கவிதைகள்
கவிதைகள்
இசை
ஓவியம்: K.K. ஹெப்பார்
நல்லதொரு பெயர் சொல்லுங்கள்
உணவை நீட்டி ஏந்தும் ஓடு திருவோடு
எல்லாவற்றையும் ஏந்தத் துடிக்கும்
ஓடொன்றுண்டு என்னிடத்தே
என்னதான் பெயரிடுவேன் அதற்கு?
திருநாள்
உச்சியில் குந்தி
எல்லாவற்றையும் பார்க்கிறது நிலவு
அதன் மனம்
தேய்ந்து தேய்ந்து இல்லாமல் ஆகும் திருநாளை
பௌர்ணமி என்பர் உலகத்தார்.
செல்ஃபி
உள்ளத்தைத் திறந்துவைத்தால் கெட்ட நாற்றம் எழுகிறது
உலகம் மூக்கைப் பிடித்துக்கொள்ளும்படி
பிறகு அது முடைநாற்றம் கொள்கிறது
நட்சத்திரங்கள் என் கேட்டில் மங்கிவிடுகின்றன.
ஆற்றுமீன்கள் எவ்வளவு ஆழத்தில் ஒளியமுடியுமோ
அவ்வளவு ஆழத்தில் ஒளிந்துகொள்கின்றன.
பூனை தன் “ம்யாவை” நிறுத்திக்கொள்கிறது.
எங்கெங்கு காணினும் நான்
அவசரவசரமாக உள்ளத்தை அள்ளி ஒரு கோணிப்பையுள்
திணித்துக் கட்டினேன்.
நீண்டதொரு பெருமூச்சிற்குப் பிறகு
ஒரு செல்ஃபி எடுத்தால் தேவலாம் என்றிருந்தது.
அதில் நான் சிரிக்கிறேன் பளீர் பற்களோடு.
இனிமை ததும்ப
நலமே சூழ.
மின்னஞ்சல்: isaikarukkal@gmail.com