கல்வித்துறையில் மாற்றங்கள் உருவாகுமா?
கல்வித்துறையில் மாற்றங்கள் உருவாகுமா?
கொடுந்தொற்றுக் காலத்தில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்பு வரை ஒவ்வொரு பிரிவு மாணவர்க்கும் ஒவ்வொருவிதமான பாதிப்பு. கல்விக்கூடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருத்தல், வலைவகுப்பு தொடர்பானவை, தேர்வுகள், மேற்படிப்புச் சேர்க்கை என எல்லாவற்றிலும் சிக்கல்கள். ஆசிரியர்களுக்கும் பலவிதமான பிரச்சினைகள். அவ்வப்போது எழும் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வு கண்டால் போதாது. இவற்றை ஆழ்ந்து ஆராய்ந்து தெளிவான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது. 2020 -2021ஆம் கல்வியாண்டு முழுவதும் பலவிதக் குழப்பங்களோடு கழிந்துபோயிற்று. தொற்றின் மூன்றாம் அலை பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் 2021-2022ஆம் கல்வியாண்டையாவது முறையாகத் திட்டமிட்டால் எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.
மாணவர்கள் வீட்டிலேயே இருப்பதால் கல்விச் சூழலிலிருந்து அந்நியமாகியுள்ளனர். சிறுவர்கள் கல்வியிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளனர். பதின்பருவத்தினர் பலர் வெவ்வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர். இளவயதுத் திருமணங்கள் கூடியிருக்கின்றன. மீண்டும் கல்விக்கூடங்கள் முறையாகத் திறக்கப்படும்போது இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் கூடும் வாய்ப்புள்ளது. சமூக வலைத்தளங்களில் நேரத்தை அதீதமாகச் செலவழித்தலும் பெருகியுள்ளது. வலைவிளையாட்டுக்களுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை மிகுதி. எல்லோருடனும் கலந்து பழகும் கல்விக்கூடச் சூழலில் இப்போது இல்லாத மாணவர்கள் தம் சாதியினரோடு மட்டும் பழகி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
வலைவகுப்புகள் பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. தேர்வுப் பிரச்சினை இல்லையென்பதால் வகுப்பில் மாணவர்கள் கவனம் குவியவில்லை. உயர்வகுப்பு, நடுத்தரப் பிரிவுப் பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுப்பதாலும் தனியார் நிறுவனங்கள் தம் கட்டணத்தை வசூலிக்க வேண்டியிருப்பதாலும் அப்பிரிவு மாணவர்களுக்கான வலைவகுப்புகள் சரியாக நடப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் அடித்தட்டு மாணவர்கள் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோரின் கவனம் கிடைக்கவில்லை; வலைவகுப்புக்குத் தேவையான வகைச் செல்பேசிகள் கைவசம் இல்லை; இணைய இணைப்புக்குப் பணமில்லை; இணைய இணைப்புக் கிடைப்பதில்லை; இப்படிப் பல பிரச்சினைகள். குறிப்பாக உட்கார்ந்து பாடம் கவனிப்பதற்கான இடப் பிரச்சினை பெரிதாக இருக்கிறது. ஒற்றை அறையோ இரு அறைகளோ கொண்ட வீட்டில் வசிக்கும் இவர்கள் எங்கே அமர்ந்து வகுப்பைக் கவனிக்க முடியும்? கல்விக்கும் தனித்திருத்தலுக்குமான தொடர்பைப் பெரும்பாலும் குடும்பத்தினர் உணர்வதில்லை. உணர்ந்தாலும் இடத்தை உருவாக்கித் தர இயலாத நிலை. பொதுவெளிகள் அற்ற சாதியச் சமூகத்தில் தம் குடியிருப்புப் பகுதியைக் கடந்து செல்ல இயல்வதில்லை.
வலைவகுப்புகள் தொடர்பான ஒருமையும் இல்லை. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வகையில் வகுப்புக்கு ஏற்பாடு செய்கின்றனர். ஒவ்வோர் ஆசிரியரும் அவரவருக்கு வசதியான செயலியைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு செயலியிலும் இருக்கும் வசதிகள் அனைத்தையும் அறிவதற்கான பயிற்சி ஆசிரியர்களுக்கும் இல்லை; மாணவர்களுக்கும் இல்லை. புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிய ஒவ்வாமையும் கற்றுக்கொள்வதில் சுணக்கமும் ஆசிரியர்களிடம் நிலவுகிறது. சில சமயத்தில் மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் கற்றுக்கொள்ளும் நிலைமை வருகிறது. அதை ஆசிரியர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. படவில்லைகளைப் பயன்படுத்துதல், ஒலி ஒளிப் பேழைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முறையான தயாரிப்பும் உழைப்பும் தேவை; குறைந்தபட்ச ஆசிரியர்களே இத்தகைய திறன்களைப் பெற்றிருக்கின்றனர்.
கணிதம், அறிவியல், இலக்கணப் பாடங்களை வலைவகுப்பில் நடத்துவது கடினம் என ஆசிரியர்கள் கருதுகின்றனர். அப்படியல்ல, தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டால் வலைவகுப்பு மேலும் சிறப்பாக அமையும் என்பதை இன்னும் நாம் உணரவில்லை. மாணவர்களும் வலைவகுப்புகளைக் கவனிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆசிரியரின் தொடர்குரல் தானாக ஒலித்துக்கொண்டிருக்க மாணவர்கள் வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆசிரியராயினும் மாணவராயினும் சரி, நேரடி வகுப்புக்கே பழக்கப்பட்ட மனதையும் உடலையும் வலைவகுப்புக்கு மாற்றுவது எளிதல்ல. அதற்குக் கூடுதல் முயற்சியும் பயிற்சியும் அவசியம்.
பள்ளி வகுப்புகளுக்குத் தேர்வு ஏதும் நடத்தாமலே தேர்ச்சி அளிக்கும் முறையை அரசு கையாள்கிறது. இது எதிர்காலத்தில் எத்தகைய பிரச்சினைகளைக் கொண்டு வரும் எனத் தெரியவில்லை. உயர்கல்வி மாணவர்களுக்கு வலைவழித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வில் ‘பார்த்து எழுதுதல்’ தண்டனைக்குரிய கடுங்குற்றமாகக் கருதப்பட்ட சமூகத்தில் இன்று பார்த்து எழுதும் வகையிலான வலைவழித் தேர்வு அங்கீகரிக்கப்படுகிறது. பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இதில் உவப்பில்லை. மாணவர்களிடமோ இதற்குப் பெரும் வரவேற்பு உள்ளது.
இதுநாள்வரை நேரடியாகப் பார்த்து எழுதுவதற்கு வாய்ப்பான வகையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன. அதே வகை வினாத்தாளை வலைவழித் தேர்வுக்கும் பயன்படுத்துவது பற்றி ஆசிரியர்களிடமோ பல்கலைக்கழகத்திடமோ எந்தவிதமான பரிசீலனையும் இல்லை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மட்டுமல்லாமல், பெருநிறுவனங்கள் தம் பணியாளர்களைத் தேர்வுசெய்ய வலைவழித் தேர்வுகளை நடத்துகின்றன. நம் நாட்டிலும் தேசிய அளவிலான பல தேர்வுகள் வலைவழியில் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கின்றன. அத்தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிக்கும் முறையைப் பயன்படுத்தினால் ‘பார்த்து எழுதும்’ பிரச்சினை இருக்காது. பெரும்பாலும் மாணவர் தம் சுயசிந்தனை அடிப்படையில் பதில்களை எழுத நேரும்; அதை நோக்கிய சிறு அடிவைப்புக்கூட இல்லை.
இப்போது பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வுக்கு வினாத்தாள் அச்சிடத் தேவையில்லை, விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டியதில்லை, தேர்வுக் கண்காணிப்பாளர் வேலையில்லை, அனுப்புதலுக்கும் பெறுதலுக்குமான போக்குவரத்து நடைபெறுவதில்லை. மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்க வேண்டிய வேலை மட்டும்தான். ஆனால் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை ஒரு பைசாக்கூடப் பல்கலைக்கழகங்கள் குறைக்கவில்லை. தொற்றுக் காலகட்டத்தில் வாழ்க்கை முறை பிறழ்ந்து உணவுக்கே அரசு தரும் நிதியுதவியை, இலவசப் பொருட்களை, மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழலில் நேரடித் தேர்வுக்கு வசூலிக்கும் தொகையையே வலைவழித் தேர்வுக்கும் வசூலிப்பது இரக்கமற்ற சுரண்டல். விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கும் மதிப்பூதியத் தொகையையும் நிறுத்தினால் ஆசிரியர்கள் எவரும் போராடப் போவதில்லை. தேர்வுக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு உதவ வேண்டும்.
மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. பெரும் போட்டி நிலவும் மருத்துவப் படிப்புச் சேர்க்கை பெரும்பிரச்சினையை உருவாக்கும் போலிருக்கிறது. நீட் நுழைவுத்தேர்வு பற்றியும் தெளிவில்லை. இந்நிலையில் மாணவர்கள் என்ன செய்வது என்று தடுமாறுகின்றனர். பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த கல்வியாண்டில் இணைய வழியிலேயே நடைபெற்றது. அப்போது நேர்ந்த சிக்கல்களைக் களைந்து இவ்வாண்டு சேர்க்கையை எளிதாக்கி நடத்துவது பற்றிய திட்டங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுவோம் என்று கூறும் இப்போதைய அரசு கல்வித்துறை விஷயங்களை வெளிப்படையாக அறிவித்து மாணவர்களும் பெற்றோர்களும் முன்கூட்டியே தயாராக வாய்ப்பளிக்க வேண்டும்.
நம் பாடத்திட்டம், கற்பித்தல் முறை, தேர்வு, மதிப்பெண் ஆகியவற்றின் காரணமாக மாணவர்கள் எத்தகைய மன அழுத்தத்தில் இருந்தனர் என்பதை இந்தக் காலகட்டம் தெளிவாக உணர்த்தியிருக்கிறது. தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெறுதல், பாட நூல்களைப் பார்த்துத் தேர்வு எழுதுதல் ஆகியவை மாணவர்களிடம் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றுள்ளன. அப்படியானால் ஏற்கனவே இருந்த நடைமுறைகள் பற்றிப் பரிசீலனையை இக்காலம் கோருகிறது. ஆனால் பள்ளிக் கல்வித்துறையும் உயர்கல்வித் துறையும் அவ்வப்போதைய பிரச்சினைகளைத் தற்காலிகமாகச் சமாளித்துக்கொண்டு பெரும்பாலும் முடங்கிய நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது.
அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பணிகளை மேற்கொள்ளாமலே ஊதியம் பெறுகின்றனர் என்னும் பொதுமனக் கருத்தை மறுத்துவிட முடியாது. சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை ஆகியவற்றின் பணியாளர்களை ஒப்பிடும்போது ஆசிரியர்களின் இக்காலம் பணியில்லாக் காலமாகவே இருக்கிறது. தனியார் நிறுவன ஆசிரியர்கள் பணிகளை மேற்கொண்டும் போதிய ஊதியம் இன்றி வாடுகின்றனர். பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை விடாமல் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதைக் கடமையாகக் கருதவில்லை. இத்தனை காலம் ஈட்டிய லாபத்திலிருந்து சிறிதளவையும் செலவு செய்யத் தயாரில்லாத் தனியார் நிர்வாகங்கள், இத்தொற்றுக் காலத்தில் தம் ஊழியர்களைச் சுரண்டிக் கூடுதல் லாபமீட்ட முயல்கின்றன. இவற்றில் அரசு தலையிட வேண்டியது அவசியம்.
அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்த வேண்டியதில்லை. வீட்டிலிருந்தே கல்விசார்ந்த பணிகளில் ஈடுபடச் செய்யலாம். புதிய தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெறுதல், அதற்கேற்ற பயிற்றுவித்தல் கருவிகளைத் தயாரித்தல், வலைவழி வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வத்தோடு ஈடுபடும் வழிமுறைகளைக் கண்டறிதல், அவர்களோடு தொடர்ந்து தொடர்புகளைப் பேணுதல், பெற்றோரிடம் பேசுதல், பாடத் திட்டங்களைப் பரிசீலித்தல், புதிய வகை வினாத்தாள்களைத் தயாரிக்க முயலுதல் என இத்தொற்றுக் காலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் ஒன்றிரண்டு வகுப்பு மாணவர்களை மட்டும் வாரம் ஒருமுறை எனச் சுழற்சி முறையில் கல்விக்கூடங்களுக்கு வரவழைக்கலாம்.
முப்பது விழுக்காடு, ஐம்பது விழுக்காடு அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்பதுபோல ஆசிரியர்களுக்கும் குறைந்தபட்ச விழுக்காடு நிர்ணயித்துக் கல்விக்கூடங்களுக்கு வரவைக்கலாம். மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவர் சேர்க்கை நடத்துதல் ஆகிய பணிகளுக்காக ஆசிரியர்கள் சிலரைப் பள்ளிக்கு வரும்படிக் கூறினால்கூட ஆசிரியர் சங்கங்கள் எதிர்க்கின்றன. பொதுப்போக்குவரத்து இல்லாமல் எப்படி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று சங்கங்கள் கேட்கின்றன. பெண்கள் உட்படப் பெரும்பாலான ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். வாரத்தில் ஒருநாள் பள்ளிக்கு வர வீட்டில் உள்ளோர் உதவி செய்வார்கள். ஆனால் சங்கங்கள் பொதுப்போக்குவரத்தைக் காரணம் காட்டிப் பள்ளிக்கு வருவதை மறுக்கின்றன. பொதுப்புத்தியில் ஆசிரியர்களைப் பற்றிப் பதிந்துள்ள எண்ணத்தை மாற்றுவதற்குக் குறைந்தபட்ச முயற்சிகூடச் செய்யாமல் அதை வலுப்படுத்தும் வகையில் சங்கங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. தொழிற்சங்கங்கள் இப்படித்தான் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போகின்றன. முறை வைத்துக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளுடன் கல்விக்கூடங்களுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும். கற்பித்தலுக்கான தயாரிப்புப் பணிகளைக் கல்விக்கூடத்திலிருந்தே மேற்கொள்ளலாம். கல்விக்கூடங்களில் நடமாட்டம் இருப்பது அவசியம். இத்தகைய நடைமுறைகளை ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கலாம். இப்படி அனைத்துத் தரப்பினரும் இணைந்து கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பல.
பல்வேறு குழுக்களை அமைத்துப் பிரச்சினைகளையும் அவற்றின் பல கோணங்களையும் விவாதித்து நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் இக்கல்வியாண்டைக் காலத்துக்கேற்ற வகையில் மாற்றிச் சிறப்புறச் செய்யலாம். புதிய அரசின் பார்வை கல்வித்துறையில் மாற்றங்களை உருவாக்குமா?