விரிவும் ஆழமும் - ஆ.இரா. வேங்கடாசலபதி பங்களிப்புகள் - இருநாள் கருத்தரங்கம்
2019 பிப்ரவரி 8-, 9ஆம் தேதிகளில் காலச்சுவடு அறக்கட்டளை, கடவு இலக்கிய அமைப்பு, தி இந்து லிட் ஃபார் லைஃப் அமைப்பு ஆகியன இணைந்து ‘ஆ.இரா. வேங்கடாசலபதியின் பங்களிப்புகள்’ குறித்த இருநாள் கருத்தரங்கைச் சென்னையில் நடத்தின. இந்த நிகழ்வு தமிழ் அறிவுலகத்திற்கொரு புதுமை.
ஆய்வாளர், ஆசிரியர், எழுத்தாளர் என்ற நிலைகளில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தத் துறைகளில் காத்திரமான பங்களிப்புகளைச் செய்திருப்பவர் சலபதி. அவ்வாறு பங்காற்றிய ஒருவரை அந்தத் துறையினர் போற்றுவதும் சிறப்புச் செய்வதும் வழக்கம். ஆனால் சலபதியைப் பொறுத்தவரை அப்படி செய்வது அவரது ஆளுமையின் விரிவைக் குறுகத் தரிப்பதாகும். இந்த எண்ணத்தின் விளைவாகவே அவரது பல்லுறைப் பங்களிப்புகளும் கருத்தரங்கில் முழுமையாக எடுத்து பேசப்பட்டன. இந்த நோக்கில் இந்த நிகழ்வு முன் உதாரணம் காணாதது.
மேற்சொன்ன மூன்று நிலைகளுக்குள்ளும் வெவ்வேறு தளச் செயல்பாடுகளைக் கொண்டவர் சலபதி. ஆய்வாளராகப் புதியன கண்டும் நிலைபெற்ற ஆய்வுகளை விரித்தும் நுணுகியும் முன்னெடுத்துப் புதிய வெளிச்சம் கண்டவர். ஆசிரியராக நம்பிக்கை அளிக்கும் புதிய தலைமுறையை உருவாக்கி அளித்திருப்பவர். எழுத்தாளராகப் பதிப்பு, மொழியாக்கம், செம்மையாக்கம் ஆகிய செயல்களை மேற்கொண்டு முன்னோடியாக நிலைநிற்பவர். இந்த மூவகைச் செயல்பாடுகளின் விளைவைத் தமிழ்ப் பொதுச் சமூகத்தின் முன் வைத்தவர். சமகாலத்தில் ஆ. இரா. வேங்கடாசலபதியைப் பாராட்டவும் மதிப்பிடவுமான பொருத்தப்பாடு இதுவே.
ஆய்வாளர்களும் மாணவர்களும் இலக்கியவாதிகளும் சமூகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் ஒரே தரப்பாக நின்று சலபதியின் பங்களிப்புகளைப் பற்றி விவாதித்ததும் பாராட்டியதும் இந்த அளவில் முதன்மையானது, முக்கியமானது.
ஒரு பல்கலைக்கழகம் செய்து தீர்க்கவேண்டிய மாபெரும் பணிகளைத் தனியொருவராகத் தொடர்ந்து மேற்கொண்டிருப்பவர் என்பதைக் கருத்தரங்கிற்குக் கூடிய அறிவாளர் திரள் சான்று கூறியது. காலச்சுவடில் இன்றியமையாத் துணையும் தோழமையும் வழிகாட்டியுமான ஆ. இரா. வேங்கடாசலபதியின் பங்களிப்பு கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நிகழ்வுக்காகக் காலச்சுவடு அறக்கட்டளைக்குப் பொருளுதவியாற்றிய பேர்ள் ஷிப்பிங், கோயம்புத்தூர் கேப்பிட்டல், எஸ்.எம். அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுக்கும் மனமார்ந்த நன்றி.