தி. ஜானகிராமன் சிறுகதைகள் - ஒரு வேண்டுகோள்
தி. ஜானகிராமன் சிறுகதைகள் - ஒரு வேண்டுகோள்
‘தி. ஜானகிராமன் சிறுகதைகள்’ பெரும் தொகுப்பைக் காலச்சுவடு பதிப்பகம் 2014 டிசம்பரில் வெளியிட்டது. 107 கதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்கு எழுதிய பதிப்புரையில் தி. ஜானகிராமன் எழுதிய சிறுகதைகளின் மொத்த எண்ணிக்கை 122 என்று குறிப்பிட்டிருந்தேன். டாக்டர். பழ. முத்து வீரப்பன், ஜானகிராமன் கதைகளை ஆய்வு செய்து அதை ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள் – ஒரு திறனாய்வு’ என்று நூலாகவும் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1995) வெளியிட்டிருக்கிறார். கதைகளின் எண்ணிக்கை பற்றிய முடிவுக்கு இந்த ஆய்வு நூலே அடிப்படை. முத்து வீரப்பன் நூல் வெளிவந்த தருணத்தில் ஜானகிராமனின் எல்லாக் கதைகளும் தொகுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் நூலில் ஜானகிராமன் எழுதி வெளியான 120 கதைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இரு கதைகள் (‘பாப்பாவுக்குப் பரிசு’, ‘தற்செயல்’) விடுபட்டிருந்ததையும் காலச்சுவடு தொகுப்பின் பதிப்புரையில் எடுத்துக்காட்டியிருக்கிறேன். இந்த இருகதைகளையும் சேர்த்து தி. ஜானகிராமன் கதைகளின் மொத்த எண்ணிக்கை 122 என்ற முடிவை எட்டியிருந்தேன். ‘ஐந்திணை’ பதிப்பக வெளியீடான தி. ஜானகிராமன் படைப்புகள் இரு தொகுதிகளிலும் இடம்பெறாத 8 கதைகள் காலச்சுவடு பதிப்பில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ‘வீடு’ என்ற கதை குறுநாவலாக வெளியிடப்பட்டது. எனவே அதை நீக்கியிருந்தேன். (தி. ஜானகிராமன் குறுநாவல்கள் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது). காலச்சுவடு பதிப்பில் ஜானகிராமனின் 107 கதைகள் உள்ளன.
எண்ணிக்கைக் கணக்கு பின்வருமாறு:
தி. ஜானகிராமன் எழுதிய கதைகள் மொத்தம் (‘வீடு’ நீங்கலாக) 121
தி. ஜானகிராமன் சிறுகதைகள் முழுத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகள் 107
இனி சேர்க்கப்பட வேண்டிய கதைகளின் எண்ணிக்கை 14.
2014இல் வெளிவந்த தி. ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு நூல் கையிருப்புக் குறைந்து மறுபதிப்பு வெளியிடும் தேவையை அடைந்திருக்கிறது. விடுபட்ட கதைகளை அடுத்த பதிப்பில் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையை முந்தைய பதிப்புரையில் தெரிவித்திருக்கிறேன். நூல்வெளியான பின்னும் என்னுடைய தேடலைத் தொடர்ந்து வந்திருக்கிறேன். அதன் மூலம் விடுபட்டுப்போன கதைகள் சிலவற்றைக் கண்டடையவும் முடிந்திருக்கிறது. ‘நரை’, ‘சாப்பாடு’, ‘கோவிந்தராவின் மாப்பிள்ளை’, ‘நிலவு கருமேகம்’, ‘உண்டை வெல்லம்’ ஆகிய கதைகள் முறையே தேனீ, கல்கி தீபாவளி, ஆண்டு மலர்கள், சுதேசமித்திரன் தீபாவளி மலர்களிலிருந்து கிடைத்தன. கல்கி 1965 வெள்ளிவிழா மலரில் வெளியான ‘ஸிடீஎன் / √5ஆர்xக = ரபெ’ இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கதைகளில் ஒன்று. அது இந்த இதழில் முதன்முறையாக மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
“சூழ்நிலையையும் சந்தர்ப்பத்தையும் சொற்களால் வடித்துக் காட்சியாக செய்வதிலும் நுட்பமான மனோபாவங்களைச் சித்திரிப்பதிலும் வல்லவரான தி. ஜானகிராமன் சிறந்த ஹாஸ்ய எழுத்தாளரும் கூட. அவருடைய ஹாஸ்ய நடை வெற்றுவேட்டு போன்றதல்ல. அழுத்தமும் கருத்தாழமும் கொண்டு நம்மைச் சிரிக்கவைத்துச் சிந்திக்கச் செய்யும்.”
என்ற குறிப்புடன் கதை வெளியிடப்பட்டுள்ளது.
எந்தத் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டிராத தி. ஜானகிராமன் கதைகள் சிலவற்றை இந்தத் தேடலில் கண்டுபிடிக்க முடிந்தது. டாக்டர். பழ. முத்து வீரப்பனின் பட்டியலிலும் இதுபற்றிக் குறிப்பில்லை. சிந்தனை (வெளியான ஆண்டு தெரியவில்லை) இதழின் சுதந்திரதின மலரில் ‘ராஜப்பா’ என்ற படைப்பு வெளியாகி இருக்கிறது. ‘தி. ஜானகிராமன் அழகான சிறுகதைகள் எழுதி வருபவர். அவருடைய குண விமர்சனக் கதை இந்த இதழில் தோன்றுகிறது’ என்ற முன்னோட்டக் குறிப்புடன் வெளியிடப்பட்டிருக்கிறது. குணவிமர்சனக் கதை என்று சொல்லப்பட்டாலும் ஜானகிராமன் சிறுகதைக்குரிய அமைதியுடன் எழுதப்பட்டிருக்கிறது ‘ராஜப்பா’. இதைச் சிறுகதையாகவே கருதுகிறேன். இதுபோன்றே எந்தத் தொகுப்பிலும் இடம்பெறாதவையும் எந்த ஆய்வுநூலிலும் குறிப்பிடப்படாதவையுமான ‘புதிய’ ஜானகிராமன் கதைகள் சிலவும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. அவை ‘அதர்ம சங்கடம்’ (சுதேசமித்திரன், தீபாவளி மலர் 1957), ‘பணக்காரன்’ (சந்திரோதயம், 30 ஜனவரி 1946), ‘வடிக்காத கண்ணீர்’. நண்பர்கள் கிருஷ்ண பிரபு, ராணிதிலக், கல்யாணராமன், தனசேகர் ஆகியோர் இந்த மீட்டெடுப்புக்கு பெரிதும் உதவினார்கள்.
‘ஆர்வப் பதிப்பு’ என்ற தலைப்பிட்டு தி. ஜானகிராமன் சிறுகதைகள் முழுத் தொகுப்புக்கு எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன். “வாசகர்களும் ஆய்வாளர்களும் தற்போதைய முழுத் தொகுப்பை முழுமுற்றான தொகுப்பாக உருவாக்க உதவுமாறு கோருகிறேன். சிறுகதைகளின் எண்ணிக்கையில் குளறுபடிகள் இருந்தது போலவே வெளியீட்டுத் தகவல்களிலும் போதாமைகள் இருக்கின்றன. சில கதைகளுக்கு வெளியான இதழ்கள் பற்றிய விவரங்களும் சிலகதைகளுக்கு வெளிவந்த காலம் குறித்த தகவல்களும் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவை பற்றிய விவரங்கள் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் துல்லியமாக்கவும் வாசகர்களின் ஆதரவை நாடுகிறேன்.’’
இந்த வாசகங்களை மீண்டும் வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் முன் வேண்டுகோளாக முன்வைக்கிறேன். விடுபட்ட 8 கதைகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (கதை வெளியான இதழ், ஆண்டு விவரங்களுடன்)
ஈசுவரத் தியானம் - ஆனந்த விகடன், மே 1938
காத்திருந்தவள் - சிவாஜி, அக்டோபர் 1946
தூக்கம் - தேனீ, ஆடி 1948
ஆனைக்குப்பம் - தேனீ, புரட்டாசி 1948
ஜீவனாம்சம் - அமுதசுரபி, நவம்பர் 1950
பரமபாகவதன் - கல்கி தீபாவளி மலர் 1955
எருக்கம்பூ - சிவாஜி, 1968
பூச்சி டயலாக் - கல்கி, அக்டோபர் 1969
மேற்குறிப்பிட்டுள்ள கதைகளுக்கான தேடல் தொடர்கிறது. இந்தக் கதைகள் வெளியான இதழ்களை வைத்திருப்போர் அவற்றைத் தந்து உதவுமாறும், கதைகள் குறித்த பிற விவரங்களை அறிந்திருப்பவர்கள் அவற்றைப் பகிர்ந்துகொள்ளும்படியும் வேண்டுகிறேன். நவீனத் தமிழின் பேராளுமைகளில் ஒருவரது படைப்புகள் செம்மையாகவும் துல்லியமாகவும் வெளியிடப்படுவது நாம் அவருக்குச் செய்யும் கைம்மாறு. புதிய வாசகர்களுக்கு நாம் அளிக்கும் வெகுமதி.
நன்றி.
அன்புடன்
சுகுமாரன்
தொகுப்பாசிரியர் - ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள்’