கடிதங்கள்
கடிதங்கள்
உயிர்த்த ஞாயிறு வன்முறைக்குப் பிறகு இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் மீது ஏவப்படும் வன்மமும் அத்துமீறல்களும் பதற வைக்கின்றன. அனைத்து மதத்திலும் எல்லா வகையான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பிட்ட சில மனிதர்கள் செய்த இப் பாதகச் செயல்களுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் புறக்கணிக்கப் படுவதும் அவமதிக்கப்படுவதும் ஏற்புடையதல்ல.
இந்த மாத இதழின் மூன்று கதைகளும் ஆண் பெண் உறவின் மூன்று வகையான பரிமாணங்களை ஆவணப்படுத்தின. ‘தமன் நெகரா’ கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு களம்; அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் கே. நல்லதம்பி.
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் குடும்பத்தினரும் சமூகமும் விதவை மறுமணத்தை விவாதித்துக்கொண்டிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. காலம் முழுவதும் தனிமையில், விரகத்தில் வெந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் மறுமணம் புரிந்துகொள்வது உவப்பானதுதான்.
ஒரே பத்தியில் அமைந்திருந்த கல்யாணராமனின் ‘விபரீத ராஜயோகம்’ சிறப்பான கதை. கால் நூற்றாண்டு வாழ்க்கையே வீணாகிப்போய்விட்டதாக வருந்தும் மனைவிக்கு அவர் தரும் விளக்கமும் மனைவியின் மனமாற்றமும் அழகாகச் சித்திரிக்கப்பட்டிருந்தன.
சரவணன்
மதுராந்தகம்
‘மீண்டும் மோடி’ தலையங்கம் பல்வேறு எதார்த்த நடைமுறைகளை மீள்பார்வை செய்துள்ளது. ஆனால், ஆளுங்கட்சியின் அமோக வெற்றிக்கான காரணத்தைச் சுட்டிக்காட்ட முற்பட்ட தலையங்கம், “மதச்சார்பின்மை என்ற நிலைப்பாடு மக்களிடையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று எடுத்துரைத்துள்ளது. அப்படியானால், காலங்காலமாக நமது நாட்டில் கட்டிக்காத்துவரப்பட்ட மதச்சார்பின்மை நிலைப்பாட்டை மக்கள் மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள் என்று பொருள் கொள்வதா? அத்துடன், ‘எதிர்க்கட்சிகள் இந்நிலை குறித்துப் புதிய கண்ணோட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்றும் தலையங்கம் வலியுறுத்துகிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்குமா இந்நிலைப்பாட்டில் இப்படி திடீர் கருத்துமாற்றம் ஏற்பட்டுவிட்டது? காலச்சுவடு எப்படி இவ்வாறு சிந்திக்க முற்படுகிறது என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாகியுள்ளது.
அதே சமயம், மக்களின் இதுபோன்ற வெளிப்படையான தேர்தல் முடிவு எவ்வாறு ஏற்படுத்தப்பட்டிருக்க முடியும்? எதிரணி முகாமில் மக்களின் உள்ளார்ந்த ஈர்ப்பு எடுபட இயலாத துர்பாக்கிய நிலை உருவாகிவிட்டது புலப்படவில்லையா? வலுமிக்க ஒன்றுபட்ட கூட்டணித்தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்க்கட்சிகள் யூகிக்கத் தவறிவிட்டதும் பொதுவான உண்மை இல்லையா?
மக்களின் ஏகோபித்த ஏற்புடைமையும், பக்குவம் மேலோங்கிய ஆளுமையும், உறுதிமிக்க நம்பகத் தன்மையும் உள்ள தலைமை எதிர்முகாமில் ஏற்படுத்தப்படவில்லை. வேகமும், ஓங்கிஒலித்த உண்மையின் குமுறல்களும் தமது விவேகத்தை நிலைநாட்டி மக்களின் தடுமாற்றத்தை மடைமாற்றம் செய்யத் தவறிப்போய்விட்டதை மக்கள் எடைபோட்டுப் பார்த்திருக்கமாட்டார்களா? இதுதான் தேர்தல் முடிவுகளின் எதார்த்தமாக இருக்க முடியும்.
“கடந்த முப்பது ஆண்டுகளாக போலி மதச்சார்பின்மை பேசியவர்களுக்குத் தக்க பாடம்” என்று நமது பிரதமர் கூறியுள்ளார். இதன் உட்பொருளை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்தியப் பெருங்கண்டத்தில் மதச்சார்பின்மை அப்பட்டமான போலி வாதமாகிவிட்டது என்பதை அவரது பேச்சு முன்மொழிகிறதா?
கொடுத்த வாக்குறுதிகளைப் பகட்டாக அள்ளிவீசி வாக்குகள்பெற இயலாத ஆளுங்கட்சி, பெருமளவு மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, ஆவேசங்கள் பொங்கிய பரப்புரைகளையே மேற்கொண்டது. அறிவு பூர்வமான விஷயங்கள் மிகக்குறைவு. இதற்கு பக்தி, சாதி, மொழி, வகுப்புவாதச் சித்தாந்தங்களே அடிப்படையாய்ப் பயன்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளின் அபரிமித நன்கொடையாளர்களது அடையாளத்தொடர்புகள் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது. சரியான தேர்தல் சீர்திருத்தங்களே 85 கோடி வாக்காளர்களது நலன்களைப் புறந்தள்ளாத உயர்மட்ட ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் உரிய கரிசனத்தைத் தூண்டும். இதுபோன்ற காலத்திற்கேற்ற கருத்துகளை மற்ற இரண்டு கட்டுரைகளும் முறையே சுட்டிக்காட்டியுள்ளன.
சி.பாலையா
புதுக்கோட்டை
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவைப் பிற தமிழ் இதழ்கள் உரியமுறையில் விமர்சனம் செய்யாமல், பாஜக வெற்றியைப் போற்றிப் புகழ் பாடியுள்ளன. மோடி, அமித்ஷா இருவரின் கூட்டு வியூகத்தையும் சாதனையையும் வானளாவப் புகழ்ந்துள்ளன. சில இதழ்கள் அச்சம் காரணமாக விமர்சனத்தைத் தவிர்த்துள்ளன.
இந்தச் சூழலில் காலச்சுவடு துணிந்து எழுதியுள்ளது. பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதச் சார்பின்மைக்கு ஆபத்து உருவாகும்: மேலும் புராதன நம்பிக்கைகள் சார்ந்த மீட்பு வாதத்தை முன்இருத்துவது, சிறுபான்மையினர்க்குப் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்தல், எளிய மக்கள் புறந்தள்ளப்பட்டு கார்ப்பொரேட்டுகளின் கைப்பாவைப் போல் செயல்படுதல் போன்ற பாஜக-வின் செயல்பாடுகள் தொடரத்தான் போகின்றன என்றும் மறுபடியும் பணமதிப்பு இழப்பை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம், மக்களின் கல்வி கலாச்சாரப் போக்கின் அடிப்படைவாதம் தொடரலாம் என்றும் தெரிவித்து, பாஜக-வின் அமோக வெற்றியால் இந்திய மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் இடர்ப்பாடுகளைத் தங்கு தடையின்றி வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
தேர்தல் வெற்றிமாலையுடன் உதிர்த்த ‘கடந்த முப்பது ஆண்டுகளாகப் போலி மதச்சார்பின்மை பேசியவர்களுக்கு மக்கள் பாடம் கற்பித்திருக்கிறார்கள்’ என்ற சொற்கள் மோடியை உருவகப்படுத்துகின்றன. அண்ணல் காந்தியடிகள், பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் கட்டிக்காத்து வந்த மதச்சமன்பாடெல்லாம் போலியானவையா? மற்ற மதங்கள் இந்தியாவைப் பொருத்தமட்டில் இந்து மதத்திற்கு அடிபணிந்து இருந்துகொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அவை ஒடுக்கப்படும் என்ற நிலைப்பாடுதான் பாஜகவின் மதச்சார்பின்மையா? பாஜகவின் ஜனநாயகமானது பாஸிச அடிப்படையிலானது. இந்தப் பாஸிச மதவாதத்தில் மக்களைப் பழக்கியவாறு வலதுசாரிப் பொருளாதாரச் சந்தைக்கு நாட்டைக் கொண்டு சென்று குத்தகை வணிகத்தைப் பெருக்கிட, குத்தகை முதலாளிகளுக்கே துணை போவது பாஜக அரசு. வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு பொது நன்மைக்கு ஊறுவிளைவிக்கும் கார்பரேட் திட்டங்களை நிறைவேற்றுவதே பாஜகவின் முதன்மையான நோக்கமாகும்.
க.சி. அகமுடைநம்பி
மதுரை
மறைந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தன. பழ. அதியமான் எழுதிய ‘அள்ளித் தெளித்த கோலங்கள்’ கட்டுரை நயத்தக்க நாகரிகத்தோடு அமைந்தது மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலிருந்து பிற மொழிக்குப் பெயர்ப்பவர்களுக்கு உதவும் வழிமுறைகளை உணர்த்தும் விதமாகவும் இருந்தது.
ஜனநேசன்
காரைக்குடி
‘மீண்டும் மோடி’ எனக்கு அதிர்ச்சியையும் அளித்தது. இந்த மோடியின் கூழைக்கும்பிடு ஏழைகளுக்கானதல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தார்கள் இவர்கள்? ஒன்றுமே இல்லை என்பதே பதில். கடைசி நேரப் பிரச்சாரத்தில் தேசத்தின் மீது, பக்தியையும் மிகுந்த பாதுகாப்பையும் இவர்களால் மட்டுமே தரமுடியும் என்று அழுத்தி அழுத்தி பேசப்பட்டது. மக்களுக்கு ஒருவித பய உணர்வு கூட வந்தது. ஆகவேதான் மதச்சார்பின்மை, unity in diversity காணாமல் போனது. மீண்டும் ஒரே வரியில் ஒரே இந்தியா வந்து விடுமோ என்ற பயமும் கூடவே வருகிறது. வருகின்ற அய்ந்து ஆண்டுகளில் இந்த அச்சத்தைப் போக்குவார்களா.
இலங்கையில் ‘ஈஸ்டர் கொலை’ சற்றும் எதிர்பாராதது. ஏதோ பக்கத்துத் தெருவில் போர் ஏற்பட்டது போன்ற பீதியை உணர்வை ஏற்படுத்தியது. மதம் எழுதி வைத்திருப்பது அன்பைப் பற்றி! ஆனால் ஏன் எந்த மதமும் அதைப் பின்பற்றுவதில்லை? எப்போதோ, எங்கேயோ படித்தது. “கண்ட சகோதரனை நேசிக்காதவன், காணாத கடவுளிடத்தில் எப்படி அன்பு கூற முடியும்?” இது இன்றளவும் கேள்விக்குறிதான்.
‘காத்தான்குடியின் கதை’ படித்தேன். நானும் என் விழிகள் கசிந்த நிலையிலேயே இக்கட்டுரையைப் படித்து முடித்தேன். கவலைப்பட வேண்டாம் நஸீகா. வேறென்ன நான் சொல்ல!
‘குற்றமயமாக்கப்படும் பெண்ணுட’லில் புர்காவோ, நிகாபோ (இது இரண்டிற்கும் எனக்கு வேறுபாடு தெரியாது) அணிகின்ற பெண்ணாக இருந்திருந்தால் ஆண் தீவிரவாதிகளின் முகத்தில் அதனைக் களைந்து எறிந்துவிட்டு நடந்திருப்பேன்” என்கிறார் கட்டுரையாளர் ஸர்மிளா ஸெய்யித். இக்கணம் இப்படிப்பட்ட பெண்கள் தான் தேவை.
ஞா. சிவகாமி
போரூர்