பொம்மை முகச் சிங்கங்கள்
பதிவு
“பொம்மை முகச் சிங்கங்கள்”
கிருஷ்ண பிரபு
படம்: பழனிகுமார்
குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்ட நிகழ்வு சென்னை SIGA தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை 20, 21ஆம் தேதிகளில் நிகழ்ந்தது. குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமுமான பல்துறை ஆளுமைகளின் உரையாடல், கதை சொல்லிகளின் ஊடுபாவு, குழந்தை கதையாடிகள் நிகழ்வு, சிறார் நாடகம் என முழுநாளும் நிகழ்வுகள் தொடர்ந்தன.
20ஆம் தேதி இரவு எட்டு மணி அளவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதான முற்றத்தில், ஐந்தடி நீளமுள்ள ஆஸ்திரேலியத் தொல்குடிகளின் didgeridoo இசைக் கருவியைக் குமார் அம்பாயிரம் சிறிது நேரம் வாசித்தார். வனத்திலுள்ள சிங்கத்தின் கர்ஜனை போலிருந்தது அந்த இசை மீட்டல். அதனைத் தொடர்ந்து ‘பொம்மை முகச் சிங்கங்கள்’ நாடகத்தை வானவில் பள்ளிக் குழந்தைகள் அரங்கேற்றினார்கள்.
பூக்களைப் போலவும் மரங்களைப் போலவும் தேனீக்களைப் போலவும் பசுக்களைப் போலவும் சிங்கத்தைப் போலவும் என ஒப்பனை செய்யப்பட்டு அரிதாரம் ஏற்றிருந்த மாணவர்கள் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற பொருள்படும் கதையின் சாரத்தைப் புதிய வடிவில் கொடுத்தார்கள்.
எளிய உயிர்கள் கரிசனத்துடன் ஒன்றிணைந்தால் அதிகாரத்தை அடிபணியச் செய்யலாம், நரிபோல உலவும் போலி முகங்களைச் சுற்றி வளைக்கலாம் என்பதை நவீனத் தன்மையுடன் அரங்கேற்றினார்கள். கருத்துகள் பிரச்சாரத் தன்மையின் சாயலில்லாமல் கலை வடிவமாக வெளிப்பட்டதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பாத்திரங்களை ஏற்று நடித்த குழந்தைகள் சிறந்த உடல் மொழியையும் குரலில் பாவத்தையும் வெளிப்படுத்தினார்கள். ஒளி/ஒலி அமைப்பும் குமார் அம்பாயிரத்தின் தொல்குடி இசையும் நாடகத்தை வேறு பரிமாணத்திற்கு நகர்த்தின. குழந்தைகளின் மொழியில், பாவனையில் வசனங்கள் துலக்கமாகவும் துல்லியமாகவும் வெளிப்பட்டன.
“தன்னை வேறொன்றாக அடையாளம் காணுதலும், அவ்வாறான பாவனையை முழுமையாக வெளிப்படுத்துதலும் ஆளுமைத் திறனை வளர்க்கும்” என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். அந்த வகையில் வானவில் குழந்தைகளின் நாடகத்திறன் பாராட்டும்படியும், தொழில்முறை நாடகக் கலைஞர்களின் அரங்கேற்றத்திற்கு ஈடாகவும் இருந்தது. இக்குழந்தைகளுக்குப் பரவலான அரங்குகள் இன்னும் இன்னும் என அமைய வேண்டும்.
“நாடோடி சமூகங்களின் தற்காலத் தலைமுறையினர் அவர்களது கலையையும் சுய அடையாளத்தையும் இழக்காத வகையில் பொதுவெளியின் தரமான கல்வியை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கச் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வானவில். நாடகமும் ஓவியமும் இசையும் நடனமும் சிற்பமும்தான் இக்குழந்தைகளின் பேராவல், அதுவே இப்பள்ளியின் முக்கியப் பாடங்களாக இருக்கின்றன” என்கிறார் ‘வானவில்’ பள்ளியின் நிறுவனர் பிரேமா ரேவதி.
இரண்டுநாள் நிகழ்வை ‘தொன் பாஸ்கோ இளைஞர் குழு’, ‘பல்லாங்குழி’, ‘அனிதா நூலகம்’, ‘களிமண் விரல்கள்’, ‘கட்டியக்காரி நாடகக் குழு’ ஆகிய அமைப்புகள் உதிரி ஆர்வலர்களின் கரம் பற்றி முன்னெடுத்திருக்கிறார்கள். இந்நிகழ்விற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குழந்தைகள் பங்கெடுக்க வந்திருந்தார்கள். தமிழ் சார்ந்த கலை இலக்கியக் கொண்டாட்ட விழாவில் குடும்பம் குடும்பமாகப் பார்வையாளர்கள் பங்கேற்பது நம்பிக்கையளிக்கிறது.