கடிதங்கள்
கடிதங்கள்
ஏப்ரல் இதழில் இடம்பெற்றிருந்த கொரோனா ‘உற்றதும் உணர்ந்ததும்’ கட்டுரைகள் அனைத்தும் அருமை.தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கும் பலரது பயத்தைப் போக்குவதாகவும், அரசு மருத்துவமனை ஊழியர்களின் தன்னேரிலாத் தொண்டுகளையூம் மாசற்ற பணிகளையும் விண்டுரைக்கும் வண்ணம் அவை வரையப் பெற்றிருந்தன!
இனி ஏதாவது உடல்நலமின்மையெனில் அரசு மருத்துவமனைக்குத்தான் செல்வேன் என்று வண்ணநிலவனும், “நான் போட்டுக்கொண்டேன். இக்கணம்வரை உபாதைகள் ஏதுமின்றி உயிரோடு இருக்கிறேன்,” என்ற உறுதிமொழியை உரக்கச் சொல்லியிருக்கும் இசையும், ‘90 வயதினிலே’ தனது தந்தையின் அரசு மருத்துவமனைப் பரிசோதனை அனுபவத்தைக் கொண்டாடியிருக்கும் ப. கோலப்பனும், ஒன்றோடு நில்லாது, சிரிப்பு வருகிறது, பயமாகவும் இருக்கிறது, மதிப்பு உயர்ந்தது, எனக்காக சலபதிக்காவும் என முறையே போகன்சங்கர், சித்ரா பாலசுப்ரமணியன், ப. சிவகுமார், களந்தை பீர்முகம்மதுவும் எழுதியிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும், அவர்களது தனித்துவமான அனுபவங்களை ஒருசேரத் தந்து ‘தடுப்பூசி’ப் பயத்தைப் போக்குகின்றன.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
“புத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்” கட்டுரையைப் பார்த்ததும் அதிர்ந்தேன். கண்ணாடியைக் கழற்றி, துடைத்து மீண்டும் போட்டுப் படித்தேன். அதேதான் தலைப்பு. நேற்றுதான் ஓய்வும் சலிப்புமே தற்கொலைக்குச் சமமானது என்றொரு நூலில் படித்திருந்தேன். சமூகத்தைச் சீர்த்திருத்த நினைக்கும் பல பதிப்பகங்களும் இவரை விளம்பரதாரராகப் போடலாம்.
‘தடையை மீறிய சாதனை’ புத்தகக் கண்காட்சியைப் பற்றிய கட்டுரை பொதுமுடக்கம் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்ததைக் காட்டுகிறது. கட்டுரையாளர் ஒரு பதிப்பாளர். அருமையாகப் பதிவிட்டுள்ளார். எந்த மின்புத்தகமும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தாது. பதிப்புத்துறை கண்டிப்பாக மென்மேலும் வளரும் என்று நினைக்கிறேன். ‘நாணயங்களை வரலாறு ஆக்கியவர்’ கட்டுரை மிகவும் அருமை. மறைந்த மதிப்பிற்குரிய கிருஷ்ணமூர்த்தி மீதான மதிப்பு மேலோங்கியது. அவர் மறக்க இயலா மாமனிதர்தான், சந்தேகமில்லை. ‘பாரதியும் பார்க்கப்படாதாரும்’ கட்டுரை சிறப்பானது.
ஞா. சிவகாமி
போரூர்
மரு. வெ.ஜீவானந்தம் மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சிக்குள்ளான பல்லாயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். அவருடைய கட்டுரைகள் வெளிவரும் இதழில் (பல ஆண்டுகள் நாளிதழாக இருந்து ஈராண்டுகளாக வார இதழாக வருவது) என் கட்டுரைகளும் வெளியாகும். மாபெரும் சிந்தனை, செயல் இரண்டிலும் ஒன்றிணைந்து நின்ற ஆளுமையை ஒருமுறைகூடச் சந்திக்கும் வாய்ப்பிழந்து நிற்பது எஞ்சியுள்ள நாட்களில் எனக்கேற்பட்ட பெருங்குறையே.
பொன். தனசேகரன் எழுதியுள்ள ‘ஆட்சி அதிகாரப் போட்டி’ மிக விரிவாகவும் தெளிவாகவும் செய்திகளைத் தந்தது. 1967 முதல் 2016 முடிய தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் வரலாற்றுப் பக்கங்களை மீளாய்வு செய்யப் பெரிதும் உதவும். 2016இல் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 134 இடங்களை வென்ற நிகழ்வு 2021இல் அக்கட்சி பெறும் எண்ணிக்கையோடு ஒப்புநோக்கும்போது, கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழக் காரணமாகலாம்.
கோவை தெற்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் வடநாட்டவர்களையும் ரவுடிகளையும் நம்பிப் பரப்புரை செய்தது அவருக்கு எதிராகவே அமையும். காவல்துறையின் அனுமதி பெறாமல் இருசக்கர வாகனப் பேரணி நடத்திக் கடைகளை அடைக்கக் கூறிக் கல்லெறி நடத்தியது அருவருப்பானது. “வடநாட்டில் பாஜக பேரணி நடத்தினால் கடைக்காரர்கள் தாமாகவே கடைகளை அடைத்துவிடுவார்கள்” என்று அமித்ஷா கூறியது நடுநிலை வாக்காளர்களை அதிர்ச்சியுறச் செய்தது. பிரதமர் பதவியின் தரத்தை இதற்கு மேலும் கீழிறக்க இனி எவராலும் முடியாது. மதுரைப் பொதுக்கூட்டத்தில் ‘மதுரை வீரன்’ எம்ஜிஆர் பற்றி மோடி பேசியது மிகப்பெரிய நகைச்சுவை. தேஜஸ்வி சூர்யா என்ற பாஜக எம்.பி. “பெரியாரிசத்தை வேரறுக்கவே வந்துள்ளேன்” எனக் கூறி எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றிச் சென்றுள்ளார்.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு - 626132
ஆழ்ந்த சிந்தனைகளைக் கிளர்த்திவிடும் வெவ்வேறு தளங்களை காலச்சுவடு தனது விசாலமான வீரியமிக்க தேடல்மூலம் வாசகர்களின் அறிதலையும் புரிதலையும் மிகவும் கூர்மைப்படுத்திவருகிறது.
பா. மதிவாணனின் ‘அறிவியல் தமிழறிஞர்’ இராம.சுந்தரம், தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் திட்ட இயக்குநராக, அறிவியல் தமிழ்க்கழகச் செயலாளராக இருந்து பொறியியல் மருத்துவக் கலைச் சொற்களைப் பல்லாயிரக்கணக்கில் உருவாக்கியதைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் மறவாது. அப்பெருமகனாரது ‘தமிழக அறிவியல் வரலாறு’ ‘சொல் புதிது சுவை புதிது’ மற்றும் ‘திராவிடச்சான்று-எல்லிசும் -திராவிட மொழிகளும்’ என்ற மொழி பெயர்ப்பு நூல் முதலிய படைப்புகள் தமிழ்ச் சமூகத்தில் என்றென்றும் பட்டொளி வீசும்.
ஒலிப்புத்தகங்கள், மின்புத்தகங்களது நவீன வருகையால் விழிபிதுங்கி நிற்கும் தமிழ்ப் பதிப்புலகத்திற்கு நம்பிக்கையூட்டும் காலத்தால் செய்த நற்பணிகளாக புத்தகக்காட்சி கட்டுரைகள் அமைந்துள்ளன. “நூல் பல கற்போம்” என்று அறிவுலகம் நோக்கி அறைகூவல் விடும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்குப் புதிய உற்சாகத்தினைச் சமீபத்திய புத்தகக்காட்சிகள் ஏற்படுத்தியுள்ளமை மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றன. இந்த இதழ் ‘பொருநைப் பக்கங்க’ளில் பழம்பெரும் எழுத்தாளர் ஆர். ஷண்முகசுந்தரம் என்ற பேராளுமை. “இப்ப சரியாயிடுச்சா” என்ற அவரது அன்றைய கையறு நிலை வார்த்தைகள், வாசகர்களது இதயங்களை வலியால் பிழிந்தெடுக்கின்றன.
மருத்துவர் வெ. ஜீவானந்தம் மார்க்சிஸ்ட் பின்னணியிலிருந்து பின்னாட்களில் காந்திய சிந்தனைகளில் ஆழமான பற்றுக்கொண்டு பொதுவாழ்வில் பிரகாசித்துள்ளது அரிய நல்லுதாரணம். குடிநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவத்தை மேற்கொண்டதே இவரது தலையாய மருத்துவ அறமாகும். முத்தாய்ப்பாக, சுற்றுப்புறச்சூழல் மேன்மைக்காகவும் காந்தியப் பார்வையில் மது விலக்குக்காகவும் தம் பொதுவாழ்வில் விளங்கியது என்றென்றும் போற்றுதலுக்கு உரியது.
சி. பாலையா
புதுக்கோட்டை
‘அரச அதிகாரத்தின் அங்கமாகும் எதிர்ப் பரசியல்’ தலையங்கத்தில் பெரிய கட்சிகளால் கண்டு கொள்ளப்படாத, அவை காண விரும்பாத பிரச்சினைகளைக் கள எதார்த்தத்தோடு எதிர்கொண்டவை பெரும்பாலும் சிறிய கட்சிகளே என்று கூறப்பட்டிருப்பது உண்மை. “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையொட்டி அடையாளம் பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார். சுற்றுச்சூழல் தவிர்த்துத் தேர்தலின் கெடுதிகளான பணம்,சாதி என்கிற வரையறைகளை ஏற்றே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்” என்பது மெய்யானது. ய.மணிகண்டனின் ‘பாரதியும் பார்க்கப்படாதாரும்’ பற்றிய பாரதியின் சிந்தனையினைச் சிந்திக்க காலச்சுவடின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. மணாவின் இலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும், பொன் தனசேகரனின் ஆட்சி அதிகாரப்போட்டியும் நிகழ்கால அரசியலைப் பிரதிபலிக்கின்றன.
எம். சிவபாரதி
தென்காசி
பாரதியியலில் ய. மணிகண்டனின் ‘பாரதியும் பார்க்கப்படாதாரும்’ என்னை மிகவும் கவர்ந்தது. வெள்ளகால் சுப்பிரமணிய முதலியாரின் ‘அகலிகை வெண்பா’ என்ற புத்தகம் பற்றி அவர் குறிப்பிட்டதில் மேலும் சில விவரங்களைப் பதிவிட விழைகிறேன். வெ.ப. சுப்பிரமணிய முதலியார், ‘அகலிசை வெண்பா’ நூலை இயற்றிய நூலாசிரியர் வெள்ளகால் அவர்களின் இளைய மகன் வெ.சு. சீத்தாரப்ப முதலியார் அவர்களால் 14.4.1991 தேதியிட்டு மீண்டும் வெளியிடப்பெற்றது. இந்நூல் 05.01.1914ஆம் ஆண்டு ஆசிரியர் அவர்களால் வெளியிடப்பட்டபோது முதற்பதிப்பின் முன்னுரையும், 28.02.1920 அன்று வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பின் முன்னுரையும், 21.05.1941 தேதியிட்டு, மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவ உதவிய தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் முன்னுரையும் அதில் தொகுக்கப்பட்டுள்ளன.
தன் முதற்பதிப்பு முன்னுரையிலேயே முதலியாரவர்கள், “நான் அகலிகை கதையை ஆங்கில, திராவிட நூன் முறைகள் இரண்டுக்கும் இயைய, என் மனோதர்மத்துக்கு இயன்றவாறு கூறியிருக்கிறேன்” என எழுதியிருப்பார். முதற்பதிப்பு இராமநாதபுரத்தில் 1914ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதின்மூன்றாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாடுவதற்குக் கூடிய சபையில் அரங்கேறுவதற்கு உதவும்படி விரைவாகப் பதிக்கப்பட்டதனால் சில குறைபாடுகள் உள்ளன. அக்குறைபாடுகளை நீக்குவதற்கு உதவிய மகாமகோபாத்யாய சாமிநாதையருக்கும் ரா. இராகவையங்காருக்கும் நன்றியறிதலையும் தெரிவித்திருக்கிறார். தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ‘அகலிகை வெண்பா’ நூலின் முன்னுரையில் “அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது” என்ற பழைய கிரியையில், கல்லாய்ச் சமைந்த அகலிகையை அம்மியாகவும், கற்பொழுக்கத்தில் சிறந்த அருந்ததியை வான் நட்சத்திரமாகவும் குறிப்பிட்டிருப்பார். அகலிகை வலிமையற்ற தன்மையடைந்து மயங்கிவிழுந்தபின்தான் இந்திரனால் கற்பிழந்தாள் எனக் காட்டுவதை “வெற்பின் உச்சிநின்று உருண்டு வீழ் பெரிய பாறை இடை நிற்புறக்கை கொண்டு தடுப்பதையே ஒக்கும்” என இந்திரன் கூறுவதாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். “விம்மினாள், வெய்துயிர்த்தாள், வேர்த்தாள், விதிர்விதிர்த்தாள் அம்மினாள் செய்வதறியாளாய் மயங்குகின்றாள்” எனப் பாடியிருப்பதையும் பாராட்டுகிறார்.
தமிழ் இலக்கியத்தில் தனி வெண்பாக்களால் ஆகிய நூல்கள் ஒரு சிலவே. முத்தொள்ளாயிரம், பெருந்தேவனார் பாரதம், நளவெண்பா முதலியவே இன்று பிரசித்தமாயுள்ளவை. அந்த வரிசையில் அகலிகை வெண்பாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனப் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் கூறுவதே இந்நூலின் நயத்திற்குப் போதிய மதிப்புரையாகும். ரசிகமணி டி.கே.சி. அவர்கள் தமிழுக்கு வாய்த்த அரும்புதல்வன் என முதலியார் அவர்களை ஆகஸ்டு மாதம் 1937 வெளிவந்த கலைமகள் கட்டுரையில் புகழ்ந்திருப்பார்.
டாக்டர் சாமிநாத அய்யர் இந்நூல் “ஈசபுஞ்சகமாக’ இருக்கிறது, தமிழ் பாஷையை நன்கு கற்றவர்கள் இதுவரை எதிர்பாராத ஓர் ஆனந்தத்தை இதனால் அடைவார்கள் என நிச்சயிக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார். மகாகவி பாரதியார், முதற்பதிப்பைப் பார்த்துவிட்டு இந்தத் தலையங்கத்தை எழுதியிருக்கலாம் என எண்ணுவதைவிட, தன்னைவிட அகவையில் மூத்தவராகவும், கற்றறிந்த தமிழ்ப் பாரம்பரியத்தில் வந்தவராகவும் இருக்கும் ராவ்சாகிப் நூலைப்பற்றித் திறனற்ற செய்யுள்கள் என சுதேசமித்திரனில் 21.04.1921 தேதியிட்ட தலையங்கம் எழுதியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கருதத் தோன்றுகிறது. பாட்டினில் அன்புசெய் எனச் சொல்வதுதான் பாரதியார் என்றே எண்ணுகிறேன்.
டாக்டர் அவ்வை. மெய்கண்டான்
மதுரை