கவிதைகள்
கவிதைகள்
பாதசாரி
Courtesy: ‘Amavasya’ India Foundation for Arts
மரம்
நான் தனியென
உணராத் தனிமரமும்
தோப்பாகும்..
வழி
இடமெல்லாம் எனக்கு
கால்களால் தெரிந்தவை
மட்டுமே..
கண்ணும் காதும் அறியாதவை
என்னிடம் வழி கேட்டால்
நான் எங்கு போவேன்.
இதயம்
தரையில் வீசி எறியப்பட்ட
சிதறல்களை
உதடுகள் இறுக்கி மௌனமாக
உட்கார்ந்து வரிசையாக
அடுக்கும் போதில்
இதயம் அமைதியின் கச்சிதம் பேணி
கருவிலிருக்கும் குழந்தைபோலக் கண்மூடிப்
பார்த்துக்கொண்டுள்ளது.
அவர்
நாலு பேர் பைத்தியம்
எனச் சொல்லும்
கசங்கிய தன் தோற்றத்தில்
வந்தவர் கை ஏந்தினார்
என்னிடம்
மேலாடைப் பையில்
கைவிட்டுக் காசு எடுக்கும்முன்
ஆளைக் காணோம்
வெளியில் எடுத்த காசை
எனக்கு நானே
கொடுத்துக் கொண்டாயிற்று
நீலக் கனிகள்
விருப்புமில்லை வெறுப்புமில்லை
நீண்ட காலமாகத் தெரிந்தவர்
துக்க வீட்டு வாசல் பெஞ்சில் முக்கால் மணி நேரம் அருகருகே
அமர்ந்திருந்தும்
ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை
அன்றிரவு கனவில்
கைகோத்து நடக்கிறோம்
ஒரு தோட்டத்து வண்டிப் பாதையில்..
பெரு மரமொன்று
கிளைகள் பரத்திக்
கொத்துக் கொத்தாய்க்
கரு நீலக் கனிகளுடன்
பறித்துப் பறித்துக் கை நிறைக்கத் தந்துகொண்டே இருக்கிறார் தீரவேயில்லை..
மின்னஞ்சல்: visumbu29@gmail.com