த்தியாகியான நியோகி, அதிகாரத்தை எதிர்த்ததால் தன்னை இழந்துபோன ரஷ்யாவின் ஓஸிப் மெண்டல்ஸ்டாம் எனப் பெருகிச் செல்கின்றனர். இவர்களின் நினைவுகள் எழுந்து நடப்புகளை இன்னும் தீவிரமாக்கிப் பிரக்ஞைநிலையில் உக்கிரம் கூடிவிடுகிறது.
மொழிபெயர்ப்பாளர் இம்மொழியாக்கத்தில் கவனம் செலுத்தித் துல்லியமாகத் தந்துவிட முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ‘காஷ்மீர்’ என்று சொல்லப்பட்டுவர அதன் ஒலிப்பைக் கொண்டு ‘கஷ்மீர்’ எனப் பயன்படுத்துகிறார். அரசவை நடனமாதரை ‘அவையணங்குகள்’ என்கிறார். nostalgia வை ‘நினைவேக்கம்’ என்றும் zigzaw puzzleஐ திருகுவெட்டுப் புதிர் என்றும் குறிப்பிடுகிறார். poetry roulette என்று நாவலாசிரியர் விவரிப்பதைக் ‘கவிதை சுழல்வட்டக் கவறாட்டம்’ என தொடராக்குகிறார். ஒரு வகையில் இது அதிகபட்ச ஈடுபாடு. பாராட்டப்பட வேண்டியது.
இதன் இன்னொரு போக்கு நேரெதிரான அர்த்தப்படுத்தலைத் தந்துவிடும். ‘பரம்பொருள் நீதியின் குறிக்கணக்கியல்’ (The Algebra of Infinite Justice) என்னும் போது, வழிபாட்டு / வணங்கத்தக்க தன்மையிலான தொனி வந்துவிடும். அருந்ததிராயின் இப்பிரயோகம் subversive தன்மையிலானதே. இது பொதுவாக மொழியாக்க நிகழ்வுப் போக்கிலான ஒரு பிரச்சினையே. ஒன்று மிகுமொழியாக்கம் அல்லாத குறைவுமொழியாக்கம். பாலினம் சார்ந்தும் கவிதை சார்ந்தும் சூஃபிமரபு சார்ந்தும், நாவலாசிரியர் நிகழ்த்தும் பயணங்களை, தீவிரம் குன்றாமல் மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி நிகழ்த்தியுள்ளார்.