நட்ஸ் ஸ்குஜெனீக்ஸ்
கவிதை
நட்ஸ் ஸ்குஜெனீக்ஸ்
நட்ஸ் ஸ்குஜெனீக்ஸ் (Knuts Skujenieks) 1936இல் லாட்வியாவில் பிறந்தவர். லாட்வியப் பல்கலைக் கழகத்தில் தத்துவவியலும் வரலாறும் படித்தார். 1956 முதல் 1961 வரை மாஸ்கோவில் மாக்ஸிம் கார்க்கி இலக்கிய நிறுவனத்தில் பயின்றார். லாட்வியா திரும்பியவுடன், சோவியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் ஜோடிக்கப்பட்டு, ஏழாண்டு (1963 - 69) தண்டனையின்கீழ் மார்டோவியோ அரசியல் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கே நிறைய வாசித்தார். நிறைய எழுதினார். கடிதங்களில் பலநூறு கவிதைகளை எழுதி அனுப்பினார். அவை ஒட்டுமொத்தமாக 2002இல் பிரசுரிக்கப்பட்டன. தொகுப்பின் பெயர் ‘பனியில் விதைகள்’ (‘Seeds in Snow’). 1969இல் லாட்வியாவுக்குத் திரும்பியபோது, தமது எழுத்துக்களைப் பிரசுரிப்பதற்குக் கட்டுப்பாடுகள் இருப்பதைக் கண்டார். மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். பல மொழிகள் அறிந்தவர். வாலே ஹோ, லோர்க்கா, ரிட்ஸோஸ், நெரூதா, கால்ஸின்ஸ்கி, ட்ரான்ஸ்ட்ரோமர் போன்றவர்களையும், அதிகம் அறியப்படாத மொழிகளின் கவிதைகளையும், ஐரோப்பிய நாட்டுப்புறப் பாடல்களையும் லாட்விய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.
லாட்வியாவின் உச்சபட்ச இலக்கிய மற்றும் அரசாங்க விருதுகளையும், ஐரோப்பாவின் (ஸ்வீடனின் டோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் விருது உட்பட) பல்வேறு விருதுகளையும் அடைந்தவர். முப்பதுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவர்.
லாட்வியாவின் ஸலாஸ்பில்ஸில் வசிக்கிறார்.
நேரடியான வாக்கியங்களில், நேரடியானவை போலத் தென்படும் காட்சிகள் வழியே கவிதை சொல்பவர் நட்ஸ். ஆனால், கலங்கிய அரசியல் சூழ்நிலை உருவாக்கிய அவநம்பிக்கையையும் நிராசையையும் தமக்குள் பொதிந்திருக்கும் கவிதைகள் அவை. தொடு வானத்தையொட்டி நடக்கும் செந்நிறக் குதிரைவீரனும், தன் அற்ப வாழ்வின் சூட்சுமத்தை உணர்த்த முனையும் பனித்திப்பியும் நேரடியாய்ச் சொல்லப்படாத துயரத்தை வெளிப்படுத்தும் உருவகங்கள்.
வெளிப்படையாக அடையாளம் காட்டப்படாத எதிரியின்மீது பொங்கும் சினத்துடன், ஆனால் உரத்த சொற்களின்றி, அடுக்கப்படும் வரிகள். அவற்றின் பூடகத்தன்மை காரணமாகவே, கவிதைகளுக்குள் இடம்பெறும் வஸ்துக்கள் தன்னியல்பாகக் குறியீடாக மாறுகின்றன. கூறப்பட்ட வரிகளே திரும்பத்திரும்பக் கூறப்படுவது, ஆத்திரத்தின் வேகத்தை நுட்பமாய் உணர்த்துகிறது.
அரசியல் கவிதைகள் என்பன நேரடியான விமர்சனத்தோடும், விவாதத்தோடும், கடும் சொற்களிலும் இருந்தாகவேண்டிய நிர்ப்பந்தமில்லை; அழகியல்பூர்வ மௌனமும் அடங்கிய மறுகலும் கொண்டும் அவை இயங்க முடியும் என்று நிரூபிக்கும் கவிதைகள். இக்கவிதைகளில் தொனிக்கும் ஏளனம் எதிர்த்தரப்பை மட்டும் நோக்கியதல்ல; உலகெங்கும் பரந்த, சமாதானத்தின் சாந்தம் நிரம்பியதாகப் பாவனை காட்டும் அனைத்து மனித சமூகங்களை நோக்கியதும்தான். குரோதம் என்பதே நிஜம் என்றும், நேசம் என்பது பாசாங்கு மட்டுமே என்றும் சூசகமாகத் தெரிவிக்கும் கவிதைகள்.
குறிப்பும் மொழிபெயர்ப்பும்: யுவன் சந்திரசேகர்
உலகின் விளிம்பில்
தீப்புண்களுக்கு அஞ்சுபவர்களுடன் இசைந்திருக்க
எனக்கு ஒன்றுமேயில்லை
-அப்போலினேர்
இதுதான் இறுதித் தடுப்பு
தீத் தடுப்பு, சிவப்புக்கோடு.
இனிமேலும் நாம்
கைகுலுக்க முடியாது -
நண்பர்களாக, அரசியல்வாதிகளாக
அல்லது மதுத் தோழர்களாக.
இறுதிநாள், கடைசி வாக்கியம்,
கடைசி வாய்ப்பு. எல்லையில்
‘நாம்’ என்ற சொல்
எரிந்து கருகிவிடும். ‘நீ’ என்ற
சொல் நெருப்பைத் தாண்ட முடியாது.
‘அவர்கள்’ மட்டுமே எஞ்சும்.
காரண அறிவு நிரம்பிய நம்
பெட்டிகளின்மீது இன்றிரவு
கொஞ்சநேரம் அமர்ந்திருப்போம். நமது
கண்ணிய உணர்வால் புடைத்திருக்கும்
முதுகுப் பைகளுடன், முன்னாலோ
பின்னாலோ
போகும் சாலைக்குத் தேவைப்படும்
ஓர் ஆயுளின் பெறுமதி கொண்ட
சில்லறைகளை எண்ணியபடி.
காலை வரும்வரை நாம்
உட்கார்ந்திருப்போம்.
ஓர் அகராதி
விசித்திரமான சொற்கள் அவை.
ஒட்டுப்போட்ட உடைகள் அணிந்த
சாம்பல்நிறக் குடியானவர்கள். தமது
குடியானவ எண்ணங்களை
சிந்தித்து சிந்தித்து சிந்தித்து
ஓய்ந்துவிடுகிற, ஞாயிற்றுக் கிழமைப்
பிரசங்கத்தின் நடுவில்
உறங்கிவிடுகிற,
குடியானவர்கள்.
கடுமையாய் உழைத்துவிட்ட
பட்டினி கிடக்கிற
வஞ்சகமும் நம்பிக்கையும் கொண்ட
அடிமைச் சொற்கள் அவை. ஊளைக்கும்
கடகடக்கும் பற்களுக்குமிடையே
ஏதோவோரிடத்தில்
மென்னுறக்கம் கொள்ளும்
முடிவற்ற இருளின் சொற்கள்.
ஆனால், அவை
வந்துகொண்டிருக்கின்றன.
இன்றை நோக்கி
வந்துகொண்டிருக்கின்றன. நாளை
அவை பல்கிப் பெருகிவிடும். அதற்கு
அடுத்த நாள்
பூமி முழுவதும் நிரம்பிவிடும்.
பனித்திப்பியின் குரல்
கொஞ்சநேரத்தில் நான்
உருகிவிடுவேன் - என்னில்
களிகூர்வாயாக!
ஒரு கலைப்படைப்பு இதுவென
பெறுபலன் என
இறுதி விளைவு என
ஆனந்திப்பாயாக.
ஆனால்,
என் அறுமுனை உருவத்தில்
புயல்கள், எதிர்ப்புயல்களின் துயரத்தை
ஒட்டுமொத்த உலகத்தின்
வெண்மையை மற்றும் கருமையை
நீ காணாவிட்டால்,
என்னைப் பார்த்து இன்பம் மட்டுமே
உறுவாயானால்,
நான்
மௌனமாய் வேதனைப்படுவேன்:
நான் வந்ததே விரயமென
நான் உருகியதும் விரயமென.
‘ஒரு சொல்லும் சொல்லாதே’
ஒரு சொல்லும் சொல்லாதே.
நீ சொல்வது
எனக்குக் கேட்கும்
என் ஜன்னலுக்குக் கீழே
பசும் புல்லில்
உன் சொற்களை விதைப்பேன்
அவற்றினூடே
மத்தியானத்தில்
குட்டித் தூக்கம் போடட்டும் ஒரு நாய்
வாலாட்டிக் குருவி அலைந்து திரியட்டும்
தன் குழந்தைக்கு
நடை பழக்கட்டும் ஒரு தாய்.
புவிசார் புகழ்
அமருங்கள் அரசே,
அமருங்கள். தங்களது
பரிவாரத்தை விட்டு வாருங்கள்
ஈரத் தரையில்
செந்நிறத்தில் சாக்குக்கட்டியால்
தங்களைச் சுற்றிலும் ஒரு
வட்டம் வரையப்படும்வரை
அதற்கு வெளியே
உங்கள் வீரர்கள், ஆயிரந் தலை கொண்ட
கூட்டத்தார்,
கூச்சலிடுகிறார்கள்.
வென்ற இடத்தை
சூறையாடுகிறார்கள்.
உட்காருங்கள், மன்னா.
தரை வரை
தரையை எட்டும்வரை
தாடி வளருங்கள்.
உட்காருங்கள் அரசே
உட்காருங்கள். உங்கள்
அதிர்ஷ்டத்தை உள்ளங்கையில் பாருங்கள்.
உங்கள் ராஜ்யம்
வெட்டுண்ட மரத்தின்
புழு அரித்த தண்டுபோல
சுருங்கிவிட்டது. அதன்
ஒரு கையில் விளக்குமாறு,
மற்றதில்
காய்ந்த குதிரைச்சாண உருண்டை.
உட்கார் மன்னா,
உட்காரடா பயலே
வட்டத்துக்குள்ளே,
வட்டத்துக்குள்ளே.
சிந்திக்கிறேன், ஆகவே
இருக்கிறேன்
அவர்கள்
எனது கடைசி மேலாடையையும்
எடுத்துக்கொள்ளலாம், ஒரு
நாயைப்போல என்னைத்
தூக்கியெறியலாம்,
சவப்பெட்டியைக் காட்டி மிரட்டலாம்,
படுத்திருந்தவாக்கில்
என்னை நோக்கிக் கேலிசெய்யலாம்;
அவர்கள் எனக்குப்
பரிசுகளையும் செண்டுகளையும்
கொண்டு தரலாம், வெகுமதிகளால்
என்னைச் சித்திரவதை செய்யலாம்,
கடைசித் துண்டு ரொட்டியை
எனக்காகத் தியாகம் செய்யலாம்,
தரையில் படிந்து வணங்கிக் கிடக்கலாம்.
பறிக்கப்பட்ட
வழங்கப்பட்ட
அனைத்துக்கும் மேலாக
ஏதோவொன்று பிழைத்திருக்கிறது,
தன் பசுந்தலையை உயர்த்துகிறது.
அதுதான் சிந்தனை. அதன் ஆளுகைக்குள்
இருக்கும்வரை
நான் ஆயுதபாணியேதான்.
பின்னோக்கிய இரங்கற்பா
ஓர் இரவின் வெண்ணிற வானம்
கறுப்புப் பனியைச் சொரிகிறது
தர்க்கம் என் நாளங்களுக்குள்
காட்டுத்தனமாய்ப் பாய்கிறது
முள்கம்பி வேலிக்குப் பின்னால்
ஆனந்தமாய் ஆடுகிறான் ஒரு கைதி
பூஜ்யம் என்பது
நூற்றெண்பது பாகைகளுக்குச் சமமானது
துக்கமயமான புள்ளிகளின் வரிசை
ஒரு வாக்கியத்தை முடித்துவைக்கிறது
ஒட்டுமொத்தமாய் ஒரு வாழ்வு
உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிறது
ஒருகாலத்தில் நீ இருந்த இடத்தில் -
ரயில்பாதைகள் நகைக்கின்றன இன்று
ஒருகாலத்தில் நீ இருந்த இடத்தில் -
ஒரு காலத்தில் -
நீ இருந்த...
எதிர்பாராதது
தொலைந்துபோன கத்தி
கிடைத்துவிட்டது
- ஸ்வாஹிலி மொழிப்பயிற்சிக் கையேட்டிலிருந்து
எனது நண்பன் திரும்ப வந்துவிட்டான்:
எனது கத்தி. என்னை
அறியாததுபோலக் காட்டிக்கொண்டவர்கள்
மீண்டும் என்னை அறிவார்கள்.
முன்புபோலவே இன்று காலை
பிரமாதமாக உதித்தது சூரியன் -
உலகை ஒரு ஆப்பிளைப்போல
வெட்டுகிறேன்
பாதியாக.
இன்றைய நாளும் இதற்குமுன்
எதிர்கொள்ளப்படாதது
முன்னெப்போதையும் விட
வலிக்கத் தொடங்குகிறது
பழைய தழும்பொன்று.
என் நண்பனே,
போகுமிடமெல்லாம் நீ
பாடுவாய், சுழன்
றாடுவாய்:
உள்ளபடி சொல்வதென்றால்
என் தலைக்குள்ளிருக்கிறது என் கத்தி.
என் வாய்க்குள்ளிருக்கிறது என் கத்தி.
என் நெஞ்சில் இருக்கிறது என் கத்தி.