கவிதைகள்
கவிதைகள்
ஜீவன் பென்னி
எலும்புகளே காலத்தை உயிர்ப்பிக்கின்றன.
முதல் தோட்டா குறி தவறுகிறது,
உள்நாட்டு அகதியொருவன் தன் இரைப்பைக்காகச்
சேமித்துவைத்திருந்த ரொட்டித் துண்டுகளைக் கைவிடுகிறான்.
முதல் தோட்டா குறி தவறுகிறது.
எல்லையில் ஊடுருவி வந்திருப்பவன் தனது பயணமூட்டையிலிருந்து
தன் குழந்தையின் சிறுவயது நிழற்படத்தை எடுத்து முத்தமிடுகிறான்.
முதல் தோட்டா குறி தவறுகிறது
அதிகாரத்திற்கு எதிரான முதல் கல்லை வீசியவன்
தனது சிறு இதயத்தின் ஒலியை முழுவதுமாகக் கேட்கிறான்.
1
நிலக்கரியைத் தோண்டிக்கொண்டிருக்கும்போதுதான்
பழைய மனிதனின் மண்டை ஓடொன்று காணக்கிடைத்தது.
பூமியைத் தோண்ட முயன்ற அதிகாரத்தைக் கேள்விகேட்ட
அவனது மூளையிருந்த யிடத்தில் இப்போது சிறிய
ஓட்டையொன்று இருக்கிறது.
2
போர்கள் நடந்து முடிந்த நிலத்தில்,
மண்புழு ஒன்று எல்லைக்கோட்டைக் கடந்துகொண்டிருக்கிறது.
உயிருள்ளவனுக்கும் புதைக்கப்பட்டிருப்பவனுக்கும் இடையில்
வளர்ந்துவரும் செடியொன்று தன் இலைகளை
முள்வேலிகள் தாண்டி உதிர்க்கிறது.
நீங்கள் எந்தத் தேசத்தின் மண்புழு?
நீங்கள் எந்தப் பிரதேசத்தின் உதிர்ந்த இலை?
நீங்கள் எந்த நிலத்தின் புதைக்கப்பட்ட எலும்புகள்?
3
வானிலிருந்து ஒளிர்ந்தபடியே விழுந்திடும் குண்டுகளுக்காகவே
எங்கள் கண்கள் காத்திருக்கின்றன.
பெரும் ஒளிகளினூடே இறந்துபோவது
அவ்வளவு ஒன்றும் கொடூரமானது இல்லை.
மரணங்களுக்குப் பிறகும்,
எங்களது உடல்களின் மீது ஒளிர்ந்தபடியே விழுந்திடும்
குண்டுகளையே
உயிரற்ற கண்கள் வெறித்துக்கொண்டிருக்கின்றன.
அதன் ஒளிகள் அற்புதமான மரணத்தையே
இந்நிலத்தில் நிகழ்த்திக் காண்பிக்கின்றன.
அவற்றையே எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கும்படியாக.
4
கருகிய செடிகளிடம்
ஒரு பிரார்த்தனையின் வரியைத் திரும்பத் திரும்ப
ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
கருகிய உடல்களிடம்
ஒரு இழந்த நம்பிக்கையின் வலிகளைக்
கைமாற்றிச் சிறிது பாரம் தாங்குகிறான்.
கருகிய குடில்களிடம்
ஒரு அதிகாரத்தின் துண்டான தலையை
பரிசென நீட்டிப் பாடத் துவங்குகிறான்.
5
புதைப்பதற்கெனத் தோண்டப்படும் குழிகளிலெல்லாம்
மனித எலும்புகளே கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
அதிகாரம் மனிதனைப் புதைக்கத் துவங்கிய காலத்தை
அவ்வெலும்புகளின் கார்பன் கணக்குகள் சொல்ல முயல்கின்றன.
ஒரு நாகரிகம் தூய்மை அடைந்துகொண்டிருப்பதாக
நம்பிக்கொண்டிருந்த தருணத்திற்கு!
மிகச் சமீபமாக நம்மை அழைத்துச் செல்கிற தது.
அந்நதியின் ஓரத்தில் புதைமேடுகளில் அடையாளத்திற்கென
வைக்கப்பட்டிருந்த கற்கள்
நம் வருகையை அதிசயமாகப் பார்க்கின்றன.
6
நதிகளுக்கருகில் கிடைத்திருந்த மனித மாதிரிகள், .
மலைகளிலிருந்து சமவெளிக்குத் துரத்தப்பட்ட
பழங்குடிகளின் பாதத் தடங்களோடு ஒத்துப்போகின்றன.
அதன் காய்ந்த நரம்புகளில் படர்ந்திருக்கும்
இடம்பெயர்ந்த வலிகளின் ரத்தக்கறைகளைக்
கொத்திக்கொண்டிருக்கும் பறவைகள்.
நிலக்கரியும் இரும்பும் மரக்கட்டைகளுமாக ஏற்றி விரையும்
வாகனங்களுக்கு ஒருபோதும் பயப்படுவதில்லை.
7
பாறைகளில் வரையப்பட்டிருக்கும் மொழியில்
கூர்மையான கல்லொன்று மிகவும் களைத்துப் போயிருக்கிறது.
எப்போதும் அதற்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த சிறிய முயலொன்று
ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறது.
நாகரிகம் பழகிடாத மனிதனோ எல்லாவற்றின் கூர்மையையும்
அளந்துகொண்டிருக்கிறான்.
வரலாற்றில் ஒரு அடுக்கைக் கடந்துவந்துவிட்ட புது மனிதனோ
கண்ணாடிப் பேழைகளுக்குள்ளிருக்கும் இவற்றைப் பார்க்கும்
பார்வையாளனாகி நிற்கிறான்.
8
அதிகாரத்தின் குதிரைகள்
இரயில் பெட்டிகளை இழுத்துக் கொண்டு ஓடிய இருப்புப்பாதை
மணல் மூடிக்கிடக்கிறது.
முழு நிலத்தையும் அப்பெட்டிகளுக்குள் அடைத்துக் கடத்திச் சென்ற
அந்தச் சக்கரங்கள் பலமுறை உருக்கப்பட்டு ஏதேதோ ஆயுதங்களாகி விட்டன
தீப்பந்தமேந்தி சமிக்ஞைகளைக் காண்பித்துக்கொண்டிருந்தவர்கள்
எங்கோ இடம் பெயர்ந்து வாழப் பழகிக்கொண்டனர்.
குதிரைகளின் கால்களோ
ஏதோ ஒரு நிலத்தில் எதையோ இழுத்தபடி ஓடிக்கொண்டிருக்கின்றன..
9
தூரப்பயணங்களில் வந்து சேர்ந்த ஒரு நிலத்தில்
பாலையில் வளர்ந்திடும் முட்செடி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.
எல்லாரும் உயிர் துறந்து விட்ட அந்நிலத்தில்
அதை அதிசயமெனச் சொல்வதற்கும் பேசுவதற்கும் யாருமில்லை.
கருகி விழுந்த முள்ளொன்று
என்றோ மணல் மூடிய ஒரு உடலைக் குத்திக்கொண்டிருக்கிறது.
அதன் துன்பம் வலியற்றது.
அதன் வாழ்வு துடிப்பற்றது.
அது ஏற்படுத்திடும் அச்சம் நெருடலானது.
10
அவர்களைப் புதைப்பதற்கெனக் கிடைத்திருக்கும் இந்நிழல்கள்
தனித்துவமானவை.
வாழ்வின் மீதிகளை நிழல்கள் பேசுபொருளாக்குகின்றன.
காலத்தின் ஞாபகங்களை நிழல்கள் தியானிக்கின்றன.
எலும்புகளின் துயரங்களை நிழல்கள் பத்திரப்படுத்துகின்றன.
மேலும் ஒர நாள்
அவர்களைத் தோண்டி எடுப்பதற்கான சந்தோசங்களை
எல்லார் முன்பாகவும் அடுக்கிக் காண்பிக்கின்றன.
மின்னஞ்சல்: jeevanbenniepoems@gmail.com