ஊரடங்கிலும் அடங்காத சாதிய வன்முறைகள்
தலையங்கம்
ஊரடங்கிலும் அடங்காத
சாதிய வன்முறைகள்
சாதியமைப்பு அழியாத வரையில் அதன்பேரிலான வன்முறைகளும் இழப்புகளும் நிற்காது. எனவே அதற்கு எதிரான போராட்டங்களும் விழிப்புணர்வும் தேவைப்படுகின்றன. மனிதகுலத்தை முடக்கியுள்ள கொரோனா நாட்களிலும் இந்தியாவில் வேறு பிரச்சினைகள் இன்னும் பலமாகத் தலையெடுத்திருக்கின்றன. ஊரடங்கு காலத்திலும் சாதிவன்முறைகள் அடங்காமல் நடத்தப்பட்டு வருகின்றன. நாம் இணைந்திருக்க வேண்டிய இக்கட்டான தருணத்தில் இத்தகைய பாகுபாடுகள் தலையெடுத்திருக்கின்றன என்ற செய்தி, நாம் எத்தகைய பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்பான ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ வெளியிட்டிருக்கும் அறிக்கை பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஊரடங்குக் காலத்தில் தமிழகத்தில் நடந்த சாதி - தீண்டாமை வன்முறைகள் அறிக்கையில் விரிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. 82 வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. கொலைகள் (14), மலக்குழி மரணங்கள் (4), பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் (5), ஆணவப்படுகொலைகள் (2), சாதி கடந்து மணம் புரிந்தவர்கள் மீதான தாககுதல்கள் (5), தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அவமரியாதை (3), கல்வி நிலையங்களில் தீண்டாமை (1), மயானப் பிரச்சினைகள் (2) அரசுப் பணியாளர்கள் காட்டிய பாரபட்சம் (3), அம்பேத்கர் சிலைகளுக்கு அவமரியாதை (2), கொத்தடிமைத் தொழில் (1), தாக்குதல் (41) என்று அவை பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டிக் கையெழுத்து இயக்கத்தை நடத்தித் தமிழக முதல்வரிடமும் கவனஈர்ப்பு விண்ணப்பத்தை அளித்துள்ளது அந்த அமைப்பு.
ஆனால் பட்டியலைவிடவும் அதிர்ச்சியானது எதுவென்றால், இந்த வன்முறைகள் தமிழகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாததுதான். சாதி வன்முறைகளை சிவில் சமூகம் மட்டுமல்ல அரசியல் சமூகமும் இயல்பாகப் பார்த்துக் கடக்க ஆரம்பித்துவிட்டதை அது காட்டுகிறது. இப்போக்கு உண்மையெனில் அதுதான் கவலைப்பட வேண்டிய விசயம். இது மாற வேண்டும். இந்த வன்முறைகளை நம்முடைய சமூகத்தின் அவமானமாகக் கருதும் பொதுவான மனப்போக்கு உருவாக வேண்டும். அதற்கான வலுவான பிரச்சாரங்களும் அமைப்புகளும் ஆளுமைகளும் தேவை.
ஆனால் நம்முடைய அரசியல் சமூகம் தேர்தல் அரசியலுக்கு ஏற்ப மட்டுமே தங்களின் நடைமுறைகளை வகுத்துகொள்பவையாக மாறிவிட்டன. இந்தப் பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டி, மாற்றாக எழுந்த தலித் அமைப்புகளும் அதே சூழலில் சிக்கிவிட்டது துரதிர்ஷ்டமான விசயமாகும். கட்சிகளிடம் கண்டனம் என்ற அளவில்கூட எதிர்ப்பு கிடையாதா என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால் அவ்வாறு கேட்டவர்களிடம்கூட இதைத்தாண்டி இவ்விசயத்தில் செய்வதற்கான செயல்திட்டங்களும் யோசனைகளும் இல்லாததால் அக்கேள்விகளைத் தாண்ட முடியாமல் இருக்கிறார்கள்.
இந்த வன்முறைகள் பற்றி நிலவும் மௌனங்களுக்கும், தமிழ்ச் சமூகத்தில் தலித்துகள் பற்றிப் பரப்பப்பட்டுவரும் வெறுப்பரசியலுக்கும் தொடர்பு இருக்கிறது. அது சமூகக் களத்திலிருந்து அரசியல் களத்திற்கும் பரவி இப்போது கருத்தியல் களத்திற்கும் பரவிட்டது. இம்மூன்று களங்களுக்குமான வேறுபாடுகள் அழிந்து ஒன்றோடு ஒன்றாகிவிட்டன. அரசியல் களத்தில் பொதுவான நிலையில் நியாயப்படுத்தப்படாதிருந்த சாதியை வெளிப்படையாக நியாயப்படுத்திப் பேசும் போக்கு இப்போது எழுந்துள்ளது. நாடகக் காதல் என்ற பெயரில் தொடங்கிய வெறுப்புப் பிரச்சாரம் பின்னர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை இலக்காக்கியது. அச்சட்டம் தொடர்பான பிரச்சினைகளை விவாதத்திற்கு உள்ளாக்குவதற்கு மாறாக அச்சட்டத்தையே நீக்க வேண்டுமென்ற எதிர்நிலைக்கு ஒரு தரப்பினர் சென்றுவிட்டனர். ஆனால் அச்சட்டம் இருந்தும்கூட இந்த அளவிற்கு வன்முறைகள் தொடர்கின்றன என்கிறபோது அச்சட்டத்தை முன்வைத்து எழுப்பப்படும் எதிர் எண்ணங்கள் அதீதமாகவே தோன்றுகின்றன. அச்சட்டம் பற்றிய விழிப்புணர்வைத் தலித் மக்களுக்கும் ஒழுங்கு செய்துதர வேண்டிய வேளை இது.
இத்தகைய வெறுப்புப் பிரச்சாரங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராக இழப்பைப் பற்றி யோசித்திராத உரையாடல்கள் எழ வேண்டும். சாதி, மத, மொழி கடந்த லட்சியவாதங்கள் விலைபோகாத பழைய சரக்குகள் போலாகிவிட்டன. அம்பேத்கரும் காந்தியும் எதிரெதிரான களத்தில் செயல்பட்டாலும் மக்கள் உரிமை என்ற விசயத்தில் ஒத்த நோக்கைக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களை அறியாமலேயே ஒருவர்மீது மற்றொருவர் தாக்கம் செலுத்தினர். ஒரு தரப்பின் போதாமையை மறுதரப்பின் பங்களிப்பு நிறைவு செய்ய முன்வந்தது. இன்றைக்கு எந்தத் தரப்பிலும் காலத்தைத் தாண்டிச் சிந்திக்கும் தலைமை இல்லை. இது இந்தக் காலகட்ட அரசியலின் சூன்யநிலை. தலித் மக்களின் உரிமைகள் பிறருக்கு முரணானதல்ல என்பதை எடுத்துரைக்கும் உரையாடல்கள் இங்கு எழ வேண்டும். அதுவரையிலும் சட்டவாதம் ஒரு நிவாரணம் மட்டுமே. சமூகங்களுக்கிடையிலான புரிதலும் அதன்வழியான இணக்கமும்தான் இப்போதைய தேவை.