நம்பினால் நம்புங்கள்!
தமிழக நூலகத் துறை வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் திட்டத்தை அறிவித்து ஓராண்டிற்குப் பின்னர் முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இனி அடுத்த ஆணைக்காகப் பல ஆண்டுகள் தவம் இருக்க வேண்டியதில்லை. இப்போதே விண்ணப்பிக்கலாம்.
இந்தக் கொள்கையும் ஆணையும் சரியான திசையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் பாய்ச்சல் என்பது என் எண்ணம். காலச்சுவடுக்கு வழங்கப்பட்ட ஆணை எனக்கு மனநிறைவளித்ததா என்றால் இல்லை. ஆனால் எனக்கு முழு நிறைவு ஏற்பட வேண்டும் என்றால் காலச்சுவடுக்கு ஆணை வழங்கும் அதிகாரத்தை எனக்கே வழங்கிட வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்!
காலச்சுவடு தொடங்கப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட அடிப்படையான முடிவுகளில் ஒன்று நாங்கள் வாசகரை நம்பிச் செயல்படுவோம், நூலக ஆணையை நம்பி அல்ல என்பதுதான். தமிழக அரசு நூலகங்கள், நூலக ஆணைபற்றி நிறையவே எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். அவை நூலகங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற கரிசனத்தில் வெளிப்படுத்தியவை, காலச்சுவடுக்குக் கிடைக்காத ஆணைபற்றிய புலம்பலாக அவை இருந்ததில்லை.
நூலகத் துறையின் நோக்கம் வாசகரின் பொழுதுபோக்கிற்கும் கல்விக்கும் உய்விற்குமான நூல்களைக் கொள்முதல் செய்து வாசிப்பிற்கு அளிப்பதாக இருக்க வேண்டும். அவர்தம் நோக்கம் பதிப்பாளர்களைக் குஷிப்படுத்துவதாக இருக்க முடியாது. முழுவதும் வாசகரை நோக்கியே அவர்கள் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். பதிப்பாளர்கள் எம்மிடமிருக்கும் வாசகருக்கு அவசியமான, தகுதியான நூல்களுக்கு ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். ஆனால் எல்லாப் பதிப்பாளர்களுக்கும் ஆணையை அள்ளிக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. வாசகரை நோக்கி நூல் வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நூலக ஆணை கூடுதலான ஊக்கத்தைத் தரலாம். ஆனால் நூலக ஆணையை நம்பியே பதிப்பாளர்கள் இயங்கக் கூடாது. எல்லா நூல்களும் 1000 பிரதிகள் ஆணை வேண்டும் என்று கேட்பதில் பதிப்பாளர்களுக்கு லாபம் உள்ளது. வாசகர்களுக்கு அதிகப்படியான தலைப்புகளில் நூல்கள் கொள்முதல் செய்யப்படுவதே பயனுள்ளது.
நூலகத் துறையின் பணம், மக்கள் வரிப்பணம். அது மக்களுக்குப் பயன்படும் விதத்தில் செலவுசெய்யப்பட வேண்டும். பதிப்பாளர்களுக்கு அதைப் பங்குவைத்து வழங்க வேண்டும் என்று கோருவது முறையல்ல.
தமிழக நூலகத் துறையில் ஊழல் இல்லாமல் ஆணை வழங்கப்படும் என்று நம்பிய பதிப்பாளர்கள் யாரும் இல்லை. நானும் நம்பியதில்லை. குறைந்த ஊழல் என்பதே அதிகபட்ச எதிர்பார்ப்பு.
ஆனால் இம்முறை ஆணை வழங்குவதில் நான் அறிந்தவரை ஊழலே நடக்கவில்லை. ஊழலின் இன்னொரு முகமான செல்வாக்கின் ஊடுருவலும் இல்லை. வெளிப்படையான கொள்முதலுக்கான ஒரு செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஆணை வழங்கியதும் பதிப்பாளர்களை அழைத்து நூலகத் துறை கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியது. இப்படி ஒரு சந்திப்பு இதுவரை நூலகத் துறையில் நடந்தது இல்லை. இப்போது உருவாக்கப்பட்டுள்ள செயல்முறையின் குறைபாடுகளைக் களைந்து ஆக்கபூர்வமான உரையாடலின் வழி மேம்படுத்த வழிகோலப்பட்டுள்ளது.
நானறிந்தவரை இதுவரை நூலக ஆணை பெறாத பல சிறிய ஆனால் தகுதியான நூல்களை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு ஆணை கிடைத்துள்ளது. நூலக ஊழலின் மையமாக இருந்தது நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களின் கொள்முதல்தான். ஒரே மாவை எத்தனை விதமாகச் சுட்டு விற்க முடியும் என்பதில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட மண் இது. இம்முறை இந்நூல்களுக்கு ஆணை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது வரவேற்கத்தக்க முடிவு.
ஊழல் புரையேறி, முடை நாற்றமெடுத்து, நமது நூலகங்களைச் சீரழித்தபோது பதிப்புத் துறையில் மௌனக்கொடியை பறக்கவிட்டவர்கள் இன்று அந்த பொற்காலத்தை வேண்டி விமர்சனங்கள் பதிவிடுகின்றனர்; ஊடகங்கள் வழி பரப்புரை மேற்கொள்கின்றனர்.
எந்த நூலக ஆணைக்கும் இதுவரை கூட்டம் நடத்தாத பபாசி இம்முறை ஆணைபற்றி விவாதிக்கக் கூட்டம் நடத்தியது.
இருப்பினும், நூலக ஆணைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த முறைமை மேம்பட வேண்டும், தொடர வேண்டும் என்பதே அசலான பதிப்பாளர்களின் எதிர்பார்ப்பு.
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.