கடிதங்கள்
கடிதங்கள்
‘கொரோனா இரண்டாம் அலையின் முன்னே...’ தலையங்கம் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அன்றாடம் இறந்துகொண்டிருக்கும் மனித உயிர்களை நினைத்துக் கண்ணீர் சிந்தியும் கவலைப்பட்டும் மனிதகுலம் மிகப்பெரிய துயருக்கு ஆளாகி வருவதை நினைக்கையில் கண்கள் குளமாகின்றன. இரண்டாம் அலையின் நோய்த்தொற்று வேகமும் வீரியமும் மிக அதிகமாக இருப்பது தெரிகிறது.
மிகக் குறைந்த வயதுடையவர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற செய்தி அதிர்ச்சியை உண்டாக்குகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே மிகப்பெரிய ஆர்வம் இல்லாமல் இருப்பது சற்றுக் கவலை அளிப்பதாக உள்ளது. சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்பிவிட்டுத் தடுப்பூசிபோட்டுக்கொள்பவர்களைக் குழப்புகின்ற சூழல் நிலவுகின்றது. ஒட்டுமொத்தமாக இரண்டாம் அலையின் வேகம் மிகக் கடுமையாக உள்ளது. எத்தனையோ துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ள நாம் மருத்துவக் கட்டமைப்பு வசதிக்கு மக்கள் தொகைக்கு ஏற்பப் போதிய அளவு செலவு செய்யாமல் இருக்கிறோம் என்கின்ற கவலை நம் அனைவர் மத்தியிலும் எழுகின்றது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவினங்களில் பல்வேறு விதமான திட்டங்களை உருவாக்கும் மத்திய மாநில அரசுகள் உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவமனைகள் உருவாவதற்கு அதி முக்கியத்துவம் தர வேண்டும்.
கூத்தப்பாடி பழனி
தருமபுரி
‘கர்ணன் போராட்ட வரலாற்றின் வரைபடம்’ அட்டையைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் வண்ணம் உருவாக்கிய இதழ் வடிவமைப்பாளரைப் பாராட்டி மகிழ்கிறேன். சைதன்யா, ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிச் சிறப்பித்திருப்பது நன்று. திரைவிமர்சனங்களாக மட்டுமன்றி வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் என்று சொல்லத்தக்க அளவில் நிறைய தரவுகள் காணக்கிடைக்கின்றன.
மாரி செல்வராஜ் முன்னர் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப் பட்டிருந்தாலும் எல்லாரையும் அத்திரைப்படத்தைப் பார்க்க வைத்தது. தற்போது ‘கர்ணன்’. ஒடுக்கப்பட்ட மக்கள் பட்ட துயரங்களையும் ஆதிக்கச் சாதியினரின் அட்டூழியங்களையும் இற்றை நாள் புதிய தலைமுறை, எளிதாக அறிய சினிமா ஒரு சிறந்த கருவி என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கட்டுரையாளர்கள் இருவரும் தங்கள் கருத்துகளை கச்சிதமாக எழுதிச் சிந்திக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது. மக்கள் வாழ்க்கையை விளக்கும் கண்ணாடி இலக்கியம் மட்டுமல்ல இனிய திரைப்படங்களும்தான் என்று உரத்துக் கூறவைத்திருக்கிறது ‘கர்ணன்’ போன்ற படங்கள்.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
மொழிபெயர்ப்புப் படைப்பாக்கங்கள் பற்றிய மூன்று கட்டுரைகள் மே-2021 இதழில் இடம்பெற்றுள்ளன. திக்கெட்டும் சென்று தூய கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்க்கவேண்டும் என்றும், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ்மொழியில் பெயர்த்தெழுத வேண்டும் என்றும் மகாகவி பாரதி கண்ட தீர்க்க தரிசன கனவு இன்று பெருமளவு மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றது. இதில் காலச்சுவடு ஆற்றிவரும் தொடர்பணி, வாசகர்களின் விரிந்த படைப்புலகப் பார்வைக்கு ஆரோக்கியமான வழிகாட்டல் செய்து வருகிறது.
அஹ்மத் ஹம்தி தன்பின்னாரின் ‘The Time Regulation Institute” போன்ற புகழ்பெற்ற நாவல்களைத் தேடி இனம் கண்டு, தகுதியான மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்புச் செய்வது காலத்திற்கேற்ற செம்மையான பணியாகும். அதிலும் இன்றைய தமிழ் வாசகர்களுக்குத் தகுந்தாற்போல் நேர்த்தியான மொழிபெயர்ப்பின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுவது சாலச்சிறந்தது ஆகும். அத்துடன் மொழிபெயர்ப்பாளரின் சூழ்நிலைக்கேற்ற சுதந்திரமும் கொடுத்து எத்திராஜ் அகிலன் போன்றோரைப் பயன்படுத்தித் தமது மேம்பட்ட இதழியல் பணிகளைக் காலச்சுவடு தொடர்ந்து தன்வயப்படுத்தி வருகிறது.
‘எழுத்துக்களின் வேலை, அதிகாரத்திற்கும் அந்தஸ்திற்கும் எப்போதும் அச்சுறுத்தலாக இருப்பது’ - என்ற எட்வர்ட் ஸெயித் சிந்தனைகளைக் கொண்டு வந்திருக்கும் சுகிர்தராஜாவின் கட்டுரை நமது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள Orientalism தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்ற குறையை ஓரளவு போக்குமளவிற்கு, நூலின் மைய ஓட்டத்தை வாசகர்களின் துல்லியமான புரிதலுக்கு எடுத்துரைத்துள்ளார் கட்டுரை ஆசிரியர்.
சி. பாலையா
புதுக்கோட்டை
தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள் தெளிவாக அமைந்துள்ளன. தொங்கு சட்டமன்றத்தைத் தவிர்த்தது மட்டுமின்றி பாமகவின் நாணயமற்ற குதிரைப் பேரத்துக்கும் இடம் தரவில்லை. புதிய ஆட்சியில் மதுவிலக்கை வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ் தம் சொந்தச் சாதிக்கு 10.5% இடஒதுக்கீட்டுக்காக எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கத் தெரிந்தவருக்கு மதுவிலக்கு நினைவுக்கு வராமற்போனது ஏனோ? அரசியல் துறவறம் அவருக்கு நன்று.
தம்மை அனைத்தும் அறிந்த அரசியல்வாதி என்று கருதிய பிரேமலதா திமுக கூட்டணியைப் புறக்கணித்தது மாபெரும் தவறாகும். ஆர்.கே. நகர் தொகுதி வெற்றியால் மிதமிஞ்சிய நம்பிக்கையுடன் வலம்வந்த தினகரன் யதார்த்தத்தை உணர முற்பட வேண்டும். அதிமுகவைக் கைப்பற்ற எண்ணும் நினைப்பைத் துடைத்தெறிவதே முக்கியம். வாக்குகளைப் பிரிப்பதற்கே அவருடைய கட்சி பயன்பட்டது. மக்கள் நீதி மய்யம் அதன் தலைவரைப் போன்று தானும் குழம்பி மக்களையும் குழப்பவே செய்தது. தனித்து நிற்பதால் பயனில்லை என்பதைப் புரிந்துகொள்வதோடு ‘நீட்’க்குப் பதில் ‘சீட்’ என்னும் தெளிவற்ற அறிவிப்புகளைக் கைவிட வேண்டும்.
தமிழ்த் தேசியம் அரசியல்வாதிகளில் பலர் தங்கள் இயக்கம் அல்லது கட்சியைத் தெளிவான சிந்தனை களுடன் நடத்தித் தேர்தலில் நிற்காமல் குறைந்தபட்சக் கருத்து ஒற்றுமையுள்ள கட்சிக்குத் தேர்தல் ஆதரவளிக்கின்றனர். நாம் தமிழர் சீமான் புதுமையாக இருக்க வேண்டுமென 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்களில் பாதிப்பேர் பெண்கள் என்பது வரவேற்கப்படக்கூடியது. எடுத்த எடுப்பிலேயே ஆட்சியைப் பிடிக்க முடியும் என அவர் எண்ணியதைத் தவறென்றால் ஒப்புக்கொள்ள மறுப்பவரே சீமான்.
மோடி. அமித் ஷா. நட்டா, யோகி ஆதித்யநாத், தேஜஸ்வி சூர்யா, சி.டி. ரவி எனப் பெரும்படையே வந்து பரப்புரை செய்தும், அதிமுக உழைப்பால் நான்கு இடங்களைப் பெற்ற பாஜக தன் வேட்பாளர்களின் விளம்பரங்களில் மோடி படத்தையோ, பெயரையோ போட முடியாத நிலைகுறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். எல். முருகனும் பரிவாரங்களும் வேல் தூக்கி நடத்திய யாத்திரைக் கூத்தோடு மோடியும் “வெற்றி வேல், வீர வேல்” என முழங்கியது நகைச்சுவையே.
ஆண்டாண்டு காலமாய் நாட்டார் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றோடு காலங்காலமாய் மறுக்கப்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டிலும் ஈடுபட்டு வரும் மக்களுக்குத் தாங்கள் இந்து என்ற உணர்வே தோன்றாதபோது வடநாட்டு இந்துத்துவாவுக்கு இங்கு ஏது இடம்? வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும் நாகூர் தர்காவுக்கும் இந்துக்கள் செல்வது அன்றாட நிகழ்வே.
ஓபிஎஸ். ஈபிஎஸ் முரண்பாடு தொடர்ந்து வருகிறது. ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவிடம் சரணடைந்த நிலையை மாற்றி இருவரும் ஒன்றுபட்டால் கண்ணியமாகக் கட்சியை நடத்த முடியும். நீதிமன்றங்களின் பொறுப்பற்ற தன்மைக்குப் பிறகும் பொறுமை காத்த மு. அப்பாவு சட்டப்பேரவைத் தலைவராவது மிகப் பொருத்தமே.
பாஜக சில்லுண்டிகளின் எரிச்சலூட்டும், சினமூட்டும் நடவடிக்கைகளை மு.க. ஸ்டாவின் நிதானமாகக் கையாள வேண்டும். எந்த நிலையிலும் கூட்டணிக் கட்சிகள் கைகொடுத்து உதவும் என்ற நம்பிக்கையுடன் ஆட்சி நடத்துவது சிறப்பாகும்.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு 626 132