மெய் = பொய் பொய் = மெய்
கவிதை
பா. அகிலன்
மெய் = பொய் பொய் = மெய்
ஒரு பாத்திரம் இரு பாகமாடிகள்
ஒரு பாத்திரம்
அவனும் கட்டியிருந்தான்
இவனும் கட்டியிருந்தான்
இவன் கட்டியதை அவனறியான்
அவன் கட்டியதை இவனறியான்
அறியானும் அறியானும் ஆடும் நாடகத்தில்
அறிந்தவன் ஒருவனிருந்தான்
அவன் குடுவையிலாடிய இரகசியத்தை
இவனும் அறிந்தானிலன்
அவனும் அறிந்தானிலன்
உச்சக்கட்டம்
ஒருவனைப் பாத்திரமாய் கூடுவிட்டுக் கூடுமாற்றியபோது
மற்றவன் மாறாக் கூடுகொண்டு பாத்திரத்தைப் பாகமாடினான்
இரகசியம் காத்தவன் காத்தவனாய் இருந்தான்;
இவனிடம் நீதான் அது என்றான்
அவனிடம் நீதான் அது என்றான்
ஆடுவதில் வல்லான்
இங்கும் ஆடினான்
அங்குமாடினான் எங்குமாடினான்
ஏழைப் பாகமாடி தன்னை இழந்தான்;
பாத்திரமும் அவனும் இரண்டற்று ஒன்றானபோது
இரகசியம் அறிந்தான்
ஈரமற்ற இதயவாள் கொண்டு
நடுவாலரிந்து
பாத்திரத்தையும் அவனையும் வேறாக்கியபோது
இரத்தமில்லை
சத்தம் இல்லை
அறிந்தார் ஒருவருமில்லை
அரங்கு நுழைந்த கோமாளி கேட்டான்
நாடகம் முடிந்தததா மக்காள்?
திரை விழுத்தி
நாடகம் தொடங்கியதா மக்காள்?
மக்காள் மக்காள் மக்காளே மக்காள்
ஏமாற்றக் குளத்திற் பிறந்தெழுந்து
வந்தேனே மக்காள்
நாவு : புதிய அவதானிப்புக்கள்
இடம்விட்டு இடம் நகர்ந்து
தோன்றி மறைந்து
மறைந்து தோன்றி
கீழது மேலாய்
மேலது கீழாய்
சுருண்டு நீண்டு
நீண்டு சுருளும்
வாசனைத் திரவியங்களின் தெருவாயிருக்கும்
ஓன்றுபோலுள இரு நாவுடையார் மனிதர்
நாவுகள் தோறும்
தரிக்க லாகரியாடைகளும் ஒப்பனை அறைகளும்
நெருக்கடிகளிற் பதுங்கிக்கொள்ள
நாக் கீழறைகளும் உள என்றார் கண்டார்
மூளைக்குச் செல்லும் நரம்புத் திரளில்
இரு நாவுக்கும் இருபாதை
பாதை இடைவெட்டும் இடத்திற் சலவைக்குளம்
ஆனால்
ஆனால்
இருநாவும் இருதிசை திறந்து
இருவேறு மனிதரிடம்
ஒரு சொல் பேசும்
விநோதம் காணப் பெற்றான்; ஒருவன்1
புத்தாய்வு தொடங்கிற்று
இரு நாவு
இரு வேறு செவியருக்கு
ஒரே சொற்களால்
ஒரே சமயத்திலெனில்
எந்த நாவு
எந்த செவியருக்குண்மை
எந்த செவியருக்குப் பொய்2
அல்லது
இரண்டும் மெய்யா
அல்லது இரண்டும் லீலா விநோதமா
விஞ்ஞானி சொன்னான்
நாவுக்கில்லை இதயம்
இதயத்திற்குமில்லை இதயம்
பருவமெய்தா பாலகனே
நாவு3
இதய உடற்கூற்றியல் அறியாமையால்
உலகத்தில் வாழும் அடிப்படைத் தகுதியற்றாய்
கிடந்து கழி மூடா மீதி வாழ்க்கையை
முள்படுக்கையிலென்றான்
போடா போ
பிற்குறிப்புகள்
1.
கண்டவன் ஒரு நாள்
தன் வாய் கண்டான்
இரு நாவும் கடந்து
பல நாவு சுருண்டு
உருமாற்றி
ஒளித்துக் கிடந்த
செம்மலர் வாய் எனும்
அழுக்குப் பூத்த
மோசக் கிடங்கினும் ஊழை
எங்கடா உண்மை
ஏதடா உண்மை
நானே பொய்களின் பெருமலை என்றான்
மெய் எனும் பொய்களாலான பொய்
(இரகசிய கோப்பு அறிக்கையிலிருந்து)
2.
காது
பொய் மெய் அருந்தும்
பொய்மீது மோகமுறும்
பலமைல் சென்று இரகசியம் கவரும்
நாடகமாடிச் செவிடென்றும் நிற்கும்
(செவிவழிமொழியார் பாடல்)
3.
விசப் பற் கூடையில்
நாவு ஒரு சர்ப்பம்
தோல் களைந்து தோல்களைந்து
புதிது கொள்வது
இரத்தஞ் சுவைக்கையில் விறைத்தெழுவது
நாடகமாடுகையில் சுருங்கிச் சோர்வது
ஆடு பாம்பே
அசைந்தாடு பாம்பே
நாவெனும் உருமாறிப்பாம்பே
(நாவுப் பாம்பு நூல் - பதிகம் 18)
பொய்யறி பாத்திரம்
சொற்களின் உண்மையை எப்படிக் கண்டறிவது?
அதன் நிறையை வைத்தா?
நீளத்தை வைத்தா?
சொற்களின் இசைக் கலவை கொண்டா?
உரைக்கும் நாவின் செவ்வண்ண வழியிற் சென்றா?
அறிந்தேன் அல்லேன்
அது பிறந்தமொழி கொண்டென்றார் சிலர்
இல்லை மொழிக்குடும்ப வழியிலென்றார் வேறுசிலர்
சுகந்த மணமுடைய குரலாரும்
வெண்டாமரை இதயமுடையாரும் பொய்யுரைக்கார்
எனும் மூதுரை தோற்றபோது
மனிதர் மீதான நம்பிக்கையின்
கடைசிக் கொம்பு பிழந்து மந்தியானான்
சொற்கள் புழுத்துப் புழுத்து மேலும் பரவி
எச்சிலில் ஊர்ந்து களிநடனங் கொண்டபோது
பைத்தியக்காரனின் இதயம் அவனிற் குடிகொள்ள
பொய் மொய்கா சொற்கள் தேடி
பொய் பெய்து பொய் சூடி
பொய்யாகிய பொய்யன் நடந்தான்;
மெய்யீர்
பொய் மறுத்து மெய்யறிய
சொற்களைக் கழுவி உரைத்துப் பார்க்கும்
பாத்திரமொன்று தருவீரா?
மின்னஞ்சல்: saroahila@gmail.com