கடிதங்கள்
கடிதங்கள்
கிரீஷ் கார்னாட் என்ற மகத்தான தேசிய கலைஞனின் வாழ்க்கையையும் அவரது கலை அர்ப்பணிப்பையும் பற்றிய பாவண்ணன், விவேக் ஷான்பாக் பதிவுகள் மிகச் சிறப்பாக இருந்தன. கண்ணனின் ‘இந்தி: திணிப்பும் எதிர்ப்பும்’ விழிப்புணர்வுக் கட்டுரை ஆட்சியாளர்களையும் அரசியல் விமர்சகர்களையும் சிந்திக்க வைப்பதாகும்.
- ஜி. சுப்பையன்
திருவனந்தபுரம்
‘பல்கலைக்கழகங்களின் வீழ்ச்சி’ வேதனையைத் தந்தது. கல்வி இங்கு பணத்துக்கு விற்கப்படுகிறது. கல்விக் கூடங்கள், வணிக நிறுவனங்களாகிவிட்டன. தரமில்லாத பேராசிரியர்கள் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்டுப் பணியில் தொடர்வது கல்வியின் தரம் தாழ்ந்து போவதற்குச் சான்று. இதில் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பங்குண்டு. சொல்லப்போனால், அரசியல்வாதிகள்/அரசு அதிகாரிகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் கணக்கை எடுத்தால் கிறுக்குப் பிடிக்கும். இக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெறுவதைவிட பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறதே, அதற்கே இவர்களைப் பாராட்டலாம்.
இன்றைய படித்தவர்களுக்குத் தமிழில், ஒருமைக்கும் பன்மைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. (சான்று: சென்னையில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டு கட்டடங்கள் பல இருக்கின்றது!) தொலைக்காட்சி செய்தி வாசிப்பவர்களும் இதைச் செய்கின்றனர். என்னைப் பொறுத்தவரை 1960, 70களில் திறமையான பேராசிரியர்கள் / ஆசிரியர்கள் இருந்தனர். 1980க்குப் பின்னரே தொய்வு ஏற்பட்டது என்று கருதுகிறேன்.
‘பெரும்பான்மையே பாதுகாப்பு என்று கருதும் காலம்’ நேர்காணல் மிகமிக அருமை. கொஞ்சம் இரட்டை அர்த்தம் பொதிந்துள்ளதாய் என் மனசுக்குப்பட்டது.
ஆர். சிவகுமாரின் ‘ஆசிரியப்பணி தந்த நிறைவும் குறைவும்’ நிறைவையே தந்தது. என்னுடைய ஆசிரியையும் சத்தமாக வாசிக்கச் சொல்லுவார். அடிக்கடி முட்டி போடச் சொல்லுவார். அதனால்தானோ என்னவோ, வயதாகியும் எனக்கு முட்டி வலி இன்றும் வரவில்லை.
‘நவீன காலக் காதல் உரையாடல்’ நன்றாக இருந்தது. ஆனால் நித்தம் நித்தம் நடக்கும் ஆணவப் படுகொலைகளும் தற்கொலைகளும் இப்படி சிந்திக்கவைக்கின்றன: சூரியன் வீதி பார்த்தா உதிக்கிறது? மழை சாதி பார்த்தா பெய்கிறது? இயற்கைக்குச் சாதி மத வேறுபாடு தெரியவில்லை. ஆனால் இயற்கையாய் எழும் காதலுக்கு எத்தனை சாயம்? அதுவும் நம் நாட்டில் மட்டுமேதான் இந்நிலை.
- ஞா. சிவகாமி
போரூர்
சமூக நீதி அடிப்படையில், கீழ்மட்ட நிலையிலிருப்போருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் மண்விழுந்த கதையாக மாறியிருக்கிறது. அடிப்படையான துறைகளில் ஒன்றான கல்வி வளர்ந்துவரும் நிலையில் அதன் அனைத்து நிலைகளும் சீர்கேடு அடைந்துவருவது வருத்தம்கொள்ள வைக்கிறது. புதிய கல்வி வாய்ப்புகளைப் பெறுவது பொருளாதார, சமூக ரீதியில் பின்தங்கிய பகுதி மக்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அருகி, பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற நிலை மேலோங்கியிருக்கிறது. தமிழகக் கல்விமுறை திட்டமிட்ட அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு அரசு, கல்வித் துறை சார்ந்தவர் அனைத்துப் பிரிவினரின் ஜனநாயகப்பூர்வமான கருத்தையும் மதிக்க வேண்டும்.
அறிவார்ந்த நேர்மையான கல்வியாளர்களின் நல்ல ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்; இதையெல்லாம் புறந்தள்ளி, பல்கலைக்கழக செனட் கல்விப் பேரவைகள் பெரும்பகுதி அதிகாரிகளின் ஆக்கிரமிப்பிலும் அரசியல் தலையீடுகளிலும் அல்லாடிக்கொண்டிருக்கிறது. அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை மீறும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதுடன், உதவிப் பேராசிரியர்கள் வகுப்பறைக் கல்வியைக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் வகையில், முறையாகக் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் ஆலோசனை நல்கியிருப்பதை உணர்ந்துகொள்வது நல்லது.
நிற்க, கல்லூரிகளுக்குச் செல்லாமலேயே திறந்தவெளிப் பல்கலைக்கழகம், தொலைநிலைக்கல்வியில் பட்டம் வாங்கியவர்களை, ‘பல்கலைக்கழக மானியக்குழு’ விதிப்படி, உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கக் கூடாதென்றும் நிதியரசர்கள் தெரிவித்திருப்பதை தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வுவாரியத் தலைவர் ஆகியோர் கடைப்பிடித்தொழுக வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாகப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருவதும், பணிநியமனங்கள் முறைகேடாக வழங்கப்பட்டிருப்பதும், ஊதியம் பெறாமலேயே தற்காலிகப் பணியாளர்கள் பலர் பணியாற்றுவதும் அதிர்ச்சியாக இருக்கிறது.
- நவீன்குமார்
நடுவிக்கோட்டை
ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரை ஆழ்ந்த பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. முன்னுதாரணமற்றவகையில் திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் தாமே முன்வந்து பா.ரஞ்சித் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அதற்குப் பிறகு புகார்கள் பெறப்பட்டது முக்கியமன்று.
சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படாத நிலையில் ஆய்வாளர் வழக்குப் பதியச் சட்டத்தில் வழியுண்டா? வழக்குப் பதிந்ததற்கான காரணங்களை நீதிமன்ற விசாரணையில் அவர் கூறும்போது ஆய்வாளர் என்ற நிலையைத் தாண்டித் தனிப்பட்ட நபராக அவர் ரஞ்சித்தின் பேச்சால் பாதிக்கப்பட்ட காரணங்களை விளக்குவாரா?
ஒருவரை அவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பதால் விமர்சிப்பதற்குக் கூடாதென நீதிமன்றம் எவ்வாறு கருதுகிறது?
ராஜராஜ சோழன் குறித்துக் கவிஞர் இன்குலாப் எழுதியபோது இத்தகைய அளவு எதிர்க்குரல் எழவில்லை. மாறாக வரலாற்றை மீள்வாசிப்புச் செய்ய வேண்டும் என்ற ஆவலும் அக்கறையும் தழைத்தன. எனவே இங்கு பா.ரஞ்சித் என்ற தனிநபர் மீதான கோபமே ராஜராஜ சோழனுக்கு ஆதரவாக நிற்பது தெளிவு.
‘இந்தி: திணிப்பும் எதிர்ப்பும்’ என்ற தலைப்பில் கண்ணன் எழுதியுள்ள கட்டுரை நம்மைக் கிணற்றில் தள்ளுவதற்கு ஒப்பாகும். வடவருக்கு இந்தி (சில மாநிலங்களில் மட்டும்) தாய்மொழி. நமக்குத் தமிழ். இருவருக்குமே ஆங்கிலம் அந்நிய மொழி. தமிழர்களுக்கு இந்தி அந்நிய மொழி. இந்தியை ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு நாம் அடிமையாவதை ஒப்புக்கொள்வதாகும். இருவருமே ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
- தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு
நாடு விடுதலைபெற்றபின், எத்துணை புகழ்வாய்ந்த ‘கல்விக்குழுக்கள்’ வந்து போயினும், அவை பல்லாற்றானும் பேசுபொருள்களாகத் திகழ்ந்திருப்பினும், உயர்கல்வி வளர்ச்சிக்கான நிதிஒதுக்கீட்டுக் குளறுபடிகளும், கிராமப்புற ஏழை எளிய குடும்பத்துப் பிள்ளைகளைப் பாதிக்கும் பல்வேறு வடிகட்டு முறைகளும் தொடர் குழப்பங்களுக்குத்தான் காரணங்களாய் நிற்கின்றன. முடிவற்ற பயிற்றுமொழிப் பிரச்சினைகளும், திறன்மிக்க ஆசிரியர் பணியிட நியமனங்களில் அநாவசியமான அரசு தலையீடுகளும் உயர்கல்வியின் உள்ளீடாய்த் தொடரும் ஊழல்களும், பெருகிவரும் தனியார் ஆதிக்கப் பேரங்களும் உயர்கல்வியின் உன்னதநிலைக்குத் தொடர்ந்து ஊறுவிளைவித்து வருவதை முதல் கட்டுரை விரிவாக விவாதித்துள்ளது.
ஆகச்சிறந்த ஆளுமைகளையும் படிப்பாளிகளையும் உருவாக்காமல், வெறும் பட்டதாரிகளையும் கல்வியைத் தொழில் முறைப்படுத்துவோரையுமே உற்பத்திசெய்யும் நமது உயர்கல்வியின் போக்கை எங்ஙனம் தீர்மானிப்பது? சமூகத்தின் ஆரோக்கியமான கட்டுமானப்பணிக்கான அப்பழுக்கற்ற அறிவியலாளர்கள், பொறியாளர்கள், கல்வியாளர்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற இரண்டாம் கட்டுரையின் ஆதங்கங்களை எப்படி புறந்தள்ள முடியும்?
‘ஆசிரியர் பணிதந்த நிறைவும் குறைவும்’ கட்டுரையில், பேராசிரியர் சிவகுமாரின் மனம்திறந்த பதிவுகள், அவர் மாணவர் குழாத்தினை ஆற்றுப்படுத்த மேற்கொண்ட நன்முயற்சிகள், ஓர் ஆசிரியர் இயக்கச் செயல்பாட்டாளராக அவரது முன்நகர்வுகள் ஆகிய அனைத்தும் எம்போன்ற கனவுலகிலேயே
சஞ்சரித்து வாழும் ஆசிரியர்கள், இயக்கவாதிகளது கல்விச்சிந்தனைகளை மெருகேற்றியுள்ளன. பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரையிலான இன்றைய ஆசிரியர்கள் சிலரது செப்படி வித்தைகளைக் கட்டுரையாளர் சுயபரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
இங்குதான் இந்நிலை என்றால், வானளாவப் புகழப்பட்ட ‘ஆங்கில வளாகங்களது’ கல்வி என்ற பெயரிலான இன்றைய நுகர்வோர் கலாச்சாரப் போக்குகளை நயத்தகு நாகரிகத்தோடு விவாதித்துள்ளது நான்காவது கட்டுரை.
மிகப்பெரிய ஆறுதல் என்னவென்றால், சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழின் செம்மையான இருப்பையும் அர்த்தமுள்ள ஆய்வுச்செயல்பாடுகளையும் விளக்கும் மொழியியல் அறிஞர் அண்ணாமலையின் கட்டுரைச் செய்திகளே.
இன்றையப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் புகுந்து விளையாடிவரும் வல்லுநர் பஞ்சத்தைப் போக்க நமது வருங்காலக் கல்வி உலகம் என்ன செய்யப்போகிறது?
- சி. பாலையா
புதுக்கோட்டை
உயர்கல்வி சிறப்புப் பக்கங்களை வாசித்தபோது தமிழகத்தின் அரசு கலைக் கல்லூரிகளின் அவலநிலை நினைவுக்கு வந்தது.
கடந்த மே மாதம் தொலைதூரக் கல்வி மூலம் பயிலும் மகளின் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்காக அரசு கலைக்கல்லூரி ஒன்றிற்குச் சென்றிருந்தோம். தேர்வு தொடங்குவதற்கான மணி அடித்தும் அறை கண்காணிப்பாளர் பணிக்கு மெத்தனமாக நடந்து வந்த பேராசிரியர்கள், சுகாதாரமற்ற மிக மோசமான நிலையில் இருந்த கழிப்பறைகள், தேர்வர்களுக்கான குடிநீரை முதல்வரின் கழிவறையிலிருந்து எடுத்துவந்து வைத்த அவலம் இவை அனைத்தும் அரங்கேறின.
தேர்வுக்கான கட்டணம் செலுத்தும்போதே தேர்வு மையக் கட்டணம் என்ற வகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கணிசமான தொகையை வசூலித்துவிடுகின்றன. ஆனால் தேர்வர்களின் அடிப்படை வசதிகளைக் கூட அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.
கடும் வெப்பம் நிலவிய தண்ணீர்ப் பற்றாக்குறை மிகுந்த அந்த நாளில் மேல்நிலை நீர்த்தொட்டி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மின்மோட்டாரை நிறுத்தவும் அந்த வளாகத்தில் ஆள் இல்லை. சுகாதாரமற்ற கழிப்பறைகள் கண்டு நடுங்கிய மாணவியர் சிலர் அருகிலுள்ள புதிய கட்டடத்தில் இருந்த கழிப்பறைகளை உபயோகித்தனர்.
அடுத்த நாள் தேர்வுக்கு அதே இடத்திற்குச் சென்றபோது கடுமையாக எச்சரிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர். தேர்வு நடந்துகொண்டிருந்த நேரத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பேராசிரியர்கள் கட்டடங்களுக்குப் பின்புறம் புதர்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்று இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொண்டு திரும்பினர்.
ஒழுங்கும் கட்டுப்பாடும் மேல் அடுக்குகளிலிருந்து ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். சில கோடிகளைக் கையூட்டாகக் கொடுத்துத் துணைவேந்தர் பதவிகளைப் பெறுபவர்கள், பேராசிரியர் பணிக்கு லட்சங்களில் வசூலித்துவிடுவதும், பல லட்சங்களைக் கையூட்டாகக் கொடுத்துப் பணி வாய்ப்பைப் பெற்ற பேராசிரியர்கள் மெத்தனமாகப் பணியாற்றித் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவதும் தமிழகத்தின் உயர்கல்வி அவலங்கள்.
- சரவணன்
மதுராந்தகம்
‘தமிழகத்தில் உயர்கல்வி’ கட்டுரைகள் பொதுவாக என்னைக் கவர்ந்தன. ‘கல்வியின் பரிணாமங்கள்’ எனும் தலைப்பில் டாக்டர் நிலாமுதீன் கட்டுரை மெக்காலே கல்விமுறைதனை இக்காலக் கல்விமுறையோடு ஒப்பிட்டு ‘கல்வியின் நோக்கம் திறமையை வளர்ப்பது அல்ல, அறத்தை வளர்ப்பதுதான், என முடித்த விதம் பாராட்டப் பட வேண்டியது. ‘வல்லுநர் பஞ்சம்’ என பேராசிரியர் அ.கா. பெருமாள் குறிப்பிட்டதை என்னால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை. இன்றையப் பல்கலைக்கழகங்களின் இழிநிலைதனைத் தெளிவாக அவர் விளக்குகிறார் எனலாம் .
- மீ. ஷாஜஹான்
திருவிதாங்கோடு