நம்பிக்கையின் வழிகள்
EPW பக்கங்கள்
நம்பிக்கையின் வழிகள்
தேர்தல் சூழலில் கூட்டணி அரசியல் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையிலானது. பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் இந்த இரண்டும் மிக முக்கியமானவை. முதலாவது மிகவும் வெளிப்படையானது. தேர்தல் அரசியலில் ஒரு கட்சியின் ஆதிக்கம் நிலவும் சூழலில், இரண்டாம் முறையாக பாரதீய ஜனதா கட்சி மிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கும் இந்நிலையில் கூட்டணி அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. வென்றிருக்கும் இடங்களின் எண்ணிக்கை ரீதியாக அக்கட்சியின் ஆதிக்கம் யதார்த்தமாகியிருக்கிறது. ஒன்று, பாஜக வட இந்திய மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்றதும், வட கிழக்கில் காலூன்றியிருப்பதும் இதற்கான காரணங்களாகும். இரண்டு, சிறிய கட்சிகளால் தேர்தலில் பெரும்பான்மை பெற முடியாத சூழலில் கூட்டணி அரசியல் தேவையாகிறது. தேர்தல்ரீதியாக எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்திருக்கின்றன. அவற்றின் நலன்களும், சமூக அடித்தளமும் பிளவுண்டிருப்பதாலும் கூட்டணி அவற்றிற்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையிலும் ஒற்றுமையின் அடிப்படையிலும் அமைய வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பரஸ்பர நம்பிக்கையும் ஒற்றுமையும் அந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியிலும் இருக்க வேண்டும். கூட்டணியானது கட்சிகளின் குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக இல்லையென்றால் பரஸ்பர நம்பிக்கை மேலும் முக்கியமானதாகிறது, அதிலும் குறிப்பாகப் பலவீனமான பிரிவினர் விஷயத்தில். இப்பிரிவினர் எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிமீது அவநம்பிக்கையும் கொண்டுள்ளதை ஆளும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். பலவீனமான பிரிவைச் சேர்ந்த வாக்காளர்களுக்குத் தங்களது வாக்குகளை வெற்றி பெறும் வாய்ப்புள்ள, பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலமைந்த கட்சிகளுக்கு அளிப்பதற்கும் கூட்டணி அரசியல் அவசியம்.
ஆனால், இத்தகைய கட்சிகளிடம் நம்பிக்கை கொண்டிருக்கும் வாக்காளர்களுக்காக அரசியல்வாதிகளோ அல்லது பலவீனமான சமூகத்தாரின் கட்சிகளோ வாக்காளர்களின் நம்பிக்கையை ஆதரிக்கும் வகையில் வாக்குகளைத் தங்களது கூட்டணிக் கட்சிக்கு முழுமையாக அளிப்பதை உறுதி செய்வார்களா? அந்தப் பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்களின் நம்பிக்கையை மதிக்க உண்மையான முயற்சிகளை எடுப்பார்களா? ஆனால் தேர்தலுக்குப் பிந்திய சூழலில் கூட்டணிகளின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நம்பிக்கையூட்டுவனவாக இல்லை. நம்பிக்கைக்கான பாதைகள் சந்தேகங்களாலும் தோல்விகளாலும் நிச்சயமின்மைகளாலும் கவலைகளாலும் நிரப்பப்பட்டு ஆழமான நம்பிக்கையின்மையை அளிக்கின்றன. கூட்டணியை உருவாக்குவதில் ஏற்பட்ட தோல்வியும் இந்தக் கட்சிகள் மீது வாக்காளர்கள் கொண்ட நம்பிக்கையும் தேர்தல் தோல்வி என்ற ஆபத்தில் சிக்கிக்கொண்டதைக் காட்டுகிறது. இது கூட்டணியில் இருந்த மிக மேலோட்டமான நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையையே காட்டுகிறது. நம்பிக்கை அடிப்படையிலான கூட்டணியை அமைப்பற்கான சாத்தியம் அதன் சமநிலையை இழக்கிறபோது அரசை அமைப்பதற்கான அவசியம் வெற்றுப் பேச்சாகவோ வெற்றுக் கோஷமாகவோ ஆகிவிடுகிறது. சாத்தியத்திற்கும் அவசியத்திற்கும் இடையிலான உறவின் சமனின்மை காரணமாகக் கூட்டணியும் அமைவதில்லை; அரசும் அமைவதில்லை; அத்துடன் வாக்காளர்களின் நம்பிக்கைக்கும் கட்சிகள் பொறுப்பாக இருப்பதில்லை. தொடர்ந்து பலவீனமான சமூகப் பிரிவினரின் நம்பிக்கையைக் கட்சிகளும், வேறு கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் சில பிரிவு வாக்காளர்களும் தொடர்ந்து பொய்ப்பிப்பது அவர்களுக்குத் தார்மீக சுமையாகிவிடும். நம்பிக்கை தன் அறச் சக்தியை இழந்துவிடுவதுடன் இத்தகைய கட்சிகளுக்குக் கெடுவாய்ப்பாக இருந்து வாக்களிப்பதையும் இந்த வாக்காளர்கள் நிறுத்திவிடுவார்கள்.
அதைப் போலவே பெரும்பான்மைக் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள், அது சாதிக்கிறதோ இல்லையோ அதற்கே வாக்களிப்பவர்கள், தங்கள் நம்பிக்கையை அத்தகைய கூட்டணியில் வைக்கமாட்டார்கள். அந்த மாதிரியான விஷயங்களில் நம்பிக்கையின் இடத்தில் குருட்டு நம்பிக்கை வைக்கப்படுகிறது. இந்தக் குருட்டு நம்பிக்கை ஏற்கெனவே இருந்துகொண்டிருப்பது. இதைப் புதிதாகக் கட்டியமைக்க வேண்டியதில்லை. பெரும்பான்மைக் கட்சிக்கான அந்த ஆதரவு தர்க்க அறிவின் பாற்பட்டதல்ல. மாறாகக் குருட்டு நம்பிக்கையின் அடிப்படையிலானது. ஆனால் வாக்காளர்களுக்குத் தர்க்க அறிவு இருக்கிறது, அப்படியிருந்தும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சிக்குக் குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள். விவசாயிகளும் வேலையில்லா இளைஞர்களும் ஆளும் கட்சிக்கு வாக்களித்திருப்பது சமீபத்திய தேர்தலில் தெளிவாகத் தெரிகிறது. தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய கட்சிக்கு, தனது கொள்கைத் திட்டங்களால் பலருக்கும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய கட்சிக்கு வாக்களிப்பதை இவர்களது தர்க்க அறிவு தடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அது அவர்களது சுயத்துடன், தங்களது சுயத்தின் மீதான நம்பிக்கையுடன் ஒத்துப்போயிருக்கும்.
குருட்டு நம்பிக்கையுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களது கட்சியைத் தெரிவு செய்ய வேண்டியதில்லை என்பதால் நம்பிக்கை என்ற விஷயத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தேர்தல்ரீதியாகப் பலனுள்ள கூட்டணியை அவசியமாக்கும், மக்களின் தேவைகளுக்கேற்ப எதிர்வினையாற்றும் அரசைச் சாத்தியமாக்குவதற்கு ஒரு தலைவரிடமோ, ஒரு கட்சியிடமோ அல்லது கட்சிகளிடமோ நம்பிக்கை வைப்பது வாக்காளருக்குத் தன்னாட்சியைத் தருகிறது. சிக்கலை எதிர்கொள்ளும் முறையில் முடிவு எடுப்பது தன்னாட்சியையும் சுயமாகச் செயல்படும் ஆற்றலையும் காட்டுகிறது என்றாலும் சம வாய்ப்புகளும் கவனங்களின் அரசியலும் சிக்கலை எதிர்கொள்வதற்கான செயல்பாட்டைக்கொண்ட யூக மூலதன விளையாட்டாக மாற்றப்படக் கூடாது. பலவீனமான பிரிவைச் சேர்ந்த வாக்காளர்களை எப்போதுமே அபாயநிலைக்கு எதிர்க்கட்சிகள் ஆளாக்கக்கூடாது. விவாதத்திற்குரிய கேள்வி இதுதான்: பலவீனமான சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்களின் நம்பிக்கையில் உள்ளார்ந்திருக்கும் மாற்றத்திற்கான தூண்டுதலை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளுமா? இத்தகைய பலவீனமான பிரிவினர் எதிர்கொள்ளும் ஆபத்தை உருவாக்கும் சூழல்களை ஒழிப்பதற்கான உறுதியான ஆதாரங்களை ஆளும் கட்சி வழங்குமா?
- கோபால்குரு
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஜூன் 8, 2019