இந்திய யானைகளின் கதை
பெங்களூர் குறிப்பு
இந்திய யானைகளின் கதை
ப. சகதேவன்
ஆடம்பரமும் கலை அழகும் மிக்க, மிகமிகத் தூய்மையான கட்டடம் அது. கட்டடத்தின் தேவைக்கேற்ப எல்லாத் தளங்களிலும் கழிப்பறைகள் இருந்தன. நான் உபயோகித்த கழிப்பறையில் உட்காரும் பகுதியின் இடது பாகத்தில் எஃகினாலான நீளமான கைப்பிடி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. வயதானவர்களை மனதில்கொண்டு அந்த வசதி செய்யப்பட்டிருந்தாலும் அந்த மையம் நடத்தும் நிகழ்ச்சிகள் எல்லா வயதினரையும் ஈர்க்கக்கூடியவை. சுத்தமான மேல்தட்டுச் சூழ்நிலை. நிகழ்ச்சிகளும் மேல்தட்டு ரசனை கொண் டவைதாம். ஆனால் மேன்மையான ரசனையையும் சுதந்திரமான சிந்தனையையும் ஆரோக்கியமான விவாதத்தையும் வெளிப்படுத்துபவை. கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, அறிவியல், சமூக அறிவியல், சூழலியல், தத்துவம், வாய்மொழி வரலாறு என்று எல்லாத் தலைப்புகளிலும் மொழி, இனம், பிரதேசம் என்ற எல்லைகளைத் தாண்டி சொற்பொழிவு, கலந்துரையாடல், கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் எனச் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது பெங்களூர் பன்பாட்டு மையம் (Bangalore Internation Centre)
பெங்களூரின் செல்வந்தர் பகுதியான இந்திரா நகரில் ஒரு ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பில் அரசு சாராத இப்படிப்பட்ட ஒரு பண்பாட்டு மையம் அமைந்திருப்பது அதிசயம்தான். கலையுணர்வும் கொடையுள்ளமும் கொண்டவர்களிடத்தில் செல்வம் சேருகிறபோது இப்படியொரு மையம் வேண்டும் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் உதிக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனி, விப்ரோ அதிபர் அஜிம் பிரேம்ஜி, மணிபால் குழுமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் பய் ஆகியோரின் முயற்சியில் இந்த மையம் எழும்பியிருக்கிறது. நீங்கள் பெங்களூரில் இருக்கிற பட்சத்தில் இந்த மையம் ஒழுங்கு செய்யும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ளலாம். அதன் வலைத்தளத்திற்குப் போய் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொள்ளுங்கள். வலைத்தளத்திலேயே மையம் ஒழுங்கு செய்திருந்த நிகழ்ச்சிகளின் காணொலிப்பதிவு பார்க்கக் கிடைக்கும். எல்லாம் இலவசம்.
கலாரசிகர்களும் அறிவுஜீவிகளும் கூடும் வழக்கமான இடங்களான ரவீந்திர கலாக்ஷேத்ரா, கன்னட சாகித்ய பரிஷத், கன்னட சித்ரகலா பரிஷத், மைய அரசு இலக்கியக் கழகம், சௌடையா மெமோரியல் ஹால், ரங்க ஷங்கரா என்பவற்றையெல்லாம் எதிர்காலத்தில் பெங்களூர் பண்பாட்டு மையம். தூக்கிச் சாப்பிட்டுவிடும். அதற்கான அடிப்படை வசதிகளும், தொலை நோக்கும், மையத்திடம் உண்டு. காரணம் மேற்கூறிய மையங்கள் பெரும்பாலும் ஒற்றைக் கலாச்சாரப் பண்புகள் கொண்டவை. இம்மையம் பன்முகக் கலாச்சாரப் பண்புகள் கொண்டது. ஆதாரம் இங்கு இதுவரை அழைக்கப்பட்டவர்கள்; தாமஸ் ட்ரவுட்மன், மைக் பிரயர்லி, சிதானந்த மூர்த்தி, சார்ல்ஸ் கொரியா, அடூர் கோபாலகிருஷ்ணன், சேகர் சேஷாத்ரி, ஈஸ்வர பட், ஷப்னா ஆஸ்மி, வெலுச்சேரு நாராயணராவ், சையத் மிர்சா, அக்கை பத்மஷாலி, தேவகி ஜெயின், வெங்கி ராமகிருஷ்ணன், ஆர்தர் ஐசன்க்ராஃட், அவிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃலோ, ரத்னா பதக் ஷா, அருந்ததி நாக், ஆ.இரா. வேங்கடாசலபதி முதலியோர். ராமச்சந்திர குஹாவும், சந்தன் கௌடாவும் கிட்டத்தட்ட ஆஸ்தான நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக இருப்பார்கள். ராமச்சந்திர குஹாவைப் பார்த்தால் நகுலனின் சாயை தெரியும். உங்கள் யூகம் சரிதான். நகுலனின் உறவினர்தான் குஹா.
நமது கவனத்திற்கு முதலில் வந்தது தாமஸ் ட்ரவுட்மனின் பேச்சு. 2019, ஜனவரி 24இல் நடந்த நிகழ்ச்சி அது. அப்போது மையம் அருகிலுள்ள தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் கட்டடத்தில் இருந்தது. அர்த்த சாஸ்த்ரத்தில் பாண்டித்தியம் பெற்றவரும், காலனியாதிக்கக் காலத்தில் எல்லிஸ் போன்ற அதிகாரிகளின் பண்பாட்டுப் பங்களிப்பை (‘திராவிடச்சான்று’) சுட்டிக்காட்டியவருமான அதே ட்ரவுட்மன்தான். தற்போது ட்ரவுட்மன் யானையைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். மனித நாகரிக வரலாற்றில் யானையின் இடம், சூழலியலுக்கும் யானைக்குமுள்ள தொடர்பு என்பவற்றைப் பற்றிப் பேசும் அவரது புத்தகம் ‘யானையைப் பின்தொடர்ந்து.’ சமீபத்தில் வெளியாகியிருந்தது. இன்றைய பேச்சு அந்தப் புத்தகத்தைப் பற்றியதுதான். நான் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான். கொஞ்சம் முன்னமேயே போய்விட்டேன். ருசியான உளுந்து வடையும், நல்ல காப்பியும் கிடைத்தது. மேன்மக்கள் பலரும் இழவு வீட்டில் இருப்பதைப்போலக் குசுகுசுவென்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். இரண்டாம் வரிசையில் சவுகரியமாக உட்கார்ந்துகொண்டு தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று திரும்பிப் பார்த்தேன். தியடோர் பாஸ்கரன் மீசையை முறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். வெள்ளைக்காரனை விவாதத்தில் ஒரு மடக்கு மடக்கிவிட வேண்டும் என்று தீர்மானத்துடன் வந்தமாதிரித் தெரிந்தது. ’தமிழ்த் திரைப்படங்களில் யானை’ என்ற அவரது கட்டுரையில் (செமினார் இதழ்: 651/2013) யானையைப் பற்றி அவர் நிறைய விஷயங்களைச் சொல்லியிருந்தார். உலகிலுள்ள மொத்தம் 50,000 யானைகளில் 30,000க்கு மேற்பட்டவை இந்தியாவில் இருக்கின்றன. தொன்மங்கள், புராணங்கள் (ஐராவதம், கஜலட்சுமி) என்பவை மட்டுமல்லாமல் கணபதி என்று யானையைக் கடவுளின் அவதாரமாகவும் பார்க்கிறோம். சங்க இலக்கியம் முதல் கலிங்கத்துப்பரணிவரை களிறு, பிடி, வேழம் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் யானையைக் கொண்டாடியிருக்கின்றன.
குஹா ட்ரவுட்மனை சரியாகவே அறிமுகப்படுத்தினார். ‘வியப்புமிகு இந்தியா’ வின் ஆசிரியரான ஏ.எல். பாஷம்தான் ட்ரவுட்மன்னின் முனைவர் பட்ட வழிகாட்டி. வரலாற்றியலை இலக்கியமும் சமூக அறிவியலும் கலந்த கலவையாக உருவாக்கி எடுக்கும் ட்ரவுட்மன் அரசு நிர்வாகத்தின் வரலாற்றை அர்த்தசாஸ்திரம் மூலம் ஆராய்வதிலிருந்து தொடங்கி, அரசு உறவுமுறை வரலாறு, மானுடவியல் வரலாறு, மொழி வரலாறு என்று பயணம் மேற்கொண்டார்; தற்போது அவரது கவனம் சூழலியல் வரலாற்றில் மையம் கொண்டிருக்கிறது என்றார்.
யானை தன்னை வசீகரித்த விதம் பற்றிச் சொல்லத் தொடங்கிய ட்ரவுட்மன் மனித வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் அது பெறும் இடம் போன்றவற்றையும் குறிப்பிட்டார்:
“ஆதிகாலம் தொட்டுப் போர் முறைகளிலும் ஆட்சியியலிலும் யானை பங்கு பெற்றிருக்கிறது. ஆனால் எல்லா தேசிய இனங்களும் யானையை ஒரே நோக்கில் பார்க்கவில்லை. யானைகள் நம் கண் முன்னே நிறைந்திருந்தாலும் நம் பார்வையிலிருந்து மறைந்தும் போயிருக்கிறது. அடர்ந்த காடுகளில் செழித்து வளர்ந்த மரங்களுக்கிடையில் சுதந்திரமாகத் திரியும் யானைகளைப்போல. ரோமானியர்கள் யானைகளைப் பற்றி எதிர்மறையான அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். ஒரு தற்காப்புக்காகப் போர்க்களத்தில் யானையைப் பயன்படுத்தினார்களே தவிர தீவிரத் தாக்குதலுக்கு யானை உதவும் என்று அவர்கள் நம்பவில்லை. போர் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது என்பதைப் பித்துப் பிடித்திருக்கிறது என்ற அர்த்தத்தில் சொல்கிறார்கள். உண்மையில் யானை மிகவும் சந்தோஷமாக இருக்கிறபோதுதான் அதற்கு மதநீர் வழியும். இந்த மதநீர்தான் யானைக்கு உற்சாகத்தைக் கொடுத்துப் போர் புரியும் ஆற்றலைக் கொடுக்கிறது. இதனாலேயே யானைகள் ஆக்ரோஷமான தோற்றத்தைக் கொண்டிருப்பதாக மகாபாரதம் கூறுகிறது. இது போர் யானையின் இயல்பு. இந்தப் போர் யானைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. இவற்றை உருவாக்கியவர்கள் இந்தியர்கள். வேதகாலத்திற்குப் பின்னால் இந்த உருவாக்கம் நிகழ்ந்திருக்கலாம். ரிக்வேதகாலத்திற்குப் பின்னால் இது நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கு என்னால் காரணங்கள் சொல்ல முடியும். வேதகாலத்தில் யானைகள் காட்டு யானைகளாகவே பார்க்கப்பட்டன. மனு சவர்னி என்னும் மன்னன் ஆயிரமாயிரம் பசுக்களையும், நூற்றுக்கணக்கான குதிரைகளையும், தேர்களையும், அடிமைகளையும் தானமாக அளித்தான் என்று ரிக் வேதம் கூறுகிறது. தோராயமாகக் கி.மு.1000வது ஆண்டாக இருக்கலாம். அதற்குப் பிறகு ஐதரேய பிராமணத்தில் அங்க மன்னன் என்பவன் குதிரைகள், அடிமைகள் எனச் சேர்த்து பத்தாயிரம் யானைகளையும் பிராமணர்களுக்கும் புலவர்களுக்கும் பரிசாக அளித்தான் எனக் கூறுகிறது. இந்த அங்க மன்னன் கங்கை நதித் தீரத்தைச் சேர்ந்த மகத நாட்டு அரசன்.
சிந்து சமவெளி நாகரிகத்தில் யானைகள் இருந்திருக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். அங்கு கிடைக்கும் முத்திரைகளில் யானையும் இருக்கிறது, நன்கு வளர்ந்த கம்பீரமாகத் தோற்றமளிக்கும் யானை. நன்கு பழக்கப்படுத்தப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் அந்த யானையின்மீது எந்த மனிதனும் உட்கார்ந்து போனதாகத் தெரியவில்லை. காட்டு யானையை ஒரு காட்சிப் பொருளாக நகரத்திற்குக் கொண்டுவந்திருக்கக் கூடும். உலகின் பிற நாகரிகங்களிடமிருந்தும் யானை பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. எகிப்திய நாகரிகத்தின் ஆரம்பக் காலகட்டத்தைக் குறிக்கும் சில ஓவியங்களில் அவை காணப்படுகின்றன. அவை அளவில் சிறியவை; வயதில் குறைந்தவை; காட்டிலிருந்து பிடித்துக் கொண்டுவரப் பட்டவை. மெசபடோமியாவைச் சேர்ந்த மூன்றாம் ஷல்மனேசர் அரசனைப் பற்றிய நினைவுச் சின்னம் ஒன்று. இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட அதில் யானை உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. நன்கு போஷிக்கப்பட்ட தந்தங்களை உடைய யானை. வேறுபல விலங்குகளோடு இதையும் அரசனுக்குப் பரிசாகக் கொண்டுவருகிறார்கள். அடுத்தபடியாகச் சீன நாகரிகம். ஷேங் வம்ச ஆட்சியின்போது (கி.மு.1600-1046) ஓரக்கிள் எலும்புகளின்மீது யானை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அந்தக் காலத்தில் சீனாவில் யானைகள் இருந்தன என்பது ஆச்சரியப்படத்தக்க செய்திதான். அதே காலத்தைச் சேர்ந்த வெண்கலத்தால் செய்யப்பட்ட அலங்கரிக்கப்பட்ட யானை உருவங்களும் கிடைக்கின்றன. இத்தகைய ஆதாரங்கள் மூலமாக உலகின் ஆதி நாகரிகக் காலங்களில் யானையைப் பற்றிய அறிவு இருந்ததென்றும், அரசர்கள் யானைகளைத் தங்கள் அதிகாரம், செல்வாக்கு, கீர்த்தி என்பவற்றைக் குறிக்கும் அடையாளமாகக் கருதினார்கள் என்றும் அறிய முடிகிறது. ஷல்மனேசர் மன்னன் வேட்டைக்குச் சென்று நூற்றுக்கணக்கான யானைகளைக் கொன்றான் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.
வட இந்தியாவிலிருந்து போர் யானைகள் உலகின் பல பகுதிகளுக்குப் பரவியது எங்ஙனம்? இந்தியாவில் புத்த, சமண சமயக் காலத்திலிருந்தே யானை இருந்திருக்கிறது. வேதகாலக் குடியேற்றத்தின்போது காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை என்று முப்படைகள் வந்தன. அதனோடு இங்கிருந்த யானைப் படையும் சேர்ந்து நாற்படை என்றானது. புத்தர் காலத்திலும் மகாவீரர் காலத்திலும் இருந்த நாற்படை மரபு அதற்குப் பிறகு பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்தது. புத்தர் காலத்திலிருந்த 16 அரசுகள் - கிழக்கே மகத ராஜ்ஜியத்திலிருந்து மேற்கே காந்தாரம், காம்போஜா ராஜ்ஜியங்கள் வரை ஒன்றோடொன்று சண்டையிட்டன. கடைசியில் மகத ராஜ்ஜியம் எல்லாவற்றையும் விழுங்கியது. மௌரியப் பேரரசு எழுந்தது. கி.மு. 321 வாக்கில் சந்திர குப்த மன்னனின் கீழ் ஏறத்தாழ இந்தியா முழுவதையும் உள்ளடக்கிய மகதப் பேரரசு எழுந்தபோது அதற்கு இணையாக மேற்கே பாரசீகப் பேரரசு இருந்தது. சைரஸ் மன்னன் ஆக்கிமெனிட் வம்சப் பேரரசைத் தோற்றுவித்தான். காந்தாரமம்,காம்போஜா உள்ளிட்ட பகுதிகள் பாரசீகப் பேரரசின் கீழ் இருந்தன. அந்தப் பகுதிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் பாரசீகப் படைகளில் இருந்தார்கள். வரலாற்றாசிரியர் ஹெரடோடஸ் இதுபற்றிக் குறிப்பிடுகிறார். அதைப் போலவே எகிப்து போன்ற பல நாடுகளிலிருந்தும் வீரர்கள் இருந்தார்கள். குஜராத்தின் கட்ச் பகுதி இந்தியாவுக்கும் பாரசீகத்துக்குமான பாலமாக இருந்தது. சொல்லப்போனால் பாரசீகப் பேரரசின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அதன் தாக்கத்தில் இந்தியாவின் மேற்குப் பகுதியில்தான் ஒரு பேரரசு உருவாகியிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் கிழக்குப் பகுதியில்தான் அங்க தேசத்தை உள்ளடக்கிய மௌரியப் பேரரசு உருவானது. அதற்குக் காரணம் என்னைப் பொறுத்த வரையில் அப்பகுதியில் மிக அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட யானைகள்தான். பெரும் வல்லமை கொண்ட காட்டு யானைகள் போர் யானைகளாக மாற்றப்பட்டபோது போர்களில் வெற்றி பெறுவது எளிதாக இருந்தது.
இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து போர் யானைகள் மேற்குப் பகுதிக்கும் பயணித்தன. போர்க்களத்தில் யானையின் பங்கு உணரப்பட்டது. அலெக்ஸாண்டர் இந்தியாவிலிருந்து தனது நாட்டிற்குத் திரும்பியபோது 200 போர் யானைகளைக் கொண்டுசென்றான். அலெக்சாண்ருக்குப் பிறகு வந்த அவனது தளபதி ஹெலனியப் பேரரசன் செலுக்கஸ் சந்திரகுப்த மௌரியனோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தற்போதைய ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட சில பகுதிகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக 500 போர் யானைகளைப் பெற்றுக்கொண்டான். அந்த யானைகளை வைத்துத்தான் அவனது எதிரியான எகிப்து மன்னன் தாலமியை வென்றான். செலுக்கஸ் கொண்டுசென்ற யானைகளோடு யானைப்பாகர்களும் சென்றார்கள். யானைகளைப் பற்றிய அவர்களது ஞானம் மேற்குத் திசையினரோடு பகிர்ந்துகொள்ளப்பட்டது. தாலமி வம்ச அரசர்களுக்கும் இந்தப் போர்யானைகளின் வலிமை தெரிந்திருந்தது. ஆனால் தங்கள் நாட்டிலிருந்து கிழக்கே வரும்போது வழியிலிருந்த பகைநாடுகளைக் கடந்து இந்தியாவுக்கு வந்து மகத நாட்டிலிருந்து யானைகளைக் கொண்டு செல்லும் வல்லமை அவர்களுக்கு இருக்கவில்லை. அதற்குப் பதிலாக ஆப்பிரிக்கக் காடுகளில் கிடைத்த இந்திய யானைகளைவிட வல்லமை குறைந்த யானைகளைப் போருக்குப் பழக்கினார்கள். மகத நாட்டிலிருந்து போன யானைப்பாகர்கள் வழியாகக் கிடைத்த யானைகளைப் பழக்கும் முறை அவர்களுக்கு உதவியாக இருந்தது. எகிப்தை ஆட்சி புரிந்த கிரேக்க வம்சத்தைச் சேர்ந்த பெண்களுக்குக் கிளியோபாட்ரா என்ற பொதுப்பெயர் இருந்தது. தாலமி வம்சத்தினரைப் பற்றிக் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட நூல்களில் எல்லாம் இந்த யானைப்பாகர்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஒரு யானையின் மேல் மூன்று வில்வீரர்கள் உட்கார்ந்து போர் புரிவார்கள். அவர்களோடு இருக்கும் நான்காவது நபருக்கு ‘இந்தியன்’ என்று பெயர் கொடுத்திருப்பார்கள்.
எகிப்து நாட்டிற்கு அண்டை நாடான கார்த்தஜீனிய வம்சத்தைச் சேர்ந்த ஹேனிபல் என்பவன் தாலமியரிடமிருந்து இந்திய யானைகளைப் பற்றிய அறிவைச் சேகரித்துக்கொண்டு அவற்றை வைத்து ரோமானிய சாம்ராஜ்யத்தோடு போர் தொடங்கினான். ஜிப்ரால்டர் வளைகுடாவைக் கடந்து ஸ்பெயின் நாட்டிற்கும் அவனது படை கடந்தது. ஆல்ப்ஸ் மலையினூடாகச் சென்று ரோமப் பேரரசோடு 16 ஆண்டுகள் கொரில்லாப்போர் புரிந்தவன் ஹேனிபல். இப்படியாக இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து சிரியா, எகிப்து வழியாக ஐரோப்பாவுக்குச் சென்றன இந்தியப் போர்யானைகள். இறுதியாக ரோமிடம் அடி பணிந்தது கார்த்தஜீனிய வம்சம். சிரியாவின் செல்யூக்கசும், எகிப்தின் தாலமியும்கடத் தோற்கடிக்கப்பட்டார்கள். ஜுலியஸ் சீசரை உள்ளடக்கிய ரோமானியப் பேரரசு உருவாக்கம் பெற்றது. உலகையே அடிபணிய வைத்த ரோமானியரின் போர்த்தளவாடங்களில் யானைகளுக்கு ஒரு முக்கியப் பங்கு இருந்தது. யானைகளைப் பிடிக்கவும், அவைகளுக்குப் பயிற்சி கொடுத்துப் போர்க்களங்களில் அவற்றை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இருமுனை கொண்ட ஒரு போர் ஆயுதமாக அவர்கள் யானைகளைக் கண்டார்கள். உள்நாட்டிலும் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலும் பயன்படுத்தலாம்.
கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து தென் கிழக்கு ஆசியாவில் அரசுகள் தோன்ற ஆரம்பித்தன. அரசுமுறை, சமூக அமைப்பு, மொழி, மதம் முதலியவற்றில் அந்த நாடுகளில் இந்தியப் பாதிப்பு வெகுவாக இருந்தது. அவர்களும் யானைகளைப் பயன்படுத்தினார்கள். யானைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிப்பதற்கு அவர்களுக்கு உதவியவர்கள் இந்திய யானைப்பாகர்கள். முறையான கல்வியறிவு இல்லாத இந்த யானைப்பாகர்களும், போர்ப்பயிற்சியாளர்களும் எந்த விதமான கிரந்தமோ, சுவடியோ இல்லாமல்தான் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தளித்தார்கள். கம்போடியாவின் அங்கோர் வாட் பகுதியில் கிடைக்கும் ஓவியங்களும் சித்திரங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்தியப் போர் யானைகளைப் பற்றிய அறிவு தென்கிழக்காசியாவில் சீன எல்லையான யூனான் பக்கம் மற்றும் பர்மா போன்றவற்றோடு நின்றுவிட்டது. அதைத் தாண்டிச் செல்லவில்லை. சீனர்களுக்கு போர் யானைகளைப் பற்றிய அறிவு இருந்தது. ஆனால் அவர்கள் அதில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. வென் ஹுவான்ரேன் என்னும் சீன உயிரியல் அறிஞர் ஒருவர் சீனத்தாவரங்களைப் பற்றியும், விலங்குகளைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். வரலாற்று நோக்கில் எழுதப்பட்ட புத்தகம் அது. சீனாவிலுள்ள தாவரங்கள், விலங்குகள் என்பவற்றைக் காட்டும் விதமாக ஒரு வரைபடம் தயாரித்தார். அதில் சீன தேசத்தில் யானைகளின் எண்ணிக்கை வட பகுதியைக் காட்டிலும் தென்மேற்குப் பகுதியில் அதிகம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். பொதுவாகவே சீன அரசர்கள் விலங்குகளைப் பராமரிப்பதில் இந்தியர்கள் அளவுக்கு அதிக அக்கறை காண்பிக்கவில்லை. மனிதன்மீது வீணான அச்சத்தை ஏற்படுத்தி அவனது முன்னேற்றத்திற்கு அவை தடையாக இருக்கின்றன என்பது அவர்கள் அபிப்பராயம். போர்க்களத்தில் யானைகளுடைய மதிப்பைப் பற்றி இந்திய மன்னர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். நன்கு வளர்ந்திருந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டுவந்து அவற்றைப் பழக்கி, போர்ப்பயிற்சி கொடுத்து போருக்குக் கொண்டுசெல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. நாட்டிற்குள்ளேயே அவைகளை வளர்த்து இனவிருத்தி செய்ய வைப்பதிலுள்ள புத்திசாலித்தனம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. யானைகள் மிகுந்த சோம்பேறித்தனம் கொண்டவை. அவற்றின் கர்ப்ப காலம் மிக நீண்டது (இரண்டு வருடங்கள்) பெரும்பாலும் ஒரு குட்டிதான் போடும். (அபூர்வமாக இரண்டு குட்டிகள்) அவற்றுக்குத் தீனி போட்டுப் பராமரிப்பதென்பது செலவு மிகுந்த விஷயம். யானைகள் தங்களுக்கு இருபது வயது ஆகிற வரை உழைப்பதற்குத் தயாராக இருக்கமாட்டா என்று அர்த்த சாஸ்திரம் சொல்வதை நாம் நம்புவோமானால் அந்த இருபதாண்டுக்காலம் முழுவதும் அவை காட்டிலேயே வளர்வதுதானே உசிதம்? அவைகளைக் கூட்டம் கூட்டமாகவும் பிடிக்க முடியாது. ஒவ்வொன்றாகத்தான் பிடிக்க முடியும். யானைகளின் போர்க்கள மதிப்பு மிக அதிகம் என்பதால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமலிருந்தார்கள். உலகின் மிகப்பெரிய பாலூட்டி விலங்கான அதை நேரிலேயே பார்த்திராத பகை வீரர்கள் போர்க்களத்தில் அதை நேரடியாகப் பார்க்கும்போது அச்சப்பட்டுத்தான் போவார்கள். ஆர்மீனியர்கள், ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் யானையை நேரில் பார்த்திராதவர்கள்.
இந்தியா முழுவதும் பரவலாக இருந்த யானைகளின் எண்ணிக்கை ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு வடகிழக்கு மற்றும் தென்னிந்தியா எனச் சுருங்கிவிட்டது. அதற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் யானையை வேட்டையாடியதுதான். யானைகளை வேட்டையாடுவது தவறு என அர்த்தசாஸ்திரம் கூறுவதால் இந்தியர்கள் யானையை வேட்டையாடுவதில்லை. யானை இறந்த நிலையிலும்கூட அதன் தந்தத்தை எடுக்கக்கூடாது என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது; அரண்மனைகளில் பாடம் செய்யப்பட்ட யானைத்தலைகளைக்கூடப் பார்க்க முடியாது.
விவசாய நிலங்கள் அதிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக யானைகளையும், பிற விலங்குகளையும் சீனர்கள் புறக்கணித்தார்கள். அவை மனிதனுக்கு எதிரிகள் என்று கருதினார்கள். இது குறித்து மார்க் எல்வின் என்பவர் ‘The Retreat of Elephants: An Environmental History of China (2004)’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். இது இந்திய அணுகுமுறையிலிருந்து பெரிதும் வேறுபட்டது. விவசாயம் சார்ந்த குடியிருப்புகளை உருவாக்குவது குறித்து அர்த்த சாஸ்திரம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. விவசாய நிலங்களும் தேவைதான். ஆனால் அதற்கு அண்மையிலேயே அதற்கு ஊடாகவே மேய்ச்சல் நிலங்கள், காடுகள், வணிக வழித்தடங்கள் என்பவையும் இருக்க வேண்டும் என்று கருதியது. இதன் மூலம் மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்குமான பரஸ்பர உறவு பேணப்படுகிறது. பண்டைக்கால இந்திய அரசர்களுக்கு யானைகள் குறித்து ஒரு பிரச்சினை இருந்தது. விளை நிலங்களை அழிக்கின்றன என்பதால் விவசாயிகள் யானைகளின்மீது வெறுப்புக் கொண்டிருந்தார்கள். அதே யானைகள் போர்க்காலங்களில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தன. அதனால் அவற்றைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அவர்களுக்கு அவசியமாக இருந்தது. இது காலங்காலமாக இருந்துவரும் ஒரு மோதல்தான். இந்தியா இத்தகைய ஒரு அணுகுமுறையைக் கொண்டிருப்பதாலேயே தற்போது சீனாவைவிடப் பத்து மடங்கு (30,000) காட்டு யானைகளைக் கொண்டிருக்கிறது. அரசு முயற்சியினாலும் மக்கள் ஒத்துழைப்பாலும் இது கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டு வருகிறது. சுற்றுப்புறச் சூழல் சமநிலைக்கு இது மிக அவசியம் இல்லையா?” என்று சொல்லிப் பேச்சை முடித்துக்கொண்டார் ட்ரவுட்மன்.
பேச்சுக்குப் பிறகான கலந்துரையாடலில் யானைகளைப் பற்றிய நூல்களில் ஒன்றான ‘கஜ சாஸ்திரம்’ பற்றிப் பேச்சு வந்தது. யானைகளைப் பற்றிப் பலவகையான தகவல்களை உள்ளடக்கிய அந்தப் புத்தகம் வெளியான ஆண்டு தெரியவில்லை. ஒருவேளை தஞ்சையை ஆண்ட மராட்டியர் காலத்தியதாக இருக்கலாம். இந்தியப் போர்க்களங்களில் காலாட்படை மிகவும் பலவீனமாக இருந்ததால்தான் பண்டைய அரசர்கள் யானைப் படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. அர்த்த சாஸ்திரம் யானைகளைக் கொல்லக்கூடாது என்று சொல்கிறது. அர்த்த சாஸ்திரம் வாழ்க்கை நடைமுறைகளைப் பற்றிப் பேசும் நூல். அதன் ஆசிரியர் மக்களிடையே வாழ்ந்து அவர்களின் நம்பிக்கைகள், மரபுகள் என்பவற்றைப் புரிந்துகொண்டு அதைத் தன் நூலில் பிரதிபலித்தவர். இந்தியர்களுக்கு யானைமீது உணர்வுபூர்வமான, மதரீதியான, ஆன்மீக அடிப்படையிலான ஒரு ஒட்டுதல் உண்டு. இந்திரனின் யானை ஐராவதம் ஒரு நல்ல உதாரணம்.
நன்றியுரையாற்றிய தியடோர் பாஸ்கரன் ட்ரவுட்மன்னின் புத்தகம் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்றார். காரணம் கர்நாடக மாநிலம் எண்ணிக்கையில் அதிகமான யானைகளைக் கொண்டிருக்கும் மாநிலம். தமிழில் இதன் மொழிபெயர்ப்பு முடியும் தருவாயில் இருக்கிறது என்று கூறிய அவர் ட்ரவுட்மன் தனது ‘திராவிடச் சான்று’ புத்தகத்தின் மூலம் ஏற்கனவே தமிழ் வாசகர்களிடையே பிரபலமாகியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மின்னஞ்சல்: krishnaswamip@yahoo.com