‘ரோஜா’ மனம்
‘ரோஜா’ மனம்
களந்தை பீர்முகம்மது
இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்
அப்சல்
வெளியீடு
இருவாட்சி
(இலக்கியத் துறைமுகம்)
41, கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை - 11
பக். 232
ரூ. 250
இந்திய அரசியல், பண்பாட்டுக் களங்களைத் தொட்டவுடன் மின்சாரத்தைத் தொட்டதுபோல மதவாதம் ஒவ்வொருவரையும் தூக்கி வீசுகிறது. குடிமக்கள் காவிநிறத்திலும் பச்சை நிறத்திலும் உருக்கொண்டு திரிவதுபோன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றது ஃபாசிசம். இச்சூழ்நிலையில் வெளிவந்திருக்கின்ற நூல் அப்சல் எழுதிய, ‘ இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்.’
இந்தியத் திரைப்படங்களில் முஸ்லிம்கள் சித்திரிக்கப்படும் விதத்தை வருந்தி அல்லது கோபப்பட்டு எழுதியிருப்பார் இதன் ஆசிரியர் என்ற எண்ணம் வந்தது. கோபத்தை வெளிப்படுத்த ஏன் 232 பக்கங்களில் புத்தகம் அமைய வேண்டும் என்ற எதிர்மறை எண்ணமும் உண்டானது.
புத்தகத்தை வாசித்துமுடித்தபின் நம்முடைய எண்ணங்கள் முழுவதும் மாறிவிடுகின்றன. அச்சத்திலும் அவநம்பிக்கையிலும் உறைந்துகிடக்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு இந்நூல் சோபனத்தை வழங்குகின்றது. அடிப்படையில் இந்தியத் திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்கானவை. திரைகளில் நாயகர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு வில்லன்களும் முக்கியமானவர்கள். போதைப் பொருளைக் கடத்துவோர், தங்கக் கடத்தல்காரர்கள், கள்ளநோட்டு அச்சடிப்பவர்கள், பாலியல் தொழில் புரிபவர்கள்... என இருந்த இந்தியத் திரைப்படங்களின் வில்லன்கள் 1990களின் ஆரம்பத்தில் மறைந்துவிடுகிறார்கள். அந்த இடத்தை நிரப்புவதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள் வந்தார்கள். அழுக்கேறிய நீண்ட அங்கிகள், முரட்டுப் பார்வைகள், தலைக் குல்லாய்கள், வன்முறை முழக்கங்களும் கையெறிக் குண்டுகளுமான குணாம்சங்களில் இவர்கள் வந்தார்கள். இக் கதாபாத்திரங்கள் உருவானபின் சமூகப் பிரச்சினைகள் குப்பைக் கூளங்களாயின. படங்களில் தேசபக்த முழக்கங்கள் ஓயாமல் ஒலித்தன. நவீன காலத் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒலியமைப்புகள் இக்கதைகளுக்குப் பொருத்தமாக அமைந்தன. பக்கவாட்டு ஒலிபெருக்கிகளில் நாரசமான ஓசைகள்; அவை நரம்புத் தளர்ச்சிக்குத் துணைகோலின. எல்லாம் தீவிரவாதிகளின் உபயங்கள். ரசிகர்களை அம்மட்டோடு வழியனுப்பிவைக்காமல், தேசபக்த வெறியோடும் திரையரங்கிலிருந்து வெளியேற்றினார்கள்.
தேசபக்த நீரோட்டம் நல்ல வருவாயை, ஆளும் வர்க்கத்திடம் மிதமிஞ்சிய செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. இதற்காகத் தனிவகைப்பட்ட கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஒரு வரிசை உருவானது. இப்போக்குகளின் மூல வேராக இருந்தவர் இயக்குநர் மணிரத்னம்; படம் - ரோஜா. இந்திய முஸ்லிம்களின் கழுத்துகளில் எரிவளையத்தை மாலையாகப் போட்டது ‘ரோஜா’. இது வந்ததன்பின் இனி முஸ்லிம்கள்தான் படங்களின் வில்லன்கள் எனும் போக்கு வலுப்பெற்றது. இது நிகழ்த்திய மாயம் என்னவெனில், முஸ்லிம்களின் அணுக்க நண்பர்களாகக் கருதப்பட்ட கமல்ஹாசன், விஜயகாந்த் போன்றவர்களும் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்ததாகும். இஸ்லாத்தின் பண்பாட்டை அந்த முஸ்லிம்களுக்கே வாத்தியார்களாக இருந்து இவர்கள் போதிக்கலாயினர். தமிழில் தோன்றிய இவ்வகைத் திரைப்படங்கள் அகலக் கால் வைத்து இந்தியா முழுமைக்கும் பரவின. கலையுலகில் நிகழ்த்தப்பட்ட இத்தகைய பிரிவினைவாதம், நாட்டில் விரிந்துவளர்ந்துகொண்டிருந்த ஃபாசிச இயக்கங்களின் அரசியல் வெற்றிக்கு நீர் ஊற்றியது.
இன்று இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மையை வகுப்புவாதம் நிர்ணயம் செய்கின்றது. இவ்வாறு வளர்ந்துவிட்ட போக்கைக் கடும் விமர்சனத்தோடு எதிர்கொள்கிறார் நூலாசிரியர் அப்சல். அதற்காக அவர் எரிகணைகளைக் கையில் எடுக்கவில்லை. இந்தியத் திரைப்படங்களின் வரலாற்றையும் அது அவ்வப்போது நிகழ்த்திய சமய நல்லிண உரையாடலையும் அதற்காகப் பாடுபட்ட உண்மையான நாட்டுப்பற்றாளர்களின் சாதனைகளையும் தக்க ஆதாரங்களோடு முன்வைக்கிறார். இப்பொருண்மையைக் கையாள இதைவிடச் சிறந்த வாதம் வேறெதுவுமில்லையென உணர்ந்துகொள்கிறோம். நூற்றுக்கணக்கான படங்கள், இயக்குநர்கள், கலைஞர்கள், அவற்றின் தயாரிப்பாளர்கள் என அவர் மளமளவென்று எடுத்துரைக்கும் ஆதாரங்கள் நாட்டின் ஒற்றுமையை, வலிமையைக் கட்ட விரும்பும் ஒவ்வொருவருக்கும் உவகையளிக்கும். அரசியல், கலையுலகத் தளங்களில் தமக்கெதிராக வலிந்துகட்டப்படும் ஃபாசிச அபாயம் கண்டு உள்ளூர அஞ்சியிருக்கும் ஒரு முஸ்லிமுக்கு இந்நூல் மிகுந்த நம்பிக்கையையும் துணிவையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளிக்க வல்லதாக இருக்கின்றது.
முஸ்லிம்களைச் சமூக நீரோட்டத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்குப் பல திரைப்படங்கள் முயன்றுவந்த வேளையில் அதற்கு நேரெதிரான படங்களும் தயாராகிவந்துள்ளன. இந்தித் திரையுலகின் பெரும்பெரும் சாதனைகளைப் படைத்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த அணியில் முன்னணி வகிக்கிறார்கள். அதிகாரத்தை எதிர்கொண்டு உண்மையைப் பேசியவர்கள் அவர்கள். முஸ்லிம் விரோத படங்கள் மூன்று கட்டங்கள் என வகைப்படுத்தி, அதற்கான வரிசையில் படங்களைக் கொண்டுவருகிறார்.
மணிரத்னம் உருவாக்கிய போக்கை முறியடிப்பதற்கு முஸ்லிம் கலைஞர்களும் தம்மால் இயன்ற அளவுக்கு உழைத்துள்ளனர். இவற்றைத் தமிழ்ப் படங்களைக் கொண்டு அளவீடு செய்ய இயலாது. இந்தித் திரைப்படங்களில் உருவாகிய இந்துத்துவ, எதிர் இந்துத்துவப் போக்குகளைக் கொண்டு கணிக்க வேண்டும். ஆனால் திரைப்படக் கலை ஒரு குடிசைத் தொழிலன்று. கலைஞர்களின் பட்டாளம் தேவை. எண்ணற்ற தொழில்நுட்பங்களைத் திறமையாகப் பயன்படுத்துகின்ற வல்லுநர்கள் தேவை. இவர்களை ஒருங்கிணைக்கின்ற இயக்குநர்களும் படத் தயாரிப்பு நிறுவனங்களும் தேவை. இக் கூட்டுமுயற்சியில் வகுப்புவாதக் கண்ணோட்டவாதிகள் இருப்பார்களானால், படங்களின் ஆன்மா சிதைவுற்றுவிடும். ஒவ்வொருவரும் தம்தம் தொழில்நேர்மையோடும் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டாக வேண்டும். அப்படியான போக்குகள் இங்கே உருவாயினவா?
இந்தக் கேள்விக்கு ‘ஆமாம்’ என்று பதிலளித்து நூற்றுக்கணக்கான ஆதாரங்களைக் கொடுக்கிறார் அப்சல். இந்துத்துவ அபாயத்தை எதிர்கொண்டு முஸ்லிம் கலைஞர்கள் மட்டும் போராடவில்லை. இவர்களுக்குத் துணையாக, வாங்கும் சம்பளத்தைக் கருதியும் இந்துக் கலைஞர்களோ தொழில்நிபுணர்களோ பங்கேற்றிடவில்லை. தம்முடைய சொந்த நாட்டுப் பற்றுக்காக இந்துச் சமூகக் கலைஞர்கள், இயக்குநர்கள், படத் தயாரிப்பாளர்கள் வேறுவேறு ராஜபாட்டைகளில் பயணம் செய்துள்ளார்கள். பாகிஸ்தானை எதிர்மைச் சக்தியாக முன்னிறுத்திப் படம் தயாரித்தால் இந்தியாவில் கோடிகளைக் குவித்துவிடலாம் என்ற வணிகக் கண்ணோட்டத்தில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன; அவை எதிர்பார்த்த வசூலை அள்ளியிருக்கின்றன. இதற்கெதிராகப் பாகிஸ்தானையும் இந்திய முஸ்லிம்களையும் நட்புச் சக்திகளாகக் கருதியும் இந்துச் சமூகக் கலைஞர்கள் படங்களை எடுத்து மாபெரும் வசூலை ஈட்டியிருக்கிறார்கள். முன்னர் குறிப்பிட்ட வகையினர்க்கு வசூலும் நிம்மதியான வாழ்க்கையும் உத்தரவாதம்; ஆனால் அடுத்த வரிசைக் கலைஞர்களுக்கு இவை இரண்டுமே உறுதிசொல்லப்பட முடியாதவை. ஆயினும் தம்மையும் தம் வாழ்க்கையையும் பணயம்வைத்துப் படங்களை எடுத்து வென்றுள்ளார்கள். பின்வரிசைக் கலைஞர்களின் செயற்பாடுகள்தாம் இன்றைய இந்தியாவின் ஆன்மாவாகும்.
இந்தித் திரைப்படங்களில் இந்த மாதிரியான எதிரெதிர் ஆட்டங்கள் நிகழ்ந்துள்ளனவா என்று என்னைப்போன்ற திரைப்பட ஆர்வலர்களுக்கும் கூடத் தெரியாது. ஆனால் அப்சல் வரிசையாகப் பலவற்றையும் ஆவணப்படுத்துகிறார். தன்னுடைய பள்ளிப் பருவம் தொட்டு, இந்நாள்வரை ஆயிரக்கணக்கான இந்தி, மலையாள, தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார். இவற்றையெல்லாம் தான் ஆவணப்படுத்தப் போகிறோமென்கின்ற உணர்வுப்பாட்டில் இதனை அவர் செய்யவில்லை. கலா ரசிகராகப் படங்களைப் பார்த்திருப்பதைத் தவிர, வேறொரு நோக்கமும் அவருக்கு இருந்ததில்லை. ஆனால் இந்துத்துவக் கலைப் போக்குகள் உருவானபின், தனக்கெதிராகவும் இப்படங்கள் பேசுகின்றன என்று அவர் உணர்கிறார். உடன் அவருடைய கடந்த காலமும் பலப்பலப் படச்சுருள்களாக இம்மியளவு வெட்டுமில்லாமல் நூல்பிடித்து ஓடியிருக்கின்றது. அந்த அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் என்னை வியக்கவைத்த செய்தி தனிப்பட்ட வகையிலானது. நூலாசிரியரை நான் நன்கறிவேன். இத்தனையித்தனைப் படங்களைப் பார்த்து ரசித்திடும் அளவுக்கு அவருடைய வாழ்க்கையில் பணபலம் இருந்ததில்லை. அன்றாட வாழ்க்கையும் போராட்டம். இப்படியான ரசிகரை ஒரு கட்டத்தில் இந்துத்துவம் தன் பாட்டுக்குத் தன் எதிரியாகத் தள்ளிவைக்க முயன்றிருக்கின்றது. இந்தியத் திரைகள் இப்படியான காவி வண்ணத்தில் இருந்ததில்லையே என்ற கேள்வி அவர் மனத்தில் எழவும், தான் உணர்ந்துகொண்ட இந்தியாவின் திரை வரலாற்றை எழுதித் தீர வேண்டுமென்ற ஆர்வம் உந்தித் தள்ளிட, இந்நூலை எழுதியிருக்கிறார்.
படங்களைக் கூறுவதுபோல இந்தியத் திரை வரலாற்றை விவரிப்பது சிறப்பானது. அதே சமயம் சர்வதேச ரீதியாக ‘இஸ்லாமோபோபியா’ செயல்படும்போது சமூகச் செயல்பாடுகளைச் சிந்திக்காமல் முஸ்லிம் சமூகம் முடங்கிக் கிடக்கின்றது; இதை ஆசிரியர் வன்மையாகக் கண்டனம் செய்கிறார். நவீனத்துவச் சிந்தனைகள் பக்கம் தலைகாட்டவில்லை முஸ்லிம்கள். தமக்கான கலைவடிவங்கள் ஏதேனும் உண்டா என்றும் சமூகம் ஆர்வம் காட்டவில்லை. சமூகத்தின் பெரும்பகுதி மார்க்க நெறிகளை வறட்டுத்தனமாகப் பேசித் தன் ஆற்றலை விரயம் செய்வதை ஒரு கலையுள்ளம் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?
இருப்பினும் முஸ்லிம் சமூகத்தின் ஹலால் - ஹராம் விளையாட்டுக்குள் தம்மைச் சிறைப்படுத்திக்கொள்ளாமல் முஸ்லிம் கலைஞர்கள் தம் அறிவு வளத்தோடு போராடுகிறார்கள். அவர்களின் துணையாகப் பெரும்பான்மைச் சமூகமும் உள்நுழைகின்றது. இவற்றைச் சமூகத்திற்குச் சொல்வது அவசியமென்று கருதி, கொரோனா முடக்கம் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆய்வுநூலாக இதை எழுதியுள்ளார். இந்த நூல் இன்றைய முஸ்லிம்களின் சுவாசத்தை இலகுபடுத்தியுள்ளது.