காலம் அளந்த நாவல்
வெள்ளாமை (நாவல்)
பெ. மகேந்திரன்
ராமையா பதிப்பகம்
ஜி-4, சாந்தி அடுக்ககம்,
3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு,
ராயப்பேட்டை சென்னை - 60014
பக்.248 ரூ.240
காலந்தோறும் சமூகம் மாறியபடி வந்திருக்கின்றது. விஞ்ஞானம் குறுக்கிட்ட பின் வாழ்க்கை நிலைபேறுடையதாக இருக்காது. மக்கள்தொகை பெருகுகிறது. கல்வி விரிவடைகிறது. வேலைவாய்ப்பைத் தேடி மக்கள் ஊர் தாண்டுகிறார்கள்; வணிகமும் அதுசார்ந்த பொருளாதாரமும் ஒவ்வோர் உயிரினத்தையும் வெல்லப் பார்க்கின்றன. எல்லாருக்கும் இந்த உண்மைகள் தெரிந்திருந்தாலும் ஏனோ காலம் மாறிச் செல்வதை விரும்புவதில்லை; நம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்கின்ற ஒவ்வொன்றையும் ஏக்கமாய்ப் பார்க்கிறார்கள். இவை மாறமாற மனிதப் பண்புகளும் மாறுகின்றன. இந்தக் கால மாற்றங்களையும் பண்புமாற்றங்களையும் ‘வெள்ளாமை’ நாவல் பிரதிபலிக்கின்றது. நாம் நிலப்பிரபுத்துவக் காலத்திலிருந்து, முதலாளித்துவக் காலத்திற்குள் வருகிறோம். நிலப்பிரபுத்துவத்தின் இழை வேளாண்மையில் நிலைகொண்டிருப்பது. ஆகவே கால மாற்றத்தைச் சொல்வதற்கு வேளாண்களம் பொருத்தமானதாகும்.
‘வெள்ளாமை’ என்ற இந்த நாவலின் நிகழிடம் கரிசல் மண் சார்ந்தது. இந்த வேளாண்மையைப் புதிய தொழில் யுகம் ஊடறுக்கின்றது. பட்டாசுத் தொழில், தீப்பெட்டித் தொழில் அறிமுகமாவதற்கும் வளர்வதற்கும் கரிசல் மண் வாகாய் இருந்தது. உழைப்புச் சக்தி மலிவாகக் கிடைத்தது. குழந்தைகளும் உழைப்புக்கான பாத்திரங்களாகிறார்கள். நாவலின் வளர்ச்சிப் போக்கு இதைக்கொண்டு செல்கிறது. நாவல் 240 பக்கங்களுக்கு விரிகின்றது. ஆனால் கதையளவில் இந்த நாவல் மிகச் சிறியது; மெதுவாய் நகர்கிறது; பெரியவர் ஒருவரின் குடும்பத்தைச் சுற்றிவருகிறது. நாவலாசிரியர் உணர்ச்சிமயமான முறையில் கதையை விவரித்துச் செல்ல வேண்டுமென்று விரும்பவில்லை; அதனை அவர் இயல்பாகத் தவிர்க்கிறார். கரிசல்மண்ணின் வாழ்க்கைமுறை மாறும்போது உண்டாகும் மாற்றங்கள் அம்மண்ணில் வாழும் ஒருவருக்குப் பெரும் வலியைக் கொடுக்கின்றது. அந்த வலிக்காக நாவல் புலம்பவில்லை. எதன் வாயிலாக இம்மாற்றங்கள் உருவாகின்றனவோ அதுதான் இனி வாழ்க்கைமுறையாக இருக்குமென்ற உணர்வுநிலையோடு நாவல் ஒன்றுகிறது.
நாவலினூடாக ஆசிரியர் சொல்லவருவது அம்மண்ணின் கலாச்சாரத்தையும் மானுடப் பண்புகளையும்தான். ஒவ்வொரு கதாபாத்திரமும் நகரும்போதோ உரையாடும்போதோ யாரோ ஒரு மனிதர் குறுக்கிடுகிறார், ஏதோ ஒரு சம்பவம் நிகழ்கின்றது, ஏதோ ஒருபொருள் தட்டுப்படுகிறது, ஏதோ ஒரு சொல் புழக்கத்திற்கு வருகிறது. இந்த மனிதர், இந்தச் சம்பவம், இந்தப் பொருள், இந்தச் சொல் நாவலின் நகர்வுக்கு உதவுகிறார்கள். இவர்களை வைத்துக்கொண்டு நாவல் தன் கரிசலின் பண்புகளை விவரிக்கின்றது. இந்த மனிதர் யார் - ஏன் இவரைக் கொண்டாடுகிறோம், இந்தப் பொருளின் பயன்பாடு என்ன - இது ஏன் இவ்விதம் அமைந்திருக்கிறது, இந்தச் சொல்லின் புழங்குதளம் என்ன - அதை ஏன் அவ்வாறு சொல்கிறார்கள்? இப்படியாக அந்தந்த மனிதர்களோடு, அந்தந்தக் கணங்களோடு நாவல் உறவாடுகிறது. இந்த மக்களோடும் இப்பொருள்களோடும் நாம் வாழ்ந்திருந்தாலும் அதன் உட்பொருளை விவரித்துப் பாராமல் வாழ்க்கையை ஏனோதானோவென்று கடந்துவந்திருக்கிறோம். அவற்றின் உள்ளொளியை வெளிப்படுத்துவதில் நாவல் தன் வடிவத்தை அடைகின்றது.
இக்கால மாற்றத்தில் முக்கியமான குறுக்கீட்டைச் செய்வது நீரிறைக்கும் மோட்டார்தான். அதற்கும்முன் வயல்களுக்கு நீர்பாய்ச்சக் கமலைகள் பயன்பட்டன. இரண்டு மாடுகளைத் தாம்புக் கயிற்றில் பிணைத்து நீரை முகந்துவந்து வயல்களில் பாய்ச்சினர். ஒருநடைக்குத் தண்ணீரை முகந்து அது மேலேறி வந்து நீரைக் கவிழ்க்கிறது. பின் மாடுகள் பின்னோக்கிச் சென்று கமலையைக் கிணற்றுக்குள் இறக்குகின்றன. இந்த இரு கால அளவுக்குள் எவ்வளவு தண்ணீர் முதல் நடையில் மேலே கொண்டுவரப்பட்டதோ, அதே அளவுக்கான தண்ணீர் ஊற்றாகிப் பெருகிக் கிணற்றின் நீரளவு குறையாமல் பார்த்துக்கொள்ளும். எனவே பக்கத்துப்பக்கத்து வயல்களில் கமலைகள் இருந்தாலும் ஒருவருடைய கிணற்றுநீரை மற்றவர்களின் கமலைகள் அபகரிப்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் மோட்டார் உருவாகிவந்ததும், நிலத்தின் பண்பு மாறுகிறது. அது தன் நீர்மையை இழக்கிறது. கால அளவையும் உழைப்பையும் மோட்டார்கள் மிச்சப்படுத்திக் கொடுத்தாலும் பகாசுரத் தனமான நீர் இறைப்பினால் அக்கம்பக்கத்து விவசாயிகளின் நிலத்தடி நீரையும் இந்த மோட்டார் உறிஞ்சியெடுக்கிறது. இதனால் சிறிய அளவில் விவசாயம் பண்ணுகிறவர்களின் வேளாண்மை நாசமாகிறது. அவர்கள் தம் வயல்களுக்கு நீர்பாய்ச்சப் பெரிய பண்ணையாரின் தயவை நாட வேண்டியதாயிருக்கிறது. இந்த நாவலில் இது சொல்லப்படும் விதம் நம் ஈரக்குலையை அறுத்துக்கொண்டுவருவதுபோலத் துடிதுடிக்க வைக்கிறது.
ஒரு குடும்பத்தில் புதிய தலைமுறை உருவாகிவரும்போது அவர்கள் அனைவரும் வேளாண்மையில் மட்டும் உழன்றுவர வாய்ப்பில்லை. அனைவருக்கும் போதுமான நிலமும் அமையப்போவதில்லை. எனவே மூத்த மகன் அல்லது படிப்புவாசனை இல்லாத ஒரு மகன் விவசாயத்தைக் கவனித்தால் போதும். அடுத்தவன் வேறு ஏதாவது தொழில்செய்ய முனைய வேண்டும்; அதற்கடுத்தவன் கல்வியைச் சீராக முடித்து வெளியூர்சென்று தன் திறமைக்கேற்ற வேலை தேட வேண்டும். இப்படித்தான் வாழ்க்கை அமையும். நாவலின் ஓட்டம் இது. அந்த வகையில் இந்த எழுத்து, உணர்ச்சிகரமான நிலைகளைப் பொருட்படுத்துவதில்லை. கண்ணீரும் கம்பலையுமாக அலைய முயலவில்லை. இதை வெளிப்பார்வையில் சொல்லிமுடிப்பது சவாலான காரியம். நாவல் அதைக் கச்சிதமாகச் செய்கின்றது.
பண்பாட்டின் பல கூறுகளை நாம் இழக்கிறோம், தொழில்நுட்பத்தின் முற்றுகையால்! இதை விவரிப்பதில் நாவல் கவனம் செலுத்துவதால் நாவலின் எழுச்சியை எவரும் தேட வேண்டிய அவசியமில்லை. எல்லாம் கையைவிட்டுப் போனாலும் அதற்காகக் கழிவிரக்கத்தோடு படைப்பாளியும் சேர்ந்து கதறவில்லை. படைப்பாளிக்குரிய பாங்கு தெளிவாக மிளிரும் வகை இது. நாவலைக் கதையாக வாசிப்பதை இந்த எழுத்துமுறை தடுத்துவிடுகிறது. கரிசல் மண்ணின் வாழ்க்கை முறைமையை அதன் ஈரத்தோடு நாம் தெரிந்துகொள்கிறோம்.
வேளாண்மையின் அடையாளமாக வருகின்ற பெரியவர் அந்தக் கிராமத்தின் தனிமனிதரல்லர்; அவர் நம்முடைய முந்திய சமூகத்தின் ஒரு கூட்டுத் தொகையாக இருக்கிறார். வேளாண்மை சரியும்போது பெரியவரின் வாழ்க்கையும் சரிய அவர் இறக்கிறார். ஒட்டுமொத்தமான சமூக வளர்ச்சி பண்டைச் சமூகத்தின் தேய்மானத்தில் இருப்பதால் அவருடைய இறப்பும் இயல்பானதாயிருக்கின்றது. அதைச் சொல்வதற்குக் காத்திரமான வார்த்தைகளைத் தேடவில்லை; உணர்ச்சிப் பிழம்பான அனல் இல்லை. நாவலில் அது ஒரு வரி. அவ்வளவுதான்.
‘வெள்ளாமை’ ஒரு நாவலாகத் தன் மக்கள் அனைவரையும் அரவணைக்கிறது. தன் மக்களின் வாழ்க்கை வண்ணம் வெளிறிவிடாமல் எடுத்துரைப்பதில் முழுத் திறனையும் காட்டுகிறது. ஒரு நாவலாகத் தன் வாசகர்களோடு எதன் வாயிலாக உரையாடுவது என்கிற கலை வித்தகத்தில் இது சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.