கருத்துரிமை: புலப்படாத அச்சுறுத்தல்கள்
தலையங்கம்
கருத்துரிமை: புலப்படாத அச்சுறுத்தல்கள்
அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டம் இது. இன்றைய மனித குலத்தை நாகரிகச் சமூகமாகவும் நாம் நம்புகிறோம். கருத்துச் சுதந்திரம் நாகரிகச் சமூகத்தின் அடையாளமாகும். ஆனால் அந்த நாகரிகச் சமூக அடையாளங்களே நாகரிகமற்ற விளைவுகளுக்கும் காரணமாகின்றன. அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் வழங்கிய சமூக வலைதளங்கள் மூலமே கருத்துரிமைக்குச் சவால்களும் ஏற்பட்டுள்ளன. மாற்றுக்கருத்துடையோரை மோசமாகச் சித்திரித்தல், அவற்றைத் தொடர்ந்து பரப்புதல், பிற கருத்துகளைச் சகித்துக் கொள்ளாதிருத்தல் போன்றவையும் சமூக வலைதளங்களின் பண்பாடாக மாறியிருக்கிறது. அதிகாரமுடையவர்களாலும் குறிப்பிட்ட குழுக்களாலும் ஏன் அரசாலும் கூடச் சகிப்பின்மை வெளிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு பறிக்கப்படும் கருத்துரிமைக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்துப் புதிய பரிமாணங்களைக் கண்டறிந்து அதன் எல்லைகளை விரிவாக்குவது அவசியமானது. கருத்துச் சுதந்திரம் மீறப்படும்போதெல்லாம் தொடர்ந்து அதைப்பற்றி நாம் விவாதித்தும் வந்திருக்கிறோம்.
சமூக வலைதளச் செய்திகள் அன்றாடத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்கான நிகழ்வுகளாகிவிட்டன. அண்மையில் பெங்களூரிலிருந்து நவீன் என்பவர் முகநூலில் இஸ்லாமியத் தரப்பைப் பற்றி எழுதி வந்ததும், அதற்குப் பதிலளித்து இஸ்லாமியத் தரப்பு எழுதி வந்ததும் நடந்திருக்கிறது. பிறகு அயோத்தியில் ராமர்கோவிலுக்கான அடிக்கல் நாட்டிய சம்பவத்தையொட்டி நபிகளை இழிவு செய்யும் நோக்கிலும் எழுதப்பட்டது. பெங்களூரில் கலவரம் ஏற்பட்டு அது அடங்க மூன்று நாட்கள் ஆயின. இந்த வன்முறைக்கான காரணி முற்றிலும் சமூக வலைதளத்தில் உருவாகி உச்சம் பெற்றது. தங்கள் கருத்துக்கு மாற்றான கருத்துடையவராய் இருப்பதாலேயே ஒரு பெண்ணின் படத்தைத் திரித்துப் பிரசுரித்து முகநூலில் மோசமாகப் பிரச்சாரம் செய்ய முடிகிறது.
இந்தச் சிக்கல்களைவிட இதன் பரிமாணத்திலுள்ள கூறுகள் இன்னும் அபாயமானவையாகத் தெரிகின்றன. எதிர்ப்பவர் யார், எதிர்க்கருத்தை உருவாக்குபவர் யார் போன்ற விவரங்கள் தெரிவதே இல்லை. அது உண்மையா, பொய்யா என்று தெரிவதற்குள்ளே அச்செய்தி எல்லாரையும் சென்றடைந்து விடுகிறது. முகம் தெரியாத ஒருவர் பதிவிடுகிறார்; முகம் தெரியாதவர் பார்க்கிறார்; முகமறியாதவர் பரப்புகிறார். கருத்துக்கும் வதந்திக்கும் இடையேயான இடைவெளி முற்றிலும் அழிந்துபோயிருக்கிறது. எல்லாரையும் ஒரே மாதிரி எதிர்வினை செய்பவர்களாக மாற்றிவிட்டதே இக்காலத்தின் சாதனை. சுதாகரிப்பதற்குள் எல்லாம் நடந்துமுடிந்துவிடுகின்றன. இச்சூழல் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதற்கான வாய்ப்பை மறைமுகமாகக் கட்டுப்படுத்துகிறது.
அதேவேளையில் சமூக வலைதள யுகத்தைப் புறக்கணித்துவிட முடியாது. அதை நாம் இன்றைய சூழலில் விவாதிக்க வேண்டியிருக்கிறது. பலரும் சமூக வலைதளக் களத்திற்கு வந்திருக்கிறார்கள். முதிர்ச்சியும் முதிர்ச்சியின்மையும் சேர்ந்து வெளிப்படுகின்றன. இதில் முகமறியாத ஒருவரின் கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. பல நேரங்களில் அதற்கு எவ்விதமான ஆதாரங்களும் இருப்பதில்லை. இன்று எந்த ஒரு செய்தியையும் ஒரு குழு நினைத்தால் பரப்பிவிட முடியும்.
அடிப்படைவாதம் ஓர் அமைப்பாக இயங்க வேண்டிய அவசியமே இல்லை; ஒரு கருத்தைப் பதிவிட அவ்வாறு இயங்க முடியும். ஒரு கருத்தைப் பதிவிடத் தெரிவதாலும் அதிகம் பேரைப் பகிரவைப்பதாலும் ஒருவர் வலிமை பெற்றுவிட முடிகிறது. முன்பு ஒரு குழுவோ கட்சியோ ஜாதியோ அச்சுறுத்தும். பிறகு அந்த அச்சுறுத்தலுக்குப் பொறுப்பேற்கும். அதன்படி அவற்றின்மீது புகார் அளிக்கலாம்; மறுக்கலாம். அச்சுறுத்தும் கூட்டத்தின் திட்டம் என்னவென்றும் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அப்படிப் புரிந்துகொள்ள முடியாது. சமூக வலைதளம் தனக்கே உரிய விஷயங்களையும் பார்வைகளையும் அணுகுமுறைகளையும் கட்டமைக்கிறது.
இன்றைய சமூக வலைதள யுகம் நமது கருத்தைப் பரப்ப ஜனநாயக வெளியைக் கட்டமைத்துத் தந்திருக்கிறது. எனவே அதை முடக்குவதை ஆதரிக்க முடியாது. ஆனால் அதுபற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். சமூக வலைதள யுகத்தை எதிர்கொள்வதைப் பற்றி யோசிக்க வேண்டும். நம்முடைய கல்வித்திட்டத்தில் சமூக வலைதளப் பண்பாடும் கற்பிக்கப்பட வேண்டும். அரசின், சட்டத்தின் பாதுகாப்பைவிட நம்மை நாமே நெறிப்படுத்திக் கொள்வதே கருத்துச் சுதந்திரத்தை உயிர்ப்போடு பாதுகாக்க உகந்ததாக அமையும்.