66 மில்லியன் சிறுமிகளின் குரல்
மதிப்புரை
66 மில்லியன் சிறுமிகளின் குரல்
சஹானா
நான் மலாலா
மலாலாவுடன் இணைந்து எழுதியவர்: கிறிஸ்டினா லாம்ப்.
மொழிப்பெயர்ப்பு: பத்மஜா நாராயணன்
காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001
பக். 304; ரூ. 375
மலாலா பாகிஸ்தானின் ஸ்வாட் வேலியில் பிறந்தவர். அந்தப் பகுதி அப்போது தலிபான்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் இருந்தன. பெண்கள்மீது அடக்குமுறைச் சட்டங்கள் திணிக்கப்பட்டிருந்தன. பெண்கள் வெளியே போகக் கூடாது, டிவி பார்க்கக் கூடாது, பாட்டு கேட்கக் கூடாது, பள்ளிக்கூடம் செல்லக் கூடாது, படிக்கக் கூடாது என்று பல சட்டதிட்டங்கள். மீறுபவர்கள் சவுக்கடி உட்படப் பல கடும் தண்டனைகளுக்கு உள்ளாயினர்.
சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் மலாலாவுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருந்தது. ஆர்வத்தை அவரது தந்தையும் ஊக்குவித்தார். மலாலாவின் தந்தை தடையை மீறி நடத்திக்கொண்டிருந்த குஷல் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மலாலா தினமும் போய்க்கொண்டிருந்தார். ஆர்வத்தைப் போலவே அவருக்குத் தலிபான்கள்மீது பயமும் இருந்தது. தண்டிக்கப்படலாம், கடத்தப்படலாம், கொல்லவும் படலாம். கூடவே அவரது தோழிகளையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பயந்துகொண்டிருக்கும் தோழிகளுக்குத் தைரியம் ஊட்டினார்.
இந்தத் தகவல்கள் தலிபான்களைப் போய்ச் சேருகின்றன. மலாலா என்ற பெயரும் கூடவே போய்ச் சேருகிறது. சுதாகரித்துக்கொண்ட மலாலா பி.பி.சி யின் பிளாக்கில் தனது பெயரை ‘குல்மக்காய்’ என்று மாற்றித் தலிபான்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். இவற்றை எழுதியது மலாலாதான் என்பதைத் தலிபான்கள் தெரிந்துகொள்கிறார்கள். “பள்ளிக்குப் போனால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று மலாலாவை மிரட்டிச் செல்கிறான் ஒருவன். அவருக்கும் குடும்பத்தினருக்கும் தலிபான்கள் தொல்லைகள் தந்தனர். தலிபான் எதிர்ப்பாளரான தந்தையின் நண்பர் ஒருவரை அவர்கள் சுட்டுக் கொன்றதைப்போல அப்பாவையும் சுட்டுவிடுவார்களோ என்னும் பயம் மலாலாவைத் தொடர்கிறது. இதனால் அவர்கள் தங்கள் சொந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு மாறினர். புதிய இடத்திலிருந்து பர்தாவுக்குள் புத்தகப் பையை மறைத்துவைத்துப் பள்ளிக்குச் செல்கிறார்.
பள்ளி முடிந்ததும் பள்ளி வாகனத்தின் சன்னலோரம் அமர்ந்து பனிநிறைந்த மலைகளைப் பார்த்து ரசித்துக்கொண்டே வீடு திரும்ப விரும்பினார். வழியில் ஒரு மருத்துவமனை விளம்பர போர்டை பார்த்து “என் வழுக்கை ஆசிரியருக்கு இங்கு ட்ரீட்மென்ட் எடுத்துத்தான் தலைமுடி வளர்ந்திருக்க வேண்டும்” என்று நண்பர்களுடனும் டிரைவர் மாமாவுடனும் கிண்டல் அடித்துச் சிரிக்கிறார். அப்போது மலாலாவுக்குத் தெரியாது தான் இனி ஒருபோதும் வீடு திரும்ப போவதில்லை என்பது.
குதூகலமாக வாகனம் வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்போது சிலர் வாகனத்தை நடுவழியில் நிறுத்துகின்றனர். டிரைவரிடம் “இது குஷல் ஸ்கூல் வண்டி தானே” என ஒருவர் கேட்டார். “வண்டியில்தான் குஷல் ஸ்கூல் என எழுதியிருக்கிறதே, என்ன முட்டாள்தனமான கேள்வி” என மனத்துக்குள் சிரித்துக்கொண்ட டிரைவர் “ஆமாம்” என்கிறார்.
தடதடவென வாகனத்துக்குள் ஏறுகிறார்கள். துப்பாக்கிகளைப் பார்த்தபோதுதான் அது தலிபான்கள் எனத் தெரிகிறது. “யார் மலாலா” என்று ஒருவன் கத்துகிறான். குழந்தைகள் அஞ்சி நடுங்குகின்றனர். அவர்களின் விழிகளில் பயம். அவர்கள் மலாலாவின் முகத்தைப் பார்க்கின்றனர். முகத்தை மறைக்காமல் இருந்தது அவர் மட்டும்தான். மிக அருகிலிருந்து அவரை மூன்றுமுறை சுடுகிறான் அவன். குண்டுகள் துளைக்கின்றன. தோழிகள் மீதும் குண்டுகள் பாய்ந்தன. மலாலா மயங்கிச் சரிகிறார். அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து,
மேல் மருத்துவத்திற்காக லண்டன் கொண்டு செல்லப்படுகிறார். லண்டனிலேயே மீண்டும் கல்விப் பயணத்தைத் தொடங்குகிறார்.
படிப்பின் மேல் உள்ள விருப்பம், தலிபானுக்கு எதிராகக் கையில் எடுத்த நோட்டுப் புத்தகம், பெண்கள் படிக்க வேண்டும் என்ற குறிக்கோள், அடக்குமுறைக்கு எதிராக எதிரொலித்த குரல், பெண் கல்விக்காக உயிர்விடத் துணிந்த செயல் போன்றவற்றுக்காக 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. மிகவும் இளம் வயதில் நோபல் பரிசுபெற்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். நோபல் பரிசுப் பணத்தைப் பெண்கள் கல்விக்காகச் செலவிட்டார். நோபல் உரையில் “இந்தப் பரிசு எனக்கு மட்டுமானது அல்ல, இந்த உலகத்தில் படிக்க வேண்டுமென்று ஆசைப்படும் எல்லாப் பெண்களுக்கும்தான். என் தோழிகள் என்னுடன் சேர்த்துச் சுடப்பட்டனர். ஆனால் அவர்களும் இன்று படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். குதிகால் உயர்ந்த செருப்பையும் சேர்த்து ஐந்து அடி இரண்டு அங்குலம் உள்ள தனியொரு பெண்ணாக நான் தோன்றினாலும், நான் ஒரு தனிப்பட்ட குரலல்ல. என்னுள் பலர் உள்ளனர். நான் மலாலா, அதே சமயம் நான் ஷாஸியாவும் கூட, நான் கைனத், நான் அமீனா.
“கல்வி மறுக்கப்பட்ட 66 மில்லியன் சிறுமிகளின் குரல். சிறுமிகள் ஏன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றும் அது ஏன் அவர்களுக்கு முக்கியமானது என்றும் சிலர் பல சமயங்களில் என்னிடம் கேட்பதுண்டு. அப்பொழுது, ‘அவர்கள் ஏன் செல்லக் கூடாது, அவர்களுக்கு ஏன் இந்த உரிமை இருக்கக் கூடாது என்பதுதான் அதைவிட முக்கியமான கேள்வி’ என்று நான் நினைப்பேன்’’ என்று பொறுமையாகக்
கூறினார்.
மலாலா தனது பதினெட்டாவது வயதில் ‘மலாலா ஃபன்ட்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். சிரியா, நார்தன் இங்கோனியா நாடுகளுக்குச் சென்று பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பல மேடைகளில் பேசி உணரவைத்தார். தலிபான் அமைப்பான ‘பொக்கேரா’ அமைப்பிடம் பெண் கல்வியின் அவசியம் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார். சிரியாவில் அகதிப் பெண்களுக்குப் பள்ளியை நிறுவி இருநூறுக்கும் மேற்பட்டோர் கல்வி கற்க உதவினார்.
மலாலா குறித்த செய்தி எங்கேனும் தென்பட்டால் உடனே கவனித்துவிடுவது எனது வழக்கம். ஒருமுறை செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும்போது அவர் பாகிஸ்தானுக்குப் பத்து நாள் பயணம் செய்த செய்தியையும், பழைய ஆசிரியைகள், தோழிகள் எல்லாரையும் கட்டி அணைத்து அழுதார் என்ற செய்தியையும் படித்தபோது அவரை இறுக அணைக்க வேண்டும் போலிருந்தது.
அவரது சமீபத்திய யூட்யூப் பேட்டி ஒன்றில், “இஸ்லாம் அமைதியைத்தான் போதிக்கிறது. தீவிரவாத அமைப்பில் உள்ளவர்கள் உண்மையான இஸ்லாமியர் அல்லர். இறைதூதர் நபி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்காதீர்கள் என்று சொன்னது உங்களுக்குப் புரியவில்லையா” என்று வினவினார். ஆனால் மலாலா ஒரு கிறிஸ்தவச் சிறுமி என்றும் அமெரிக்கக் கைக்கூலி என்றும் தூற்றப்பட்டிருக்கிறார்.
நான் 2013இல் பார்த்த மலாலா இப்போது இல்லை. அவர் இருபத்து மூன்று இளம்பெண். ஓங்கி வளர்ந்த மரம். தலிபான்களுக்கு இப்போது அவர் முற்றத்து முல்லை இல்லை, பரந்து விரிந்த பூந்தோட்டம். பாகிஸ்தானைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் வந்துவிடுகிறது மலாலாவின் ஞாபகம். என் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையைப் பார்க்கும்போதெல்லாம் மலாலா வாழ்ந்த ஸ்வாட் வேலி பள்ளத்தாக்கு தோன்றிவிடுகிறது. கன்னியாகுமரிக் கடலில் கால் நனைக்கும்போது என் கால் தொட்ட அலைகள் லண்டனில் மலாலா கால்களைத் தொடாதா என்று நினைத்துக்கொள்கிறேன். “தலிபான்கள் என்னுடைய கனவுகளை அழிக்க நினைத்தார்கள். ஆனால் அவர்களால் அழிக்க முடிந்தது என்னுடைய பலகீனத்தையும் நம்பிக்கையின்மையையும்தான். வலிமை, சக்தி, தைரியத்தை எனக்குள் விதைத்தது அவர்கள்தான்.” அச்சம் நீங்கிய அந்தத் தைரியமான குரல் எல்லாப் பெண் குழந்தைகளின் மனங்களிலும் எதிரொலிக்கிறது.
மலாலாவைச் சந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம். என்றாவது ஒரு நாள் சந்தித்துவிடுவேன் என்பது எனது நம்பிக்கை. கையில் துப்பாக்கி ஏந்திய தலிபான் “யார் மலாலா?” என்று கேட்க, ‘நான் மலாலா’ என்றார் அவர். “யார் சஹானா?” என யாராவது கேட்டால் “மலாலாவின் மாணவி” என்பேன் நான்.
மின்னஞ்சல்: sahanadv2000@gmail.com