பிச்சிப்பூ மணமும் சாம்பிராணி வாசனையும்
அஞ்சலி: தோப்பில் முஹம்மது மீரான் (1944 - 2019)
பிச்சிப்பூ மணமும் சாம்பிராணி வாசனையும்
சிவராஜ் பாரதி
‘அஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா,’ நாற்காலியில் கண்மூடி அமர்ந்திருந்த வாப்பாவுக்கு என் வருகையைத் தெரிவித்தேன். புத்துணர்வோடு வரவேற்றார். அந்நேரம் அவர் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டார். ‘பிள்ளேய்! கடுப்பம் கூட்டி ரெண்டுச் சாயா!’ என்று உற்சாகமானார் வாப்பா. என் முகம் அத்தனை உற்சாகமாய் இல்லாததைக் கண்டு விவரம் கேட்டார். ‘தோப்பில் மவுத்தாயிட்டாரு’ என்றேன். ‘படச்சோனே!’ என்று அதிர்ந்தார். ‘இன்னாலில்லாஹி...’ என்று முணுமுணுத்தார்.
பிறகு எதுவும் பேசாமல் நினைவுகளுக்குள் மூழ்கினார். சைனபா தாத்தா சாயா கொண்டு வந்தார். வாப்பாவைத் தட்டியெழுப்ப நகர்ந்தபோது தாத்தா தடுத்து, ‘நான் பாத்துக்கறேன்’ என்று தலையசைத்தார். வாப்பாவுக்குப் பின்னிருந்த மேசையை இழுத்து, அதன்மீது சாயாவை வைத்துவிட்டு உள்ளே சென்றார் தாத்தா. சாயாவின் ஆவி வாப்பாவின் நாசியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நான் சாயாவைக் குடித்துவிட்டுத் தாத்தாவை அழைத்து டம்ளரைக் கொடுத்து, கிளம்புவதாகச் சொன்னேன். வாப்பா ஏதும் பேசக்கூடிய நிலையில் இல்லையென்பதால் சலாம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். ‘சீனிவாசன் வீட்லதான் இருப்பான் போய்ப் பாரு’ என்றார் வாப்பா. ஒரு நொடி திரும்பிப் பார்த்தேன், ‘வரீங்களா?’ என்று கேட்டேன்.
‘அந்த கதைய உனக்கு நீயே சொல்லிக்கோ’ என்றார் வாப்பா. புன்னகைத்தபடி கிளம்பினேன். எனக்கு நானே கதை சொல்லிக் கொள்கிறேன். கேட்பதும் கேட்காதிருப்பதும் உங்கள் விருப்பம்.
‘அனந்தசயனம் காலனி’யில்தான் முதன்முதலாகத் தோப்பிலைச் சந்தித்தேன். பேராசிரியர் சீனிவாசனின் வீட்டைத் தேடி அலைந்துகொண்டிருந்தவரைப் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. நகரங்கள்மீது பயமும் வெறுப்பும் கொண்ட அந்தக் கிராமத்து மனிதர் ஏதோ ஒரு வகையில் என்னை ஈர்த்துவிட்டார். அதற்கு முன்பு சூடாமணிதான் இப்படி என்னை ஈர்த்திருந்தார். இருவருக்கும் ஒற்றுமைகள் இருக்கிறதென்பது இப்போது யோசித்துப் பார்த்தால் புரிகிறது. சீனிவாசனைப் பார்க்காமலே ஊர்திரும்பிவிட்ட தோப்பிலை மீண்டும் எப்போது சந்திப்போம் என்று ஏங்கிக்கொண்டிருந்தேன்.
பேராசிரியர் சீனிவாசன் இன்றும் பேராசிரியராகவே இருந்தார். இவர்களுக்கெல்லாம் வயதாவதில்லைபோல. கொடுத்துவைத்தவர்கள். தோப்பில் இறந்துவிட்ட தகவலைச் சொன்னேன். நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். ‘என் மீது எந்த தப்புமில்லை. இந்த காலனியில் இரண்டு மூன்று சீனிவாசன்கள் இருக்கிறோம்’ என்றார். ‘புரிகிறது’ என்றேன். மீண்டும் மௌனம். வேறுசில இடங்களுக்கும் செல்ல வேண்டுமென்று அங்கிருந்து கிளம்பினேன். உங்களுக்கு அல்லாப் பிச்சை மோதீனைத் தெரியுமா! நீண்ட நாளாகத் தேடிக்கொண்டிருந்த தோப்பிலை, அல்லா பிச்சை மோதீன்தான் மீண்டும் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர்தான் நாங்கள் நெருக்கமானோம். அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன். இப்போது நாம் ‘அஞ்சுவண்ணம் தெரு’ வுக்கு போகப் போகிறோம். ஒரு காலத்தில் இந்தத் தெருவுக்குப் பெயரே இல்லையாம். இருந்தது ஒரு தெரு. அதற்கெதற்குப் பெயர் என்று விட்டுவிட்டார்கள்போல. சிவப்புத் தொப்பி அணிந்த மஹ்மூதப்பா கட்டித்தந்த பள்ளிவாசல் கதை தெரியுமா உங்களுக்கு. ஒரே இரவில் கட்டிமுடித்த பள்ளி அது. ஜின்னுங்க கட்டினப் பள்ளி. இதோ குழாயடியில் சண்டைப்போட்டுக் கொண்டிருக்கும் மம்மதும்மாவைக் கேளுங்கள்.
நான் தாருல் சாஹினா திண்ணையில் போய் உட்கார்ந்ததும் தெருவே வந்து ஒப்பாரி வைத்தது. இவர்களுக்கு எப்படி தெரிந்தது என்று ஒரு நொடி குழம்பிப் போனேன். பின் மம்மதும்மாவைப் பார்த்ததும் எல்லாம் புரிந்தது. ஊரில் எது நடந்தாலும் மம்மதும்மாவின் ஜின் அவரிடம் சொல்லிவிடும். அவரறியாத ரகசியம் ஏதுமுண்டா? பொங்கிவரும் கண்ணீரை மூக்கால் வழித்துப் போட்டு, தைக்காப் பள்ளி ஹவுளில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார் மம்மதும்மா. “தோப்பில் குணமாகனும்னு தாயும்மா தலைமாட்டுல வச்சு நேச்சை சொன்னா. படச்சோன் கைவிட்டுட்டான். ஆனா இவ தண்ணி ஊத்திட்டிருக்கா. எல்லாம் விதி” என்றார் மொய்தீன் பிச்சை மோதீன். ‘இந்த மண்ணுக்க கத தெரிஞ்ச ஒரே ஆள் தோப்பிலாக்கும். இனி யாரிருக்கா மோனே’ என்று வருத்தப்பட்டார் வெட்டுவத்தி மம்மேலி. உண்மைதான். வேம்படி பள்ளி பற்றிய கதையெல்லாம் எந்த வரலாற்றறிஞருக்குத் தெரியும். தாஹா நபி தோன்றிய அற்புதத்தை அடுத்த தலைமுறைக்கு இனி யார் சொல்வது? இதையெல்லாம் யோசித்தபோதுதான் புத்தன் ஆறும் பொழிக்கடவும் நினைவுக்கு வந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினேன். மம்மதும்மா எதிரில் வந்தார். ‘தாயும்மாக்க அனுமதியில்லாம ஆரும் இங்கொ வரவும் முடியாது, போவவும் முடியாது’ என்றார். தாயும்மாவின் தலைமாட்டில் விளக்குக்குத் திரியும் எண்ணெயும் வாங்கி, விளக்கேற்றிவிட்டுத் திரும்பினேன். அஞ்சுவண்ணம் தெருவில் தைக்காப் பள்ளியைவிட உயரமான வீடுகள் நிறைய இருந்தன. “எங்கப் போற” என்று கேட்டார் மம்மதும்மா. “மேகரைக்கு” என்றேன். “எல்லாரும் அங்கிருந்துதான் இங்கொ வருவாங்க. நீயென்ன மாத்தி பண்ற” என்றார். “நான் இப்படித்தான போயிருக்கேன்” என்றேன். நெஞ்சின் மீது கைவைத்து “யா அல்லா” என்றபடி குடத்துடன் சென்றார் மம்மதும்மா.
நான் மேகரைக்குச் சென்றேன். ‘கூனன் தோப்’பையொட்டி இருந்த மம்மேலியின் குடிசைக்குள் பார்த்தேன், யாருமில்லை. பொழிக்கடவில் புல்பாஸ் அலைந்துகொண்டிருந்தான். அவனிடம் தோப்பில் இறந்த தகவலைத் துறைக்குள் சொல்லிவிடுமாறு கூறினேன். செய்தியைக் கேட்டதும் அவன் மயங்கி விழுந்தான். அவனைப் பெரும்பாடுபட்டுத் தெளியவைத்தேன். மணலில் அமர்ந்து கதறி அழுதான். சமாதானம் சொன்னால் கேட்கக்கூடிய நிலையிலில்லை அவன். மம்மக்கண்ணுவை நினைத்து அவன் அழுதது நினைவுக்கு வந்தது. “எங்களோட நெலமலாம் யாருக்கும் தெரியாது. எங்க கஷ்டநஷ்டத்தையெல்லாம் அவரு சொல்லாம இருந்துருந்தா எங்கள யாரு மதிச்சிருப்பா? நாங்க முன்னேறன்னும்னுதான் அவரு ஆசப்பட்டாரு. அவரும் இல்லாட்டி இந்த கடலோட கதையெல்லாம் யாரு சொல்லியிருப்பா!” என்று அழுதுகொண்டே கேட்டான். மண் தனக்குள் அடுக்கிவைத்திருந்த ரகசியங்களெல்லாம் தோப்பிலுக்கு யார் சொல்லியிருப்பார்கள். ஒருவேளை நீல உடையணிந்த ஜூவாலை முகம்கொண்ட குமரிப்பெண் அவருடைய கனவில் வந்து சொல்லியிருப்பாரோ! தங்ஙள் மை தடவிப் பார்த்தது போல், இவரும் மை தடவிப் பார்த்துத் தெரிந்துகொண்டாரா! தமிழிலக்கியம் பெரிதாகப் படித்ததில்லை. தமிழ்மொழிகூட அவருக்கு எழுதவராது. பிறகு எப்படி இது சாத்தியமானதென்று யோசித்துக்கொண்டேயிருந்தேன். “எவ்ளோ சொல்லி என்ன, சிறந்த எழுத்தாளர்கள்ல அவரச் சேக்கலயே, இஸ்லாமிய எழுத்தாளர்கள்ல சிறந்த எழுத்தாளர்ன்னு தான இன்னமும் சொல்றானுங்க” என்னையுமறியாமல் சொன்னேன்.
புல்பாஸ் வேகமாக எழுந்து சென்றான். அவன் எங்கு சென்றான் என்பதைக் கவனிக்காமல், கடலையே பார்த்தபடியிருந்தேன். மீண்டும் அஞ்சுவண்ணம் தெருவுக்குப் போக வேண்டும் என்று தோன்றியது. ஆலிப் புலவர் ‘மெஹராஜ் மாலை’யை அரங்கேற்றிய வேம்படியைப் பார்க்க வேண்டும். தாஹா நபி அங்கே தோன்றப் போகிறார் என்று நூஹூ நபி காலத்தில் அவரோடு கப்பலில் வந்த காக்கை சுமந்து வந்து போட்ட வேப்பங்கொட்டையில் முளைத்த மரத்தினடியில்தான் இருக்கிறது வேம்படி பள்ளி. எத்தனை வரலாறுகள், எத்தனை கதைகள், எத்தனை புனைவுகள்! வரலாறு என்பதே புனைவுதானோ? காலம் காலமாக வாய்வழியாக காதுகளில் எழுதிய வரலாற்றின் பெயர்தான் கதையோ! அந்த வரலாற்றைத்தான் தோப்பில் சொல்லியிருக்கிறாரோ? அவரே உருவாக்கிய தென்பத்தை கிராமத்திற்குப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. உடனே எழுந்தேன்.
முட்டைத்தாளி படர்ந்து கிடக்கும், புன்னை இலைகள் மிதக்கும் புன்னை மூட்டு ஆற்றைக் கடந்து வேகமாக நடந்தேன். புத்தம் வீடாயிருந்து சவ்தா மன்சிலாகிப் போன வீட்டைப் பார்க்கும் ஆவலில் போனேன். பலவிதக் கனவுகளோடு போன எனக்கு அதிர்ச்சிதான். தென்பத்தை கிராமமே அசைவற்றுக் கிடந்தது. மரங்கள், இலைகள், மனிதர்கள், விலங்குகள், வீடுகள், பொருட்கள் என எவரும் எதுவும் அசையவில்லை. பொருட்காட்சியில் பார்ப்பது போல் இருந்தது தென்பத்தை கிராமம். அகமது கண்ணு ‘சாய்வு நாற்காலி’யில் அசைவற்றுக் கிடந்தார். உள்ளே மரியம் பீவி சமையற்கட்டிலிருந்து திரைச்சீலையை விலக்கிப் பார்த்தபடி இருந்தார். குளத்தில், பள்ளியில், வீதியில் எங்கும் எதுவும் அசையவில்லை. தோப்பில் தன் அசைவை நிறுத்திக்கொண்டதும் அவர் கற்பனையில் உருவான கிராமமும் தன் அசைவை நிறுத்திக்கொண்டது போலும். இனி அங்கிருப்பது உதவாது எனக் கிளம்பினேன். நேரமாகிவிட்டது, இனி வேறெங்கேயும் சொல்லமுடியாது. தேங்காய்ப்பட்டினத்துக்கும் பழைய செமித்தேரியின் பின்பக்கமுள்ள அரயர் பகுதிகளுக்கும் செல்லலாம் என்றிருந்தேன். இனி முடியாது. நேரே போய் வாப்பாவைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குப் போக வேண்டியதுதான் என்றெண்ணி வாப்பா வீட்டுக்குச் சென்றேன்.
வாசலில் என்னைப் பார்த்ததும் ‘இன்னிக்கு இது போதும்’ என்றார். மீண்டும் கடுப்பம் கூடின சாயா. “தோப்பிலோட கதைகள்ல எது வரலாறு எது புனைவுன்னு தெரிய மாட்டுது. எது உண்மை, எது பொய்ன்னு குழப்பமா இருக்கு” என்று சாயா குடித்துக்கொண்டே சொன்னேன். “உண்மைக்கும் பொய்க்கும் பல முகங்கள் இருக்கு” என்றார் வாப்பா. மக்ரிப்புக்கு வந்தேன், நேரம் இஷா ஆகிவிட்டது. வாப்பாவோடு பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாது. கிளம்பும்போது திடீரென்று பிச்சப்பூ மணமும் சாம்பிராணி வாசனையும் வீசியது. வாப்பா வானத்தைப் பார்த்தார். நானும் பார்த்தேன். இந்தப் புனித ரமலான் மாதத்தில் அதோ வெள்ளைக் குதிரை மீதேறி ஏழாவது வானம் தாண்யிருக்கும் இறைவனைக் காணப் போய்க்கொண்டிருப்பது நீங்கள்தானே தோப்பில்!
மின்னஞ்சல்: sivaraj53.sb@gmail.com