தொலைந்து போன தோப்பிலின் புத்தகம்
அஞ்சலி: தோப்பில் முஹம்மது மீரான் (1944 - 2019)
தொலைந்து போன தோப்பிலின் புத்தகம்
நப்பின்னை
ஒரு மிளகாய் வற்றல் வியாபாரி எப்படி எழுத்தாளனாக முடியும் என்ற வினா எனக்குள் தோப்பிலைச் சந்திக்கும்வரை இருந்தது. பகலெல்லாம் கார நெடிகளுடன், இரவில் மறுபடியும் தேங்காய்ப்பட்டினத்தை நோக்கிச் சிறந்த படைப்புகளைப் படைத்த காலம். காலம்காலமாக இருட்டறைக்குள் முகம் மறைத்த பெண்களின் அவலநிலையைத் துணிச்சலாக உலகறியச் செய்தவர். எக்காலத்தினும் வணிக எழுத்துக்குத் துணை போகாதவர். ‘காலண்டர் பாவா’ ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதை. கிராம முகம் சோர்ந்துபோகாமல் இருக்க சிறார்களின் பெருநாள் கனவைத் தகர்க்காமல் ஊர்ப் பெரியவர்களிடம் தனது கண் பார்வை மங்கிவிட்டது என்பார்.
ஒரு பழைய காலண்டராக பாவா மட்டுமல்லாமல் விளிம்புநிலை மக்களும்தான் சுருட்டிப் போடப்படுகிறார்கள். வகுப்புவாதச் சிந்தனையை உணர்த்தும் ‘வேட்டமங்கல யானை’ இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான கதை.
1998ஆம் ஆண்டு ஒரு குளிர்காலக் காலைப் பொழுதில் புதுதில்லி இரயில் நிலையத்தில் அவரை வரவேற்பதற்காகச் சென்றிருந்தேன். அவருடன் அவரின் இளைய மகனும் வந்திருந்தார். இருவரையும் நான் தங்கியிருந்த கரோல்பாக் அறைக்கு அழைத்து வந்தேன். காலைச் சிற்றுண்டியாக ஒரு பொட்டலம் வழங்கினேன். அவர் ஆச்சரியத்துடன், “இதென்ன” என வினவினார். நான், “சார் கரோல்பாக்கிலுள்ள பிரம்மச்சாரிக்கு இதொரு வரப்பிரசாதம். காலையில் தலைமாட்டில் வைத்துச் சென்றுவிடுவார்கள். அதில் இரண்டு தோசை, உப்புமா, இட்லி போன்றவை இருக்கும்” என்று சொன்னேன். பிறகு அவர்களை விடுதியில் கொண்டுபோய்ச் சேர்த்தேன். சாகித்ய அகாதெமியின் பரிசளிப்பு விழா அன்று மாலையில் நடந்தது. மறுநாள் மாலையில் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு விழா எடுத்தார்கள். பிறகு இரண்டு தினங்கள் கழித்து அவரைத் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் வழியனுப்பிவைத்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது, நன்றி தெரிவித்து! இன்னும் நான் அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
பொதுவாக, தோப்பில் சார் யாருக்கும் புத்தகங்கள் இரவல் தருவதில்லை. நான் மட்டும் விதிவிலக்கு. ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் நான் அவரிடமிருந்து புத்தகங்கள் எடுத்துச் செல்வது வழக்கம். சிறிய துண்டுப் பேப்பரில் குறித்துக்கொள்வார். அடுத்த வருடம்வரை அவரது மேஜையில் துண்டு அப்படியே இருக்கும். நான் எடுத்துவந்த ‘பங்கர் வாடி’ என்ற நூலை எங்கேயோ தவற விட்டுவிட்டேன். எப்போதும் அதை ஞாபகப்படுத்துவார். நானும் அதை வாங்குவதற்குக் கடும் முயற்சி செய்தேன், முடியவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் அவரைத் திருவனந்தபுரத்திற்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றோம். நோயின் தீவிரத்தை அவருக்குத் தெரிவிக்கவில்லை. அவரைப் பரிசோதித்த டாக்டரிடம் அவரைப்பற்றி மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எடுத்துக் கூறினேன். பிறகு நாங்கள் செல்லும்போதெல்லாம் டாக்டர், “அச்சாயா நீங்கள் எழுத வேண்டும்” எனக் கூறுவார். சாரும் புன்முறுவலுடன் தலையசைப்பார். காலமும் கையும் ஒத்துழைக்கவில்லை.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஒருநாள் அவரைச் சந்திக்கும்போது என்னிடம், “சார் நாம் அசாம் செல்வோம்” என்றார். ‘எதற்கு’ என்று கேட்டதற்கு, “பிரம்மபுத்திராவைக் காண்போம்” என்றார். அவரது கனவு நிறைவேறவில்லை. நான் ஒருநாள் செல்வேன், தோப்பிலின் வாழ்த்துகளை நதியிடம் தெரிவிக்க...