கொரோனா காலத்து ஜனநாயகம்
தலையங்கம்
கொரோனா காலத்து ஜனநாயகம்
கொரோனாப் பிணிக் காலம், மனிதர் பங்கேற்கும் எல்லாத் துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய பாடங்களைக் கற்பித்திருக்கிறது. தனிமனிதர், சமூகம், அரசு ஆகியவை செயலாற்றும் வழிமுறைகளில் திருப்பங்களை உருவாக்கியுள்ளது. புதிய பாடங்களிலிருந்து படிப்பினைகள் மேற்கொள்ளும் சூழலை வலியுறுத்தியுள்ளது. நடைமுறைக்கு ஏற்றதும் அறிவியல் அடிப்படை கொண்டதுமான அணுகுமுறைகளைக் கைக்கொள்ளக் கட்டாயப் படுத்தியுள்ளது.
தனி மனிதர்கள் இடையில் குறைந்தபட்சமான குடிமை உணர்வையும் சமூகத்தில் கூட்டுப் பொறுப்பையும் இந்தத் துயர தினங்கள் தூண்டி விட்டிருக்கின்றன. அரசு அமைப்புகளுக்குப் பெருவாரியான மக்களுக்கான கடமையையும் பொறுப்பையும் உணர்த்தியிருக்கின்றன. சிக்கலான காலகட்டங்களில் ஓர் அரசு மக்களுக்கு ஆற்றும் பணிகளைப் பொறுத்தே அந்த அரசின் ஜனநாயக இயல்பை மதிப்பிட இயலும். அந்த நோக்கில் வரலாறு காணாத வகையிலான அறுதிப் பெரும்பான்மை பெற்று இரண்டாம் முறையாக அதிகாரத்துக்கு வந்த நரேந்திர மோடி அரசு இந்தியக் குடிமக்களைக் கொடூரமாக வஞ்சித்திருக்கிறது. இந்த வஞ்சனைக்குக் குடிமக்களும் தம்மையறியாமல் பலியாகி இருக்கிறார்கள். அரசும் அதிகார வர்க்கமும் கொரோனா அவலத்தை அச்சுறுத்தலுடன் சுட்டிக்காட்டி மக்களைக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக மாற்றியிருக்கிறது. ஏறத்தாழ அடிமைகளைப் போலவே நடத்துகிறது.
இதுவரையிலுமான இந்திய அரசியல் மக்களின் உரிமைகளை ஏற்கவும் மறுக்கவுமான செயல்பாடுகளைக் கொண்டிருந்தது. மோடி மிகுந்த தன்னிறைவுடன் கையாண்டுவரும் அரசியல், அரசு மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளைப் பேசுவதே இல்லை. மாறாக மக்களை அவர்களுடைய பொறுப்புகளைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறது. வேறு எந்தத் தருணத்தையும் விடக் கொடிய நோய்த் தொற்று பரவியிருக்கும் காலத்தில் மக்கள் தமது பொறுப்பை ஓரளவாவது உணர்ந்து செயல்பட்டார்கள் என்பதைக் காண முடியும். தனி மனிதர்களாகவும் சமூகமாகவும் அவர்கள் இயங்கியதன் மூலமே பெருமளவுக்கு நிகழ்ந்திருக்க வேண்டிய உயிரழப்புகள் தவிர்க்கப்பட்டன. ஆனால் ஒட்டுமொத்தக் குடிமக்களின் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய அரசு தனது பொறுப்பைக் கிருமி நாசினி உபயோகித்துக் கைகழுவிக் கொண்டது.
ஏறத்தாழ நூற்றிமுப்பது கோடி மக்களின் வாழ்வுக்குப் பொறுப்பேற்க வேண்டிய பிரதமர் ‘சகோதர சகோதரிகளே, உங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு’ என்று மறைமுகமாகச் சொன்னார். நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய தொலைக்காட்சி உரைகள் இந்தப் பொறுப்புத் துறப்பின் அப்பட்டமான அடையாளங்கள். தான் தலைமை ஏற்றிருக்கும் அரசு இந்த இக்கட்டான நிலைமையில் மக்களுக்கு என்ன செய்யவிருக்கிறது என்பதை ஒரு உரையில்கூட அவர் குறிப்பிடவில்லை. அது தனது ஜனநாயகக் கடமை என்பதைக் கிஞ்சித்தும் எண்ணவில்லை. மாறாக மக்கள் இன்ன இன்னதைச் செய்ய வேண்டும் என்றே ஆணையிட்டார்.
அறிவியல் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுக்குப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை முன்வைப்பதற்குப் பதிலாகக் கண்துடைப்பான செயல்களையே எடுத்துச் சொன்னார். விளக்கேற்றி வைக்கச் சொன்னார். கொரோனா ஒழிப்பில் முன் வரிசையில் நின்று போராடும் மருத்துவத் துறையினருக்கு நன்றி செலுத்தும் முகமாக மணியடிக்கவும் தாம்பாளத்தைக் கொட்டவும் அறிவுரை வழங்கினார். மருத்துவக் கருவிகளை உடனடிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதும் பிணியாளர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதுமே களத்தில் செயல்படுபவர்களுக்கு அளிக்க வேண்டிய பேருதவி. மாறாக, மரணத்தின் காலடியின் நின்று சக மனிதர்களுக்காகப் பணியாற்றிய தூய்மைத் தொழிலாளர்களுக்கு மருத்துவமுறையிலான உத்தரவாதம் அளிப்பதற்குப் பதிலாக மலர் மாரி பொழிந்து வேடிக்கை காட்டச் செய்தார். அரசும் அதிகாரக் கூட்டமும் மக்களைத் தங்களது சொல்லுக்குக் கீழ்ப்படியும் மந்தைகளாக மாற்றுவதில் முனைப்பாக இருந்தன என்பதற்கான சான்றுகள் இவை. ஜனநாயக அரசும் அமைப்பும் செய்யத் தேவையில்லாத செயல்கள் இவை. அதை மோடியின் அரசு ஜனநாயகத்தின் பெயரால் நிறைவேற்றிக் கொண்டது.
கொரோனா வைரஸ் மூலம் உலகெங்கும் கோவிட் 19 நோய் வெகுவாகப் பரவியுள்ளது. கொடிய துயர் என்ற வகையில் இந்த நோய் உலகம் தழுவிய ஒன்றாக இருப்பினும் அதன் விளைவுகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் இந்தியாவின் நிலைமையே இவற்றில் பரிதாபகரமானது. உலக நாடுகள் எதிலும் நமது நாட்டில் நடப்பது போன்ற மக்களின் இடப்பெயர்ச்சி நிகழவில்லை. நாடெங்கும் தொழில்தேடி இடம்பெயர்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் இக்கட்டான காலத்தில் மீண்டும் சொந்த மண்ணுக்குத் திரும்பும் அவலம் பிற நாடுகள் காணாதது. அன்றாட உழைப்பின் மூலம் ஊதியம் ஈட்டி நாட்களை நகர்த்தி வந்த பஞ்சையர் கூட்டம் கையிருப்புத் தொலைந்த நிலையில் உண்ண உணவும் பருக நீரும் இல்லாமல் அணியணியாகத் தெருவில் இறங்கியது. வாகனப் போக்குவரத்துகள் முடக்கப்பட்ட சூழலில் கால்நடையாக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரங்களைக் கடக்க வேண்டிய அவலத்தைக் காண நேர்ந்தது. புதிய நூற்றாண்டின் கொடுமையான காட்சி இது.
1980 – 90 காலகட்டத்தில்தான் இந்தியாவின் வட மாநிலங்களிருந்து பிழைப்புத் தேடி மக்கள் பிற மாநிலங்களுக்கு வந்துசேர்ந்தார்கள். தாராளமயமாக்கலின் விளைவாக விவசாயமும் மரபுசார்ந்த தொழில்களும் நசிவடைந்த நிலையில் இந்த இடப்பெயர்ச்சி நடைபெற்றது. இந்திய நகரங்களில் சிறு, குறு தொழில்களிலும் கட்டுமானத் துறைகளிலும் உழைப்பைக் கொட்டிய இந்த எளிய மக்களே புதிய இந்தியாவின் நிர்மாணத்தில் பங்காளிகளானார்கள். தகவல் தொடர்புத் துறைக்கான பெரும் கட்டடங்களையும் அதிவேகப் போக்குவரத்துக்கான நெடுஞ்சாலைகளையும் நகரங்களில் நிமிர்ந்த பாலங்களையும் உருவாக்கினார்கள். ஆனால் இக்கட்டான தருணத்தில் ‘ஜொலிக்கும் இந்தியா’வைக் கட்டியமைக்கக் கனவு காணும் அரசு இந்த எளியவர்களைக் கைவிட்டது. அவர்களுடைய வாக்குகளையும் பெற்றே ஆட்சிக்கு வந்த அரசின் பிரதமர் தனது தொலைக்காட்சி உரைகள் எதிலும் இந்த அவலநிலை குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. எளியவர்களுக்கும் சம மதிப்பு அளிப்பதுதான் ஜனநாயகம். அதை இந்த அரசு உதாசீனம் செய்தது. அவர்களை நடுத்தெருவில் அலையவிட்டது. இந்த அவலத்தின் பாதிப்பு அலைய விதிக்கப்பட்ட அந்த மக்களை மட்டுமல்ல, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துப் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மையினரையும் துன்புறுத்தும் என்பதை அரசு கணிக்கவே இல்லை.
பல இலட்சம் எண்ணிக்கையிலான மக்கள் நாடெங்கும் சிதறிக் கிடக்கும் நிலையில் நான்கு மணி நேர அவகாசத்தில் ஊரடங்கு பிறப்பித்தது இந்த அரசின் முதலாவது ஜனநாயக விரோத நடவடிக்கை. தொழில் வாய்ப்புகள் முடக்கப்பட்டதோடு கையில் காசில்லாமல் அவர்களை விரட்டியது. வறுமையும் பசியும் நோயுமாக அவர்களைச் சாலையோரங்களுக்கு ஓடச் செய்தது. கொரோனா பிணியால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியாவது இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மக்கள் மீது அக்கறையுள்ள ஓர் அரசால் இந்த அவலத்தைத் தவிர்த்திருக்க முடியும். முறையாகத் திட்டமிட்டு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருந்தால் பெரும் இழப்புகள் ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். சில நாட்கள் முன்னதாகவே அறிவித்தும் மக்கள் பாதுகாப்பாகத் தமது இடங்களைச் சென்றடைய வாகன வசதிகளை அதிகரித்து அவர்கள் சென்றடைந்ததை உறுதிப்படுத்திக் கொண்டும் அவர்களுக்கு நிதியுதவி அளித்தும் பின்னரே ஊரடங்கை அமலாக்கியுமிருந்தால் இன்றைய மானுடத் துயரத்தை இல்லாமல் போக்கியிருக்கலாம்.
ஆனால் மோடியின் அரசு மக்களை வதைப்பதில் சுகம் காணும் கொடுங்கோன்மையில் ஊறித் திளைப்பது என்பது கடந்த ஆறு ஆண்டுக்கால ஆட்சியில் நிரூபணமான உண்மை. ஜிஎஸ்டி வரி அறிமுகம், பணமதிப்பிழப்பு ஆகிய முந்தைய நடவடிக்கைகள் உதாரணங்கள். ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் இந்த நடவடிக்கைகள் எதுவும் எந்த விவாதமும் இல்லாமல் எதிர்க் கட்சிகளின் கருத்தைப் பெறாமல் நிறைவேற்றப்பட்டவை. இவற்றை மக்கள் கசப்புடன் விழுங்கிக்கொண்டார்கள். அதை அரசு சம்மதமாக எடுத்துக்கொண்டது. ஒரு நடவடிக்கையின் மறுபக்கத்தைச் சிந்திக்கவே மறுத்தது. கொரோனாக் காலத்திலும் மாற்றுக் கருத்துகளைக் கேட்கவோ அதற்கான விவாதத்தை மேற்கொள்ளவோ மோடியின் அரசு முன்வரவில்லை. தனது திட்டத்தை மக்கள்மேல் கட்டாயமாகத் திணிக்கவே முயல்கிறது. இதுவும் ஜனநாயகத்துக்கு எதிரானதுதான்.
கொரோனாக் காலத்தின் ஊக்க நிதியாகப் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறது. அது ஆறுதல் அளிப்பதற்குப் பதிலாகச் சந்தேகத்தையே முன்வைக்கிறது. ‘தன்னிறைவு’ அளிக்கும் திட்டங்கள் என்று அறிமுகப்படுத்தியுள்ளவை ஏற்கனவே நடைமுறையில் இருப்பவை என்பதை எளிதில் காண முடியும். பொருளாதாரச் சீர்திருத்தங்களின் மறைவில் நிகழ்ந்திருப்பவை கார்ப்பொரேட் பொருளாதாரத்துக்கு ஊக்கம் கூட்டுபவையே அன்றி மக்களின் மேம்பாட்டுக்கு உரியவை அல்ல என்பதும் தெளிவு. பல கோடி மக்கள் இன்றும் வறுமையின் பிடியில் திணறுபவர்கள் என்பதை இந்தப் பிணிக் காலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த வறுமையைப் போக்குவதற்கான திட்டங்களுக்கே ஜனநாயக அரசு முன்னுரிமை வழங்கும். நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் எழுப்ப நிதியை விரயம் செய்யும் அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமான தல்லாமல் என்ன?
இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் விரிசல் ஏற்பட்டிருப்பதை இந்தக் கொரோனாக் கால அரசியல் எடுத்துக் காட்டுகிறது. ஜனநாயகத்தின் இன்றிமையாத அம்சங்களாகச் சொல்லப்படும் அதிகாரப் பரவல், விவாதம், மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கான சுதந்திரம் ஆகியவற்றை மோடி அரசு புறக்கணிக்கிறது. ஜிஎஸ்டிக்குப் பிந்தைய காலகட்டத்தில் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு கணிசமாகக் குறைக்கப்பட்டது. மத்திய அரசே முழுமையான நிதி ஆதாரமாக மாற்றப்பட்டது. அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே குவிந்திருக்கும் இந்தக் கால அளவில் மாநிலங்களின் நிதிக் கோரிக்கைக்கு அது செவிகளை மூடிக்கொள்கிறது. மத்தியத் தொகுப்பிலிருந்து உணவுப் பொருள்களைப் பகிர்ந்து கொடுக்க மறுக்கிறது. தனது கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் நலன் புறக்கணிக்கப்படுவது ஜனநாயகத்தை இந்த அரசு வெறும் வாய்ச் சொல்லாகவே எண்ணுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. கையிருப்பில் இருக்கும் நிதியால் இன்றைய சிக்கலைச் சமாளிக்கும் மாநில அரசுகள் கொரோனா காலத்துக்குப் பிந்தைய நாட்களில் கைபிசைந்து நிற்க நேரிடும். அது நமது ஜனநாயக அமைப்புக்கு மரியாதை அல்ல.
இந்தக் கொரோனாப் பிணிக் காலம் இந்தியாவை இரண்டாகப் பிளவுபடுத்தியிருக்கிறது. இருப்பவர்களின் இந்தியா என்றும் இல்லாதவர்களின் இந்தியா என்றும் துண்டாடியிருக்கிறது. ஜனநாயகத்தில் எல்லாருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை என்பது இல்லாமலாகியிருக்கிறது. கூடவே மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவே துணை புரிந்திருக்கிறது. அந்த அச்சத்தினால் தங்களது உரிமைகளையும் எதிர்காலத்தையும் மோடி வித்தைக்காரனிடம் ஒப்படைப்பதுபோலத் தாமாகவே சமர்ப்பித்திருக்கிறார்கள். அதில் மகிழ்ச்சியடையும் உன்மத்த நிலையில் மோடியும் அவரது கட்சியும் அவர்களுக்குத் துணைபோகும் அதிகார வர்க்கமும் இவர்கள் அனைவரையும் இயக்கும் கார்ப்பொரேட் சக்தியும் இருக்கிறார்கள். இந்தத் துர்விதி இந்திய ஜனநாயகத்தைப் பீடித்திருக்கிறது. மோடியின் ஆட்சிக் காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் தொடரும் என்ற உண்மை கொரோனா வைரஸ் தாக்குதலை விடவும் மூர்க்கமாகப் பாதிக்கிறது.