எஞ்சிய சொற்கள்
சிவரமணி பற்றிய கட்டுரைகள் வெளி வரும்போதெல்லாம் எனது நண்பர்கள் ‘அவளது கடைசிக்காலத்தில் நீ அவளுடன் மிக நெருக்கமாக இருந்தாயல்லவா, நீ ஏன் அவளைப் பற்றி ஏதும் கூறாதிருக்கிறாய்?’ எனக் கேட்பதுண்டு. இறந்தவர்கள் உயிருடன் வந்து நியாயம் கேட்கமாட்டார்கள் என்கிற துணிச்சலில் எவரைப் பற்றியும் யாரும் எதையும் எழுதலாம் என்பதான ஒரு போக்கு கலை இலக்கிய அரசியற் சூழலில் கடுமையாக இருப்பதை உணர்ந்திருந்தால் நான் எதையும் எழுதாமல் இருந்தேன் என நினைக்கிறேன். ‘அவளுடனான எனது நட்பு அழகான, மிகவும் தனித்துவமான தனிப்பட்டதானதொரு மலர்வு. அதனை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் எதுவும் எனக்கில்லை’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நண்பர் அகிலன், சிவரமணி பற்றி என்னோடு உரையாடத் தொடங்கியபோதுதான் சிவரமணியின் நினைவுகள் என்னுள் உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததை உணர்ந்தேன். எப்போதும் ஒருங்கே இன்பத்தையும் துன்பத்தையும் தரக்கூடிய இந்த உணர்வுகளை, அவளது நினைவுகளை, என்மீதான அவளது நம்பிக்கையினைச் சிதைக்காத வண்ணம் வெளிப்படுத்துவது ஆசுவாசத்தினை ஏற்படுத்தும் எனவும் அப்போது புரிந்து கொண்டேன். அது மட்டுமன்றி அது சிவரமணி பற்றிய ஆழமான புரிதலையும் கலை இலக்கிய அரசியற் சூழலில் மேலும் அதிகரிக்கும் என்ற தணியாத நம்பிக்கையுடன் இக்குறிப்பினை எழுதுகிறேன்.
சிறுவயது முதல் இயற்கையையும் மனிதர்களையும் தான் கொண்ட பல்வேறான உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மற்றவர்களுக்குத் தான் வெளிப்படுத்த முனைந்த அல்லது வெளிப்படுத்தத் தவறிய உணர்வுகளையும் தன் எழுத்துகளுக்கூடாக வெளிப்படுத்திய சிவரமணியின் குரல் ‘களவாடப்பட்டு’, சிதறடிக்கப்பட்ட பின் எஞ்சிய சிலவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அது பற்றிப் பேசுவதனைக் காணும்போது சொல்லொணாத் துயர் என்னை ஆட்கொள்கிறது. ஒவ்வொருவரது வாழ்க்கையும் பல்வேறுபட்ட இடைவெட்டும் சம்பவங்களாலானது. அது தனித்த வட்டமாக ஒருபோதும் இயங்குவதில்லை. அந்த வகையில் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் கனவும் கலக்கமும் வேகமும் வேட்கையும் நிறைந்த சிவரமணியின் வாழ்வின் ஒரு பகுதியில் அவளுடன் சேர்ந்து நான் ஒன்றியிருக்கிறேன். அதன் செழுமையினையும் வலிமையினையும் வனப்பினையும் அதன் பின்னரான நீண்ட கடும் தனிமையினையும் கடந்து வந்திருக்கிறேன். அவ்வகையில் அது தொடர்பிலான ஒரு சில விடயங்களை வெளிப்படுத்து வதன் மூலம் அவளது வாழ்வின் மகத்துவத்தினையும் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு அச்சில் வராமலேயே புதைக்கப்பட்ட அவளது கவிதைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
வேம்படி மகளிர் கல்லூரியில் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த வேளையில்தான் முதன்முதலாக சிவரமணியை நான் கண்டேன். துருதுருப்பும் துள்ளல் நடையும் கொண்ட ஓர் இளம் ஆசிரியையினைக் கண்டால் ஏற்படும் மட்டற்ற மகிழ்ச்சியினை அவளது தோற்றம் ஏற்படுத்தத் தவறவில்லை. அச்சமயத்தில் பல்கலைக்கழகத்தில் அவள் படித்துக்கொண்டிருந்தாள். தான் கல்வி பயின்ற பாடசாலையிலிருந்து வந்த வேண்டுகோளை ஏற்றுச் சிறிதுகாலம் ஆங்கிலத்தினை ஒரு பாடமாகக் கற்பதற்கு அங்கு அவள் வந்து கொண்டிருந்தாள். எனக்கு அவள் நேரடியாகக் கற்றுத்தரவில்லை ஆயினும், அவள் தனது இருப்பின் அறிவொளியை வெகு ஆழமாக மாணவிகளிடையே பதித்தாள். அப்போதெல்லாம் சிறு புன்னகையுடன் அவளைக் கடந்து சென்றிருக்கிறேன்.
அந்தக்காலத்தில் திசை எனும் மிகத்தரமான வாரப் பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. அப்பத்திரிகையில் அவளது கவிதைகளும் எனது கவிதைகளும் இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்புகளும் தொடர்ந்து வெளியாகின. எனது மிக நெருங்கிய நண்பரான சத்தியமூர்த்தி என்னை சிவரமணி வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திவைத்தார். அவ்வேளைகளில் நண்பர் மதுசூதனிடமிருந்து கலை, கலாச்சார, அரசியல், இலக்கியம், நாடகம், உலக சினிமா, வரலாறு எனப் பலதரப்பட்ட சிறந்த புத்தகங்களைப் பெற்று வாசித்து அவற்றை உருப் போட்டுப் பொருத்தமான தருணங்களில் ஒப்புவிக்கும் வல்லமையுடன் இருந்ததாலோ என்னவோ சத்தியமூர்த்தியைப்போலவே சிவரமணிக்கும் என்னை மிகவும் பிடித்துப்போயிற்று. அன்றிலிருந்து எங்கள் இருவரின் நட்பு மிகவும் வேகமாக வளர்ந்தது. விரைவில் மிகவும் நெருக்கமான நண்பியர் ஆனோம். அவ்வேளையில் நாட்டின் கொந்தளிப்பான சூழ்நிலையாலும் வேறு பல காரணங்களாலும் சிவரமணி மிகவும் தனித்தவளாகவும் தனித்துவிடப்பட்டவளாகவும் காணப்பட்டாள். எனினும் என்னுடன் பகிர்ந்துகொள்ள ஒருகோடி நினைவுகளும் செய்திகளும் குறிப்புகளும் அவளிடமிருந்தன. அவற்றைக் கேட்டு ரசித்துச் சிரித்து மகிழத்தக்க மனோநிலையை நான் கொண்டிருந்தேன். சிவரமணியின் தாயாருடனும் அவளது சகோதரியுடனும் மிகுந்த இணக்கமான உறவுநிலையினை நான் கொண்டிருந்ததால் நினைத்த நேரத்துக்கு அவள் வீட்டுக்கு நானும் என் வீட்டுக்கு அவளும் வரக்கூடிய நற்சூழல் நிலவிற்று.
அவளது தாயார் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றியிருந்தபடியால் அவர் ஆங்கில இலக்கியங்களைச் சிறுவயதிலேயே சிவரமணிக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். அத்துடன் அவளின் ஆங்கில மொழி வன்மைக்கு அவர் மூலகாரணமாகத் திகழ்ந்தார். பொதுவாக யாழ்ப்பாணத்துப் பெற்றோர்- அதுவும் தந்தையை இழந்து தாயினால் வளர்க்கப்படும் ஒரு மகள் -எதிர்கொள்ளக்கூடிய கண்டிப்பினையும் அதீத பாசத்தால் உந்தப்பட்ட தாயின் கடும் கண்காணிப்பினையும் சிவரமணி எதிர்கொண்டிருந்தாள். சிவரமணி ஆங்கிலப் பாடத்தினைத் தனிப்பட்ட வகுப்பாக நடத்திப் பொருளாதார ரீதியில் ஓரளவு தன்னிறைவு பெற்றிருந்தாள். இத்தகைய நிலைக்கு மிகுந்த நல் ஊக்கத்தினை அவரது தாயார் வழங்கியிருந்தார். இதனாலேயே தாயிடமிருந்து பெற்ற உதவியுடன் வெளிநாட்டு மாநாடுகள் சிலவற்றில் தான் பங்குகொள்ள முடிந்திருந்தது என்று தாயாரை மிகுந்த அன்புடனும் நன்றியுடனும் பலமுறை அவள் நினைவு கூர்ந்திருக்கிறாள்.
சிவரமணியின் தாயார் தனது இரு கண்மணிகளாகத் திகழ்ந்த இரு பெண்பிள்ளைகளையும் தனது சகோதரியின் பொறுப்பில் விட்டுவிட்டுத் தன்னந்தனியே தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று பணியாற்றித் திரும்பியிருந்தார். தனது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுவதற்காகவே, தான் வெளிநாடு சென்று பணியாற்றியதாகக் கூறுவார். தனித்தவராக ஒரு பெண்ணாகத் தான் எதிர்கொண்ட பல சவால்களை அவர் விவரிப்பார். எல்லாவற்றையும் தான் தனது பிள்ளைகளது வாழ்வின் நன்மை கருதியே பயமின்றித் துணிச்சலுடன் எதிர்கொண்டதாக எப்போதும் கூறுவார். அத்தகையதொரு துணிச்சலான தாயிடமிருந்து வளர்ந்ததாலோ என்னவோ சிவரமணியிடமும் அவளது மென்மையானதும் தண்மையானதுமான தோற்றத்தின் ஊடாகப் பெரும் துணிச்சல் விரவியிருந்தது. தாயாருடனான பலத்த கருத்து முரண்பாடுகளுக்கிடையிலும் சிவரமணி தன் தாயை மிகவும் நேசித்தாள். அதனால்தானோ என்னவோ தனது தாயாருக்கும் தனக்குமிடையில் இருந்த பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் – செயற்பாடுகளையும் தாண்டிப் பல விடயங்களில் சிவரமணி தனது தாயாரைப் புண்படுத்தாதவாறு நடந்துகொண்டாள். ஆனால் சிவரமணிக்கும் – அவரது தாயாருக்குமிடையிலான வெறுப்பும் – நேசமும் கூடிய உறவின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளாமல் அவளுடைய வாழ்வை முதலில் எழுதியவர்கள் செயற்பட்டிருப்பது கவலை தருகிறது.
தனது கவிதைகளில், சிவரமணி வைத்திருந்த அக்கறையை விடவும் அவளது கவிதைகளைப் பெரும் பொக்கிசமாகப் போற்றிப் பாதுகாத்தவர் அவளது தாயார் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. தனது மகள் கவிதை எழுதும் ஆற்றலுடையவள் என்கிற எண்ணம் அவரை மிகவும் புளகாங்கிதமடைய வைத்திருந்தது. சிவரமணியின் கவிதைகளைப் புத்தகமாகப் போட வேண்டும் என்கிற முனைப்பு அவரிடம் மிகுந்து இருந்ததைத் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவரது ஆர்வத்தைக்கண்டு, அதனால் உந்தப்பட்டு, சிவரமணிக்கு அவளது கவிதைகளை ஒழுங்குபடுத்துவதற்கு மிகுந்த சிரத்தையுடன் உதவினேன். இவ்வாறு ஒழுங்குபடுத்துவதன் ஊடாக அவள் கவிதைகள் அனைத்தும் எவ்விதத் தங்கு தடையும் இன்றி அவளது மறைவுக்குப் பின்னர் பிற்காலத்தில் பலவந்தமாக எடுத்துச் செல்லப்படப்போவதை அறியாமலேயே அவற்றை அவளுக்காகச் செய்திருந்தேன்.
சிவரமணி தனது தற்கொலைக்குச் சற்று முன்பாக அழித்தது அவளால் அதற்குச் சற்று முற்பட்ட காலத்தில் எழுதிய கவிதைகளைத்தான். அவள் எழுதிய பல நூற்றுக்கணக்கான கவிதைகளை எரிப்பதென்றால் அவள் வீடுதான் எரிந்திருக்கும். ஏனெனில் சிறுவயது முதலே அவள் குவித்திருந்த கவிதைகள் ஏராளம். தந்தையின் மறைவு, தாயின் பிரிவு, தான் வெளிப்படுத்த நினைத்த விடயங்களை - உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத மனத்தடங்கல், மற்றவர்களைப் புண்படுத்த விரும்பாத மென்மனப்பாங்கு என்பனவற்றால் எழுத்துக்களின் ஊடாகத் தன்னை ஆசுவாசப்படுத்த அவள் கற்றுக்கொண்டிருந்தாள். அதனால் ஆற்றல்மிகுந்த கவித்துவம் கவிதைகளில் சொட்டின. அவளது கவிதைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டிருந்தன. கவிதைகளை எழுதி அவற்றை வெறும் உணர்வு வடிகாலாக எண்ணி, பின் கசக்கி ஒரு மூலையில் போடும் எமது நாட்டில் வாழும் எத்தனையோ பெண்களது கவிதைகளைப் போலவே அவளது கவிதைகள் அவள் உயிருடன் இருந்த காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் போனது மிகுந்த வருத்தத்திற்குரியது. பல்கலைக்கழக அளவில், இலக்கிய அளவில் அவளுக்குப் பலரைத் தெரிந்திருந்த போதும் அவளது ஆற்றல்களைப் பலர் அறிந்திருந்த போதும் அவளது தற்கொலைக்குச் சற்றுமுற்பட்ட காலத்தில் அவளே குறிப்பிட்டதுபோல, அவளைத் ‘தமது தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொண்ட’ எவருமே அவளது கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவர அவளை ஊக்கப்படுத்தவோ அல்லது தாமாக முன் வந்து தொகுப்பாக்கவோ முயற்சி செய்யாதது மிகவும் கசப்பான உண்மை.
சிவரமணியின் இறப்பிற்குப் பின்னர் அவரது தாயாருக்கு ஆறுதல் சொல்லவும் என்னை நானே ஆற்றுப்படுத்தவும் அவளது வீட்டுக்கு சென்றேன். அப்போது முன்பு எழுதப் பட்டு நான் ஒழுங்குபடுத்தியவற்றைத் தவிர தனது கடைசிக்காலத்தில் எழுதிய கவிதைகளையே அவள் எரியூட்டியிருந்தாள் என்று அவளது தாயாரே எனக்குக் கூறியிருந்தார். என்னால் ஒழுங்குபடுத்தப்பட்ட கவிதைகள் அவளது அம்மாவிடம் இருந்ததால் அவை எரிக்கப்படவில்லை. அவை பின்னர் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக அவளது புத்தகங்களுடன் சேர்த்து எடுத்துச்செல்லப்பட்டன.
‘எனது மகளின் எஞ்சிய கவிதைகளை மட்டும் என்னிடம் விட்டுச் செல்லுங்கள்’ என்று தான் மன்றாடியதாகவும், தாங்கள் ‘எல்லாவற்றையும் பார்வையிட வேண்டிய அவசியம் இருப்பதால் அவற்றைப் பார்வையிட்டுவிட்டுத் திருப்பித் தருவதாக’ அவர்கள் கூறியதாகவும் அவர்கள் கூறிய விதத்தினைப் பார்த்தால் தனக்கு அவர்களில் துளியும் நம்பிக்கை ஏற்படவில்லை என்று அழுது அரற்றியபடி தாயார் என்னிடம் கூறியிருந்தார்.
அதேசமயம், தமது வீடு தேடிவந்த மூத்த எழுத்தாளர் ஒருவர் சிவரமணியின் சேகரங்கள் ஏதாவது மிஞ்சியுள்ளனவா எனக் கேட்டதாகவும், அவர் தற்கொலை செய்யாவிட்டாலும் அவர் உங்களுக்குக் கிடைத்திருப்பாரா தெரியாது என்று பேசியதாகக் கூறிச் சொல்லொணா வருத்தமடைந்தமை இப்போதும் எனக்குச் சினத்தையும் வேதனையையும் தருகிறது.
அவளது சுயகொலையினை ஒட்டிய காலகட்டத்தில் அவளுடன் நட்புக்கொண்டிருந்த மாற்று அரசியல் கருத்தாளர்கள் கைதுசெய்யப்பட்டுவந்தமையால் அவர்கள் வீட்டுக்கு நான் செல்வது என்னைத் தேவையற்ற இடரில் சிக்கவைத்துவிடும் என எண்ணிய சிவரமணியின் தாயார் “உன் நன்மைக்காகச் சொல்கிறேன் இங்கு வராதே; அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். எனக்கு நிகழ்ந்த துயரம் இன்னுமொரு தாய்க்கு நடக்க வேண்டாம்” என்று என்னிடம் மன்றாட்டமாகச் சொன்னார். அதற்குப் பிறகு அவளது வீட்டுக்குச் செல்வதை நான் நிறுத்திக்கொண்டேன்.
சிவரமணி தனது கடைசி நாட்களில் உளவளத்துணை பற்றிய கற்கை நெறியினை யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டிருந்த ‘சாந்திகம்’ எனும் உளவளத்துணை நிலையத்தில் கற்றுக்கொண்டிருந்தாள். அங்கு பயின்றவர்களில் அவள்தான் குறைந்த வயதினைக் கொண்டவள். அவளது ஆணித்தரமான, துணிச்சலான, வெளிப்படையான கருத்துக்களினால் கவரப்பட்டுத் தன்னை அவர்கள் ‘ஒளியுமிழும் நட்சத்திரம்’ எனச் செல்லமாக அழைப்பதாகவும் அவள் கூறியிருந்தாள்.
சிவரமணியும் நானும் சேர்ந்து பல இலக்கியங்களை ஒன்றாக இருந்து ஆங்கிலத்தில் வாசித்து அவை பற்றிச் சிலாகித்து மகிழ்ந்திருக்கிறோம். சில சமயங்களில் அதற்கும் ஒருபடிமேலே போய் ஒரு படைப்பு இருவேறு எழுத்தாளர்களால் எவ்வாறு மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து வியந்து, விதந்திருக்கிறோம். அக்காலக் கட்டங்களில் எமக்குக் கிடைத்த சர்ரியலிசக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகளை வாசித்து, ரசித்து விவாதித்துப் பின்னர் நாங்களிருவரும் இவ்விரு முறைகளிலும் கவிதைகள் எழுதி அவற்றை உரத்து வாசித்து ரசித்துச் சிரித்தும் மகிழ்ந்திருக்கிறோம். பல்கலைக்கழகங்களில் மாணவ நண்பர்களிடையே ஏதேனும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும்போது அதன் திட்டமிடல் குழுவில் பங்குபற்றுபவர்கள் பலர் அந்நிகழ்ச்சியினை நடாத்தும்போது உரிய நேரத்திற்கு வரவோ அல்லது உரிய வகையில் தமது பங்களிப்பினைச் செய்யவோ தவறிவிடும் சந்தர்ப்பங்களிலெல்லாம், சிவரமணி நிகழ்ச்சி ஒருங்கமைவுக் கூட்டங்களுக்கு மட்டுமன்றி நிகழ்ச்சியின்போதும் முன்வந்து பின் செல்பவர் என்றும், எல்லா வேலைகளையும் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுபவர் என்றும் சிவரமணி பற்றிய அவரது நண்பரான ஜெயசங்கர் எமக்கிடையிலான அண்மைக்கால உரையாடல் ஒன்றின்போது குறிப்பிட்டிருந்தார்.
சிவரமணி இறப்பதற்கு முதல்நாள் எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் பரிமாறிக்கொண்ட விடயம் எழுத்தாளர் ஆதவன் எழுதிய புத்தகங்கள் பற்றியதே. அவரது ‘காகிதமலர்கள்’ எனும் நூலில் வரும் செல்லப்பா எனும் பாத்திரத்தின் தற்கொலை பற்றிய எண்ணங்களை நாம் உரையாடும்போது தற்கொலை ‘ஒரு கோழைத்தனமான செயல்’ என்று நான் கூறியபோது ‘இல்லை - அது ஒரு கோழைத்தனமான செயல் இல்லை. இந்தச் சமூகத்திடமிருந்து அதன் எதிர்பார்ப்புகளுடன் முரண்பட்டு அதனுடன் ஒத்துப்போக முடியாதபோது அதனுடன் சமரசம் செய்ய முடியாத நிலையில் ஒருவர் எடுக்கும் மிகத்துணிச்சலான முடிவு’ என்று சிவரமணி கருத்துத் தெரிவித்தாள். எனினும் அவளது தற்கொலைக்குக் காரணமான பொதுவான காரணங்களுடன் முக்கியமான பிற காரணங்கள் என நான் ஊகிக்கும் விடயங்கள் தொடர்பில், ‘இரகசியம் காப்பேன்’ எனும் தீவிர நம்பிக்கையுடன் அவள் என்னுடன் பகிர்ந்துகொண்ட பல விடயங்கள் இருப்பதால், அவளது இழப்பு ஏற்படுத்திய தாளாத துயரத்தினை அடிமனத்தில் ஒருபோதுமே ஆறாத, ஆற்றுப் படுத்தமுடியாத வடுவாகச் சுமந்தபடி எஞ்சிய காலங்களை வாழ்வதற்கு மட்டுமே நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.
இந்த நினைவுகளை மறுபடி கிளறி விட்டமைக்காகவும், சிவரமணியின் பல நூற்றுக்கணக்கான கவிதைகளிலிருந்து எஞ்சிய சிலவற்றை ஒன்றுசேர்த்து ‘எஞ்சிய பகல்’ எனும் பெயரில் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறது பரிசல் பதிப்பகம்.
மேலும் சிவரமணியின் கவிதை களைக் கண்டுபிடித்துப் புதிய வற்றையும் இணைக்க அதனை மறுபடி தொகுக்க, அகிலன் முயன்றதைத் தனிப்பட்ட முறையில் அறிவேன். முன்னர் சித்திரலேகா மௌனகுருவால் தொகுக்கப்பட்ட சிவரமணியின் கவிதை நூலிலுள்ள கவிதைகளைத் தாண்டிப் புதியவற்றை எட்டமுடியாததும் வருத்தத்திற்குரியதுதான். ஆனால் அகிலனது மிக விரிவான முன்னுரை சிவரமணியின் கவிதைகளை மிகப் பரந்துபட்ட சமூக அரசியல் கலை இலக்கியப் பின்புலத்துள் வைத்துள்ளது. அவ்வகையில் அது ஈழத்துக் கவிதை வரலாற்றுப் பரப்பினுள்ளும் – தமிழ்க் கவித்துவப் பரப்பினுள்ளும் அவரை நன்கு நிலை நிறுத்துவதற்கான அடிப்படைகளைத் திறந்துவிட்டுள்ளது.
அகிலன் தனது நூலை ‘ராஜினி திரணகமவிற்கும் – அன்னை பூபதிக்கும்’ சமர்ப்பித்ததன் மூலமாக சிவரமணியின் தலைமுறை கனவுகண்ட நிறைவேறாத ஓர் ஆசையையும் கோடிகாட்டி யிருக்கிறார். அதன்மூலம் நூலின் பரிமாணத்தை மேலும் அவர் அரசியல் நிலைப்படுத்தியுள்ளார். அதேவேளை தனது முன் குறிப்பிற் சிவகங்கா குறிப்பிடுவதுபோல அவரது குடும்பத்தினரிடம் இருந்து பிடுங்கப்பட்ட எஞ்சிய கவிதைகளை அவர்களோடு இணைப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு மனச் சாந்தியையும் ஏற்படுத்தியுள்ளார்.
இவற்றையெல்லாம் உற்றுக் கவனிப்பவர் இக்கவிதைப் புத்தகத்தின் தலைப்பு நுண்மையாக அவரது வாழ்க்கையின் எல்லாத் தருணங்களோடும் பொருந்திப் போவதைத் காண்பர். அவளது நீங்கா நினைவுகளையும் – கவிதைகளையும் மறுபடி எடுத்துவந்தமைக்காக அகிலனுக்கும் பரிசல் பதிப்பகத்துக்கும் நன்றியும் வாழ்த்தும்.
மின்னஞ்சல்: maithilyu@yahoo.ca