வரலாற்றில் பெயர் நிலைக்க…
தலையங்கம்
வரலாற்றில் பெயர் நிலைக்க…
தேர்தல் முடிவுகள் வந்துவிட்டிருந்தன; பதவியேற்பு இன்னமும் நடந்திருக்கவில்லை. அப்போது ஒரு செய்தி தொலைக் காட்சிகளிலும் அதைவிட அதிகமாகச் சமூக வலைதளங்களிலும் கொரோனா இரண்டாம் அலையைவிட வேகமாகப் பரவியது.
சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகையையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும் உள்ளூர் திமுகவினர் சிலர் அடித்து நொறுக்கினார்கள் என்னும் செய்தி அது. எந்தப் புதிய அரசுக்குமே இதுபோன்ற செய்தி நல்லதல்ல என்றாலும் திமுகவுக்கு அது மேலும் மோசமான செய்தி. ஏனென்றால், “ஆரம்பிச்சிட்டாங்கய்யா” என்பதுபோன்ற அடைமொழிகளுடன் சமூக வலைதளங்களில் பரவியது அந்தச் செய்தி.
கிட்டத்தட்ட இரண்டுமணிநேரத்திற்குள் இன்னொரு செய்தி அதே அளவுக்கு வேகமாகப் பரவியது. உணவகத்தைத் தாக்கியவர்கள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். உணவகத்தின் பெயர்ப்பலகையும் ஜெயலலிதாவின் படமும் மீண்டும் அங்கே அமைக்கப்பட்டன. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சென்னை மேயருமான மா. சுப்பிரமணியம் நேரில் சென்று இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தார்.
திமுக ஆட்சி தொடங்குவதற்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தில் பல செய்திகள் இருக்கின்றன. கட்சிக்காரர்கள் தவறுசெய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் நிகழ்ந்த தவற்றை முடிந்தவரை சரிசெய்வோம் என்னும் செய்தியையும் திமுக உரக்க அறிவித்தது. அலங்காரமான மொழியால் வன்முறையை நியாயப்படுத்தும் முயற்சி எதிலும் கட்சித் தலைவர்கள் யாரும் ஈடுபடவில்லை; வன்முறையைக் கள்ள மவுனத்துடன் கடந்துபோகவும் இல்லை.
பதவியேற்ற பிறகு நடந்த ஒரு நிகழ்வும் இதேபோன்ற செய்தியை அறிவித்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், மனநலப் பாதிப்புள்ள மகனுக்காக மருந்துவாங்கச்சென்ற தந்தையிடம் காவல்துறை மோசமாக நடந்துகொண்டது. மனம் வெதும்பி வீடுதிரும்பிய அந்தத் தந்தை ட்விட்டரில் தன் பிரச்சினையை எழுதி அந்தப் பதிவில் முதல்வரை இணைத்தார். முதலமைச்சர் அலுவலகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
நல்லாட்சி தர வேண்டும் என்னும் முனைப்பு அமைச்சரவைத் தேர்விலிருந்து ஆட்சியின் முதல் கட்ட நடவடிக்கைகள்வரை தெளிவாகவே வெளிப்பட்டது.
குறிப்பாக சுகாதாரத்துறை, நிதித்துறை அமைச்சர் தேர்வுகள். இன்றைய இருபெரும் சவால்கள் கொரோனா பரவலும் நிதி நெருக்கடியும். எனவே சுகாதாரம், நிதி ஆகிய துறைகளுக்கான தேர்வுகளைப் பலரும் உன்னிப்பாக எதிர்நோக்கியிருந்தார்கள். இரண்டிலும் உட்கட்சி அரசியலுக்கு இடம்கொடுக்காமல் செயல்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் பேராசிரியர் நாகநாதனின் மகனும் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான மருத்துவர் எழிலன்தான் மருத்துவத்துறை அமைச்சர் என்னும் பேச்சு வலுவாக எழுப்பப்பட்டது. ஆனால் செயல் வீரர் எனப் பெயரெடுத்த மா. சுப்பிரமணியனை அந்தப் பதவிக்கு அமர்த்தினார் ஸ்டாலின்.
ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருக்கும் பொருளாதாரம் திமுக அறிவித்திருக்கும் இலவசச் சலுகைகளால் மேலும் தடுமாறக்கூடிய சூழலில் நிதித்துறையைச் சமாளிப்பது பெரும் சவாலானது. இந்தப் பொறுப்பைத் துறைசார்ந்த செம்மையான கல்வியும் செழுமையான அனுபவமும் கொண்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்குக் கொடுத்திருப்பது பரவலான வரவேற்பைப் பெற்றது.
வலுவான துறைகளைப் பழந்தலைவர்களுக்கு முழுமையாக ஒதுக்கவில்லை. துரைமுருகனுக்குப் பொதுப்பணித்துறையை முழுமையாகக் கொடுக்கவில்லை. அதன் ஒரு பகுதியான நீர்ப்பாசனத்தோடு கனிமங்கள் துறையுடன் சுரங்கங்கள் துறையையும் ஒதுக்கியுள்ளார். திருச்சி மண்டலத்தைத் திமுகவின் கோட்டையாக மாற்றிய கே.என். நேருவிற்கு அவர் எதிர்பார்த்த துறை என்று சொல்லப்படும் போக்குவரத்துத்துறையை ஒதுக்கவில்லை. நகர்ப்புற வளர்ச்சித் துறையின் ஒரு பகுதியை மட்டும் ஒதுக்கியிருக்கிறார். மாவட்டத்தில் அவருக்குப் போட்டியாக உருவெடுத்துவரும் அன்பில் மகேஷுக்குப் பள்ளிக் கல்வித் துறை.
அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை, வீட்டு வசதித் துறை, வருவாய்த் துறை என வளமான துறைகளை ஒதுக்கியிருக்கிறது கட்சித் தலைமை. இந்த ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்’ திமுகவின் முதல் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படுபவர்கள். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றாலும் அவருக்கு வேண்டியவர்களுக்குக் கிடைத்துள்ளது. முதல் எடுத்துக்காட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். நிதியமைச்சர் துறைசார் வல்லுநர் என்பதோடு உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதும் அவருக்குச் சாதகமாக அமைந்தது.
அமைச்சரவையில் பல தரப்பினரையும் திருப்திப்படுத்தும் போக்கு இருப்பது இயல்பானதுதான். ஆனால் ஆதி திராவிடர், தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர் எனப் பல தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருந்தாலும் முக்கியத் துறைகள் அவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. பெண்களுக்கும் வலுவான துறை எதுவும் ஒதுக்கவில்லை. ‘பெண் ஏன் அடிமையானாள்’ வெளிவந்து தொண்ணூறு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் இக்காலகட்டத்தில் இந்நிலை விரைவில் மாற்றமடைய வேண்டும். அதே நேரம் வெற்றிபெற்ற மூன்று முஸ்லிம்களில் இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பது இன்றைய சூழலில் முக்கியமான சமிக்ஞை.
அமைச்சரவைத் தேர்வில் ஆளுகைத் திறன், அரசியல் கணக்கு இரண்டுக்கும் இடம் இருந்தது. ஆட்சியிலோ மக்கள் சார்பிலான சுறுசுறுப்பான நிர்வாகம் என்னும் நோக்கம் முனைப்பாக வெளிப்படுகிறது.
புதிய அமைச்சரவை பதவி ஏற்றது மே ஆறாம் தேதிதான் என்றாலும் மே மூன்று அன்றே கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ - சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தன் வீட்டில் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். பொதுமுடக்கம் சில மாறுதல்களுடன் மீண்டும் அறிவிக்கப்பட்டது. அதன் நடைமுறையில் எழுந்த சிக்கல்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. மக்கள் மனங்களில் எழும் ஐயங்களுக்கு உடனடியாகப் பொதுவெளியில் விளக்கம் கிடைத்தது. ஊரடங்கின்போது வாகனங்கள் சாலையில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தி வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் சுற்றிவந்தது. அது ஆதாரமற்ற வதந்தி என்று காவல் துறைத் தலைவர் திரிபாதி உடனடியாக விளக்கமளித்தார். பொதுமக்களிடம் கடுமை காட்ட வேண்டாம் என்று காவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் கொரோனா நிவாரண நிதியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்னும் முடிவை ஆட்சிக்கு வந்ததும் எடுத்தார் ஸ்டாலின். மகளிருக்குப் பேருந்துக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது உள்பட முதல்வர் பிறப்பித்த முதல் ஐந்து உத்தரவுகளுமே மக்கள்நலம்சார்ந்த உத்தரவுகள்தாம் என்பது இந்த அரசின் அணுகுமுறையை வெளிச்சம்போட்டுக் காட்டியது. பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாக அமைந்துவிடக்கூடிய இந்த நடவடிக்கைகளால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளித்துப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொறுப்பு பிடிஆருக்கு இருக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதையொட்டி நடந்த போராட்டம், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றை யாரும் மறந்திருக்க முடியாது. தூத்துக்குடி போன்ற போராட்டங்களை எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆதரிப்பது வேறு; ஆளுங்கட்சிகளின் தர்க்கம் எப்போதுமே மாறுபட்டது. ஆனால் ஸ்டாலின் போராடியவர்களின் மீதான வழக்குகளை ரத்துசெய்தார். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைகளை வழங்கினார்.
மேலும் சில நடவடிக்கைகளும் நம்பிக்கை தருவதாக உள்ளன.
கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை வழங்க அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்திருக்கிறார்.ஊரடங்கு முடியும்வரை 24மணிநேரமும் அரசு மருத்துவமனைகளில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கிவைத்தார். கொரோனா தடுப்பூசிப் பற்றாக்குறையைப் போக்க உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியைத் தமிழக அரசு கோரியிருக்கிறது. கொரோனா தொடர்பான அவசரக் கோரிக்கைகளைப் போர்க்கால வேகத்தில் கவனிப்பதற்காக ‘வார் ரூம்’ என்னும் மையத்தை அரசு உருவாக்கியிருக்கிறது.
அதிகாரிகளுக்கான பொறுப்பைத் தருவதில் ஸ்டாலினின் நேர்கொண்ட பார்வை மேலும் தெளிவாகத் தெரிந்தது. செயல்திறமும் நேர்மையாளர்கள் என்னும் பெயரும்கொண்ட வெ. இறையன்பு, த. உதயச்சந்திரன், உமாநாத், எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோருக்கு முக்கியமான பொறுப்புகளைத் தந்தது இந்த ஆட்சியின் நிர்வாகப் பார்வையை வெளிப்படுத்தியது.
அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசிப்பது, தன்னைச் சந்திக்க வருபவர்கள் பொன்னாடைக்குப் பதில் புத்தகத்தைப் பரிசளிக்கலாம் என்று அறிவித்தது என ஸ்டாலினின் தனி முத்திரைகள் துலங்குகின்றன.
புதிய கல்விக் கொள்கையை அதிகாரிகள் மட்டத்தில் விவாதிப்பதற்கான கூட்டம் ஒன்றை மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஏற்பாடு செய்தார். அமைச்சர்கள்மட்டத்தில் இதை விவாதிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு (வழக்கம்போல) பதில் சொல்லவில்லை. இந்நிலையில் அந்தக் கூட்டத்தையே புறக்கணித்ததன் மூலம் இந்திய ஒன்றியம் என்பது நிறுவனமும் அல்ல, மாநில அரசுகள் அதன் கிளை அலுவலகங்களும் அல்ல என்னும் செய்தியைத் திமுக உரக்க அறிவித்திருக்கிறது.
பன்னெடுங்காலமாகக் காத்திருந்து பெற்றுள்ள பதவியின் முக்கியத்துவத்தையும் அது தரும் பொறுப்பின் சுமையையும் உணர்ந்தவராகவே ஸ்டாலினின் தொடக்கக் கட்டச் செயல்பாடுகள் தெரிகின்றன. தமிழகம் மட்டுமின்றி மொத்த இந்தியாவும் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது தமிழகத்திலும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்திருப்பது முக்கியமானது. ஒற்றைக் கட்சி அரசியலை உருவாக்கும் முனைப்பு, எதிர்க்கட்சிகளை இல்லாமல் ஆக்கும் தீவிரம், சகல தளங்களிலும் பன்முகத்தன்மையை மறுதலித்தல், ஜனநாயகக் கட்டமைப்புக்குள் சர்வாதிகார சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்புதல் ஆகிய நடவடிக்கைகள் நாடளவில் முனைப்புப் பெற்றுவரும் சூழல் இது. இந்தச் சமயத்தில் மைய அரசில் உள்ள கட்சிக்கு எதிராக இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் எழும் ஒவ்வொரு குரலும் எழுச்சிபெறும் ஒவ்வோர் இயக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒற்றைப் பரிமாண இந்தியா என்னும் விபரீதத்திற்கு எதிரான இயக்கங்கள் இவை. இந்த இயக்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு திமுக போன்ற வரலாற்றுப் பின்னணிகொண்ட கட்சிக்கும் அதன் தலைமைக்கும் உண்டு.
சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணை முதல்வர் போன்ற பதவிகளின்போது ஸ்டாலினிடம் வெளிப்பட்ட நிர்வாக அணுகுமுறை பலராலும் பாராட்டப்பட்டாலும் அவருடைய தலைமைப் பண்பு தனித்துத் தெரிந்ததில்லை. அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் கட்சிக்கு வெற்றி தேடித்தந்த அவருடைய உழைப்பும் வியூகத் திறனும் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளன. கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வரக்கூடிய வேகத்தடைகளை மீறி நல்லாட்சிப் பயணத்திலும் பன்முகத்தன்மையை முன்னிறுத்தும் அரசியலிலும் அவர் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தால், முத்துவேல் கருணாநிதியின் மகன் என்பதாக மட்டுமின்றித் தன்னளவிலேயே வரலாற்றில் அவர் பெயர் நிலைக்கும்.