கடிதங்கள்
கடிதங்கள்
ரொமிலா தாப்பரின் நேர்காணல் மிக அருமை. வரலாற்றை மக்களிடம் எப்படி சரியாக கொண்டு சேர்ப்பது என்ற கேள்வியும் அதற்கான பதிலும் மிகவும் சிந்திக்க வைத்தது. வரலாறு மோசமாகக் கற்பிக்கப்படுகிறது என்ற ரொமிலா தாப்பரின் கூற்று கசப்பான உண்மை.
மாணவர்களைச் சுயமாகச் சிந்திக்கவும் விவாதிக்கவும் தூண்டும் வகையில் கற்பித்தல் பணி நடைபெற வேண்டுமெனில் ஆசிரியர்கள் சிந்திப்பவர்களாகவும் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களில் பத்து சதவீதத்தினர் கூட வாசிப்புப் பழக்கம் உடையவர்கள் இல்லை.
அவ்வாறு உடையவர்களில் பத்து சதவீதத்தினர் கூட தீவிர இலக்கியம் வாசிப்பவர்கள் இல்லை. ரொமிலா தாப்பர் போன்ற ஒரு இலக்கிய ஆளுமையின் செறிவான நேர்காணல் எத்தனை ஆசிரியர்களைக் காலச்சுவடு இதழ் மூலமாக சென்று சேரப் போகிறது? பொற்காலம் என்ற பதத்தை ரொமிலா தாப்பர் வலுவாகக் கட்டுடைக்கிறார். கடந்த காலத்தைப் பற்றிய நல்ல தெளிவை அளிப்பதுதான் வரலாறு என்ற பதில் வெகுசிறப்பு.
காலச்சுவடு இதழில் கல்வி சார்ந்த கட்டுரைகள் தொடர்ச்சியாக இடம்பெறுதல் வேண்டும். பள்ளிகள் அனைத்திலும் நூலகங்கள் உண்டு. அவற்றில் காலச்சுவடு இதழ் தொடர்ந்து கிடைக்க வழி செய்திடல் வேண்டும்.
ஜி. குப்புசாமியின் ‘அழகுகளில் உறைந்தவர்’ கட்டுரை இயக்குனர் மகேந்திரனைப் பற்றிய நேர்மையான மதிப்பீடு. ‘ஜானி’ படத்தில் ஜானியிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு பாடகி அர்ச்சனா கேட்கும் அந்தக் காட்சி அத்தனை பேரின் மனங்களிலும் நிறைந்து இருக்கும் அழியாத கோலம். ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’ ஆகிய படங்களுக்காக மகேந்திரன் தமிழ்த்திரை ரசிகர்களால் என்றும் நினைவு கூரப்படுவார்.
சரவணன்
மதுராந்தகம்
தலையங்கம் வாசித்தேன். ஈழ விடுதலைப் போரில் இலங்கை அரசு பெற்ற வெற்றி இலங்கையின் ராணுவத்தால்மட்டுமே கிடைத்தல்ல என்று மகிந்த ராஜபக்சேவே கூறியுள்ளார். இந்திய அரசுதான் அப்போரை நடத்தியது எனத் தெளிவாக அவர் சொன்னதைத் தாண்டி வேறு சில நாடுகளும் புலிகளுக்கு எதிராகப் போரில் இறங்கியதை மறக்கக்கூடாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகாரப் பகிர்வில் தாராளத் தன்மையுடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு இலங்கை அரசு இணக்கம் காட்டியிருந்தால் சிறுபான்மைத் தமிழர்களின் சந்தேகப் பார்வை மாறியிருக்கும். இன்று இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்தே தன் ஆட்சியை நடத்த வேண்டிய நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கியுள்ளது. ஈஸ்டர் தினக் குண்டு வெடிப்பு முஸ்லிம்களை நிம்மதியின்றி வாழச் செய்துள்ளது. அரசின் கையறு நிலையைப் பயன்படுத்தி வருங்காலங்களில் புத்தமதக் கோயில்களிலும் மடங்களிலும் குண்டுவெடிப்பு நிகழ வாய்ப்புள்ளது. ராணுவத்தை முழுமையாக நம்பி ஆட்சி நடத்துவோரின் எதிர்காலம் உறுதியற்றதாகும்.
“மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?” கட்டுரை திமுக தன் பாதையைச் சரியான திசையில் கொண்டுசெல்லவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. திமுக அப்படிப்பட்ட கட்சியல்ல என்பதை ஸ்டாலின் தம் நினைவிற் கொண்டு எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை வழங்க வேண்டும்.
“ஓடி வருகிறான் உதய சூரியன்” என்ற ஒரே பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்கள் மனத்தில் உதயசூரியனை நிலைநிறுத்தச் செய்ததையும் கம்பீரமான அந்தக் குரலுக்குரியவர் நாகூர் அனீபா என்பதையும் எண்ணிப் பார்த்தாவது முஸ்லீம்களை அரவணைத்துச் செல்ல வேண்டியது திமுகவின் தலையாய கடமையென்பதை ஸ்டாலினுக்கு வேறொருவர் கூறத் தேவையில்லை,
தெ. சுந்தர மகாலிங்கம்
வத்திராயிருப்பு
2019 மே இதழின் கட்டுரையான “தேர்தல் அறிக்கைகளின் அரசியல்” இந்திய அரசியல் நோக்கர்களின் ஆரோக்கியமான பார்வையை நன்கு விரிவடையச் செய்துள்ளது. அறிக்கைகளில் பரவலாக இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளோடு, அவற்றின் சித்தாந்த உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தையும் கட்டுரை கூர்மைப்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் ஆரவாரமான தேர்தல் அறிக்கைகளை மக்கள் ஒரு சடங்காகத்ததான் பார்க்கின்றனர் என்பதுதான் எதார்த்தம் என்றாலும், இப்போதைய இரு பெரும் அரசியல் குழுக்களின் அடிப்படைச் சித்தாந்தங்களைச் சீர்தூக்கிப் பார்க்க அவை உதவியிருக்கின்றன. நமது அரசமைப்புச் சட்ட மக்களாட்சிப் பொது நீரோட்டத்தில் விஷப்பரீட்சை முயற்சிகளான குடிமக்கள் தேசியப் பதிவேடு, குடியுரிமைத் திருத்த மசோதா, ராமர்கோயில் & சபரிமலை விவகாரங்கள் ஆகியவற்றை ஆளும் பா.ஜ.க.வின் வீறாப்புப் பேச்சு, இன்றுவரை அன்றாடங்காய்ச்சிகளாய்க் காலம் தள்ளிவரும் கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களுக்கு என்ன உத்தரவாதம் தருகின்றது? இவற்றை நமது மைய நீரோட்ட ஊடகங்கள் அலசி ஆய்விற்குட்படுத்தத் தவறுவதை கட்டுரை சுட்டிக்காட்டியிருப்பது மிகச்சரியே. அதே சமயம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுக் கட்சிகளின் அறிக்கைகள் மக்களின் வாழ்வாதார அடிப்படைப் பிரச்சனைகளில் உள்ளார்ந்த கவனங்களைச் செலுத்தியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமான உறுதித்திட்டம் அனைத்து மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ளதா என்பது நடைமுறையில்தான் தெரியவரும்.
பெருமாள்முருகனின் ‘விளிம்புநிலை மக்கள் வரலாறும் உ.வே. சாமிநாதய்யரும்’ கட்டுரை பற்றி பதிப்பாசிரியர் என்ற மாபெரும் ஆளுமைத்திறன் கொண்ட தமிழ் தாத்தாவின் அன்றைய வாழ்வியல் நிகழ்வுகளை புதிய கோணத்தில் அணுகியுள்ளது. அச்சான்றோரது முழுப்பரிமாணத்தை மேலும் விசாலப்படுத்திப் புரிந்துகொள்ள கட்டுரை பெரிதும் உதவியுள்ளது. அப்பெரியாரது தலையாய தமிழ் ஆய்வு ஒருபோதும் அவரை அன்றைய மேல்தட்டு ஆச்சாரக் கட்டமைப்பிற்குள்ளிருந்து வெளியே கொண்டுவர முயற்சி செய்யவில்லை. அவர் அதை அவசியமாகக் கருதிடவும் இல்லை. பக்தி மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்ட காந்தியடிகள், மகாகவி பாரதி, இராமலிங்க வள்ளலார் போன்றோரது விளிம்புநிலை மக்கள் மேம்பாட்டிற்கான சமூகச் சிந்தனைகள் உ.வே.சா.விற்கும் வந்திருந்தால் அவரது அரிய தமிழ்ப்பணி மேலும் விரிவடைந்து மக்கள் வயப்பட்டிருக்கும். தமது தேடலுக்கும் அயராத தமிழ்ப்பணிக்கும் யாரை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அந்த அளவோடு அவரது பார்வை நிலைநிறுத்தப்பட்டுவிட்டது.
சி. பாலையா
புதுக்கோட்டை
‘வென்றவள்’ சராசரி கதை என சொல்லவியலாத அளவுக்கான தனது திறனை படைப்பாளர் எங்கு வெளிப்படுத்துகிறார் என்பது முக்கியம். கதையினூடே அவரது கற்பனை வளமானது தொன்று தொட்டு நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிற பெண் இருப்பின் மைய இழையாய்த் தவிர்க்கவியலாத உடலின் இயல்பான அவஸ்தையைக் குறியீடாக மாற்றி, அதன் அவஸ்தையை அம்பாளோடு உருவகப்படுத்தி நையாண்டியாய்ச் சொல்லப்பட்டுள்ளதன் வாயிலாகத் தமிழ் இலக்கியப் பரப்பில் நவீனமான சிறுகதையாகியுள்ளது இது. கதையின் மொழியினூடே சொல்லத் தயங்குகிற ஓர் அம்சத்தை (பொருளை) அதனுள் கொண்டு வருவதற்கு அபாரத் துணிச்சல் அவசியம் தேவை என மெய்ப்பித்துள்ளார். வென்றவள் என தலைப்பிட்டுள்ளது ஏன் என்கிற துணைக் கேள்வி ஒன்று எழவே செய்கிறது. பட்டரின் மகள் கிழவியான நிலையில் அந்த மூன்று நாளில் கோவில் பிரகாரத்தில் வருவதனால் வென்றவள் என்பதா-? கல்யாணமாகிக் குழந்தைக்குப் பால் தருகிற காட்சியைக் கண்டவுடன் கல்யாணமாகாத தன் நிலைக்கு கற்பகமும் ஒரு காரணமென்பதால் இயல்பான பழியுணர்விலிருந்து விடுபட்டு, தனது உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தித் தன்னை அம்பாளாகவும் தன்னிடம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பால் அருந்த கடவுளின் நிலையிலிருந்து வென்றவளாகின்றாளா? இப்படி இரண்டு துணைக் கேள்விகளினூடே இக்கதையைப் பதிலாக்கி நம்மையெல்லாம் அசரவைத்துவிட்டார் யுவன் சந்திரசேகர்.
பா. உதயகண்ணன்
பெரம்பூர்
‘மீண்டும் படரும் காரிருள்’தலையங்கத்தில் “ஒரு குறிப்பிட்ட குழுவினரின் தவறான செயல்களுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை எந்த அடிப்படையிலும் பொறுப்பாக்க முற்படுவது நியாயமற்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களோடு ஏனையவர்கள் நெருக்கமாக இருக்க வேண்டும்; இல்லையென்றால் இந்தத் தனிமைப்படுத்தலின் உளவியல் எதிர்காலத்தில் மேலும் பல எதிர்வினைகளையே உண்டாக்கும்” என்னும் வரிகள் மிகமிக முக்கியமானது; அதிக அளவில் விவாதிக்க வேண்டிய தேவையையும் கொண்டது. பெருமாள்முருகனின் ‘விளிம்புநிலை மக்கள் வரலாறும் உ.வே.சாமிநாதையரும்’ கட்டுரையில் உ.வே.சா என்னும் தமிழ்ப் பெரியாரின் உள்ளமானது எளிய மாந்தர்கள்மீது சிறுமையான மதிப்பீடுகளை வைத்திருந்ததை அறியும்வேளை கடுமையான மனவுலைச்சலே ஏற்படுகிறது. கட்டுரையாளரின் உழைப்பு பாராட்டத்தக்கது.
ரொமிலா தாப்பரின் ‘வரலாறு என்றால் என்ன’ நேர்காணல் ‘வரலாற்றை எப்படி பார்க்க வேண்டும் என்னும் தெளிவினைக் கொடுக்கிறது’. அம்மையாரை நேர்கண்ட மருதனுக்கும் இதழுக்கும் நன்றி. மேற்கண்ட மூன்றும் ஒரு செய்தியில் இணைகிறது. ஆம். ‘எளிய மனிதர்களின் மீது நேயத்தோடு இருங்கள்’ என்கிறது.வரவேற்கத்தக்கது.
சூப்பர் டீலக்ஸ் விமர்சனத்தில் சிவராஜ் பாரதியின் கரடி கதை அருமை.
சோமிதரனின் ‘போரும் கூத்தும்’ நினைவில் குறிப்பிடுதலைப்போல ‘அனைத்தும் சடங்காகவே எஞ்சி நிற்பது’ வேதனையான உண்மை. கடிதப்பகுதியில் தொ.பத்தினாதன் எழுப்பியிருக்கும் வினாக்களுக்குக் கட்டுரையாளர் பதிலளிப்பாரா?
பசி புதல்வன்
மின்னஞ்சல் வழி
மே 2019 காலச்சுவடு இதழ் வாசித்தேன். முள்ளிவாய்க்கால் இன அழித்தொழிப்பை நினைவு கூறும் கட்டுரைகள் அதனதனளவில் கவனத்தை ஈர்ப்பவை. அ.முத்துலிங்கம் எழுதிய ‘இங்கே நிறுத்தக் கூடாது’ கதை வெகு உருக்கமாக இருந்தது. ருவாண்டா நாட்டு அகதி மூசாவை முன்னிலைப்படுத்திச் சொல்லப்பட்ட கதை, ஒட்டுமொத்த அகதிகள் ஓரிடத்தில் காலூன்றி வயிற்றுப் பாட்டைச் சமாளிக்க வேண்டிய அவலநிலையை ஓர் உலகுதழுவிய பார்வையில் சொல்லியிருக்கிறார். கதையின் ஊடுசரடாக பாவிவரும் நகைச்சுவைச் சிரிப்புக்குப் பதிலாக அவலச்சுவையையே கூட்டுகிறது. உலகெங்கும் நிகழ்ந்த இனஅழித்தொழிப்புக்கு பிந்திய காலத்தில் புலம்பெயர்ந்து அகதிகளாகத் திரிந்தவர்களின் இன்னலை எடுத்துரைத்து இவ்விதழின் நோக்கத்திற்குச் சிறப்பு சேர்க்கிறது.
மருதன் பேட்டி கண்ட ரொமிலா தாப்பரின் நேர்காணல் வரலாற்றுக் காரணகாரிய நோக்கு குறித்துப் பல திறப்புகளை வழிவகுக்கிறது. ‘விளிம்புநிலை மக்கள் வரலாறும் உ.வே.சாமிநாதய்யரும்’ என்ற பெருமாள் முருகன் கட்டுரை அருமை. யானைக்கும் அடிச் சறுக்கும் என்பதுபோல மரபார்ந்த சனாதன சிந்தனையிலிருந்து விடுபட இயலாத உ.வே.சா வின் இலக்கியப் போக்கை அவரது பல நூல்களிலிருந்து பெருமாள் முருகன் நயத்தக்க நாகரிகத்தோடு பொருத்தமாக எடுத்துரைக்கிறார். இக்கட்டுரைக்காகப் பெருமாள்முருகன் கையாண்ட முறைமையியல் மிக முக்கியம். வாழ்த்துகள்.
ஜனநேசன்
காரைக்குடி
காலச்சுவடு மே இதழில் தொ. பத்தினாதன் “வீரவாள் வசிக்கும் வைர உறையாய்” ஒரு பதிவினைச் செய்துள்ளார். அவரது ‘வீரம்செறிந்த வைர வரிகளுக்கு’ என் எதிர்வினை:
“தற்போதைய காலங்களில் அவரைச் சைவ வெள்ளாளவாதியாகப் பார்ப்பது மிகுந்த ஆச்சரியம் தருகிறது” என்கிறார்.
தன் மகளுக்கு ‘ஸ்டாலினா வீரமங்கை’ என்று பெயர் சூட்டிய போதும், கொலை செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் ஜான் தி. கென்னடி பெயரை முன்னெழுத்துக் கூட மாற்றாது தன் மகனுக்குச் சூட்டிய போதும், அது வெள்ளாளக் குடும்பமே. தந்தையின் சனநாயகப் பக்கங்களைச் சுட்டிக்காட்ட அவ்வாறு குறிப்பிட்டேன்.
சிதம்பரத்தில் உள்ளது போல் காரைத்தீவில் சைவ வெள்ளாளர்கள் எழுப்பிய ‘ஈழத்துச் சிதம்பரம்’ கோயில் இருப்பது ஓர் உண்மை. நயினார் தீவில் நாக பூசணி அம்மன் கோயில் இருப்பது இன்னொரு உண்மை. ஈழத்துச் சிதம்பரம் கோயிலைக் குறிப்பிடாமல் போயிருக்க முடியும்; அதற்கு முன்னிருந்த இராணுவச் சோதனைச் சாவடியைக் குறிப்பிடாமல் கடக்க எப்படிச் சாத்தியம்? நயினார் தீவில் நாக பூசணியம்மன் கோவிலிருந்தாலும், பௌத்த சிங்கள ஆதிக்கம் நயினார் தீவு மேல் கவிந்துள்ளது என்பதற்காக அதனைக் குறிப்பிட வேண்டியதாயிற்று. இந்த மூன்று உண்மைகளைப் பதிவிட்டதனாலேயே, நான் எவ்வாறு சைவ வெள்ளாளவாதியாக ஆகிறேன்?
‘ஈழத்துச் சிதம்பரம்’ கோயிலுக்குச் சென்றபோதும், நான் கோயிலுக்குள் செல்லவில்லை; என்னுடன் வந்தவர்கள் சென்று வணங்கித் திரும்பினர். நான் வெளியில் நின்றிருந்தேன். மிகத் துல்லியமாக நானொரு நாத்திகன்; பள்ளிப்பருவத்தில் பகுத்தறிவுப் பெரியார் எனக்குள் எப்போது நடந்தாரோ, அந்த 1958-லிருந்து நான் நாத்திகன்; சாதியவாதியான சைவ வெள்ளாளன் எப்படி நாத்திகனாக இருக்க முடியும்?
நான் சைவனும் இல்லை, வைணவனும் இல்லை; அவ்வாறாயின் எம்மதமும் சம்மதம் என்று பேசுகிற மத நல்லிணக்கவாதியா என்றால், “இல்லை. இல்லவே இல்லை; எம்மதமும் சம்மதம் இல்லை” என்கிற அணி சார்ந்தவன் என்று பெருமிதம் கொள்கிற, செயல்படுகிற மார்க்சியவாதி. ‘மதம் ஓர் அபின்’ என மதத்தின் இயங்குதலை வரையறுத்த கார்ல் மார்க்ஸ் ஒருகாலமும் மதவாதியாக இருந்தவரில்லை.
அகதி முகாம்களில் நடைமுறையிலிருக்கும் அதிகாரச் சட்டங்களை - ‘க்யூ’பிராஞ்ச் எனச் சொல்லப்படும் உளவுப் பிரிவின் எல்லை தாண்டிய பயங்கரத்தை அறிவேன். கேள்விப்பட்டது மட்டுமல்ல; பார்த்து வந்திருக்கிறேன். எனது எழுத்துக்களில் பதிவிட்டு வந்துள்ளேன். “என்றாவது மண்டபம் அகதிகள் முகாமுக்குள் சென்றிருக்கிறீர்களா?” என்று அற்புதமான கேள்வி கேட்டிருக்கிறார். ‘சமஷ்டியா தனி நாடா’ முதல் இன்றைய ‘இலங்கை அரசியல் யாப்பு’ எனப் பல ஆய்வு நூல்கள் எழுதிய மு.திருநாவுக்கரசு தனது இரு போராளித் தோழர்களுடன் முள்ளிவாய்க்கால் முகாமிலிருந்து தப்பித் தமிழகக் கடலில் தத்தளித்து, மண்டபம் முகாம் வந்தடைந்தது 2009, ஜூலை 13. முதன்முதலாகச் சென்று அவரை மண்டபம் முகாமில் பார்த்தவன் நான். பத்தினாதன் சொல்கிற ‘பத்துக்குப் பத்து வீட்டில்தான்’ மூன்று பேரும் வைக்கப்பட்டிருந்தார்கள். காலையில் சென்றவன் மண்டபம் முகாம் முழுவதும் அவர்களுடன் சென்று பார்த்து மாலை திரும்பினேன்.
அவர்கள் தங்கியிருந்த முகாமில் ஓர் உணவு விடுதியில் மதியம் உணவருந்தினோம். பெயர்: சுந்தரவல்லி; அந்த ஓட்டலில் கூலிவேலை செய்துகொண்டிருந்த ஈழத்தைச் சேர்ந்த ஒரு அகதித் தாய். அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யுங்கள் என்று அறிமுகப்படுத்தினார் மு.திருநாவுக்கரசு. வேறொரு நகரில் வசித்திட மண்டபம் முகாமிலிருந்து மாத இறுதியில் திருநாவுக்கரசு வெளியேறிய பின்னரும் நான்கு முறை, மண்டபம் முகாமுக்குச் சென்று சுந்தரவல்லித் தாயைச் சந்தித்து வந்துள்ளேன்; கட்டிய கணவன் கைவிட்டு வேறொரு பெண்ணுடன் வேலூர் அகதி முகாமில் ‘போக்கிரி’ வாழ்க்கை வாழ்ந்துகொண்டுவரும் நிலையில், ஒரு பெண்ணைக் கைக்குள் வைத்துக்கொண்டு, பதைக்கப் பதைக்க வாழ்ந்துவந்தார் அந்த அபலை. இருஆண்டுகளின் பின் வேறொரு அகதி முகாமில் வாழ்ந்து வரும் ஒரு பையனுக்கும் அவரது மகளுக்கும் திருமணம் நடைபெற பண உதவிசெய்தேன். ஏற்கெனவே தமிழ்நாடு அரசுத்துறையில் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், மண்டபம் முகாமில் ஒவ்வொரு முறையும் விசாரிக்கப்பட்டு அனுமதிப் பெற்றுத்தான் செல்ல முடிந்திருக்கிறது. நமக்குப் பின்னாலேயே வேவு பார்த்துக்கொண்டு வந்ததையும் அவதானித்திருக்கிறேன்.
ஒன்று ஒருவருக்குத் தெரியாது என்பதாலேயே, அது உண்மை இல்லை என்றாகிவிடாது. உண்மைகள் மனிதக் காலடிகளை விட வலிமையானவை; காற்றைவிட வேகமானவை. எல்லாக் காலத்திலும் உயிர்ப்புடன் உலவுகிறவை.
நண்பருக்குத் தெரிந்த ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்; மதுரைக்கும் திருமங்கலத்துக்கும் இடையிலுள்ள ‘ஆஸ்டின்பட்டி’ அகதிகள் முகாமுக்குச் சில ஆண்டுகள் முன் அவர்தான் என்னை அழைத்துச் சென்றார். அவர் வசிக்கிற திருநகர் வீட்டிலிருந்துதான் இருவரும் அங்கு சென்றோம். மாலை கவியும் நேரம்; நுழைவு வாசலில் கண்காணிப்பு இருந்தது; உள்ளே அழைத்துப் போனது- ஒவ்வொரு வீடாகக் காட்டியது - குறிப்பாக அவருடைய அண்ணன் வீட்டிற்குக் கூட்டிப்போனது- இவையனைத்தையும் பத்தினாதன் என்பவர்தான் செய்தார்: பின்னர் எப்படி முகாம்களில் வாழும் மக்கள் நிலை அறிவீர்களா என கேள்வி எழுப்புகிறீர்கள் நண்பரே?
மு.திருநாவுக்கரசு எழுதி ஈராண்டுகள் முன்பு வெளியான ‘இலங்கை அரசியல் யாப்பு’ நூலை, பிரெஞ்சுத் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கிருஷ்ண மூர்த்தியிடம், பிரெஞ்சில் மொழியாக்கம் செய்து தருமாறு அணுகினேன். இதற்கு முன் ஈழத்தமிழர் மீதான இன ஒடுக்குமுறை பற்றி அறிந்திராதவர், மொழியாக்கத்துக்கு ஒவ்வொரு பக்கமாய்ப் பயணித்த போது தன்னையறியாமல் அதனுள் ஈர்க்கப்பட்டார். மொழியாக்கத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்ததற்காக, இருபது ஆயிரம் தொகையை அளித்தபோது, “இந்தப் பணத்தை எனது சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தப் போவதில்லை. முகாமிலுள்ள ஈழ அகதிகளுக்கு உதவ விரும்புகிறேன். ஏற்பாடு செய்யுங்கள்” என என்னிடம் திருப்பி அளித்தார்.
புதுச்சேரி அருகிலுள்ள ஈழ அகதிகள் முகாமில் வாழும் குழந்தைகளுக்கு பள்ளி செல்லத் தேவைப்படும் பொருட்களை வாங்கி அளிப்பதென முடிவு செய்தோம். புதுச்சேரியிலிருந்து எட்டு கி.மீ. தொலைவிலுள்ள முதலியார்குப்பம் அகதிமுகாம் வாழ் நண்பரைப் பார்க்கச் சென்றேன். மொழியாக்கம் செய்த பேராசிரியார் கைகளால் பணம் வழங்க நினைத்ததால், அவரை வீட்டுக்கு வருமாறு சொல்லியிருந்தேன். தொடர்ந்து அடித்த புயல், மழை காரணமாய் வர இயலவில்லை எனக் கைபேசியில் தெரிவித்தார்.
இனியும் தாமதிக்கக்கூடாது என்று அந்தத் தொகையை ‘ஆஸ்டின் பட்டி ’அகதி முகாமுக்கு வழங்கலாம் என்று மார்ச் மாதம் பத்தினாதனைத் தொடர்புகொள்ள முயன்றேன். பல தடவை முயன்றும் தொடர்பில் கிடைக்கவில்லை. அவருக்கு இரு தொடர்பு எண்கள்; சந்தேகம் எழவும், காலச்சுவடு இணை ஆசிரியர் களந்தை பீர் முகம்மதுவைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அலுவலகத்தில் விசாரித்து, “நீங்கள் தொடர்பு கொண்ட எண் சரியானதுதான்” என உறுதிசெய்தார் களந்தை பீர்முகம்மது. அவரிடம் “ஈழ அகதிகளுக்கு உதவுவதற்காகக் கையில் பணத்தை வைத்துக்கொண்டு, சரியான ஆள் கிடைக்காமல் தவிதாயப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றேன். அப்படியா என ஆச்சரியப்பட்டு, அதனையும் பத்தினாதனுக்குத் தெரிவித்திருக்கிறார். பத்தினாதன் என்னுடன் பேசுகிறேன் எனத் தெரிவித்ததாகவும் சொன்னார்.
அதன்பின்னர் நான் இருமுறை தொடர்புகொண்டபோதும், நண்பர் பத்தினாதன் எனது அழைப்பை ஏற்கவில்லை. சூட்சுமம் புரிந்தது.
“எந்தத் தேசியம்? தமிழ்த் தேசியமா அல்லது நீங்கள் நிறுவ முற்படும் வெள்ளாளத் தேசியமா?” எனக் கேள்வி எழுப்புகிறார்: நான் எள்ளளவும் எண்ணிப் பார்த்திராத வெள்ளாளத் தேசியத்தை நிறுவ முற்படுவதாக எழுதுவதைப் பார்த்து, வேதனை கொள்வதா, சிரிப்பதா? அவ்வாறானால் விடுதலைப் புலிகள் படை வெள்ளாள தேசியத்துக்குத்தான் போராடியதா? நான் அறிந்தவரை விடுதலைப் புலிகளோ, பிற போராளிக் குழுக்களோ தமிழீழ தேசியத்துக்குத்தான் போராடினார்களே தவிர, வெள்ளாள தேசியத்துக்குப் போராடியதாக இல்லை.
“முப்பத்தைந்து வருடங்களாக அகதிகள் பற்றிப் பேசாத உங்களின் வார்த்தைகள், இனிமேல் எக்காலத்துக்கும் அவர்களுக்குத் தேவைப்படாது” என இறுதியாய் ஒரு சாபமும் இடுகிறார்; ஈழத்தமிழருக்கும் புலம்பெயர் வாழ் அகதித் தமிழர்களுக்கும் இங்குள்ள அகதித்தமிழருக்கும் எனது எழுத்தில், செயலில் போதாமை இருக்குமாயின், இனிவரும் நாட்களில் அதைக் களைந்திட முயலுவேன்.
தமிழகத்தில் அகதியாய் வாழும் உடன்பிறப்புகளுக்காக முப்பத்தைந்து ஆண்டுகளாய் எழுதியும் பேசியும் தொடருகிற பத்தினாதனுக்கு, ஒரு விசயம் பற்றிய புரிதலில் போதாமையுள்ளது; அது இந்திய சனநாயகம். இந்திய சனநாயகத்துக்கும் இலங்கை ராணுவத்துக்கும் வித்தியாசம் காணமுடியாது என்பது அது. வார்த்தைகள்தான் வேற வேற!
பா. செயப்பிரகாசம்
புதுச்சேரி