தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதீதமான எதிர்வினை
பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை கடுமையான சர்ச்சையை உருவாக்கியது. இளையராஜாவை விமர்சித்தும் ஆதரித்தும் வெளியான எதிர்வினைகள், பிரச்சினையைக் காட்டிலும் எதிர்வினை ஆற்றியவர்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவின.
பொதுவாகவே இளையராஜாவின் கருத்துக்களை விரும்பாத பலரும் அவருடைய அபாரமான இசைத்திறம் கருதியும் தமிழ்ப் பண்பாட்டு வெளியில் அவருக்கு இருக்கும் இணையற்ற மதிப்பைக் கருதியும் அவரை விமர்சிக்கத் தயங்குவார்கள். சாதி அடிப்படையில் அவர்மீது ஒவ்வாமை கொண்ட சிலருக்கும் இதே சங்கடம்தான். மோடி – அம்பேத்கர் ஒப்பீட்டுச் சர்ச்சை இவர்களின் தயக்கத்தை உடைத்துவிட்டது. மடை திறந்த வெள்ளமாக அவதூறு, வசை மழைகள் பொழிந்தன. சாதிக் காழ்ப்பு, சாதி மேட்டிமை, இளக்காரம் ஆகியவை தாராளமாக வெளிப்பட்டன.
இளையராஜாவின் மீதான விமர்சனங்களில் காணப்பட்ட அதீதமான கோபம் மிகுதியும் சாதி மேட்டிமையிலிருந்து தோன்றியது என்று கருதக் காரணம் இருக்கிறது. அண்மையில் பழ. நெடுமாறன் இலங்கைப் பிரச்சினையில் மோடியை ஆதரித்துப் பேசியிருந்தார். மோடி அப்போது பிரதமராக இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்திருக்காது என்று சொன்னார். இளையராஜா ஆழமான அரசியல் அறிவுக்கோ தெளிவுக்கோ பேர்போனவர் அல்லர். பொதுப் பிரச்சினைகள் குறித்து அவர் தெரிவித்துவரும் கருத்துக்கள் ஆழ்ந்த அரசியல் அறிவையோ அரசியல் சரித்தன்மையையோ கொண்டவை அல்ல. ஆனால் நெடுமாறன் அப்படி அல்ல. 90 வயதை நெருங்கும் மூத்த அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். காமராஜர், இந்திரா காந்தி ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். இந்திய, தமிழக அரசியலில் ஊறியவர். நெடுங்காலமாகத் தமிழ் தேசியர். இப்படிப்பட்டவர் மோடியை இலங்கையின் மீட்பராகச் சித்தரிக்கும்போது வராத கோபம் சமநிலையற்ற கருத்து வெளிப்பாடுகளுக்குப் பேர்போன இளையராஜாவின்மீது வரும் என்றால் அதற்கான காரணம் ஒன்றும் ரகசியம் அல்ல.
இளையராஜாவின் மீதான விமர்சனங்களில் சாதியுணர்வு வெளிப்படுவதற்கான எடுத்துக்காட்டாகத் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் எதிர்வினையைச் சுட்டலாம். ‘உணவுக்கு வழியில்லாமல் இருந்த நிலையில் கம்யூனிஸம் பேசிவிட்டு பணமும் புகழும் வந்தவுடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக்கொள்கிறீர்கள்’ என்ற ரீதியில் அவர் இளையராஜாவை விமர்சித்ததை வேறு எப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது. (இளையராஜா எப்போது கம்யூனிசம் பேசினார்?)
ஈரோட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த விழாவில்தான் இளங்கோவன் அப்படிப் பேசினார். சென்னையைச் சேர்ந்த புரட்சித் தமிழகம் நிறுவனத் தலைவர் ஏர்போர்ட் த. மூர்த்தி, இது தொடர்பாகத் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகார் குறித்து விசாரணை செய்த ஆணையம், சென்னைப் பெருநகரக் காவல்துறை ஆணையருக்கும் சென்னை ஆட்சியருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸின் அடிப்படையில் கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னைப் பெருநகரக் காவல் துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்துவருவதாகச் செய்தி வந்தது. இளங்கோவன் இளையராஜாவைத் தாக்கியபோது வீரமணி கைதட்டிய காணொளியும் வெளியாகியுள்ளது. மேடையில் பேச்சாளர் குரலை உயர்த்தும்போது கைதட்டும் சடங்கை வீரமணி நிறைவேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியதில்லை எனினும் அவர் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்காமல் இருப்பது விமர்சனத்திற்கு உரியதுதான்.
தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஒருவர் புகார் அளித்ததோ அந்தப் புகார் மீது ஆணையம் நடவடிக்கையை முன்னெடுத்ததோ தவறில்லை. ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் வீரமணியையும் சேர்த்ததன் மூலம் இளையராஜாவின் விமர்சகர்கள் சிலர் செய்யும் அதே தவற்றை ஆணையம் செய்துள்ளது. அதாவது, எடுத்துக்கொண்ட பிரச்சினைக்குத் தொடர்பில்லாத அதீதமான எதிர்வினையை அது ஆற்றியுள்ளது. இளையராஜாவை அவதூறு செய்து பேசியவர் இளங்கோவன். ஆனால் அந்த மேடையில் இருந்த காரணத்திற்காக வீரமணியின் மீதும் நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முனைவதற்குக் காரணம் வீரமணிமீது ஆணையத்திற்கு (அதாவது அதை இயக்குபவர்களுக்கு) இருக்கும் விரோதம் அல்லது எதிர்ப்புணர்வே என்றுதான் சொல்ல வேண்டும்.
தாழ்த்தப்பட்டோருக்கான குரல் என்ற அளவுகோலின் அடிப்படையில் திராவிடர் கழகத்தின்மீது விமர்சனங்கள் உள்ளன. தலித் தரப்பைச் சேர்ந்தவர்கள் அவற்றைத் தெளிவாக முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் தி.க.வையோ அதன் தலைவர் வீரமணியையோ தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி என்று சொல்ல முடியாது. எத்தனையோ பிரச்சினைகளில் தாழ்த்தப்பட்டோர் தரப்பில் நின்று தி.க. குரலெழுப்பியிருக்கிறது. வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அருண்ஷோரி பாஜகவில் சேருவதற்கும் முன்பே அம்பேத்கரைக் கடுமையாக விமர்சித்து Worshiping False Gods என்னும் நூலை எழுதினார். அந்த நூலின் உள்ளடக்கத்தைப் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். தி.க. தலைவர் கி. வீரமணி இயக்கத்தின் நாளேடான விடுதலையில் அருண்ஷோரியின் நூலுக்கான மறுப்பை எழுதி அதைத் தொடராக வெளியிட்டதோடு மட்டுமின்றிப் பிறகு அதை நூலாகவும் வெளியிட்டார். இத்தகைய காத்திரமான எதிர்வினையை வேறு யாரும் ஆற்றவில்லை. மேலும், அம்பேத்கர் பிறந்த நாளைப் பல ஆண்டுகளாகத் தி.க. கொண்டாடிவருகிறது. இன்றைய சூழலில் சாதி ஒழிப்பைப் பற்றித் தொடர்ந்து பேசிவரும் இயக்கங்களில் ஒன்று தி.க.
இத்தகைய பின்புலம் கொண்ட ஒருவர்மீது சாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கையை முன்னெடுத்திருப்பது அவர் மீது ஏற்கெனவே இருக்கக்கூடிய காழ்ப்பின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். இளங்கோவன் பேசியதைப் பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை என்னும் விமர்சனத்தை வீரமணிமீது வைக்கலாம். ஆனால் அது சட்டப்படி தண்டிக்க வேண்டிய குற்றம் அல்ல. இத்தகைய அதீதமான, நியாயமற்ற நடவடிக்கைகள் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கவே பயன்படும் என்பதைக் கருத்தில் கொண்டு வீரமணியின் மீதான நடவடிக்கையை ஆணையம் திரும்பப் பெறுவதே நியாயமானதாக இருக்கும்.