போரும் கூத்தும்
முல்லைத்தீவு, வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் திருவிழாக் காலத்தில் முள்ளியவளையில் கோவலன் கூத்து ஆடுவார்கள். சிலப்பதிகாரக் கூத்து அது; வழிபாட்டின் ஒருபகுதியாகவும் கலையாகவும் இங்கு மட்டுமே ஆடப்படுகிறது. தமிழகத்திலோ வேறெங்குமோ இந்தக் கூத்து ஆடப்படுவதில்லை என்றே எண்ணுகிறேன்.
2006ஆம் ஆண்டு ஒரு இரவில் நானும் கவிஞர் அகிலனும் திருமாஸ்டரும், (ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு), விரிவுரையாளர் அருந்தாகரனும் கோவலன் கூத்து பார்க்கப் போனோம். போகிற வழியில் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய ஊர்களைக் கடந்து முல்லைத்தீவு நகருக்குப் போய்ப் பின்னர் அங்கிருந்து முள்ளியவளை போனோம்.
இந்த ஊர்கள் எல்லாமே வரலாற்றில் வலிநிறைந்த அத்தியாயங்களை எழுதுமென்று எங்களுக்கு அப்போது தெரியாது. போர் எப்போதும் வரலாம் என்றிருந்த அன்றைய சூழலில் இனி எப்போது மீண்டும் இந்தக் கூத்தைப் பார்ப்போம் என்பது குறித்த ஐயம் மட்டும் எங்களிடம் இருந்தது. இ