விளிம்புநிலை மக்கள் வரலாறும் உ.வே.சாமிநாதையரும்
உ.வே. சாமிநாதையர் பன்முக ஆளுமை கொண்டவர். பதிப்பாசிரியர், உரைநடையாளர் என்னும் இரண்டு ஆளுமைத் திறன்கள் முக்கியமானவை. பதிப்பு முன்னுரைகள், ஆராய்ச்சியுரைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதம் முதலிய வகைகளில் அவர் எழுதியவை பத்தாயிரம் பக்கங்களுக்கும் மேற்பட்டவை. அவற்றின் வழியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி ஆகிய காலகட்ட வாழ்க்கையை அவருடைய அனுபவத்திற்கும் பார்வைக்கும் உட்பட்டு விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
உ.வே.சா. ஸ்மார்த்த பிராமணர் என்னும் பிரிவைச் சேர்ந்தவர். தந்தையைப் பின்பற்றி இசை பயின்று கதாகாலட்சேபம் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தவர். பெரும் வித்வான்கள் பலரிடம் தமிழ் பயின்று பின்னர் அக்காலத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் விரிவாகக் கற்றவர். அவர் வாயிலாகத் திருவாவடுதுறை மடத்தின் தொடர்பு கிடைத்து அதன் ஆதீனகர்