கவிதை
கவிதை
பொன்முகலி
என்ன செய்வதென அறியாது
ஏதேதோ செய்கிறேன்.
என்ன சொல்வதெனத் தெரியாது
ஏதேதோ சொல்கிறேன்
தலைகால் புரியாத மகிழ்ச்சியில்
தவிக்கிறேன் தத்தளிக்கிறேன்
எதிர் காற்றில் அணைந்தணைந்து எரிகிற தீபம் போல்
படபடக்கிறேன்
தடதடக்கிறேன்.
மிக மிக மகிழ்ச்சியான பாடல்களை
இப்போது கேட்கிறேன்.
உன் ஊருக்கும் என் ஊருக்கும் இடையே அவை
ஒரு பாலத்தை உருவாக்குகிறது.
காற்றென அதில் ஏறி வந்து
உன் சன்னல்களை அசைக்கிறேன்.
நெளிந்து உள் நுழைந்து
நீ எழுதி அடுக்கிய காகிதங்களைக் கலைக்கிறேன்.
படித்துக் கவிழ்த்த புத்தகங்களைப் புரட்டுகிறேன்
அறை நடுவில் இடப்பட்ட கட்டிலில்
சன்னமான குளிர்நிலையில்
வெள்ளையில், மஞ்சள் பூக்கள் உதிர்ந்துகிடக்கும் போர்வையைப் போர்த்தி
நீ உறங்குகிறாய்
போர்வைக்குள் நுழைந்து
நரைமுடிகளோடிய உன் நெஞ்சில் என் தலை சாய்க்கிறேன்.
பழகிய நறுமணம் நாசியை நெருட
நீ மயங்கிப் புன்னகைக்கிறாய்.
நான் விரல்களைக் கடிக்கும் செல்ல நாய்க்குட்டி போல
வலிக்காது மெதுவாக மெதுவாக
உன் இதழ்களைக் கவ்வுகிறேன்.
அனுப்புகிற புகைப்படங்களை
கண்களில் நிரப்பிக்கொள்கிறேன்
பதிந்தனுப்புகிற ஒலியலைகளைச்
செவிகளில் அடை காக்கிறேன்.
நிமிடத்திற்கு நூறு முத்தங்களை வீசுகிறேன்
ஆயிரம் செல்லப் பெயர்களை உதிர்க்கிறேன்.
ஊடிக் கூடுகிறேன்
கூடி ஊடுகிறேன்
என்னை இனி உன்னால் கூடக் காப்பாற்ற முடியாது என்பதை
நெஞ்சில் குளிர் பரவ உணர்கிறேன்.
மின்னஞ்சல்: deepunithila@gmail.com