சமிக்ஞைகளின் விளையாட்டு
EPW பக்கங்கள்
சமிக்ஞைகளின் விளையாட்டு
இந்தியா முழுவதிலும் இந்தியைக் கொண்டுவருவது வெறும் தோரணை மட்டுமே, அது செயலற்றதாகும்.
டெல்லியில் தூசு நிறைந்த சூறைக்காற்றைக் கொண்டுவருகிற மாதம் ஜூன். அரை நூற்றாண்டிற்கு முன்பாக அடங்கிப்போய்விட்ட தூசு இப்போது தட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. பல நாட்களாக நடந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, தேர்தல் முடிவுகளை குணாம்சப்படுத்துவதை முடிவு செய்யக்கூட நேரமற்ற நிலையில், கல்வி பற்றிய தேசியக் கொள்கைக்கான திட்ட வரைவில் மும்மொழிக் கொள்கையின் அவசியம் குறித்துச் சொல்லப்பட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. மும்மொழித் திட்டத்தில் இந்தி குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாட்டிலிருந்து ஆட்சேபணை எழுந்தவுடனேயே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அதைத் திரும்பப்பெற்றதுடன் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த வரைவிலிருந்து அந்தக் குறிப்பிட்ட பத்தியைத் திருத்தியும்விட்டது. இந்தப் பழைய அலுவல் விஷயத்தையும், மும்மொழித் திட்டம் ஏன் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையும் புதிய தலைமுறை வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
சில சமயங்களில் பழைய ஆவணம் கருத்துப் பரிமாற்றத்திற்காக அளிக்கப்பட்டுள்ள இன்றைய ஆவணத்தைவிட அதிக சமகாலத் தன்மை கொண்டதாகவும், புத்தம் புதியதாகவும் தோன்றும். இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள் பொதுமக்களின் பார்வைக்கு வந்திருக்கும் இந்த மும்மொழித் திட்டம், முதன்முதலில் டி எஸ். கோத்தாரியின் தலைமையிலான கல்விக் குழுவின் (1964-66) வரைவுக் கொள்கையில் கொண்டுவரப்பட்டது. இக்குழுவின் நீண்ட அறிக்கையைத் தயாரித்த அதன் உறுப்பினர்-செயலாளர் ஜெ.பி. நாயக் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கல்வி அமைப்பிலுள்ள பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார். மும்மொழித் திட்டம் மத்திய கல்வி ஆலோசனைக் கழகத்தால் 1956இல் வடிவமைக்கப்பட்டது என்றும் ஓரளவு எளிமைப்படுத்தப்பட்ட அதன் வடிவம் 1961இல் முதலமைச்சர்கள் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. “இதற்கான வலுவான காரணங்கள் கல்வி தொடர்பானதாக இருந்ததை விட அரசியல், சமூகரீதியாக இருந்ததே அதிகம்” என்று கோத்தாரி குழு கூறுகின்றது.
கல்வி பற்றிய கருத்துகளை அரசியல் கட்டாயங்களுக்கு உட்பட்டு உருவாக்க, போராட வேண்டியிருப்பதை கோத்தாரி குழுவின் அறிக்கையிலுள்ள மொழி குறித்த விரிவான அத்தியாயம் தெளிவாகக் காட்டுகிறது. “வெற்றிகரமானதாக இல்லாத மும்மொழித் திட்டமானது நடைமுறையில் பல இக்கட்டுகளை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலை உருவாகப் பல காரணங்கள் இருக்கின்றன. பள்ளிப் பாடத்திட்டத்தில் மொழிச் சுமையை அதிகரிப்பதற்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு, இந்திய மாநிலங்களில் கூடுதலாக ஒரு நவீன இந்திய மொழியைக் கற்பதற்கான ஊக்கம் ஏதுமில்லாதது, இந்தி அல்லாத மாநிலங்களில் இந்திக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு, சுமார் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கு (ஆறாம் வகுப்பிலிருந்து பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பு வரை) இரண்டாம், மூன்றாம் மொழிகளைக் கற்றுத்தர ஆகும் பெரும் செலவு, முயற்சி போன்ற அம்சங்கள் இந்தக் காரணங்களுள் அடக்கம்... மூன்றாவது மொழியைப் பொறுத்தவரை யதார்த்தமற்ற சூழலில் அதைக் கற்க நேர்வதால் மாணவர்கள் அந்த மொழியைப் பெரிதாகக் கற்றுக்கொள்வதில்லை” என்று அந்த அறிக்கை கூறியது (பக்கம் 333, பத்தி 8.32). “தொடக்க நிலையில் மூன்று மொழிகளைப் பயில்வது ஒரு குழந்தை தனது தாய்மொழியில் நன்கு தேர்ச்சி பெறுவதைத் தடுப்பதுடன் அதன் அறிவு வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என்று நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம். உடனடிக் கவனம் தரப்பட வேண்டிய அம்சம் ஒருவரது தாய்மொழியே! கூடுதலான மொழிகளைக் கற்பது குறைவாகவே இருக்க வேண்டும்” (பக்கம் 340, பத்தி 8.41) என்றும் பல்வேறு வாய்ப்புகளை விவாதித்த பிறகு அந்த அறிக்கை கூறியது. குழுவின் இந்தக் கருத்துடன் குழு உறுப்பினர் ஒருவருக்கிருந்த கருத்து வேறுபாட்டையும் அது பதிவு செய்தது.
கல்விக் குழுவின் பார்வையிலிருந்து பார்க்கிறபோது இப்போது 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் இன்றைய கல்வி அமைப்பு அடையாளம் காண முடியாத அளவிற்குப் பெரிதும் மாறிவிட்டது. கோத்தாரியோ நாயக்கோ இந்த மாற்றங்களை எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள், விரும்பியிருக்கவும் மாட்டார்கள். அரசுப் பள்ளிகள்மீது பெற்றோருக்கு ஏற்பட்ட மனவிலக்கத்தாலும் தங்களது குழந்தைகளை ஆங்கிலவழிக் கல்வியில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற அவர்களது ஆர்வத்தாலும் கல்வியில் தனியார் துறை பெரிதும் வளர்ந்திருக்கிறது; ஆசிரியர் பற்றாக்குறையும் ஆசிரியர் நியமனத்தில் நிலவும் நிறுவனமயப்படுத்தப்பட்ட சீரழிவுகளும் ஆசிரியர் பயிற்சியைப் பெரிதும் வர்த்தகமயமாக்கியிருக்கிறது. இவை கோத்தாரி, நாயக் கல்விக் குழுவிலிருந்த அவர்களது சக உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். கல்வியிலும் பிற துறைகளிலும் திட்டம் உருவாக்குவது இப்போது பொருத்தமற்ற விஷயமாகிவிட்டதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள்.
அரசை மையமாகக் கொண்ட அவர்களது சட்டகத்தில் அரசியல் கட்டாயங்களை ஏற்றுக்கொள்ளவும், அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் வேண்டியிருந்தது. ஆனால் சந்தையின் கட்டாயங்கள் அவ்வளவாக இல்லை. நிலைமை இப்போது தலைகீழாகிவிட்டது. இப்போது சந்தை தரும் அழுத்தங்கள் மையமாகிவிட்டன; அரசியல் கட்டாயங்களோ வெறும் சமிக்ஞைகளாகிவிட்டன; ஊடகங்களில் இடையிடையே கிடைக்கும் இடங்களில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களாகிவிட்டன. இந்திக்கு உயர்நிலையை அளிப்பது ஒரு பாவனை மட்டுமே, அதில் உள்ளடக்கம் அதிகம் இல்லை. மும்மொழித் திட்டத்தில் இந்தியின் பங்கு குறிப்பிடப்பட்டிருப்பது தொடக்க காலத் தேசியத்தில் வைக்கப்பட்ட நம்பிக்கை தொடர்வதைக் காட்டுவதற்கான ஓர் அடையாளம் மட்டுமே. ஏற்கெனவே எதிர்ப்பு வந்த இடத்திலிருந்து இப்போது ஆட்சேபணை எழுந்தவுடன் இந்தியைத் திணிக்கும் நோக்கமில்லை என்று கூறி முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டையே மீண்டும் அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.
கல்வியில் மொழி தொடர்பான பிரச்சினைகள் பற்றித் தொடர்ச்சியான அதிகாரப்பூர்வக் கூற்றுகள் பயிற்றுமொழியாக ஆங்கிலம் இருப்பதற்கு இருக்கும் வரவேற்பைத் தொடக்கத்திலிருந்தே விமர்சித்தன. இன்றைய புதிய கல்விக் கொள்கை வரைவும் அதையே செய்கிறது. தாய்மொழி அல்லது ‘சாத்தியப்படும்போது’ வீட்டில் பேசப்படும் மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆனால் உறுதியாக நிறுவப்பட்டுள்ள தவறான கட்டமைப்பு சகித்துக்கொள்ளப்படுகிறது, இது வெளிப்படையாகக் கூறப்பட்டிருப்பதைவிட பிரச்சினை ஆழமானது. பழைய, புதிய உயர் குடியினருக்கிடையிலான சமிக்ஞைகள் பரிமாற்றத்திற்கான மேடையாக கல்வி குறித்த கொள்கைச் சொல்லாடல் பயன்படுகிறது.
இன்று தேசத்தை உணர்வுரீதியாக ஒருங்கிணைக்கப் பிற வழிகள் அதிகத் திறனுடையவையாக இருப்பது நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்தி குறித்து இருந்த தேசியத் தீவிரம் மங்கிவிட்டது.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஜூன் 15, 2019
தமிழில்: க. திருநாவுக்கரசு