உண்மையும் திரிபும்
எதிர்வினை
உண்மையும் திரிபும்
ஜூன் இதழில் ‘பெங்களூர் குறிப்பு’ என்ற பகுதியில் “ஆ. இரா. வேங்கடாசலபதியின் தமிழ் கதாபாத்திரங்கள்” என்ற தலைப்பில் ப. சகதேவன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். அந்தக் கட்டுரை 2019 செப்டம்பர் 21 அன்று பெங்களூர் பன்னாட்டு மையத்தில் நடந்த கலந்துரையாடல் குறித்த பகிர்வு ஆகும். அந்நிகழ்வுக்கு நானும் சென்றிருந்தேன். தமிழ்நாட்டில் வசிக்கும் ஒருவரால் தமிழ்நாட்டின் தலையெழுத்தை அசைத்துப் பார்த்த அரசியல் ஆளுமைகளையும், தமிழுக்குப் பெரும் பங்களித்த இலக்கிய, கலை ஆளுமைகளையும் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலுக்கு அண்டை மாநிலத்தில் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் அரங்கம் நிறைந்திருந்தமை ஒருவித நெகிழ்வினைக் கொடுத்தது.
கிட்டத்தட்ட ஒருமணிநேரத்துக்கும் மேலாக நடந்த கலந்துரையாடலில் அந்தப் புத்தகத்தின் முக்கிய பகுதிகளை அறிமுகம் செய்யும் வண்ணம் சந்தன் கௌடா கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி தெளிவாகப் பதில் சொன்னார். கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல அவர் எங்கும் தடுமாறவில்லை. இந்த எதிர்வினையை எழுதும் பொருட்டு மறுபடியும் அந்தக் கலந்துரையாடலை ஓரிரு முறை மீண்டும் கேட்டேன். நிகழ்வில் ஆ.இரா. வேங்கடாசலபதி மிகக் கூர்மையாகவும் தெளிவாகவும் பேசியதாகவே எனக்குத் தோன்றுகிறது. கலந்துரையாடலில் மட்டுமல்ல, அதன் இறுதியில் கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்குமேல் கேள்விகளுக்காக அரங்கு திறந்துவிடப்பட்டபோது கேட்கப்பட்ட அறிவுபூர்வமான பல கேள்விகளுக்கும் தங்கு தடையற்ற பதில்களைச் சொல்லியிருந்தார் ஆ.இரா. வேங்கடாசலபதி. ஆகவே ‘வேங்கடாசலபதி அடுத்துவந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குத் தடுமாறினார்’ என்று ப. சகதேவன் குறிப்பிடுவது ஏனென்று தெரியவில்லை.
‘சமுதாயத்தின் எல்லா நோய்க்கூறுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகமே காரணம் என்று சொல்லி அவர்கள்மீது மிக விகாரமாக அவதூறு சுமத்தியது ஏன்?’ இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை என்று சகதேவன் தனது கட்டுரையில் சொல்கிறார். சலபதியின் பதில்கள் எல்லாமே கேட்ட கேள்விகளுக்குப் பொருத்தமாகவும், அவரது புத்தகத்திலுள்ள கட்டுரைகளின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் இருந்தன. ஒரு புத்தகத்தின் அறிமுக விழாவின்போது புத்தகம் மீதான ஈர்ப்பையும் சுவாரஸ்யத்தையும் அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைத்தானே செய்ய முடியும்? அந்தக் கலந்துரையாடலின் நோக்கமும் அதுதானே. அதனையே சந்தனும் சலபதியும் செய்தனர். நிகழ்வில் பார்வையாளர் என்ற முறையில் அங்கு கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் வேங்கடாசலபதி சரியாகவே பதில் சொன்னதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சந்தேகமுள்ளவர்கள அந்த நேர்காணல்/கலந்துரையாடலின் பதிவைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.
கட்டுரையில் ‘தமிழரின் தேசியகுணமாக எதைச் சொல்வீர்’ என்று சந்தன் கேட்டதாகச் சொல்கிறார். இந்தக் கேள்விக்கு மிக அருகில் வரும் சில கேள்விகள் (தமிழ் நாட்டின்/தமிழரின் தனித்துவம், எது உண்மையான தமிழ் உணர்வு) சந்தனால் அரங்கில் கேட்கப்பட்டன. அக்கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்களை சலபதி ஆழமாகவும் விரிவாகவும் வரலாற்றுச் சான்றுகளோடு சொல்லியிருந்தார். மேலும் இந்தக் கேள்விக்கு இன்ன பதில் சொல்லியிருக்கலாம் என்று ஒருவர் குறிப்பிடுவது எந்த அளவு உவப்பானது? தமிழ் ஆளுமைகளைப் பற்றிய கலந்துரையாடலின்போது தமிழர் எந்தவிதத்தில் வித்தியாசமானவர்கள் (உதாரணத்துக்கு சமீபத்திய தேர்தல் முடிவைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்), தமிழ் மொழி எப்படி தனித்துவமானது என்றே குறிப்பிட முடியும். அதை விடுத்துத் தனிப்பட்ட தேசியகுணம் ‘உணர்ச்சிவசப்படுதல்’ என்று தமிழினத்தைத் தாழ்த்திச் சொல்ல அதுவும் தமிழ் அல்லாத மண்ணில் சொல் அறிவுறுத்துவதை எந்தக் கணக்கில் சேர்க்க வேண்டுமென்று தெரியவில்லை.
‘திராவிட இயக்க எழுச்சியின்போது அசலான எழுத்தாளர்கள் எங்கு போனார்கள்?’ இந்தக் கேள்வியும் அசலாக சந்தன் கேட்ட கேள்வியிலிருந்து கொஞ்சம் திரிபடைந்ததுதான். “திராவிட எழுச்சி இலக்கியத்துக்கு என்ன செய்தது (அ) திராவிட எழுச்சியின்போது இலக்கியம் எப்படி இயங்கியது / அதற்குப் பங்களித்தது” என்ற கேள்வியின் விரிவான பதிலின்போது “அந்தக் காலகட்டத்தில் எழுதிய முக்கியமான எழுத்தாளர்களால் எப்படி திராவிடச் சிந்தனையிலிருந்து ஒதுங்கியிருக்க முடிந்தது?” என்று சந்தன் கேட்டார். இதையே ப. சகதேவன் மேல் சொன்னவாறு திரித்துச் சொல்கிறார்.
சந்தன் கேட்ட கேள்விக்குத் தனது பார்வையாக சலபதி திராவிட இயக்கத்தின்போது எழுதியவர்கள் பெரும்பாலானோர் சார்ந்த சமூகம், பிற சமூகத்தவரின் தீவிரமான பங்களிப்புகள் எழுத்தின் போக்கு, திராவிடச் சிந்தனையை ஒட்டியிருந்த புதுமைப்பித்தனின் தீவிர எழுத்து முறை எனச் சொன்ன பதில் எல்லாமே சந்தன் கேட்ட அசல் கேள்விகளுக்குப் பொருத்தமானவை. ஆனால் ப. சகதேவன் தான் சொல்ல வேண்டிய பதிலுக்கான கேள்வியைப் புனைந்துகொண்டு இந்தக் கட்டுரையை எழுதத்தொடங்கினாரோ என்ற சந்தேகம் எழுகிறது. வெகுசன இலக்கியம், தீவிர இலக்கியம் என்ற இரண்டும் எவ்வாறு நிகழ்ந்தது என்ற பதிலுக்கான கேள்வியாக ‘திராவிட இயக்க எழுச்சியின்போது அசலான எழுத்தாளர்கள் எங்கு போனார்கள்?’ என சந்தன் கௌடா கேட்டாரென்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியே ‘திராவிட இயக்க எழுச்சியின்போது அசலான எழுத்தாளர்கள் எங்கு போனார்கள்?’ என்ற கேள்வியைச் சந்தன் கேட்டிருந்தாலும் வேங்காடசலபதி பதில் வேறுவிதமாக இருந்திருக்கலாம்.
ஒரு கேள்விக்கு இதுதான் பதில் என அல்ஜிப்ரா, டிரினாமேட்டிரிக்ஸ் போன்ற கணித அறிவியல் சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது மட்டுமே சாத்தியம்.
இதையும் தாண்டி “சத்தியத் தேடலில் ஓர் ஆய்வாளனுக்குரிய இன்றியமையாத தேவை அவனது கறாரான நடுநிலைமைதான்.” தமிழ் கதாபாத்திரங்கள் என்ற புத்தகத்தை வாசித்துப் பார்த்தாலே வேங்கடாசலபதியின் கறார் நோக்கும், தீவிரமான நடுநிலையும் தெளிவாகும். ‘Symbol politics’ என்று கலைஞரையும், ‘dramatic public expressions’ என்று ஜெயலலிதாவையும் குறிப்பிடுவதாக சந்தன் கௌடாவே கலந்துரையாடலின்போது சொன்னார். தீவிரமான தமிழனாக இருந்துகொண்டு ஆய்வாளராக ஆ.இரா. வேங்கடாசலபதி இருப்பதே பிரச்சனை என்று ப. சகதேவன் தனது வரிகளில் சொல்லியிருப்பதே இந்தக் கட்டுரைக்குக் காரணம் என்பது கண்கூடு.
நிகழ்வின்போது வேங்கடாசலபதிக்குக் கிடைத்த மரியாதையும், கேள்விகளுக்கான பதில்களை அவர் தன்னுடைய வழக்கமான பாணியில் நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சொன்ன விதத்தை இங்கே குறிப்பிட வேண்டும். மேலும் நிகழ்வு முடிந்து ‘Tamil Charecters’ புத்தகத்தை நிறையபேர் வாங்கிச் சென்றதன் மூலமே இந்த நிகழ்வின் வீச்சை அறிந்துகொண்டிருக்க முடியும். எனக்குத் தெரிந்து அந்தக் கூட்டத்துக்குத் தமிழர் அல்லாத பலரும் வந்திருந்தனர். அவர்கள் மத்தியில் தமிழ் ஆளுமைகளின் அறிமுகமும் தமிழ் எழுத்தின் சிறப்பும் கொஞ்சமேனும் நிகழ்த்தப்பட்டது என்று நான் நம்புகிறேன். பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அ. மாதவய்யா போன்ற பல ஆளுமைகளைப் பற்றி வேங்கடாசலபதி பேசினார். அதில் பலருக்கு இந்த ஆளுமைகள் பற்றி முதல்முறை கேட்கக்கூடிய வாய்ப்பாக இருந்திருக்கலாம். மேலும் தமிழ் மொழி எவ்வாறு தனித்துவமானதென்றும் (உயிர் மெய் எழுத்துகள், இலக்கணங்கள், எண்வகை மெய்ப்பாடுகள்) பேசினார். அதேபோல அரசியல் ஆளுமைகளின் பகுதியிலும் பல சுவாரஸ்யத் தகவல்கள் பரிமாறப்பட்டன.
அந்த நிகழ்வின்போது பேசப்பட்ட விஷயங்களின் இடையிடையே அண்டை மாநில மொழி ஆளுமைகளையும் (வைக்கம் பஷீர், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்), அயல்நாட்டு மேதைகளையும் (ஒஷோ போலிஸ் ஜூ) சார்ந்த எண்ணற்ற குறிப்புகளையும் எடுத்தாண்டு விரிவாகப் பேசியதோடு பேசிய அனைத்தையும் தனது கட்டுரைகளில் இணைந்து பார்க்க சலபதி ஒரு திறப்பை வைத்தார். இதற்குச் சிறிய உதாரணமாக எம் ஜி ஆர் பற்றிச் சொல்ல கணித மேதை ராமானுஜத்தைக் குறிப்பிட்டுப் பேசியதைச் சொல்லலாம். இதேபோலப் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஆளுமைகள் இருக்கின்றனர், ஆனால் ‘தமிழ் கதாபாத்திரங்கள்’ போன்ற புத்தகம் அந்த ஆளுமைகளைப் பற்றிப் படிக்க நமக்குக் கிடைக்கிறதா? அப்படிப்பட்ட ஒரு பெருமையைத் தமிழுக்குச் சேர்த்திருக்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி அந்த அரங்கில் பேசிய செறிவான விஷயங்களைப் பாராட்டாவிடினும் அங்கே உண்மையாக நடந்ததைச் சித்திரித்து, தனது பார்வையைச் சகதேவன் முன்வைத்திருக்கலாம் என்பதே என் அவா.
லாவண்யா சுந்தரராஜன்
பெங்களூரு