பெருவலி
வானில் மேகத்தின் சிறு கீற்றும் இல்லை. திசைகள் புலனாகாமல் வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல விரிந்திருக்கிறது. பார்த்தால் விழி கருகிப்போய்விடும் தகிப்புடன் சூரியன் சுழன்று கொண்டிருக்கிறது. மணல் வெளியெங்கும் கானல் அலை புரள்கிறது. உரக்க ஊளையிட்டு வரும் காற்றில் மணல் பறந்து இடம் மாறுகிறது. ஒரு மணற் சுழலில் அகப்பட்டு இருக்கிறேன். சுழன்று உயர்ந்த மணல் தூண்களாக நிற்கின்றன. எழுந்து நடக்க முயலும் முன்பு மணற் தூண்கள் என்னை நெருக்குகின்றன. கூண்டுக்குள் விழுகிறேன்.
நா வரள்கிறது. வியர்வை பொங்கி உப்புக் கற்களாக மாறி உடலில் தைத்து நிற்கிறது. கூண்டுக்கு வெளியில் தண்ணீர் நிரப்பிய தோற் பைகளுடன் சிறுவர்கள் நிற்கிறார்கள். அவர்களை நோக்கிக் கையசைத்து தண்ணீருக்காகக் கெஞ்சுகிறேன். அவர்கள் என்னைப் பார்க்க முடியாதபடி மணற் புயல் நடந்து போகிறது. குரல் எழாமல் அரற்றுகிறேன். வாய் பிளந்து ஒரு துளி நீருக்காக மன்றாடுகிறேன்