பாரீஸ் அனுபவம்
உரை
பாரீஸ் அனுபவம்
கண்ணன்
ஐந்து அல்லது ஆறாவது முறையாக பாரீசுக்கு வருகிறேன். இரண்டு நகரங்கள் மீதான எனது ஆர்வம் வற்றாது தொடர்கிறது. பாரீசும் இஸ்தான்புல்லும். முதல்முறையாக 2002இல் பெர்லினிலிருந்து ரயிலில் பாரீஸ் வந்தேன். அன்று எனக்கு பாரீசில் யாரையும் நேரில் தெரியாது, லக்ஷ்மியைத் தவிர. லக்ஷ்மி 2001ஆம் ஆண்டு புதுவையில் காலச்சுவடும் தலித் இதழும் இணைந்து நடத்திய மௌனி கருத்தரங்கிற்கு அம்பையுடன் வந்தபோது சந்தித்தேன். சிலரை எழுத்துகள் வழி தெரியும். அவர்களில் கலைச்செல்வனைப் பொதுநண்பர்கள் வழியும் தெரியும்.
இந்தியாவில் ரயிலடிக்குச் சந்திக்க வருபவர்கள் நடைமேடைக்கு வந்து உத்தேசமாக ரயில் பெட்டிக்கு அருகில் நிற்பார்கள். நவம்பர் மாதம் பாரீஸ் குளிரில் ரயில் நிலையத்தில் இறங்கி நின்றேன். யாரும் வந்திருக்கவில்லை. பல நிமிடங்கள் காத்திருந்தேன். நடைமேடை காலியாகிவிட்டது. மெதுவாகக் கிலி பரவத் தொடங்கியது. சில செய்திகள் நினைவுக்கு வந்தன. என்னிடம் டாலர் குறைவாக இருந்தது, யூரோ இல்லை. எவருடைய முகவரியும் இல்லை. தொலைபேசி எண்ணும் இல்லை. மெதுவாக நடந்து வெளியே வந்தேன். முன் வாசலில் ஒருவர் நின்றார். தமிழர். கண்கள் தேடிக்கொண்டிருந்தன. கலைச்செல்வனாகத்தான் இருக்க வேண்டும். புகைப்படம் எதுவும் பார்த்ததில்லை. சந்தித்துக் கொண்டோம். சந்தித்தவுடன் நம்மை லேசாக உணரவைக்கும் இயல்புடையவர் கலைச்செல்வன்.
ரயில் நிலையத்திலிருந்து அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்தேன். கபேக்கு போய் ஒரு காப்பி குடிப்போம் என்றார். போனோம். கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து கிளம்பும் உத்தேசம் அவருக்கு இல்லை என்பதை அறிந்துகொண்டேன். கழிப்பறை சென்று கொஞ்சம் துலங்கிவிட்டுத் திரும்பினேன். நண்பர்கள் அங்கேயே சந்திக்க வந்தார்கள். முதலில் வாசுதேவன் வந்தார் என்று நினைக்கிறேன், சு.ரா.வின் படுதீவிரமான வாசகர் என்று கலைச்செல்வன் சிரித்தபடியே அறிமுகப்படுத்தினார். சில மணிநேரங்கள் இருந்தோம். அங்கே தொடங்கிய பேச்சு மூன்று நாட்களுக்கு ஓயவே இல்லை. நிறைய நடந்தோம். கொஞ்சம் சுற்றிப் பார்த்தோம். ஸென் ஆற்றில் பயணித்தோம். சில சந்திப்புகளும் நடந்தன. வானொலி நிலையத்தில் ஒரு நேர்காணலும். எனக்குப் புலம்பெயர் உலகை அறிய மிக முக்கியமான வாய்ப்பாக அந்த மூன்று நாட்களும் அமைந்தன.
வானொலி நேர்காணல் முடிந்த இரவு என்னை இரவு உணவுக்காக லா சாப்பல் கூட்டிவந்தார் கலைச்செல்வன். மிகவும் பிந்திவிட்டது. நாங்கள் வந்தபோது உணவு விடுதியை அடைத்துக்கொண்டிருந்தார்கள். கலைச்செல்வன் தமிழகத்திலிருந்து ஒரு நண்பர் வந்திருக்கிறார் என்று சொல்வது கேட்டது. இரவு 11 மணிக்கு மீண்டும் கடையைத் திறந்து சமைத்து உணவு பரிமாறினார்கள். மிகவும் நெகிழ்ச்சியான நினைவாக இது மனத்தில் தங்கியிருக்கிறது.
நான் கிளம்பவிருந்த முதல் இரவு ‘நான் பிழைவிட்டுவிட்டேன்’ என்றார் கலைச்செல்வன். பெரிய சந்திப்பு ஒன்றை நடத்தும் எண்ணம் இருந்தது. பல திசைகளிலிருந்தும் பாயும் கேள்விகளை எப்படி எதிர்கொள்வீர்களோ என்று தயங்கிவிட்டேன். ஆனால் இப்போது அப்படி நடத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார். எனக்குச் சிறு சந்திப்புகளே விருப்பமானவை என்பதைப் பகிர்ந்துகொண்டதும் சமாதானமானார்.
இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கலைச்செல்வன் காலமானார். உண்மையில் அவர் வாழ்விலும் மரணத்திலும் எனக்கு எந்தவொரு இடமுமில்லை. மிகக்குறுகிய காலத்தில் உருவான ஆழமான நட்பு என்பதைத் தாண்டி எதுவும் இருக்கவில்லை. இருப்பினும் நான் குற்ற உணர்வுக்கு ஆளானது எனக்கே விசித்திரமாக இருந்தது. நான் விரும்பும் பாரீசுக்கு இனி எப்படிப் போவது என்ற எண்ணமும் ஏற்பட்டது. 2005இல் கலைச்செல்வனுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பில் ‘இனி பாரீஸ் செல்வது எனக்குச் சாத்தியமில்லை’ என்று எழுதியிருக்கிறேன். இப்படி எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு எழுதுவது என் இயல்பே அல்ல.
2007இல் மீண்டும் ஜெர்மனி வந்தேன். ஆனால் பாரீசுக்கு வரவில்லை. அந்தப் பயணத்தில் என்னை பிராங்பர்ட்டில் சந்தித்த நண்பர் வாசுதேவன் அடுத்த ஆண்டு பாரீசுக்கு அழைத்தார்; தயக்கத்துடன் வந்து சென்றேன். அந்த உணர்வு காலப்போக்கில் குறைந்து வருகிறது எனினும் முற்றாக மறையவில்லை. ‘கலைச்செல்வனின் பிரதிகள்’ நூலின் பிரசுரம் மனஅமைதியை வழங்கும் என்று எண்ணுகிறேன்.
புலம்பெயர் சமூகம் பற்றிய என் முதல் அறிமுகம் 1993ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி டொரண்டோவுக்கும் லண்டனுக்கும் மேற்கொண்ட பயணத்தின்வழி ஏற்பட்டது. முக்கிய காரணம் அவர் ஊர் திரும்புகையில் கையோடு சுமார் 30 - 40 புலம்பெயர் இதழ்களையும் கொண்டுவந்தார். அவற்றை ஒன்றுவிடாமல் படித்தேன். ஒன்றுக்கு இரண்டுமுறை. ஒரு புதிய தமிழுலகம் எனக்குத் திறந்தது என்றால் மிகையில்லை. 2002ஆம் ஆண்டு கனடாவிலும் லண்டனிலும் பெர்லினிலும் பாரீசிலும் ஏற்பட்ட சந்திப்புகள், உரையாடல்கள் அப்புதிய உலகம் பற்றிய அறிதலை சிறிது ஆழப்படுத்தின. குறிப்பாக பாரீசில் சில பொதுச் சந்திப்புகள் நடந்தபடியால் நண்பர் வட்டத்தைத் தாண்டியும் பலரைச் சந்திக்க முடிந்தது. பாரீசில் இந்த உரையாடல்களை நிதானப்படுத்தியவர் கலைச்செல்வன். மேலும் ஆழமாக அயல் வாழ்வின் இருப்புநிலையைப் புரிந்துகொள்ளவும் வழிகோலினார்.
காலச்சுவடை மீண்டும் 1994இல் தொடங்கிய காலத்திலேயே புலம்பெயர் தமிழ் உலகின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டோம். அக்காலம் இணையமும் கைப்பேசியும் எட்டாத காலம். எனவே ஐரோப்பாவிலிருந்து வெளிவந்த இதழ்கள் பற்றிய அறிமுகப் பகுதியை ‘ஏழு கடல் தாண்டி’ என்ற சிறப்புப் பகுதியில் 1995 ஆண்டிலிருந்து காலச்சுவடு இதழில் பிரசுரித்தோம். இதன் தொடர்ச்சியாகப் புதிய எழுத்துகளும் காலச்சுவடுக்குக் கிடைத்தன. பின்னர் நூல்களும் வெளிவந்தன. தமிழகம் தாண்டிய தமிழுலகத்தின் மீதான காலச்சுவடின் கவனம், உரையாடல், கரிசனம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே புலம்பெயர் தமிழருடனான உறவையும் பார்க்கிறேன். காலச்சுவடு இதுவரை 900 நூல்களை வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 150 நூல்கள் தமிழகத்திற்கு அப்பால் வாழ்பவர்கள் எழுதியவை. இந்த உறவுகள் காலப்போக்கில் வலுவடைந்தும் விரிந்தும் வருகின்றன.
அயலுடன் தமிழக பதிப்பாளர்கள் கொள்ளும் உறவை அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று தமிழின் புதிய பரிமாணங்களைப் பதிப்பிக்கும் ஆர்வம். ‘வாசகர் வட்டம்’ 1968ஆம் ஆண்டு வெளியிட்ட ‘அக்கரை இலக்கியம்’ தொடங்கி இதற்கு ஒரு வலுவான மரபு இன்றுவரை உண்டு. இரண்டாவது, சுரண்டல். எனது ஒவ்வோர் அயல் பயணத்திலும் இந்த ஏமாறும் கதைகள் எனக்குத் திகட்டக் கிடைக்கும். இது பற்றிய ஒரு செய்தியை மட்டும் பகிரவிரும்புகிறேன். அயல் தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் இலங்கையராக இருந்தாலும் தமிழகப் புலம்பெயர் சமூகத்தின் எழுத்தாளர்கள் சிலரும் உண்டு. அயல்வாழ் தமிழகத் தமிழர்கள், சிங்கப்பூர், மலேசியா தமிழர்கள் ஆகியோரையும் தமிழக எழுத்தாளர்களையும் சுரண்டுவதில் எமது பதிப்பாளர்கள் வேறுபாடு பார்ப்பதில்லை. எல்லோரையும் ஒருபோலவே சுரண்டுகிறவர்கள் எனும் சமத்துவத்தின் நற்செய்தியை இங்கே பதிவுசெய்ய விழைகிறேன்.
புகலிட எழுத்தாளர்களுக்கான வாசக ஆதரவு தமிழகத்தில் மட்டாகவே இருந்து வருகிறது. வாழும் எழுத்தாளர்களில் சேரன், வ.ஐ.செ. ஜெயபாலன், ஷோபாசக்தி, அ. முத்துலிங்கம் ஆகியோர் நீங்கலாக தமிழகத்தில் கவனம்பெறும் படைப்பாளிகள் அதிகம் இல்லை. இது குறைவு என்று நீங்கள் நினைத்தால் இந்தப் பட்டியலில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அயல் தமிழக எழுத்தாளர்கள் எவரும் இன்றுவரை இல்லையென்பதையும் நினைத்துக்கொள்ள வேண்டும். இதில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது; எனினும் மெதுமெதுவாக இந்த வட்டம் விரிவடையும் என்று நம்புகிறேன். ஏமாற்றும் கலை தழைக்க வேண்டுமென்றால் ஏமாறும் கலையும் தழைப்பது அவசியம். எனவே கவனம் எடுக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் எழுத்தாளர்களுக்கும் உண்டு. அரசியல் சார்புகள், உடன் புகழ் பெறும் கனவுகள், நட்சத்திர மயக்கங்கள் எனச் சில எழுத்தாளர்களின் பொதுவான பலவீனங்களைப் புலம்பெயர் படைப்பாளர்களிடமும் காண்கிறேன். எந்த ஒரு தொழில்சார் உரையாடலையும் ‘பணம் பிரச்சனையில்லை’ என்ற தொடருடன் தொடங்க வேண்டாம் என்ற பாலபாடத்தை நான் ஏன் உங்களுக்குச் சொல்ல வேண்டியுள்ளது என்று அதிசயிக்கிறேன். நமது பலவீனங்களைப் பிறர் சுரண்டுவர் என்பது இனம், மொழி, தேசம் கடந்து ஓர் அடிப்படையான மனித குணம். இதைத் தமிழகத்தவரின் தனிச் சிறப்பாகக் காண தருக்கம் எதுவும் இல்லை. இருப்பினும் ஒரு பதிப்பாளராக அவமானம் கொள்வதைத் தவிர்க்க முடிவதில்லை.
தமிழ் வாசிப்போருக்குப் புலம்பெயர் எழுத்துகளை உள்வாங்கிக் கொள்ளுதல் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்நாள்வரை மொழிபெயர்ப்புகள் வழி மட்டுமே அறியக் கூடியதாக இருந்த அனுபவங்களைப் புலம்பெயர் படைப்பாளிகளால் தமிழிலேயே படைக்க முடியும். புலம்பெயர் சமூகம் தாம் வாழும் நாடுகளின் பிற சமூகங்களுடன் இன்னும் ஆழமாக உறவு கொள்ளும்போது அவர்கள் வெளிப்பாடுகள் இன்னும் விரிவடையும். புலம்பெயர் நாடுகளில் பிறந்த தலைமுறையினருக்கு இது இயல்பாகவே கைகூடுகிறது. தமது நாட்டு மொழிகளில் படைக்கத் தொடங்கியிருக்கும் தமிழ் இளைய தலைமுறையினர் புலம்பெயர் சமூகம் என்ற வரையறைகளை உடைத்துக்கொண்டு படைப்புகளைப் பிரசுரித்துக் கவனம் பெறுவதை மகிழ்ச்சியோடு கவனித்து வருகிறேன்.
புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் சில அரிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இன்னொரு மொழி புழங்கும் சூழலில் வாழ்கின்றனர். இன்னொரு மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். பாரதியும் புதுமைப்பித்தனும் எட்டிப் பாய்ந்து படித்துத் தமிழுக்குக் கொணர்ந்த அயல் உலக நடப்புகள், படைப்புகள், சிந்தனைகள் இவர்கள் காலடியில் கிடக்கின்றன. தமிழக ஆளுமைகள் தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பல இந்திய மொழிகளிலிருந்தும், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழுக்கும் இன்னும் பல உலக மொழிப் படைப்புகளை ஆங்கிலம் வழியாகவும் கொண்டுவந்துள்ள நூல்களை எண்ணிப்பார்க்கிறேன்.
இன்றைய தமிழ் மொழிபெயர்ப்புக் களஞ்சியத்தில் 95% தமிழக ஆளுமைகளால் கொணரப்பட்டவை. தமிழகத்திற்கு அப்பால் வாழும் தமிழர்கள், இலங்கைத் தமிழர், சிங்கப்பூர் - மலேசியத் தமிழர்கள், புலம் பெயர்ந்து வாழும் இலங்கை, இந்தியத் தமிழர் ஆகியோரின் மொத்த மொழிபெயர்ப்புப் பங்களிப்பு குறைவு. சிங்களம், சீனம், மலேய், ஐரோப்பிய மொழிகள் இவற்றிலிருந்து கொணர்ந்த மொழிபெயர்ப்புகள் இத்தனை அரிதாக இருப்பதற்கோ, இல்லாமலே இருப்பதற்கோ என்ன காரணம்? நாம் விவாதிக்க வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. அவசியம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலையும்கூட.
(10 மார்ச், 2019 அன்று பாரிஸ், ரோயோ டி சரோனில் நிகழ்ந்த ‘கலைச்செல்வனின் பிரதிகள்’ வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய உரை.)
மின்னஞ்சல்: kannan31@gmail.com