கடிதங்கள்
கடிதங்கள்
கல்வித்துறைக் குழப்பங்கள் தலையங்கம் மிகச் சரியாக எழுதப்பட்டுள்ளது. எந்தவிதமான திட்டமிடலும் தயாரிப்பும் ஆலோசனையும் கலந்துரையாடலும் நடத்தப் படாமல் திடீர் திடீரென ஊடகங்கள் வாயிலாக அறிவிக் கப்ப்படுகின்ற அறிவிப்புகள் பலவும் பல்வேறு குழப்பங்களைக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் தினம் தினம் உருவாக்கி வருவது கல்வித்துறையின் தற்போதைய நிலையாக இருப்பதை எண்ணி வருத்தப்பட வேண்டிய தாக உள்ளது.
தலையங்கத்தில் குறிப்பிட்டதுபோல பத்தாம் வகுப்பு மாணவர்களோடு பெற்றோர்களும் தேர்வு சம்பந்தமாக அடிக்கடி வந்த அறிவிப்புகளினால் ஆடிப் போனார்கள். நோய்த்தொற்று உச்சத்தில் இருக்கும் சூழ்நிலையில் தேர்வை எப்படி நடத்த முடியும் என்கின்ற முன்யோசனை கூட இல்லை; அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது வரை எண்ணற்ற குழப்பங்களும் குளறுபடிகளும் பொது மக்களை உலுக்கியெடுத்துவிட்டன.
ஆன்லைன் வகுப்பு என்கின்ற பெயரில் தனியார் பள்ளிகள் மாணவர்களைக் கணினி, கைப்பேசிகள் முன் அமரவைத்து கட்டணத்தை மிகச்சரியாக வசூல் செய்துவருகின்றன. கைப்பேசியில் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் செவிமடுத்துக் கேட்டுக் குழப்பங்களுக்கு எல்லாம் சரியான முடிவு காண்பதே மிகச் சரியாக இருக்கும். தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளினால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்காத வகையில் சரியான திட்டமிடலுடன் கூடிய எதிர்காலச் சவால்களைச் சந்திக்கும் நிலையைக் கல்வித்துறை விரைந்து முன்னெடுக்க வேண்டியது தற்காலத் தேவையாக உள்ளது என்பதைத் தலையங்கம் மிக அழகாக விளக்கியுள்ளது.
கூத்தப்பாடி பழனி
தருமபுரி
காலச்சுவடு மார்ச் இதழுக்குப் பிறகு. சூலை மாத இதழ் கிடைக்கப்பெற்று மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என் போன்ற மூத்த வாசகனுக்கு மின்னூலில் படிக்க முடியவில்லை. காலச்சுவடு இதழை ஆரம்பம் முதல் வாங்கி வருகிறேன். இலக்கிய இதழ்களில் தனித்து இயங்கி வரும் காலச்சுவடு நீடுழி வாழ்க! வளர்க!
ஏ.கே. பாலு
பெங்களூரு
ஆசி. கந்தராஜாவின் ‘நரசிம்மம்’ சிறுகதையானது, வைராக்கியம் மிகுந்த ஒரு முன்னாள் பெண்போராளியின் வாழ்க்கையைக் கண்முன்னே நிறுத்துகிறது. நரசிம்மம் என்னும் குறியீட்டுத் தலைப்புடனும், தோற்றத்துடனும் கதையைத் தொடர்பு படுத்தியவிதம் வியக்கவைக்கிறது. கதையின் போக்கு பேரினவாதத்தின் சிந்தனைச் சீர்கேட்டை வெளிச்சம்போட்டுக் காட்டும் அதே சமயம், கதையின் இறுதியில் மறைபொருளான உண்மை, வாசக அனுமானத்திற்காக விடப்பட்டுள்ளது. முடிவை ஊகிக்க முடியாதவாறான கதைசொல்லலும், கடைசி சில வசனங்களைக் கொண்டே வாசகர் மனத்தில் ஆழமான அகஉணர்வின் அலைகளை ஆக்குவித்தலுமான ஆசிரியரது அனுபவ யுக்தி, இங்கும் மிகத் துல்லியமாக உணரப்படுகிறது.
இந்தத் தாய் புனிதவதி தன் மகனுக்கு வைத்த பெயரால் பேரினவாதி களுக்குக் கூற நினைக்கும் செய்தி மிகமிகக் கூர்மையானது. ஆயினும், ஆசி. கந்தராஜா அவர்களின் எழுத்துக்கள் பற்றி உறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு கேள்வியும் உண்டு. போர்க்களத்தின் பின்புலத்தில் ஆழமாக இறங்கி இதுவரை கருத்துச் சொன்னதில்லையே. ஏன்,” என்பதே அது.
“இறுதிப் போரின் வலியும் உணர்வும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. தமிழுணர்வானது வெளிவீசத் துடிக்கும் வீறுகொண்ட எரிமலையாகவும், திட்டமிட்டு வலிந்து மழுங்கடிக்கப்படும் உணர்வாகவும் உருமாறி, இருமுனைத் தோற்றம் பெற்றாலும் கூட, இன்னும் உயிர்ப்போடு வாழும் எண்ணங்கள் அவை என்பது வெளிப்படை. நிலைமை இவ்வாறிருக்க, போராட்ட காலத்தில் அங்கு வாழாத நான் அதைப்பற்றிக் கேட்டறிந்து எழுதினால் பெரும் தார்மீகப் பிழைகள் நேர வாய்ப்புண்டு. அது தர்மம் ஆகாது . இதையே இன்னும் சில தசாப்தங்களின் பின் அடுத்த தலைமுறையில் ஒருவர் எழுதினால் அவ்வாறு நேராது” என்ற அவரது பதிலை மிகவும் நேர்மையானதாகவும் நியாயமாகவும் நான் உணர்ந்தேன்.
ரஞ்ஜனி சுப்ரமணியம்
கொழும்பு
எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட கைகலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்த நிலையில் ‘பீகாரிகள் ராணுவத்துக்குப் பெருமை சேர்க்கிறார்கள்’ என்று புகழ்பாடி பீகார் தேர்தலுக்கு அடித்தளம் போட்டார். தமிழக வீரர் பழனியின் வீர மணத்தை நினைவிற்கொண்டு நம்மைக் குளிர்விப்பதாக எண்ணி லடாக் சென்று திருக்குறளை மேற்கோள் காட்டினார். ‘இந்தியர்கள்’ என்று பாரத மாதா கீ ஜே சொல்லும் கையோடு பீகாரிகள் என மாநில அளவுக்கு நடிப்பதற்கு இதுதானா நேரம்?
செய்தியாளர்களை நேரில் சந்திக்க அஞ்சி நடுங்கும் மோடி தொலைக்காட்சி, வானொலியில் வீராவேசமாகப் பேசுவார். எவரும் கேள்வி கேட்காதவாறு எவ்விதமான பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் அறிவிக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கான திட்டங்களைக் கணக்கின்றி வெளியிட, அறிவிக்கப்படாத அவசர நிலையாகக் கொரானாக் காலத்தைப் பயன்படுத்தும் வல்லமை மோடிக்கே உண்டு.
சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினர் கூட இல்லாமல் மாநிலத்தை பாஜக கையில் தந்துவிட்டுச் சேவகம் செய்வதில் எடப்பாடியை மிஞ்ச எவருமே இல்லை. கொரோ வந்த புதிதில் ‘பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் நோய் இது’ என்றார் நம் முதல்வர். சரியான திட்டமிடல், தொலைநோக்குப் பார்வை ஏதுமில்லை. ஒரு கட்டத்தில் ‘கடவுளாகப் பார்த்து ஒழித்தால்தான் கொரோனா ஒழியும்’ என்று கூறி சானிடைசர் இல்லாமலேயே மக்களைத் தயங்காது கைகழுவி விட்டார்.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு - 626 132
இக்கட்டான சூழலிலும் வாசகர்களைக் கவனத்தில் கொண்டு இதழை வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கும், காலச்சுவடில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
அ. அஷ்ரஃப் அலி
பெங்களூரு