‘தேர்தல் 2019’தலையங்கம் ஐந்து ஆண்டுகளில் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்புகளான திட்ட கமிஷன், நிதித்துறை, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், ஊடகங்கள், பாதுகாப்புத்துறை ஆகியனவற்றைப் பலம் இழக்கச் செய்ததுதான் இந்த அரசின் சாதனை. இவ்வாறு சொல்லியிருப்பது எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ஆளுங்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் மோடியை மறுபடியும் தேர்ந்தெடுத்தால் நம் அனைவருக்கும் 2024இல் வாக்களிக்கும் வாய்ப்பு கூடக் கிடைக்குமா என்பது சந்தேகமே. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டிற்குப் பிற்போக்குத்தனமான, ஃபாசிச, வலதுசாரி, மதவாத அரசு நிச்சயம் தேவையில்லை. கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்ட சிந்தனையாளர்களின் படுகொலைகள் காவிகளுக்கு நிச்சயம் தண்டனைகளைப் பெற்றுத் தரும். எந்த விழுமியங்களுமற்ற இந்த அரசு தமிழகத்திற்குச் செய்த துரோகங்களும் மிக அதிகம். இவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சரவணன்
மதுராந்தகம்
சுகிர்தராணியின் ‘பெண்ணுடலின் கற்பிதங்கள்’ பொள்ளாச்சியில் இருப்பதால் அச்சம்பவம் குறித்த பலகோணங்களிலான கருத்துகளைக் கேட்டுக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருக்கிறேன். கல்வி நிறுவனங்களில் ஆண் பெண் தனித்தனியே புழங்குமிடங்கள் இருப்பதைப் பெருமையாகச் சொல்லிக்காட்டி மாணவர் சேர்க்கைக்கு விளம்பரப்படுத்தும் இச்சமூகத்தில் இதுபோன்ற விஷயங்கள் மட்டும்தான் நடக்கும் இல்லையா? மேட்டுப்பாளையத்தில் இருக்கும் மிகப்பிரபல ஆன்மீகக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அறவே பார்த்துக்கொள்ளக்கூட முடியாது. மைதானத்தில் எங்கேனும் தவறுதலாகப் பார்த்துவிட்ட பையன்களை மணலில் முழந்தாளிடச் சொல்கிறார்கள். இப்பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் போட்டியிடுகிறார்கள்.
பரஸ்பர ஈர்ப்பு இருக்கும் காலத்தில் பரஸ்பரம் தெளிவுபெற எந்த வாய்ப்பும் இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு இப்படித்தான் நடக்கும்; இப்படித்தான் அவர்களும் நடந்துகொள்வார்கள். ஆண்களும் பெண்களும் சாதாரணமாகப் பேசிக்கொள்ளவும் பார்த்துக்கொள்ளவும் முடிகின்ற பள்ளிகளே கிடைக்காமல் பதின்பருவ மகன்களைப் பெரும்பொருட்செலவில் இவையெல்லாம் அனுமதிக்கப்படுகின்ற ஒரு பள்ளியில் சேர்த்திருக்கிறேன்.
சிம்மிஸ் மட்டும் போட்டுக்கொண்டு வந்த பத்து வயதே ஆன தம்பியின் மகளை அவளின் பெற்றோர் கடுமையாகக் கண்டித்தபோது, தோளைக் குறுக்கிட்டுதான் நடக்கணும் என்று தோழியொருத்தியின் மகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டபோது, மல்லாக்கப் படுக்கக்கூடாது என்று தன் மகளுக்கு அக்கா அறிவுறுத்தியபோது, மருத்துவ நண்பருக்கு மகள் பிறந்தபோது பிற்காலத்தில் ஒல்லியாக அழகாக இருக்கும்பொருட்டுக் கெட்டித்துணியினால் பச்சிளம் உடலை இறுக்கச்சுற்றிக் கட்டியபோது, மாணவிகள் உரக்கச் சிரிக்கக்கூடாது என்று பிற ஆசிரியர்களால் கடிந்துகொள்ளப்பட்டபோதெல்லாம் நான் இடைபட முடியாமல் அமைதியாக இருந்ததற்கு வெட்கமடைகிறேன். நீ பெண், பெண் என ஒவ்வொரு கணமும் பெண்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது இச்சமூகம்.
ஒரு புலனாய்வுப் பத்திரிகையில் அரசுப் பள்ளியொன்றில் சானிடரி நேப்கின் வழங்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தும் மாணவிகளின் முகத்தை மறைத்துப் புகைப்படம் வெளியிட்டிருந்தார்கள். பாலியல் தொழிலாளி ஒருவர் தன் கதையைத் துணிவுடன் புத்தகமாகக் கொண்டுவரும் காலத்தில், ஏன் சானிடரி நேப்கின் எடுப்பதை மறைக்கவேண்டியிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை
மகனுடன் படிக்கும் தோழி வீட்டுக்கு வந்திருந்து அரைக்கால் சட்டையும் பனியனுமாக மகன்களுடன் வீட்டு வாசலில் உதைபந்து விளையாடிக்கொண்டிருந்தார். அதை அந்தச் சின்னக் கிராமமே வியந்தும் கொதித்தும்போய்ப் பார்த்துக்கொண்டிருந்தது. அதற்கு ஏராளமான எதிர்வினைகளும் வந்தன.
இக்காலத்தில் சரியாக வளர்க்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் காலத்தில், அவர்களே பெரும்பான்மையாக சமூகத்தில் மாறும்போதுதான் காலம் மாறலாம் என்னும் மிகச்சிறு நம்பிக்கை மட்டும்தான் எனக்கு இருக்கின்றது. பெரிய அளவில் மாற்றங்கள் பொதுவில் வர வாய்ப்பில்லையென்று நினைக்கிறேன். ஆசிரியர்களும் பெற்றோர்களும் இவற்றைக் குறித்தெல்லாம் சிந்திப்பது கூட இல்லை
பெற்றபிள்ளைகள் அவசியம் +2 வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி டாக்டராகவோ பொறியியலாளராகவோ ஆகி ஜென்ம சாபல்யம் அடைய வேண்டும் எனப் பெற்றோர்கள் நினைக்கும் சமூகத்தில் என்ன மாற்றம் வரமுடியும்?
கூட்டுக்குடும்பங்கள் கிடையாது. மாமா, அத்தை என உறவினர்களுடன் ஒட்டுதலும் நெருக்கமும் கலந்துறவாடலும் இல்லை. பெரும்பாலும் ஒற்றைப் பெற்றோர்களுடன் வாழ்வு, படிப்பு தரும் அழுத்தம் இப்படி பலவிஷயங்களில் சிக்கிக்கிடக்கும் பதின்பருவத்தினரை நாம் அனைவருமேதான் புரிந்துகொண்டு அரவணைக்கத் தவறிக் குற்றவாளிகளாகவும் பாதிக்கப்பட்டவர்களுமாக ஆக்கிவிட்டிருக்கிறோம். சுகிர்தராணி சொல்வது முழுவதும் சரியே!
பெருமளவில் மாற்றங்கள் எதற்கும் இனி வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். ஒரு கல்லூரி ஆசிரியராகவும் இரண்டு மகன்களுக்குத் தாயாகவும் இச்சம்பவம் நடந்தபின்னால் நான் பணிபுரியும் கல்லூரியில் மாணவிகளிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன். இதில் எவரேனும் தெரிந்தோ தெரியாமலோ சம்பந்தப்பட்டிருந்தாலும் அது வருந்தத்தக்கதும் இனிமேல் டக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒன்றும்தானே தவிர, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கான பாவமல்ல என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். தன்னுடல் வெளியே தெரிந்துவிட்டது என்பது பெண்ணுக்கு மட்டும் உயிரைவிடுமளவிற்கான அவமானகரமான ஒன்றல்ல என்பதை மாணவிகளிடம் விளக்க முயன்று தோற்றேன் என்றே சொல்ல வேண்டும். இன்னும் அவர்களின் குருதியில் நஞ்செனக் கலந்துள்ள பெண்ணுடல் குறித்தான கற்பிதங்களும் அச்சுறுத்தல்களும் அறவுரைகளும் முற்றிலுமாக வெளியேறப் பல நூற்றாண்டுகள் ஆகலாம். இப்போது பொள்ளாச்சியில் இச்சம்பவம் நடந்த சுவடே இல்லை. காணொளிகள் விற்பனையில் இருப்பதாகக் கேள்வி. அரசியல் சூடு மட்டும் நகரெங்கும் இருக்கின்றது. சுகிர்தாவின் பதிவு வேதனையையும் நிறைவையும் ஒரு சேர அளித்தது.
லோகமாதேவி
மின்னஞ்சல் வழி
‘பெண் உடலும் கற்பிதங்களும்’ என்ற பொதுத் தலைப்பில் நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முதல் கட்டுரையில் ‘ஆண்குறிப் பெருமிதமே ஆணாதிக்கமாகவும் பெண்களின் மாதவிடாயும் கர்ப்பப்பையும் பெண்ணடிமைத்தனமாகவும்’ சமூகப் பார்வையில் நிற்கிறது என்று கட்டுரை ஆசிரியர் பதிவிட்டுள்ளார். தற்கால மேம்பட்ட மனித வாழ்வின் அறிவுப்புலத்தில் இக்கருத்தை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. அப்படியானால் ஆண், பெண் உறவுச் சூட்சுமத்தில் ‘ஆணின் தவிப்பு அடங்கிவிடும்போது பெண்ணின் தவிப்பு தொடங்கிவிடும்’ என்ற இயல்புநிலை வரும்போது இந்த ஆணாதிக்கப் பெருமிதம் எங்கே போய்விடுகிறது?
ஆண்களை வணங்கித் துதிக்கும் பதிபக்தி என்றோ உருவாக்கப்பட்டு, புரையோடிப்போன சொல்லாடல்களைக் காரணமாய்க் கொண்டு சமூகத்தில் இன்றும் அன்றாடம் நடந்தேறிவரும் பாலின அல்லல் பேதங்களுக்கு இயற்கையின் இணையற்ற கொடைகளான ஆண், பெண் உடலுறுப்புக்களைக் காரணப்படுத்துவது ஏற்புடையதாகாது. இருபாலினங்களின் ஒவ்வோர் உடலுறுப்பும் அதனதன் பயனால் முக்கியமானவையே. அதேபோன்று ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருபாலருக்குமே பொதுவானது என்று வாதிடலாமே தவிர ‘ஒழுக்கம்’ என்ற ஒன்றே கிடையாது என்று எப்படி வாதிட இயலும்? ‘குறைந்தபட்ச அறம்’ என்பதை எதில் வைத்துப் பார்ப்பது? ‘பள்ளிகளில் வழங்கப்படும் சானிடரி நாப்கினை மறைபொருளாய் எடுத்துச் செல்லுங்கள்’ என்றும் ‘துப்பட்டாவைச் சரியாகப்போடு’ என்றும் அறிவுறுத்துவது தேவையற்றது என்ற பொருளில் கட்டுரை மேலும் விவாதிக்கிறது. இதன்படிப் பார்த்தால் இளம்பெண்களுக்கு ‘துப்பட்டா’ என்ற மேலாடையே தேவையற்றுப்போய் விடலாமோ? சானிடரி நாப்கின் ஓர் அவசியமான மறைபொருள் என்பது சரியாகப்படவில்லையா? பொதுவாக, பெண்களின் பிரத்தியேக உடலமைப்பினையும் அதற்கான உள்ளாடைகளையும் அநாவசியப் பகிரங்கத்திற்குள்ளாக்குவதிலா பெண்ணுரிமையும் சுதந்திரமும் நிலைநாட்டப்படுகிறது? ‘இலைமறை காய்’ என்பது மன்மதக்கலையின் அந்தரங்க நடைமுறைகளில் சுவாரஸ்யமான மனித உணர்வில்லையா?
அதேசமயம், தற்காலப் பெரும்பகுதியான ஆசிரியர்களிடத்தில் இல்லாதுபோன முற்போக்குச் சிந்தையுள்ள சமூகப்பொறுப்புணர்வு பற்றியும், உடல்கூறு பருவம், சமூகம் சார்ந்த பிரச்சினைகளைத் தொடாத ஏட்டுச்சுரக்காய்த் தத்துவங்களடங்கிய ஆசிரியர் கல்வி பற்றியும், வாழ்வியல் திறன்களை முற்றிலும் அந்நியப்படுத்திவிட்டுப் பாடப்புத்தங்களை ஒட்டியே அமைக்கப்பட்டுவரும் வினாத்தாள்கள் பற்றியும் பதிவிட்டுள்ள கட்டுரை ஆசிரியரின் மனக்குமுறல்கள் அனைத்தும் காலத்தின் கட்டாயம். வளர்ந்துவரும் கல்வியுகம் இந்த மனக்குமுறல்களைக் கவனத்தில் கொள்ளுமா?
சி. பாலையா
புதுக்கோட்டை
‘தேர்தல் 2019’ தலையங்கம் நடுநிலை தவறாமல் எழுதப்பெற்றிருந்தது. இந்தியக் குடிமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிப் போனது பா.ஜ.க. ஆட்சியில்தான்; தொழில், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பன்முகத்தன்மை, மதம், மொழிச் சுதந்திரம் - இப்படி ஒவ்வொரு துறையிலும் தோல்விக்கு மேல் தோல்வி கண்டுள்ளது என்றெல்லாம் எதிரணியினர் தொடர்ந்து குரல் கொடுத்துவருவதைப் புறந்தள்ள முடியவில்லை.
தோல்வியை மறைக்க, கடந்துபோன ஆட்சியைக் குறைசொல்லி விமர்சிப்பதிலும் வம்புக்கு இழுப்பதிலும் ஐந்தாண்டுகள் ஓடிப்போயின. வேலையில்லாத் திண்டாட்டம், கடன் சுமை, வறுமை, பணத்தட்டுப்பாடு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். வேலைவாய்ப்பைப் பெருக்குவோம், கறுப்புப் பணத்தை ஒழித்து 15 லட்சம் செலுத்துவோம் என்ற வாக்குறுதிகள் காற்றில் கரைந்துபோயின.
2011-12ஆம் நிதியாண்டில் 2.2 விழுக்காடாக இருந்த வேலையின்மை, 6.1 விழுக்காடாக உயர்ந்ததுதான் மிச்சம். 15 - 19 வயதுக்காரர்களில் நகர்ப்புறங்களில் 18.1% ஆண்களும் 27.2% பெண்களும் வேலை தேடி அலைவதாகவும், கிராமப்புறங்களில் 17.4% ஆண்களும் 13.6% பெண்களும் வேலையின்றி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தேசிய புள்ளியியல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 2018 டிசம்பர் இறுதியில் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டுவிட்டதென்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் என்ற தனியார் நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிக்கை அளித்துள்ளது. இந்த அவலமான சூழலுக்குக் காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை; முதிர்ச்சியற்ற இந்த நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் முடங்கிப் பெரும் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
பாலியல் வன்முறை பெண் உடலும் கற்பிதங்களும் கட்டுரைகளைப் படித்தேன். அதிர்ந்து போனேன். நான் பிறந்தது ஒரு குக்கிராமத்தில்தான். அங்கே சிறுவயது குழந்தைகளுக்கு, ஆண் குழந்தைகளுக்கு வெள்ளியால் அரைஞாண் கொடி இடுப்பில் கட்டுவர். பெண் குழந்தைகளுக்கு நிர்வாணத்தை மறைக்க அரைமூடி செய்து அந்த அரைஞாண் கொடியில் பெண்குறியை மறைத்து உள்ளதைப் பார்த்திருக்கிறேன். ஆக பெண் நிர்வாணம் பிரச்சினையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது பாலியல் வன்கொடுமை, வன்புணர்வு நித்தம் நித்தம் நடக்கிறதாம். ஒருமணி நேரத்தில் மூன்று பெண்கள் சராசரியாக இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்ற புள்ளி விவரத்தைப் படித்ததும் பயந்தே போனேன். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மிகக் கொடியது. ஆனால் முன்பின் தெரியாத நபர்களிடம் எப்படித் தொடர்பில் இருக்க இயலும்? அதுவும் வீட்டில் உள்ள அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தங்கைக்குத் தெரியாமல்? வீட்டில் உள்ளவர்களிடம் நாம் மார்க்கெட்டுக்குப் போகிறோம். ஆபீசுக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டுத்தானே செல்ல வேண்டும்? எந்த தாய் தகப்பனாவது தன் மகள் கெட்டுப் போகப்போகிறாள் என்று நினைக்க முடியுமா? முடியவே முடியாது. கோவையில் மீண்டும் அந்த துடியலூர் 6, 7 வயது பெண் குழந்தையை கூட்டுப் பாலியல் வன்கொடுமையுடன் கொலையும் செய்தது கொடுமையிலும் கொடுமை. அடிப்படையில் நம்மிடம் மனிதாபிமானம், மனிதநேயம், ஈவு, இரக்கம், அன்பு இத்யாதி இத்யாதி... இல்லவே இல்லை என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. ‘செயலால் சீர் பெறல்’ கீதா நாராயணனின் கட்டுரை, களத்தின் உண்மையைச் சொல்கிறது. கண்டிப்பாக இந்தப் பாலியல் வன்கொடுமைகள் அரசுக்கும், அரசு காவல்துறையின் ஆசீர்வாதத்தாலேயேதான் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாற்றுக் கருத்து இல்லை. கட்டுரையைப் படித்ததும் மனம் கனத்தது. எப்போது தெளிவு பிறக்கும்?
ஞா. சிவகாமி
போரூர்.
பா. செயப்பிரகாசம் தமிழ்ச் சூழலில் குறிப்பிடும்படியான மூத்த படைப்பாளி; மொழிப் போராளி. இலக்கியப் பரப்பில் நன்கு அறியப்பட்டவர். ஈழப்பிரச்சனை சார்ந்து, தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று தீவிரமாக அவர் செயல்பட்டது யாவரும் அறிந்ததே. இவரின் ‘உப்புக் காற்றில் உலரும் கண்ணீர்’ கட்டுரையானது ஈழத்தின் வடகோடித்தீவான காரைத்தீவிலுள்ள அவருடைய நண்பரின் இறப்பிற்குத் துக்கம் விசாரிக்கச் சென்றபோது பார்த்ததையும் கேட்டதையும் தன்னுடைய பயணக்கட்டுரையாக எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையை மையப்படுத்தியே இந்தக் கேள்விகள் எழுந்தன.
செயப்பிரகாசத்தின் நண்பரான கென்னடி குடும்பம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். “தந்தை செல்வநாயகம் தலைமையில் நடந்த அறவழிப் போராட்டத்தில் கென்னடியின் தந்தை பங்கேற்றார். மகளுக்கு ஸ்டாலின் பெயரில் ஸ்டாலினா வீரமங்கை எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தார். அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி படுகொலை செய்யப்பட்டதை உலகம் துயரத்துடன் கவனித்தது. தன் மகனுக்கு ஜான் மனோகரன் கென்னடி எனப் பெயர் சூட்டிய அவரது செயல் அதிசயிப்பானது.” இப்படியான பின்புலம் கொண்ட குடும்பத்தை “கென்னடியின் குடும்பம் சைவ வெள்ளாள மரபினது” என்று எழுதுகிறார். அடுத்து “சிதம்பரத்தில் இருப்பதுபோல், அங்கொரு கோயிலை உண்டாக்கியிருந்தனர் தமிழ்ச் ‘சைவ மரபினர்’” என்றும் அடுத்து “நயினார் தீவின் மேற்கு மூலையில் நாக பூசணி அம்மன் ‘சைவக்கோவில்’ இருக்கிறது” என்றும் எழுதுகிறார்.
சைவ மரபையும் சைவ வெள்ளாளரையும் சைவக் கோவிலையும் ஒரு கட்டுரைக்குள் பதிவுசெய்ய வேண்டிய தேவை உங்களுக்கு இருந்திருக்கிறது. திரும்பத்திரும்ப எதை நிறுவ முயல்கிறீர்கள்?
பா. செயப்பிரகாசத்தைத் தீவிர மார்க்சிஸ்டாக அறிந்திருக்கிறேன். அதன்பின்பு தீவிர தமிழ்த் தேசியவாதியாக அதிகம் படித்தும் இருக்கிறேன்; தற்போதைய காலங்களில் அவரைச் சைவ வெள்ளாளவாதியாக பார்ப்பது மிகுந்த ஆச்சரியம் தருகிறது. மூத்த படைப்பாளியான அவர் எங்களைப் போன்றவர்களுக்கு எதைச் சொல்லித்தர விரும்புகிறார்?
தமிழ்நாட்டில் தற்போது இருபத்தைந்து மாவட்டங்களில் 106 அகதிமுகாம்களில் 2016 அரசு கணக்கின்படி 63,351 அகதிகளும் முகாமுக்கு வெளியே 37,868 நபர்களும் இருக்கிறார்கள். இவர்கள் உறவுகொள்வதைத் தவிர மற்ற அனைத்திற்கும் தமிழ்நாட்டு அரசு அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தமிழ்நாட்டில்தானே வாழ்கிறீர்கள், அல்லது பாண்டிச்சேரியிலா? இதைப்பற்றி மூத்த படைப்பாளியாக என்றாவது எழுதி, பேசியிருக்கிறீர்களா?
இதைப் பேசுவதற்கு உங்கள் வார்த்தையில் சொல்வதானால் ‘ஆரிய வித்தையும் அல்லாவித்தையும்’ தேவைப்படுமா என்ன?
“இராணுவச் சோதனைக்குப் பின்னர் தான், ஆண்டவனைத் தரிசிக்க செல்லக் கூடும். நாங்கள் சென்ற ஆட்டோ வாகனத்தைச் சோதனை செய்து, யார் - எவர் என்ற பெயர்களைக் குறித்துகொண்ட பின்னர் அனுமதித்தார்கள்.”
அகதிகள் பக்கத்து மாவட்டத்திலுள்ள மருத்துவமனைக்குப் போவதாக இருந்தாலும் அல்லது இறப்பு வீட்டுக்குப் போவதாக இருந்தாலும் நீங்கள் வாழும் நாட்டின் அரசு அதிகாரிகளிடம் அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உச்சப்பட்டி அகதிகள் முகாமில் இரவீந்திரன் உயர்மின் அழுத்தக் கம்பியில் பாய்ந்து ஏன் தற்கொலை செய்தார் என்பதாவது தெரியுமா?
“மற்றொரு பக்கம் குடியேறவும் வாழ வழியில்லாமலும் ஆக்கப்பட்டு நின்ற மொட்டைக் கழுத்தியான வீடுகள்,” “மொட்டையாய் அகோரமாய்க் கண்ணை அழுத்தின வீடுகள்.”
நீங்கள் என்றாவது மண்டபம் அகதிகள் முகாமுக்குள் சென்றிருக்கிறீர்களா? அங்குள்ள வீடுகளின் நிலை தெரியுமா உங்களுக்கு? முகாம்களின் பத்துக்குப் பத்து வீடுகளையாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இலங்கை சென்ற நீங்கள் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பி மீள் குடியேற்றப்பட்ட அகதிகளின் வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?
“தங்களின் பிள்ளைகளைத் தேடியலையும் பெற்றோர்களும், கணவனைத் தேடித் தோற்ற மனைவியும், மனைவியைத் தேடித்தோற்ற கணவனும், உடன்பிறப்புகளைத் தேடி அழும் கூடப்பிறந்தவர்களும் சொன்ன கதைகளால் மண்டபமெங்கும் துயரத்தின் தாழி நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.”
அகதிகள் முகாமில் இருப்பவர்கள் சாமானியர்கள். அவர்களால் விமானத்தில் வெளிநாடு போகுமளவுக்குப் பொருளாதார வசதியில்லை. ஆகவே அவுஸ்ரேலியாவுக்கு ஆபத்தான கடல் வழியாகப் பயணம் செய்ததில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயிருக்கிறார்கள். இலங்கையில் உள்ளதுபோலவே நீங்கள் வாழும் நாட்டில் அகதிகள் முகாமில் உள்ள அகதிகள் மேற்குறிப்பிட்டதுபோல் அண்ணணையும் அப்பாவையும் காணவில்லை. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை யாரிடம் கேட்பதென்றே தெரியவில்லை. இதுபற்றி என்றாவது எழுதியிருக்கிறீர்களா? அகதிகளில் காணாமல் போனவர்கள் பற்றி உங்கள் வார்த்தையில் சொல்வதானால் “வெடிப்புறப் பேசிட முடியாது; வெளிப்படையாகவும் பேசிட முடியாது.”
இது இன்று உங்கள் நாட்டில் வாழும் சுமார் ஒரு லட்சம் அகதிகளுக்குப் பொருந்தாதா? அகதியாகக் கேட்கிறேன், யாருடைய மனச்சாட்சிகள் மவுனித்திருக்கின்றன? உங்கள் நாட்டில் வாழும் அகதிகளுக்காக மூத்த படைப்பாளியான நீங்கள் முதல் கல்லை எடுத்தீர்களா?
நீங்கள் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்று உங்களுடைய முடிவில் குறுக்கிடவில்லை; நீங்கள் ஏன் ஈழத்துக்காக மட்டுமே பேசுகிறீர்கள்? உங்கள் நாட்டில் அகதிகள் என்ற போர்வையில் 35 வருடங்களுக்கும் மேலாக பத்துக்குப் பத்துக் கொட்டகைகளில் சட்டவிரோதக் குடியேறிகளாக அடைபட்டுக்கிடப்பவர்கள் ஈழத் தமிழர்கள் இல்லையா என்றுதான் கேட்கிறேன்?
உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், நீங்கள் இலங்கையில் உள்ள ஈழத்தமிழருக்காக இவ்வாறு எழுதியது உங்கள் நாட்டில் இருக்கும் சட்டவிரோதக் குடியேறிகள் என்று சொல்லப்படுகிற அகதிகளுக்குப் பொருந்தாதா? ஏன் அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் ஆக்கப்பட்டார்கள் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தக் கட்டுரையில் அய்நா சபைவரை செல்கிறீர்களே பெசன்ட்நகரில் இருக்கிற UNHCR ஏன் அகதிகள் முகாமுக்குள் வருவதில்லை?
சரி விடுங்கள், வலியவர்களுடைய வரலாறுதானே எல்லாக் காலத்திலும் எழுதப்பட்டிருக்கிறது; அதைத்தானே நீங்களும் எழுதுகிறீர்கள்
கடைசியாக, ‘தங்களுக்குச் சொல்ல வராத வார்த்தைகளால் அந்த மக்கள் கேட்பது ஒரு நீதிக் கோட்பாடு. சுதந்திரம், சனநாயகம் என்ற நீதிக் கோட்பாடு. அதுவே தேசியம் என்பதன் பொருள்.’ எந்த தேசியம் ? தமிழ்த் தேசியமா அல்லது நீங்கள் நிறுவ முற்படும் வெள்ளாள தேசியமா?
35 வருடங்களுக்கும் மேலாக அகதிகள் பற்றிப் பேசாத உங்களின் வார்த்தைகள் இனிமேல் எக்காலத்துக்கும் அவர்களுக்குத் தேவைப்படாது.
தொ. பத்தினாதன்
மதுரை
சென்ற இதழில் வெளியான ‘நாதனின் நேசமிகு விழிகள்’ (சிங்களச் சிறுகதை; மொழியாக்கம்: ரிஷான் ஷெரீப்) கதையை எழுதியவர் ருவண் எம். ஜயதுங்க. கவிதை, சிறுகதை, கட்டுரைத் துறைகளில் சிங்களம், ஆங்கிலம் இருமொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றிவருபவர். இலங்கை இராணுவத்தின் மனநலப்பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர். ஜான் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகிய ஆளுமைகள் குறித்தும், மனநல மருத்துவம் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார். தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
குறிப்பு விடுபட்டமைக்கு வருந்துகிறோம்.
- பொறுப்பாசிரியர்